பரப்பிரம்ம ரகசியம் (பிரணவ ரகசியம்)

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரை – 15.02.1998
ஓம் அகத்தீசாய நம
அன்புள்ள சன்மார்க்க சங்க அன்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
குருநாதர்: ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
அன்பர்: ஐயா, “நோவாது நோன்பு நோற்பது” என்பது என்ன?
குருநாதரின் அருள் விளக்கம்:
                நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
                சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்
                பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
                யார்உளர்நீ சற்றே அறை.
                                           -திருஅருட்பா ஆறாம் திருமுறை – சமரச நிலை – கவி எண் – 1025
                நோன்பு – என்பது தவமாகும். நோவாமல் – துன்பப்படாமல்.
                பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப் ப்ரபஞ்ச மென்னும்
                சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ் சடாவிமேல்
                ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
                கீற்றைப் புனைந்த பெருமான் குமரன்க்று பாகரனே.
                                                -மகான் அருணகிரிநாதர் – கந்தரலங்காரம் – கவி எண் 1
                பேற்றைத் தவம் – பெருமைக்குரிய தவம், சற்றுமில்லாத வென்னைப் –  சிறிதுமில்லாத என்னை, ப்ரபஞ்ச மென்னும் சேற்றைக் கழிய வழிவிட்ட வா என்றார். பிரபஞ்சம் என்பது உலகம். சேறு என்பது உடம்பு. பிரபஞ்ச சேறாகிய அசுத்த தேகம் நீங்குவதற்கு எனக்கு அருள் செய்தாய்.
     வெய்யில் அடித்தால் சேரும், சகதியாக இருப்பதை எளிதாக அப்புறப்படுத்தி விடலாம். அப்படியில்லையென்றால் முயற்சித்து அப்புறப்படுத்தி விடலாம்.
     ஆனால், பிரபஞ்ச சேறு? பஞ்ச பூதங்களால் ஆனா இந்த உடம்பு என்ற சேரை என்ன செய்வது?
      சேற்றைக் கழிய வழ்விட்டவா- பெரியவர்கள் சொன்ன மிகப் பெரிய வார்த்தை. தாய், தந்தையால் எடுத்த இந்த காம தேகம் என்பது நீக்க முடியாத சேறுதான். அந்தச் சேற்றை நீக்குவதற்கு உணவு தராமல் இருந்தால் செத்துப்போவான், உணவு தந்தால் உடம்பு சேறாகும், மிகுதியாக மிகுதியாக காம தேகமாகி விடும்.
     சேற்றைக் கழிய வழ்விட்டவா- காமதேகத்தை நீக்கியவா என்றார். இந்த உடம்பு என்று சொல்லப்பட்ட அசுத்த தேகம், அதைக் கழிய வழி விட்டவா என்றார்.
     உடம்பு என்று சொல்லப்பட்ட மும்மலமாகிய சேற்றை நீக்குவதற்கு வழி காட்டியவர் மகான் சுப்பிரமணியர். மகான் சுப்பிரமணியர் சேற்றை நீக்கியதால் தேகத்திலுள்ள கசடுகள் நீங்கியது. ஆக ஆசான்தான் உடம்பு என்ற சேறு கழிவதற்கு, வழி காட்ட வேண்டும். பல ஜென்மங்களாக அறியாமையை உண்டாக்கி, காமத்தை உண்டாக்கி, பரிணாம வளர்ச்சியை உண்டாக்கி, நரை திரை மூப்பை உண்டாக்கி, என்னை அநியாயமாகக் கொன்றது. அப்படிப்பட்ட இந்த தேகத்தை, நான் பெருமைக்குரிய தவத்தை செய்யாதபோதும், இயற்கையை நீக்க வழி விட்டவா என்றார்.
     இந்த தேகம்தான் அறியாமையை உண்டாக்கிறது. சேற்றை எல்லோருமே விரும்பமாட்டார்கள். ஆனால் உடம்பை அநியாயமாகக் கொல்லாமல், உயிரையும் காப்பாற்றி, உடம்பையும் காப்பாற்றி, மாயையாகிய, நச்சுத்தன்மையாகிய சேற்றை நீக்கியவர் ஆசான் அருணகிரிநாதர்.
     ஆசான் ஞானபண்டிதன், ஞானத்திற்குத் தலைவன். ஆசான் சுப்பிரமணியரை பூஜை செய்து அவருடைய ஆசியை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பெற்றுக் கொண்டால்தான் தொடர்ந்து வருகின்ற பிறவிக்குக் காரணமான அசுத்தமான, நச்சுத் தன்மையான தேகத்தை நீக்கி ஆன்மாவை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம். இந்த உடம்பில் ஆன்மா நீடித்து தங்க முடியாது. ஏன் தங்க முடியாது? இந்த உடம்பின் யோக்கியதை அவ்வளவுதான்.
     ஒன்பது வாசல் கொண்ட இந்த உடம்புக்குள் ஆன்மா நீடிக்க முடியாது. ஆன்மா நீடிக்க, உடம்பையும் உயிரையும் சேர்க்க வேண்டும்.
     நமது உடம்புக்கும் உயிருக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை ஆசான் சுப்பிரமணியர்தான் செய்வார்.
                சேர்ப்பதுதா னுபநிடதஞ் சேர்த்துக்கொள்ளத்
      தியானமது சடாட்சரமே தியானம்பண்ணி
                      நாற்பதுநா ளிப்படிமண் டலந்தான்கொள்ள
      நரைதிரையு மில்லையடா நமனுமில்லை
                      சேர்ப்பது தான் பிங்கலையிற் சேருசேரு
                ஜெயமாகுங் கிரிகையிது விடையிற்சேரு
                                சேர்ப்பதிலே யிடைசமனாய்ச் சேர்த்துக்கொண்டாற்
                சிவசிவா சொல்லரிது செயலைத்தானே.
                                                                – மகான் திருமூலர் ஞானம் – 84 – கவி எண் 21
     சேர்ப்பதுதான் இடை சமனாய் சேர்த்துக் கொண்டால்
      சிவசிவா சொல்லரிது செயலைத்தானே
      ஆசான் சுப்பிரமணியர் உடம்பையும் உயிரையும் சேர்ப்பதைப் பற்றி சொல்வார். பத்மாசனம் இட்டு, விணாத்தண்டு (முதுகுத் தண்டுவடம்) நிமிர்ந்திருந்து, மூச்சுக்காற்றை இழுத்து நிறுத்துகிறான். அப்படி மூச்சுக்காற்றை இழுத்து கண்டஸ்தானத்தில் நிறுத்திவிட்டு, புருவமத்திக்கு இழுக்கு விடுவான். ஆக உடம்பும் உயிரும் புருவமத்தியில் ஒடுங்குகிறது. உடம்பும் உயிரும் இரண்டும் சேருகின்ற இடம் புருவ மத்தி.
      ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
                காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
                காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
                கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
                                                –திருமந்திரம் – பிராணயாமம் – கவி எண் 571
                ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி
                இருபதம் ஆடு கின்ற இயல்பைநீ அறிந்தா யானால்
                குருபத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
                வருபத நாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே…..!
                                                                மகான் கணபதிதாசர் – நெஞ்சறி விளக்கம் – கவி எண் 22
                இப்படி மகான் திருமூலரும், மகான் கணபதிதாசரும் சொல்லியுள்ளார்கள்.  ஆக பத்மாசனமிட்டு காற்றை இழுத்து, வெளிக்காற்றை கண்டஸ்தானத்தில் நிறுத்தி, புருவ மத்திக்கு இழுத்து விடுவார்கள்.
     இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
      துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
      உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
      கிரக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.
                                                திருமந்திரம் – கேசரி யோகம் – கவி எண் 801
     புருவமத்திக்கும், குண்டலினிக்கும் இடையே ஒரு மெல்லிய நரம்பு இருக்கிறது. அந்த நரம்பு மயிரிழை போன்று இருக்கும். அந்த நரம்பு வழியாகக் காற்று போகிறது.
     ஆக சூரிய கலையும், சந்திர கலையும் சேர வேண்டும். அப்படி சேரும்போது கண்டஸ்தானத்தில் காற்றை நிறுத்துவார்கள். அந்தக் காற்று போக வேறு வழி இருக்காது.
    
     பெட்டியிலே அடைத்துவைத்த பாம்புதன்னைப்
            பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
      எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
            இருபுறமு மாடிவர எதிரேயேறுங்
      கட்டிற்குள் நில்லாது சிரசிலேறுங்
            கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி
      சுட்டியின்கீழ் திருவாடு துறையைப் பார்க்கில்
            சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
                                                -மகான் அகத்தியர் – துறையறி விளக்கம் – கவி எண் – 86
                பெட்டி என்பது வயிறு. எட்டு என்பது ஆகாரம், புருவமத்தியில் ஒடுங்குகின்ற காற்று. இரண்டு என்பது உகாரம் – கண்டஸ்தானம் காற்று.
     எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால் இருபுறமு மாடிவர எதிரேயேறும் – இரண்டு பக்கமும் போக முடியாமல், உள்ளேயும் போக முடியாமல், வெளியேயும் போக முடியாமல் அப்படியே ஸ்தம்பித்து நிறுத்தும் பொது, அந்தக் காற்று இருபுறமு மாடிவர எதிரேயேறும்.
     கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும் – சிரசில் ஏறும். இந்த மூக்குத் துவாரத்தில் அல்ல. அந்தக் காற்று இப்படியும் அப்படியும் போகாது, முறையரிந்தவன், வகையரிந்தவன் இழுக்கிறான். மெல்லிய ஓட்டை. மயிரிழை போன்று ஒரு நரம்பு. அந்த நரம்பு வழியாக காற்று போகும். அந்தக் காற்றை நிறுத்துகிறான். அப்படி நிறுத்தும் போது, புருவ மத்தியில் போய் ஒடுங்கும். அந்தக் காற்று அங்கேயும், இங்கேயும் போக முடியாமல் ஸ்தம்பிக்கும்போது, அந்தக் காற்று மென்மையான இடத்தில் நுழைய பார்க்கும். விணாத்தண்டு (முதுகுத் தண்டுவடம்) வழியே ஒரு நரம்பு இருக்கிறது. அதை நெருப்பாறு, மயிர்ப்பாலம் என்பார்கள். பத்தாம் வாசலாகிய புருவமத்திக்கு சென்ற காற்று அப்படியே வேறு வழியில்லாது, அந்த நரம்பு வழியாகவே அந்தக் காற்று வரும். இதில் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், இதை நம்மால் செய்ய முடியாது, ஆசான்தான் செய்ய வேண்டும்.
     மயிரிழை போன்று, ஒரு துவாரம் இருக்கும். வெளியில் இருக்கும் காற்றை இப்படி அப்படி போக முடியாமல் அது வழியாக போக வைத்தல். காற்றின் இயல்பு என்னவென்றால் ஸ்தம்பித்து நிறுத்தி குத்தினால் அந்த நரம்பு வழியாக காற்று போகும். அந்த நரம்பு புருவமத்தியையும் குண்டலினியையும் தொட்டு இருக்கும். அந்தக் காற்று இரண்டு பக்கமும் வரும். இரண்டு பக்கமும் சேர்ந்து அந்த நரம்பு வழியாக உருத்தரிக்கக்கூடிய நாடியில் போய் அது ஒடுங்க வேண்டும்.
     உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை
      கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரே
      விருத்தரும் பாலராவர் மேனியுங் சிவந்திடும்
      அருட்டரித்த நாதர்பாத மம்மைபாத முண்மையே.
                                – மகான் சிவவாக்கியர் பாடல் – யோகா நிலை – கவி எண் 5
                அந்த நரம்பு வழியாக சென்று அப்படியே “ஜிவ்” என்று இழுக்கும். அதை நாம் செய்ய முடியாது. அப்படி மூச்சுக்காற்றை இழுக்கும்போது, மூச்சுக்காற்று இந்தப் பக்கமும் அந்த பக்கமும் போக முடியாமல் அந்தக் காற்று புருவ மத்தியில் ஒடுங்கி மயிரிழை மாதிரி நரம்பு வழியே சென்று ஒடுங்கி விடும். அந்தக் காற்று இரண்டு பக்கம் வந்தால்தான், இரண்டு பக்கமும் ஸ்தம்பித்து நிறுத்தும் போது, இந்த இரண்டு கண்ணுக்கு மத்தியில் இருக்கும் அந்த இடத்தில், மயிரிழைப் போன்ற துவாரத்தில் காற்றுப் போகும்.
     சுடுகாட்டிற்கு சென்று மண்டை ஓட்டை எடுத்து பார்த்தால் மயிரிழை போன்று ஓட்டை இருக்கும். அது கண்ணுக்கே தெரியாது. அதை எப்படி தலைவன் கண்டுப் பிடித்தான்? அது சாதாரண விசயமல்ல. பெரியவர்களுக்கு மட்டும்தான் புலப்படும். அந்தக் காற்று அங்கே ஒடுங்கினால், ஒடுங்கிய காற்று உடம்பில் இருக்கும் சேற்றை நீக்கும். ஞானிகள்தான் அதைச் செய்வார்கள்.
     பேற்றை தவஞ்சற்று மில்லாத வென்னைப் ப்ரபஞ்ச மென்னும் சேற்றைக் கழிய வழிவிட்ட வா –பிரபஞ்சம் என்கிற வார்த்தையே மனிதனை அடிப்படையாகக் கொண்டது. மனித தேகம் அவ்வளவு உயர்ந்த தேகம். இப்படி உயர்ந்த தேகம் பெற்றிருந்தாலும், தொடர்ந்து ஈளை, இருமல், கபம், முதுமை, துர்நாற்றம் இந்த உடம்பில் இருந்து வருகிறது. துர்நாற்றம் உள்ள அந்த உடம்பு கழியும், நீங்கும்.
                ஊத்தை சடலமென் றெண்ணா தேயிதை
      உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
      பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
      பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.
                              -மகான் கொங்கன மகரிஷி – வாலைக்கும்மி – கவி எண் 23
                ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
      மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
      மாற்றிப் பிறக்க மருந்தெனக்குத் கிட்டுமென்றால்
      ஊற்றைச் சடலம்விட்டே என்கண்ணம்மா உன்பாதஞ் சேரேனோ.
                                                                – மகான் அழுக்கனிச்சித்தர் – கவி எண் – 8
                இதை ஊத்தைச் சடலமென்றும், சேறு என்றும் சொல்வார்கள். இந்த உடம்புக்குள்ளே அளவில்லாத சக்தி இருக்கிறது. அந்த சக்தி யோகிகளுக்கு மட்டும்தான் புலப்படும்.
     ஆசான் ஞானபண்டிதன் திருவடியை பூஜை செய்து ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி தினந்தினமும் ஒரே சிந்தனையாக இருந்து ஆசியைப் பெற்றால், ஆசான் வாசியோடு வாசியாக உள்ளே சென்று அசுத்த தேகத்தை நீக்குவார்.
     அந்த அசுத்த தேகமாகிய சேறு நீங்க வேண்டும். சேறு நீங்க நீங்க அறிவு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். இது சாதாரண விசயமல்ல.
        நாதமுங் கீதமுங் கேட்கும் – அந்த
      நாயகன் சந்நிதி தன்னிடை சேர்க்கும்
      மாதவ நன்னிலை யார்க்கும் – நல்ல
      மாசறு தேசிகன் பொற்பதம் போற்றி.
                      மகான் மஸ்தான்சாகிபு – ஆனந்தக் களிப்பு – கவி எண் 25
               
                அந்தக் காற்று ஒடுங்கியது. உண்மைதான், ஒடுங்கி விட்டது. ஒடுங்கிய காற்று வேலை செய்ய ஆரம்பித்து விடும். அந்தக் காற்று ஓங்கார ரீங்காரத்தை உண்டாக்கிவிடும். ஓங்கார ரீங்காரத்தை உண்டாக்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். இப்படி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். ஓங்கார ரீங்காரத்தை உண்டாக்கி, சேற்றை நீக்கிக் கொண்டே இருக்கும். தலைவன் ஆசியிருந்தால் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
     தலைவன் ஆசியைப் பெற வேண்டுமென்றால் தினமும் பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்து கொண்டே வந்தால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். தலைவன் திருவடி துணையிருந்தால்தான் முடியும்.
     தலைவனை உருகி தியானம் செய்கிறான். உருகி தியானம் செய்யும்போது உள்ளே கனல் ஏறுகிறது. அவனிடம் பக்தி இருந்தது. பக்தியினால்தான் உருகி தியானம் செய்தான். பக்தியினால்தான் உருகி தியானம் செய்தான். பக்த்தியினால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
     பாரி லுயர்ந்தது பக்தி – அதைப்
      பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
      சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்
      சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி
                        – மகான் கடுவெளிச்சித்தர் பாடல்
      முத்தி என்பது தேக சித்திதான். சீரிலுயரட்ட சித்தி – புருவமத்தியில் ஒடுங்குகின்ற காற்றுக்கு அட்டமா சித்தி என்று பெயர். வாசி ஒடுங்கிவிட்டால் அவன் அட்டமா சித்தி பெற்றான் என்று அர்த்தம்.
      சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்
      சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
     சிவன் என்று சொல்வதும், ஆறுமுகப்பெருமான் என்று சொல்வதும் ஒருவரே. ஆக பக்தி செலுத்தச் செலுத்த ஆசி கிடைக்கிறது. ஆசி கிடைக்க கிடைக்க வாசி வசப்பட்டது. வாசி வசப்பட்ட பின் காம தேகம் நீங்கிவிடும். காம தேகம் நீங்கினால் உள்ளே ஒளி உடம்பு தோன்றும்.
     காமதேகம் நீங்க நீங்க சிறப்பறிவு தோன்றும். சரி, இதற்குக் கனல் வேண்டுமல்லவா? சராசரி வெப்பத்தை அணு அணுவாக மேலே ஏற்றுவான். சரி, கனல் ஏறுகிறது. அதை முறைப்படுத்த வேண்டும். ஆனால் அதை முறைப்படுத்த நமக்குத் தெரியாது. பூஜை செய்து பிராணயாமம் செய்து கொண்டே இருப்பான்.
     ஆசான் அகத்தீசரையும், மகான் திருமூலதேவரையும், ஆசான் சுப்பிரமணியரையும் பூஜை செய்கிறான். பூஜை செய்து, “அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும்” என்று சொல்லி வீழ்ந்து வணங்கி பிராணயாமம் செய்கிறான், கனல் ஏறுகிறது.
     இவனுடைய உடல் வெப்பத்தை சராசரி 98.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை அணு அணு அணுவாக ஏற்றிக் கொண்டிருப்பான். பிராணயாமம் செய்து கொண்டேயிருப்பான். இவன் ஏற்றுகின்ற கனலைப் பற்றி ஞானிகளுக்குத தெரியும். “அப்படியே நிறுத்து!” என்று ஞானிகள் சொல்வார்கள். ஞானிகள் நிறுத்து என்றால் அப்படியே நிறுத்தி விட வேண்டும். அந்த ஒரு நொடி தவறினாலும், தலையெல்லாம் வலி எடுத்து தாங்க முடியாத துன்பம் தரும்.
     ஆசானை பூஜை செய்துவிட்டு, பத்மாசனம் போட்டு பிராணாயாமம் செய்து கொண்டிருப்பான். தலைவன் அருகிலேயே இருப்பார். சரி பிராணாயாமத்தை நிறுத்து என்பார். ஏனென்றால், வணங்கித்தானே பிராணாயாமம் செய்கிறேன். அவனை ஞானிகள் சூழ்ந்திருப்பார்கள். அவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். பிராணாயாமத்தை நிறுத்து என்பார். அப்படியே நிறுத்திக் கொள்ளவேண்டும். ஆக, “தீச்சலில்லாமல் கவனம்” என்பார். மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சாதாரண விசயமல்ல. “தீச்சலில்லாமலும்” என்பார்.
     இவன் பிராணாயாமம் செய்கிறான், கனல் ஏறுகிறது. இதற்கு மேல் போனால் உடம்பு தாங்காதென்று அருகிலேயே இருந்து ஞானிகள் கனல் அதிகமானால் நிறுத்துவார்கள். நாங்கள் (குருநாதர் அவர்கள்) பிராணாயாமம் செய்யும்போது பக்கத்திலேயே இருப்பார்கள். எங்கே இருந்து இதைப் பார்க்கின்றீர்கள் என்று கேட்டோம்.
     “இங்கே இல்லையப்பா! நாங்கள் பொதிகையிலிருந்துப் பார்க்கிறோம். உன் உடம்பிலிருக்கும் வெப்பத்தை எவ்வளவு என்று பார்க்கிறோம். கனல் அதிகமாகப் போனால் முறிவு ஏற்படும். அப்படி முறிந்து போனால் செத்து போவாய்.”  எனவே ஆசான் நிறுத்து என்று சொன்னால், நிறுத்தி விடுவான்.
     சரி, உடம்பில் கனல் குறைகிறது அல்லது கூடுகிறது. உப்பில்லா உணவு சாப்பிட்டாக வேண்டும். அது சின்ன விசயமல்ல. உப்பில்லா உணவு சாப்பிட்டுதான் பிராணாயாமம் செய்ய வேண்டும். அந்த உணவும், பாசிப்பயறு, பச்சரிசி, பசும்பால், பழங்கள்தான் என்று சொல்லுவார்கள். இப்படி எத்தனை வருடம் சாப்பிட முடியும்? என்று நினைத்து சோர்வடைவான். உஷ்ணத்தைத் தாங்குவதற்கு தேவையான நெய் உடம்புக்குத் தேவை. ஒரே உப்பில்லா உணவு, பச்சைப்பயறு, பழம் சாப்பிட்டால் ஒன்றுமே சகிக்க முடியாது. ஆண்டுகள் 20, 23 ஆகலாம். 22 வருடத்தில் நமது தவம் முடிகிறது. ஆக இத்தனை ஆண்டும் உப்பில்லா உணவு சாப்பிட வேண்டுமென்றால் எப்படி முடியும்?
     சில பதார்த்தங்கள் காரம், புலி, உப்பில்லாமல் சாப்பிடலாம். இவர்கள் உப்பு, மிளகாய் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதுபோன்று ஒரு சட்டம். இதை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். வாசி நடத்திக் கொடுத்ததும் இவன் உப்பில்லாமல் சாப்பிடுவானா? மன வலிமை உள்ளவனா? அதே சமயத்தில் சலனப்படுவானா? என்றெல்லாம் ஞானிகள் பார்ப்பார்கள்.
     இந்த துறையில் வருபவன் உடம்பை வேறு வகைக்கு பயன்படுத்த முடியாது. அப்படியே உடம்பை வேறுவகைக்குப் பயன்படுத்தினால் செத்துப் போவான். இல்லறத்தில் ஈடுபட்டானென்றால், உடம்பெல்லாம் கருகிப் போகும். உடம்பு உஷ்ணம் மிகுதியாகும். உஷ்ணம் மிகுதியானால் செத்துப் போவான். அவன் செத்துப் போவானென அவனுக்குத் தெரியும். அறுசுவை சாப்பிட்டாலும் செத்துப் போவான். இதுபோன்று மாயையில் ஈடுபட்டாலும் செத்துப் போவான். அதற்கென்று வந்தவன் அவன். பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தினால் அதற்கென்றே வந்தவன்.
     ஆவான் மவுனி அவன் வெகு கெவுனியான்
      தேவனென் றவனை தெரிசிக்கப் பரிசிக்கும்
      பாவம கன்றிடும் பரிபூரண மதாம்
      கோவ மகன்றிடுங் குருமொழி முற்றுமே.
                                                மகான் மச்சமுனிவர் திருமந்திரம் 800 கவி எண் 800
                ஆக அவர்கள் கவனமாகவே இருப்பார்கள். உலக மக்களோடு பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார்கள். பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் மனதில் வைராக்கியம் வரும். உப்பில்லாமல் சாப்பிடுவார்கள், மாயையிலும் அகப்பட மாட்டார்கள். உலக மக்களோடு மக்களாக இருப்பார்கள். அதேசமயத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார்கள். இப்படி ஒரு வாய்ப்பிருக்கிறது.
     தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல் இவனுடைய அறிவினாலா என்றால் இல்லை, கூடவே ஞானிகள் இருக்கிறார்கள் அல்லவா? இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று இவன் அருகிலிருந்து சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கனல் மிகுந்தால் பிராணயாமத்தை நிறுத்து என்பார்கள். உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த உணவை நிறுத்து என்று சொல்வார். போதும் நிறுத்து என்பார்கள். காரணத்தையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நிறுத்து என்பார். அவர்கள் அதற்கென்று வந்தவர்கள் தானே? உடனே நிறுத்தி விடுவார்கள். இரண்டு நாள், மூன்று நாள் கூட உணவை நிறுத்தி விடுவார்கள். அதுவும் உப்பில்லா உணவை.
     உணவிலும் கட்டுப்பாடு, பிரானயாமத்திலும் கட்டுப்பாடு என பக்கத்திலேயே இருந்து சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அது அன்பர்களுக்கும் என்னுடன் இருப்பவர்களுக்கும் தெரியும். சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்பொது நிறுத்து என்பார்கள். மீண்டும் சாப்பிட வேண்டும் என்று எண்ணும்பொது சாப்பிடச் சொல்வார்கள்.
     உணவிலும் கட்டுப்பாடு, உணர்வுகளிலும் கட்டுப்பாட்டுடன்  இருந்து பிராணாயாமம் செய்வார்கள். மேலும் பிராணாயாமம் செய்யும்போது, அனல் மிகுதியாகும்பொது நிறுத்து என்பார். காலையில் முக்கால் மணி நேரம் பிராணாயாமம் செய்வார்கள், மதியானம் நிறுத்து என்பார். மதியம் நிறுத்தி விட வேண்டும். அவர்கள் சொன்னதை எல்லாம் செய்வார்கள். இதை எதற்குச் சொல்கிறோமென்றால், பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப் ப்ரபஞ்ச மென்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா என்றார். அங்கே, நோவாது நோன்பெனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் என்றார்.
நோவாது நோன்பு – நோற்றுதல் ஏற்றுதல், போற்றுதல், தவத்தைச் செய்தல் என்று அர்த்தம்.
     துன்பம் இல்லாமல் தவத்தை முடிக்க ஞானிகள் கூடவே இருக்க வேண்டும். எந்த அளவுக்கு உணவு சேர்க்க வேண்டும். எந்த அளவுக்குத் தூங்க வேண்டும் என்று சொல்வதற்கு ஞானிகள் கூடவே இருக்க வேண்டும். தூங்க போகும்போது “ஞானிகளிடம் தூங்கலாமா?” என்று கேட்க வேண்டும்.
     ஆசான் தூங்கு என்று சொன்னால்தான் தூங்க வேண்டும். தூங்கிக் கொண்டிருக்கும்போதே எழுந்திரு என்பார்கள், தூங்கவே முடியாது. எழுந்திரு என்பார். தூக்கத்திலிருந்து எழுந்து வெளியே சென்று உட்கார்ந்திருப்போம். இரவு 3 மணி வரையிலும் அப்படியே உட்கார்ந்து கொண்டேயிருப்போம். ஆசான் தூங்கு என்று சொன்னபிறகுதான் தூங்க போவோம். இது என்னுடனேயே இருப்பவர்களுக்குத்தான் தெரியும். படுத்தவுடன் பத்து நிமிடம் கழித்து எழுந்திரு என்பார். வயிற்றில் உணவு இருக்காது. தூங்கினால் உடனே உடம்பில் கொதிப்பு ஏற்படும்.
     ஆக உணவு, உறக்கம், பிராணாயாமத்திற்கு தலைவன் கூடவே இருந்தால்தான் முடியும். இதில் மேலும் ஒரு மர்மம் இருக்கிறது. உடம்பில் கனல் ஏற வேண்டும். சரி, காற்று குண்டலினியில் ஒடுங்கியுள்ளது. அந்தக் காற்றை கனல் கொண்டு எழுப்ப வேண்டும். அது எப்படி? மர்மமான விசயம். புருவமத்திக்கும் குண்டலினிக்கும் ஒரு நரம்பு இருக்கிறது. மயிரிழை போன்ற நரம்பு. இதை மகான் ஔவையார்தான் சொல்வார்,
     எழுபத்தீ ராயிர நாடி யவற்றுள்
      முதுபத்து நாடி முதல்.
                                ஔவைக் குறள் – நாடி தாரணை – குறள் எண் 1
                இந்த உடம்பில் எழுபத்து ஈராயிரம் (72,000) நாடிகள் உள்ளது. அவற்றில் இடகலை, பிங்கலை, சுழுமுனை, அத்தி, சிகுவை, காந்தாரி, சங்கினி, அலம்புடை, குரு, புருடன் ஆகிய நாடிகள் முக்கியம் என்பார்.
     அந்தப் பத்து நாடியில், உரம்பெறு நாடி ஒன்று என்பார்.
     நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லா
      முரம்பெறு நாடியொன் றுண்டு.
                                      ஔவைக் குறள் – நாடி தாரணை – குறள் எண் 2
                அந்த நரம்பு வழியாக அனல் ஏற வேண்டும். காற்று குண்டலினியில் தங்கியிருக்கிறது. காற்று தங்கும்போது உஷ்ணம் ஏறும். உந்திக்கமலத்தை விட்டுத் தாண்ட முடியாது. உந்திக்கமலம் மிகுதியான குளிர்ச்சி பொருந்தியது. அந்த உந்திக்கமலத்திலிருந்து கனல் ஏற்ற வேண்டும். ஆனால் கனல் ஏறாது. அப்போது நிஷ்டை மேற்கொள்வார்கள். இதை மகான் பட்டினத்தார் சொல்வார்,
     உந்திக் கமலத் துதித்து நின்ற பிரமாவைச்
      சந்தித்துக் காணாமற் றட்டழிந்தேன் பூரணமே.
                                                மகான் பட்டினத்தார் – பூரண மாலை – கவி எண் 2
                உந்திக்கமலத்திற்கு கீழ்ப்பகுதி, அந்த இடம் பிருதிவியின் கூறு. பிருதிவியின் கூறு என்றால் பிரம்மன். பிருதிவி என்றால் மண்ணின் கூறு. அதற்குக் கீழேதான் குண்டலினி சக்தி உள்ளது. உந்திக்கமலத்திற்கு கீழே நாலு விரற்கடையில் இருப்பதுதான் பிருதிவியின் கூறு. அந்த இடத்திலிருந்துதான் அனல் ஏற வேண்டும். எப்படி அனலை ஏற்ற வேண்டுமென்று தடுமாறுவான். இதை மகான் அருணகிரிநாதர் சொல்வார்,
     பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
      தித்தித் திருக்கு மழுதுகண் டேன் செயன் மாண்டடங்கப்
      புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
      தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே.
                                                                -கந்தர் அலங்காரம் – கவி எண் 47
      புத்திக் கமலத்து உருகி பெருகி – இதெல்லாம் பரிபாஷை. அந்த இடத்திலிருந்து அனல் ஏற வேண்டும். புருவ மத்தியில் கவனம் வைத்து கூர்ப்பார்வை செலுத்து என்று ஞானிகள் சொல்வார்கள். கூர்ப்பார்வை செலுத்தும் போது இந்த நரம்புக்கு அதற்கும் ஒரு தொடர்பு இருக்கும். அது கணக்காக இருக்கும். அப்படித்தான் வைத்திருப்பார்கள்.
     தாக்கையா மேல்வாசற் குள்ளே சென்று
                      சாக்கிரத்திற் கண்மூடி சதாநித்தம் பாரு
      நோக்கையா நோயெல்லாம் நிர்த்தூளியாகும்
                      நோகாமற் பார்த்துவரக் கண் திறக்கும்
                ஆக்கையா பொறிகளைந்து மடித்துத் தள்ளில்
                                ஆனந்த மதியமுர்தஞ் சிந்துஞ்சிந்தும்
                வாக்கையா பேசாதே சமாதிமூட்டு
                                மைந்தனே பூசையெல்லாம் வழங்கும்பாரே.
                                                -மகான் அகத்தியர் பூஜாவிதி 200 – யோகம் – கவி எண் 37
                மேல் வாசல் என்பது பத்தாம் வாசல். உடம்பில் ஒன்பது வாசல் இருக்கிறது. கண்டஸ்தானத்திற்கு மேல் ஏழு வாசல் இருக்கும். பத்தாம் வாசல் என்பது புருவ மத்தி.
     தாக்கையா மேல்வாசற் குள்ளே சென்று சாக்கிரத்திற் கண்மூடி சதாநித்தம் பாரு – சாக்கிரம் என்பது புருவமத்தி. புருவ மத்தியில் கூர்ப்பார்வை செலுத்துவான். மயிரிழை போன்ற நரம்பு இருக்கும் இடத்தில் கூர்ப்பார்வை செலுத்துவான். அந்தப் பார்வை, குண்டலினி சக்தியில் சென்று ஒடுங்கும். குண்டலினி சக்தியில் அனலை உண்டாக்கும். அனலை உண்டாக்கும்பொது உந்திக்கமலத்தை விட்டு கடந்து வருவதென்பது சின்ன விசயமல்ல.
     உந்திக் கமலத் துதித்து நின்ற பிரமாவைச் – பிரம்மா என்பது மண்ணின் கூறு. உந்திக்கமலம் என்பது தண்ணீரின் கூறு. விஷ்ணுவின் கூறு. உந்திக்கமலத்தின் கீழ்ப்பகுதி பிரம்மனின் கூறு. அப்போது அங்கிருந்து அனல் கணக்காக ஏற வேண்டும். கனல் மிகுந்து ஏறக்கூடாது. மெதுவாக ஏற வேண்டும். அப்ப என்ன சொல்வார்?
   
        தாக்கையா மேலவாசற் குள்ளே சென்று
      சாக்கிரத்திற் கண்மூடி சதாநித்தம் பாரு     
      நோக்கையா நோயெல்லாம் நிர்த்தூளியாகும்
      நோகாமற் பார்த்துவரக் கண் திறக்கும்
      ஞானிகள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். கூர்ப்பார்வை செலுத்துகிறான், அனல் மிகுதியானது. நிறுத்து என்று ஞானிகள் சொல்வார்கள். ஆக உணவிலும் கட்டுப்பாடு, உறக்கத்திலும் கட்டுப்பாடு, நிஷ்டை மேற்கொள்ளுவதிலும் கட்டுப்பாடு வேண்டும்.
     நிஷ்டையிலும் கவனிக்க வேண்டும். ஞானிகள் கூடவே இருக்க வேண்டும். கனல் அதிகமாகப் போகும் போது உடம்பெல்லாம் கொதிக்கும். ஆக, நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் – ஞானிகள் கூடவே இருந்தாலன்றி முடியாது. இப்படி இருக்கும்போதே, கூடவே இருந்து கவனித்து வந்தாலும், அதனுடைய விளைவுகள் கடுமையாக இருக்கும்.
      அடங்குவார் உச்சயிலே அமர்வார்வந்து
            அவர்பட்ட பாடதனைச் சொல்லிப் போவார்
      முடங்குவார் பிரசோப துன்பம்போல
            முனிகூட்டம் வந்திடுவார் உதவிசெய்ய
      கடங்கள்பார் சாவனுட துன்பம்போல
            காணுமடா ஒளிகண்டாற் துன்பந்தீரும்
      இடங்கண்டால் யெல்லோருந் தானாகவந்து
            யென்குழந்தை யென்றுசொல்லித் துணைசெய்வாரே.
                                                மகான் காகபுஜண்டர் பெரு நூல் காவியம் 1000 – கவி எண் 409
                அப்பொழுது முனிக்கூட்டம் என்ற ஞானிகள் சூழ்ந்து கொள்வார்கள்.
     பிரசோப துன்பம் போல – பிரசவ காலத்தில் எப்படித் துன்பம் இருக்குமோ அவ்வளவு துன்பம் இருக்கும்.
     கடங்கள் பார் சாவனுட துன்பம் போல – சாவதற்கு நிகரான துன்பம் இருக்கும். ஆனால் இவர்கள் மட்டும் சளைக்க மாட்டார்கள். இத்தனை ஜென்மங்களாக பத்தாம் வாசலைப் பற்றி அறிய முடியாத இந்த மனித வர்க்கம், பத்தாம் வாசலை அறிந்தால் உடல் மாற்றம் ஏற்படும். ஆக அப்படியே அனல் பறக்கும். அனல் பறக்கும்போது பிரசவக் காலத்தில் ஏற்படும் துன்பம் போலவும், சாகும்பொது ஏற்படும் துன்பம் போலவும் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்வார்கள், அதனால் ஒன்றும் குற்றமில்லை.
     சாவு வராது இல்லையா? என்று ஞானிகள் சொல்வார்கள். ஒரு ஜென்மமா? எத்தனையோ ஜென்மம் எடுத்துள்ளாய். “சாவு வருமல்லாவா? தொடர்ந்து இறந்து, பிறந்து, இறந்து பிறந்திருக்கின்றாய் அல்லவா. ஆகவே சாகாமல் இருக்கப் பார்” சாகாமல் இருக்க நீ புரிந்து கொள்ள வேண்டுமென்று சொல்லி, துன்பம் வரும் போதெல்லாம் கூடவே இருந்து ஆறுதல்படுத்துவார்கள்.
     உனக்கென்ன குறை? பெரும் பொருள் குவிந்திருக்கிறது. பேரும், புகழும் இருக்கிறது. நாட்டு மக்கள் மத்தியில் பிரபல்யமாகி இருக்கின்றாய். நல்லபடி பொழுது போவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அன்பர் கூட்டம் இருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றோம். ஆகவே துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். துன்பத்தை ஏற்றுக் கொண்டால்தான் அங்கே போக முடியும் என்பார்கள்.
     இப்படியெல்லாம் ஞானிகள் பக்கத்திலேயே இருந்து மனதை ஆறுதல்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இந்தக் காலகட்டத்தில்தான், தெளிவான பாதையை அறிந்து கொள்ள முடியும்.
     “வாதியென பேரெடுக்க வருமோ சும்மா” என்றார். உடம்பு தங்கமாவது என்பது சின்ன விசயமா? பெரியவர்கள் ஆசி இருக்க வேண்டும். ஞானிகள் கூடவே இருக்க வேண்டும். ஞானிகள் கூடவே இருந்து உணவிலும், உறக்கத்திலும் யோகாப்பியாசம் செய்வதிலும், நிஷ்டை மேற்கொள்வதிலும் இருந்தாலன்றி, ஒருவனுக்கு நோவு இல்லாமல் தவத்தை முடிக்க முடியாது. இதை நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும்” என்றார், இப்படி இருந்த போதிலும் பிரசவ காலத்தில் ஏற்படும் துன்பம் போலவும். சாவதற்கு நிகரான துன்பத்தையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்பார். அப்படி அனுபவிப்பதால், இந்த உலகம் அழிந்து போனாலும், இவன் அழிய மாட்டான். என்ன காரணம்? இந்த உலகம் உள்ளளவும் வாழலாம்.
     மரணமே இல்லை. மரணமில்லாத ஒரு வாய்ப்பு இருக்கும்போது, நீ ஏன் பாடுபடக் கூடாது? என்பார்.
      ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
      பேராமற் கட்டிப் பெரிதுன்ன? வல்லீரேல்
      நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
      பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
                                   – திருமந்திரம் – கலை நிலை – கவி எண் 722
               
                ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைபுரவி என்றால் குதிரை. நாள் ஒன்றுக்கு வலது நாசியில் ஆறு முறை, இடது நாசியில் ஆறு முறை மூச்சுக்காற்று மாறி வரும். ஞாயிற்றுக்கிழமை என்றால் காலை 6 மணி முதல் 8 மணி வரை சூரிய கலை, 8 மணி முதல் 10  மணி வரை சந்திர கலை என பன்னிரண்டு மணி நேரத்திற்கு ஆறு முறை மாறும். பகலில் ஆறு முறை இரவில் ஆறு முறை மாறும். இது யோகிகளுக்கு மட்டும்தான் தெரியும், மற்றவர்களுக்குத் தெரியாது.    
      வலது பக்கமே ஒரு மாதம் மூச்சுக்காற்று ஓடினால் சாவு வரப்போகிறது என்பது யோகிகளுக்கு தெரியும். யோகிகள் அதை புரிந்து கொள்வார்கள். இதை சரிப்படுத்திக் கொள்வார்கள். இது இல்லறத்தானுக்குத் தெரியாது. இடது பக்கமே காற்று ஓடினால், பிரச்சனை வரப்போகுது என்று அர்த்தம். வாத, பித்த, சிலேத்துமம் சம நிலைக்கு வராது. மாறி மாறி நடந்தால்தான் வாத பித்த சிலத்துமம் சம நிலைக்கு வரும். இடது பக்கமே காற்று வந்தால் உடம்பில் குளிர்ச்சி ஏற்பட்டு ஈளை, இருமல் வரும், ஈளை, இருமல் வந்தால் அவனுக்கு நோய் வந்து செத்துப் போவான். ஆக இதையெல்லாம் மகான் ஔவையார் சொல்வார்,
     மூலத்திற் றோன்றி முடிவிலிரு நான்காகிக்
      கால் வெளியிற் பன்னிரண்டாங் காண்.
                                                – ஔவைக் குறள் – வாயு தாரணை – குறள் எண் 1
                ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
      பேராமற் கட்டிப் பெரிதுன்ன வல்லீரேல்
     
      ஆக இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். காற்று அடங்கினால் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
     பேராமல் –கையை விட்டுப் போய் விடக்கூடாது. ஒடுங்கின காற்றை அப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். தலைவன் ஆசி இருந்தால்தான் முடியும். ஏனென்றால் அரை அங்குல பாகத்தில்தான். சுக்கிலம் உற்பத்தியாகும் இடத்தில் இந்தக் காற்றுத் தங்க வேண்டும்.
     நீராயிரமும் நிலமாயி ரத்தாண்டும் – நீராயிரமும் என்பது இந்த கடல் தண்ணீர் தோன்றி, பல லட்சம் கோடி வருடமாயிற்று. பல லட்சம் கோடி வருடமாக மழை பெய்து கொண்டே உள்ளது. கடல் தண்ணீர் விட அதிகமாக மழை பெய்துள்ளது. ஆனால் இன்னும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குறையவில்லை.
     நிலமாயிரத்தாண்டு – இந்த நிலம் தோன்றி பல லட்சம் கோடி வருடமாயிற்று. எத்தனையோ கோடான கோடி உயிரினங்கள் தோன்றியிருக்கிறது, அழிந்திருக்கிறது. ஆனால் நிலம் மட்டும் அழியவில்லை. இந்த உலகம் தோன்றி பல லட்சம் கோடி வருடமாயிற்று. இப்படி பல லட்சம் கோடி வருடமானாலும் எவ்வளவோ மழை பெய்தும், இன்னும் கடலில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கடலில் குறையவில்லை. இன்னும் பூமி அப்படியே இருக்கிறது.
      கதிரவனும் அப்படித்தான். கதிரவனின் வெப்பம் கூடும் குறையும், அங்கே வெப்பம் அப்படியேதான் இருக்கும். சுழற்சியின் காரணமாக வெப்பம் கூடும், குறையும். ஆனால் இந்த சூரியனை நாம் பார்க்கலாம். இந்த உலகம் இருக்கும் வரையில் நாம் இருக்கலாம். இதுபோல் இன்னும் எத்தனையோ பார்க்கலாம். ஞானிகளுடைய ஆற்றல் என்னவென்றால் இதைப்போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். உலகத்தை உண்டாக்கலாம். இவ்வளவு வல்லமை இருக்கிறது.
     சாகாமல் இருப்பதுதான் முக்கியமானது, நீ ஏன் கவலைப்படுகிறாய்? என்று சொல்வார். சாகாமல் இருக்க வேண்டும். இந்த தேகத்தை வைத்துக் கொண்டு சாகாமல் இருக்க முடியாது. ஆனால் இந்த உடம்பைக் கொண்டுதான் நாம் வாழ முடியும்.
     சேற்றைக் கழிய வழிவிட்ட வா – நமக்கு நச்சுத் தன்மையை உண்டாக்கக்கூடிய, ஈளை இருமலுக்குரிய, நரை, திரை, மூப்புக்குரிய, பரிணாம வளர்ச்சிக்குரிய உடம்பை நீக்க வேண்டும். நீக்கினால்தான் இந்த உடம்பு ஜோதி உடம்பு ஆகும். அது ஞான தேகம்.
     ஜோதி உடம்பைப் பெற்றவர்கள்தான் இந்த உலகம் உள்ளளவும் இருப்பார்கள். நீராயிரம் – பலகோடி யுகத்தை இவர்கள் பார்ப்பார்கள். அது மட்டுமா? கண்ணை மூடிப் பார்த்தால், இந்த உலகத்தின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் தெரியும். புருவ மத்தி என்கிற ரகசியத்தை அறிந்த மக்களுக்கு அவ்வளவு வல்லமை இருக்கிறது.
      நோகாமற் பார்த்துவரக் கண் திறக்கும் – புருவ மத்தியில் கண் திறக்கும். அதற்கு பூட்டுத் திறக்கிறது, சுழிமுனைக் கதவு திறக்கிறது என்று அர்த்தம்.
                தாக்கையா மேல்வாசற் குள்ளே சென்று
            சாக்கிரத்திற் கண்மூடி சதாநித்தம் பாரு
      நோக்கையா நோயெல்லாம் நிர்த்துளியாகும்
            நோகாமற் பார்த்துவரக் கண் திறக்கும்.
      ஆசான் சொன்னபடி எவன் நடந்தால் துன்பம் வராது.
      நோகாமற் பார்த்துவரக் கண் திறக்கும் – பூட்டு சுழிமுனைக் கதவு திறக்கும். சுழிமுனைக் கதவு திறந்தவுடன் அமிழ்த பானம் சாப்பிடுவான். இந்த உடம்பே அமிழ்தபானமாகும். மேலும் மேலும் சாப்பிட சாப்பிட ஜோதி தோன்றும். இந்த உலகத்தைப் பார்க்கிறான். ஈரேழு பதினான்கு உலகத்திற்குள்ளும் புகுந்து வருவான். கீழே நோக்கிப் பார்ப்பான். ஏதோ தள்ளுவது போல இருக்கும். நூறு லட்சம் கோடி மைல் கீழே போவான். அப்படியே கீழே போகப் போக ஏதோ நம்மைக் கீழே தள்ளுவது போல இருக்கும். முதுகில் ஒரு தட்டு தட்டி, அப்படிப் பார்க்கக் கூடாது என்பார்கள் ஞானிகள். அப்படி பார்ப்பதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.
     என்ன ஆச்சரியம்! புருவமத்தியைப் பார்க்கும்போது சொல்லவொண்ணாத பேரானந்தத்தில் இருப்பார்கள். இங்கிருந்து உலகத்தின் எந்த மூலையையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடலுக்கடியில் கவனம் செலுத்தி, ஜீவராசிகளையெல்லாம் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். கடலுக்கடியில் உள்ள எல்லா நீர் வாழ் ஜந்துக்களையெல்லாம் இங்கிருந்தே பார்த்து ரசிக்கலாம். அதுமட்டுமல்ல, இந்த பூமிக்கு அடியில் எந்தெந்த இடத்தில் நிலக்கரி இருக்கிறது, எந்தெந்த இடத்தில் தாதுப் பொருள் இருக்கிறது, எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியும்.
     இது மட்டுமல்ல! பல அண்டங்களில் பார்வை செலுத்தி, என்னென்ன அதிசயம் இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு அளவுதான். இந்த உடம்பு பூரணமாகக் கரையும் வரையில், ஒளி உடம்பாகும் வரையில் அதிலேயே முழு கவனம் இருந்தால், அதிலேயே மெய் மறந்து கொண்டிருந்தால் என்னாவது. அப்பொழுதும் ஆசானை அழைத்து, ஆசி வேண்டுமென வீழ்ந்து வணங்குவான். அப்படி வீழ்ந்து வணங்கும்போது ஞானிகள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
       ஆசானை வணங்காமல், புருவமத்தியில் கூர்ப்பார்வை பார்த்து அளவில்லாத அந்த உலக அதிசயங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டால் என்ன ஆகும்? உடம்பு இன்னும் கரையவில்லை, கவனிக்க ஆரம்பித்து விட்டான். நம்மை வணங்காமல் செய்கிறான் என்றால், அப்படியே விட்டு விடுவார்கள் ஞானிகள். அப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். உடம்பு பூராவும் எறும்பு அரிக்க ஆரம்பித்து விடும். ஆகா! பிரச்சனை வந்துவிட்டது என்று அர்த்தம்.
     ஆசானை வீழ்ந்து வணங்கித்தான் அதிசயங்களைப் பார்க்க வேண்டும். உலகத்தில் அமெரிக்க, ரஷ்யா எங்கெங்கெல்லாம் அதிசயங்கள் இருக்கிறதோ, அதையெல்லாம் இங்கிருந்தே பார்த்துக் கொண்டிருக்கலாம். இதுமட்டுமல்ல, எத்தனையோ கோடான கோடி அண்டங்கள் இருக்கு. கோடான கோடி அண்டங்களை அந்த அதிசயத்தை இங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கலாம். அதனால் ஒன்றும் குற்றமில்லை.
     உடம்பு இன்னும் பூரணமாககரையவில்லை. சூடம் போல் உடம்பு கரைய வேண்டும்.
     கரையாமல் இருக்கும்போது அதிசயத்தில் கவனம் செலுத்தினால் என்ன ஆகும்? ஞானிகளை வணங்காமல் அதிசயத்தில் கவனம் செலுத்தினால், உடம்பு முழுவதும் அப்படியே அசையாமல் இருக்கும். எறும்பு அரிக்க ஆரம்பித்து விடும். இவன் செத்துப்போனதாக சொல்லி, சுடுகாட்டில் வைத்து விடுவார்கள். நெருப்பு வைத்து விட்டார்களென்றால், நெருப்பு வைத்தவன் வாழ்க்கை அழிந்து போகும். அந்த நாடே அழிந்து போகும்!
     இன்னும் இந்த தேகத்தைக் கரைக்கவில்லை. தேகம் கரையாததால் அவன் அதிசயத்தைப் பார்க்க ஆரம்பித்தான். அதிசயத்தைப் பார்க்க ஆரம்பித்தவன் அதிலேயே லயித்துவிட்டான். உடம்பு உணர்வற்று, செத்துப்போனது போல் இருக்கிறான். ஆனால் உள்ளே, ஆன்மா இருக்கும். யாருக்கும் தெரியாது. உடம்பை நெருப்பு வைத்து எரித்து விட்டார்களென்றால், யார் யார் இதில் முயற்சித்தார்களோ அவர்கள் வாழ்வெல்லாம் அழிந்து விடும்.
     நமக்குப் புரியவில்லை. என்னவென்று தெரியவில்லை. உட்கார்ந்து கொண்டே இருக்கிறார். உடம்பெல்லாம் எறும்பு அரிக்குது. என்ன செய்வது?
     ஒன்டுறம் கவலைப்படாதே. அப்படியே உள்ளே வைத்து மூடி விடுங்கள். மூடாமல் எரித்து விட்டால் பிரச்சனை வரும். அரை வேக்காட்டுத்தனமாக போய்விடும்.
     நீ காண்கிற அதிசயங்கள் நாங்கள் காட்டுவது. அதிசயத்தைப் பார்ப்பது இருக்கட்டும். நாங்கள்தான் அதிசயத்தைக் காட்டுகிறோம். இவ்வளவு பெரிய வாய்ப்பையும் நாங்கள் உனக்கு தந்திருக்கிறோம். ஆனால் எங்களை வணங்கித்தான் அதை பார்க்க வேண்டும் என்பார்கள்.
     ஜோதியைக் கண்டாலும் சரி, அதிசயத்தைக் கண்டாலும் சரி, தலைவனை அழைத்துதான் பார்க்க வேண்டும்.
     ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
                                உன்னமுடியா அவற்றின்
                ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரண் அண்டம்
                                திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
                சிவஅண்டம் எண்ணிறந்த
                                திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சக்தி சத்தார்தம்
                சீரண்டம் என்புகலுவேன்
                      உருவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
                உறுசிறு அணுக்களாக
                                ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
                ஒருபெருங் கருணைஅரசே
                                மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
                வந்தந்த மெய்த்தந்தையே
                                மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
                வல்லநட ராஜபதியே.
                                -திருஅருட்பா ஆறாம் திருமுறை – நடராஜபதி மாலை – கவி எண் 1359
                உலகத்தில் இருக்கும் எல்லா அதிசயத்தையும், கோடான கோடி அண்டங்களையும் பார்க்கலாம். இவ்வளவு அண்டங்களையும் ஆசான் சுப்பிரமணியர் பார்த்திருக்கிறார். ஆசான் சுப்பிரமணியர் பார்த்த அந்த அதிசயத்தை, தன திருவடியைப் பற்றுகின்றவர்களுக்கும் அப்படி பார்க்கின்ற வாய்ப்பை தருவார். எல்லா வகையான ஜோதிகளையும், அண்டங்களையும் பார்க்கலாம். அப்படி பார்க்க அனுமதி உண்டு. ஆனாலும் ஒரு முறையறிந்து ஆசானைக் கேட்டுத்தான் பார்க்க வேண்டும்.
     இப்படி பல அண்டங்களைப் பார்க்கும் அளவிற்கு வருவதே ஒரு குறிப்பிட்ட எல்லை என்றார். உலகத்தில் இருக்கும் எல்லா அதிசயத்தையும், அண்டங்களையும் பார்க்கிறான் என்றாலும், ஒரு குறிப்பிட்ட அளவுதான் சித்தி பெற்றிருக்கிறான். இன்னும் முழுமையடையவில்லை. எப்போது முழு சித்தி வருமென்றால், இந்த உடம்பு சுத்தமாகக் கரைந்து ஜோதியாகும் வரையில் அவன் முழு சித்தி பெறாதவன். இந்த இடத்திற்கு வருபவன் இதை அறிந்து கொள்வான், தன்னைக் காப்பாற்றிக் கொள்வான். இந்த வாய்ப்பை பெற்றது, சொல்லவொண்ணாப் பேரானந்தம் அடைவதற்கு மட்டுமல்ல முழுமையாக சித்தி பெற வேண்டும்.
     மலேசியாவில் நமது அன்பர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு உணவுப் பொருள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். அதை இங்கிருந்தே சுவைத்து விட முடியும். இங்கிருந்தே அதை சுவைக்கலாம். அது மட்டுமல்ல. இங்கிருந்து கை நீட்டினால் அங்கிருக்கும் பொருளை எடுக்கலாம். ஞானிகளுக்குத் இது தடையே இல்லை. உலகத்தில் எந்த மூலையில் பேசினாலும் காதால் கேட்கலாம். அவ்வளவு வல்லமை இருக்கிறது. என்ன உணவுப் பொருள் சமைத்து வைத்திருந்தாலும் சுவைத்துப் பார்க்கலாம். அவர்களுக்கு இந்த மலைகள், கடல் போன்றவை தடையே இல்லை. இவ்வளவு பெரிய வாய்ப்பு. இதற்கும் தலைவன் ஆசியிருக்க வேண்டும். இந்த அதிசயத்தையெல்லாம் ஞானிகள் ஆசியிருந்தால்தான் பார்க்க முடியும்.
     ஒளி உடம்பு பெறும் வரையில், சூடம் போல் பூரணமாக உடம்பு கரையும் வரையில் கவனமாக இருக்க வேண்டும். ஆசானை வணங்கிதான் அதிசயத்தைப் பார்க்க வேண்டும். இதற்கு தலைவனின் ஆசி இருக்க வேண்டும்.

        நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
                சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்
                பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
                யார்உளர்நீ சற்றே அறை.
                                           -திருஅருட்பா ஆறாம் திருமுறை – சமரச நிலை – கவி எண் – 1025

        நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் – துன்பம் இல்லாமல் தவத்தை முடிக்க, தினந்தினம் ஆசானை வணங்கி தவத்தைச் செய்ய வேண்டும். பிராணாயாமம் செய்வதனாலும் சரி, நிஷ்டை மேற்கொள்வதாலும் சரி, ஞானிகளின் ஆசி இருக்க வேண்டும்.
     நிஷ்டை மேற்கொள்வது சாதாரண விசயமல்ல. உந்திக்கமலத்திலிருந்து அனலை ஏற்றும் போது, நிஷ்டை இருந்தால்தான் அனல் ஏறும். இதற்கெல்லாம் பெரியவங்க ஆசி இருக்க வேண்டும்.
     அத்தாற் பிறவி யவரிரு கண்களை
      வைத்தார் நுனிமூக் கின்புரு வத்திடை
      நித்தார மங்கே நினைக்கவல் லார்க்கு
      எத்தாலுஞ் சாவிலை இறையவ னாமே.
                                         மகான் திருமூலர் அருளிய ஞானக்குறி 30 –கவி எண் 5
        இந்தக் கூர்ப்பார்வை செலுத்தினால்தான், உடம்பில் முழுமையாக மூலக்கனல் ஏறும், இல்லையென்றால் முடியாது. இதையெல்லாம் ஒருவன் கண்டு பிடிக்க வேண்டும். அவன்தான் கடவுள் என்றார். ஆசான் அகத்தியர் சொல்வார்,
     பக்கமுனக் குற்றதுணை வேண்டுமென்றால்
                      பார்வைரெண்டும் நடுநிறுத்திப் பார்க்கப்பார்க்க
                திக்கெட்டுப் பாலகரும் வீரபாகும்
                                சேவல்,மயில் வேலுடனே செவ்வேள்தோன்றும்
                ஒக்கவுனக் குற்றதுணை உரைபாருண்மை
                                ஓங்கார முருகனோ ரெழுத்துங்கானும்
                துக்கமறுந் திருவாடு துறையைப்பார்க்கில்
                                சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
                                                -மகான் அகஸ்தியர் துறையறி விளக்கம் – கவி எண் 28
                உனக்கு எங்களுடைய பக்க பலமும் ஆசியும் வேண்டுமா? “ஆமாம் என்ன செய்ய வேண்டும்” என்றான்.
    
     பக்கமுனக் குற்றதுணை வேண்டுமென்றால் – உன்னுடன் நாங்கள் துணையாக இருந்து உனக்கு அருள் செய்ய வேண்டுமென்றால், பார்வைரெண்டும் நடுநிறுத்திப் பார்க்கப்பார்க்க திக்கெட்டுப் பாலகரும் வீரபாகும் – நீ பார்வையை புருவ மத்தியில் செலுத்து என்றார். எவ்வளவு நேரம், அதுதான் உன்னுடனே நாங்கள் இருக்கிறோமல்லவா? காலை, மதியம் என்னை (குருநாதர் அவர்களை) ஒரு மணி நேரம் புருவமத்தியைப் பார்க்க ஆசான் அனுமதித்தார்.
     பால் காய்ச்சினால் எந்த அளவுக்குப் பக்குவம் இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு உடம்பில் கனல் ஏறிக் கொண்டிருக்க வேண்டும். கனல் மிகுந்தாலும் ஆபத்து. உடம்பு தீய்ந்து போகக் கூடாது. உடம்பைப் பால் காய்ச்சுவது போல் என்றார். இதில் அவ்வளவு பெரிய மர்மங்கள் உள்ளே இருக்கிறது.
     தோஷமென்ன வென்றாக்கால் சொல்லக்கேளு
            சூதமென்ற சிவனுடைய சுக்கிலந்தான்
      தோஷமென்ன சுட்டாக்கால் ரவிகோடிநரகம்
            சுகமாக யிதைக்கட்ட மதிகோடியோகம்
      தோஷமென்ன கேந்திமுதல் பராபரைக்குநாதம்
            சுட்டாக்கா லென்னாளும் நரகில்மாய்வான்
      தோஷமென்ன உபசரங்கள் காரஞ்சாரம்
            சுட்டவனோ கடத்தேறாத் துரோகியாமே.
                                மகான் கொங்கணவர் நடுக்காண்டம் – 500 – கவி எண் 472
                இப்படியெல்லாம் ஞானிகள் ஏராளமான பாடல்களை நூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படித் தெரிந்து கொள்வது? எங்கள் திருவடியைப் பற்று என்று ஞானிகள் சொல்வார்கள்.
      சூதமென்ற சிவனுடைய சுக்கிலந்தான் – இந்த உடம்பில் இருக்கும் சுக்கிலமானது பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சுக்கிலம். இந்த விந்து உன் அப்பன் விந்து, அவனுக்கு அவனுடைய அப்பன் விந்து, அதன் ஆரம்பத்தில் அதன் உற்பத்தி என்பன, “நாத விந்துகலாதி நமோ நம” என்றார் மகான் அருணகிரிநாதர்.
     உயிரினங்கள் தோன்றும்போதே, ஒவ்வொரு ஜீவராசிக்கும், அவைகள் உடம்பில் சுக்கிலம் (விந்து), சுரோணிதம் வைத்திருக்கிறான். இந்த சுக்கிலமானது ஆதித் தலைவன் ஆரம்பத்தில் தோன்றும் போது தூய்மையாகத் தோன்றி, ஆண் பெண் சேர்க்கை காரணமாக அசுத்தமாகி, பிறகு ஞானிகள் தயவினால் மீண்டும் சுத்தமாகிறது.
     கூர்ப்பார்வை செலுத்தும்போது உஷ்ணமானது மிகுதியானால், “ரவி கோடி நரகம்” என்றார். நூறு கோடி சூரியன் இருக்கும் வரையில் இவன் நரகத்திற்குப் போவான்.
     “சுகமாக இதைக் கட்ட மதி கோடி யோகம்” – அப்பப்பா! இப்படியெல்லாம் ஞானிகளின் நூலில் இருக்கிறது. என்ன செய்ய முடியும்? யார் உள்ளே நுழைய முடியும்? சாதாரண விசயமா? பெரியவர்கள் ஆசி இல்லாமல் நுழைய முடியாது. இந்த கருத்தை அறிய முடியாது.
      பக்கமுனக் குற்றதுணை வேண்டுமென்றால்
                      பார்வைரெண்டும் நடுநிறுத்திப் பார்க்கப்பார்க்க
                திக்கெட்டுப் பாலகரும் வீரபாகும்
                                சேவல்,மயில் வேலுடனே செவ்வேள்தோன்றும்
                ஒக்கவுனக் குற்றதுணை உரைபாருண்மை
                                ஓங்கார முருகனோ ரெழுத்துங்கானும்
      ஏன் இதையெல்லாம் சொல்கிறோமேன்றால், இப்படியெல்லாம் மர்மம் இருக்கிறது.
      சாரம்விட்டால் சாரமில்லை விசாரமாச்சு
            சகலதுறை சகலகன்மம் தயங்கிப்போச்சு
      காரம்விட்டால் காரமில்லை சுன்னாம்பெல்லாம்
            கைமுறையாய்க் கடுங்கார மேற்றுயேற்று
      பூரம்விட்டால் சுருக்கில்லை சுண்ணாம்புக்குப்
            போளம்விட்டால் தொழிலில்லை வருணத்துக்கு
      ஆரம்விட்டு உப்புவிட்டால் புடமேபோச்சு
            அப்பனே நாலையுந்தா னறிந்துகொள்ளே
                                           – மகான் கொங்கணவர் நடுக்காண்டம் 500 – கவி எண் – 216
                சாரம்விட்டால் சாரமில்லை விசாரமாச்சு” என்பார்
     புருவமத்தியில் கவனம் செலுத்துகிறான். கவனம் செலுத்தும் போது, பிராணாயாமம் செய்கிறான். பிராணாயாமம் செய்வதிலேயே இவ்வளவு மர்மம் இருக்கிறது. இப்படிப்பட்ட கருத்துகளெல்லாம் நூலில் இருந்தால் யார்தான் தெரிந்து கொள்வது? நீ ஒன்றும் இதை அறிய முடியாது. அது அவ்வளவு லகுவல்ல.
     ஆசானின் கருணை, சொற்குருவின் கருணை இருக்க வேண்டும், அவருடைய திருவடியை வணங்க வேண்டும். ஞானிகளின் கருணைஇருந்தால்தான், இந்த வாய்ப்பு கிடைக்கும். ஞானிகளின் கருணையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
     ஞானிகளின் கருணையைப் பெற வேண்டுமென்றால், தொண்டு செய்ய வேண்டும். அப்படி தொண்டு செய்யும்பொது நல்ல பிள்ளை என்று நாங்கள் முடிவெடுக்க வேண்டும். நல்ல பிள்ளையென்று நாங்கள் முடிவெடுத்தால், நல்ல பிள்ளையென்று தலைவனும் முடிவெடுப்பான்.
     கல்விக்கே அகப்படாத ஒன்றைத்தான் நான் இப்ப்போது பேசிக் கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் கற்றுக் கொண்டு செய்ய முடியாது, கற்றுக்கொள்ளவும் முடியாது. கல்விக்கே அகப்படாத ஒன்று. எந்த நூலில் இதை படித்தீர்கள் என்றால், எந்த நூல்களுக்கும் அகப்படாது. நூலறிவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஞானிகள் தினம் பூஜை செய்யும்போது அந்த வாய்ப்பு கிடைக்கிறது.
                களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
                களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
                களிம்பணு காத கதிரொளி காட்டிப்
                பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
                                                                திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 114
                களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி  என்று ஆசான் திருமூலதேவர் சொல்வார்.
     பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப் ப்ரபஞ்ச மென்னும் சேற்றைக் கழிய வழிவிட்ட வா என்று மகான் அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் சொல்வார். ஆக களிம்பு என்பதைப் பற்றி இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
        பேற்றைத் தவம் எம்பது பெருமைக்குரியது. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறது. இங்கே உள்ளவர்களை அழைத்து தொண்டு செய்ய சொல்வோம். எங்கள் மனம் மகிழும்படி தொண்டு செய், எங்கள் மனதில் கோபம் வரும்படி நடந்து கொள்ளாதே என்போம். எங்கள் மனதில் கோபம் வரும்படி நடந்து கொள்ளாதே என்போம். எங்கள் மனதில் வேற்றுமை வராமல் நடந்து கொண்டால், நங்கள் உங்களுக்கு அருள் செய்வோம் என்று அவனைக் கூப்பிட்டுச் சொல்வோம். அதனால் குற்றமில்லை. இப்படி சொல்லித் தெளிவான பாதை காட்டுவோம்.
     தினம் பூஜை செய்ய சொல்வோம். பூஜையும் செய்து, தொண்டும் செய்கிறார்கள். எங்கள் மனதில் நல்ல தொண்டன் என்று பெயரெடுத்தால், ஞானிகளும் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால் புறந்தள்ளி விடுவார்கள், உள்ளே நுழைய முடியாது. பூஜை செய்ய, பூஜை செய்ய, பூஜை செய்ய அறிவு வரும்.
     உடம்பு சேறுதான், காமதேகம்தான், மும்மலத்தால் ஆனதுதான். இந்த தேகத்தை நீக்காவிட்டால் நிச்சயம் மரணம் வந்து விடும் என்ற உணர்வு வரும். எங்கள் ஆசி பெற்றால் இந்த அறிவு வரும். ஞானிகள் ஆசியாலும் இந்த அறிவு வரும். இப்படிப்பட்ட அறிவைப் பெறப் பெற உடம்பைப் பற்றிய பலகீனம் தெரியும்.
     இந்த உடம்பு உயர்ந்த உடம்பு. யாருக்கு? சேற்றைக் கழிய வழிவிட்டவா – உடம்பு என்ற அசுத்தம் நீங்கியவனுக்கு இது உயர்ந்த உடம்பு. இல்லையென்று சொன்னால், உயர்ந்த உடம்பாக இருக்க முடியுமா? காம தேகமாக இருக்கும். கொடுமையான காமதேகத்திற்கு உட்பட்டு செத்து போவான்.
     களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
      களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
     களிம்பு அறுத்தான், களிம்பை நீக்கினான். ஞானிகளுடைய ஆசியினால்தான் நீக்கியிருக்கிறார்கள். இவனுடைய அறிவினால் முடியாது. இந்த உடம்பைப் பற்றிய ரகசியத்தை இவனுக்கு உணர்த்தினார்.
     களிம்பணு காத கதிரொளி காட்டிப் – மேலும் இந்த உடம்பில் அசுத்தம் சேராமல் காத்து, ஜோதியைக் காட்டுவார். ஜோதியைக் காட்டி சித்தி பெற செய்வார்கள். யார் இதை அறிந்து கொள்வது? எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு ஆசான் திருமூலர் சொல்வார்,
     
      வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
      கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
      தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னுந்
      தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.
                                                                திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 116
                தாயினும் மும்மலம் மாற்றி தாய் போல கூடவே இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான்,நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் என்று கூற முடியும்.

      நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
                சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்
                பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
                யார்உளர்நீ சற்றே அறை.
                                திருஅருட்பா ஆறாம் திருமுறை – சன்மார்க்க நிலை – கவி எண் 1025
        இந்த தேகத்தில் இருந்து கொண்டா அவர்கள் சாகாமல் இருக்க முடியும்? ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
        பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்; மற்று
      நிலையாமை காணப் படும்.
                                                – திருக்குறள் – துறவு – குறள் எண் 349
                பற்றற்ற கண்ணேபற்று அற்ற போதுதான் பிறப்பு அறுக்கும். பிறவியை அறுப்பது அறிவா? உடம்பா? என்று கேட்டால், அறிவுள்ளவன் உடம்பைப் பற்றி அறிவான். உடம்பைப் பற்றி அறிந்தவன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வான். இப்படியெல்லாம் மர்மம் இருக்கிறது.
      எங்களுக்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால், கவலைப்படாதே. அந்த வாய்ப்பு உங்களுக்கும் இருக்கிறது. தினம் ஆசானை பூஜை செய். ஆசானை பூஜை செய்து ஆசானுடைய ஆசியைப் பெற வேண்டும். பெரியோர்கள் ஆசியை பெற பெற பெற, நமக்கு உடம்பைப் பற்றிய பலகீனம் தெரியும். உடம்பைப் பற்றிய பலகீனம் தெரிந்தால் உயிரைப் பற்றிய பலகீனம் தெரியும்.
    
     உயிருக்கு பலகீனங்கள் இல்லை. ஆனால் உயிருக்கு ஏன் மாசு வந்தது, உடம்பால் உயிருக்கு மாசு வந்தது. உயிருக்கு மாசு வந்தது உடம்பால். அறிவின்மையால் உடம்புக்கு மாசு வந்தது.
     ஆகவே, நாம் முன்னேற ஆசானுடைய ஆசியைப் பெற வேண்டும். “எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும்” என்று தினமும் ஆசான் அகத்தீசரையோ, மகான் திருமூலதேவரையோ கேட்க வேண்டும். ஞானம் என்பதே உடம்பைப் பெற்றி அறிவதுதான். உடம்பைப் பற்றி அறிந்து உள்ளுடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதை மகான் பட்டினத்தார் சொல்வார்,
    
     மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்
      கோனாகியென்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
      போனாலும் பேறிருந் தாலும்நற் பேறிது பொய்யன்றுகாண்
      ஆனாலும் இந்தவுடம்போ டிருப்ப தருவருப்பே.
                                                -மகான் பட்டினத்தார் – பொது – கவி எண் 59
                மிகப் பெரிய வல்லவர் மகான் பட்டினத்தார். அவர் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பு என்றார். இந்த உடம்பு தாய் தந்தையால் எடுத்த தேகம். ஆனால் அருவருப்பானது, அசுத்தமானது. இந்த தேகம் நீங்காமல் அந்த இடத்திற்குப் போக முடியாது. அந்த வாய்ப்பை அன்பர்கள் பெற வேண்டுமென்றால் ஞானிகளை வணங்கி ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுதான், தெளிவான ஒரு வாய்ப்பு.
        நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
                சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்
                பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
                யார்உளர்நீ சற்றே அறை.
                                           -திருஅருட்பா ஆறாம் திருமுறை – சமரச நிலை – கவி எண் – 1025
        என் திருவடியைப் பற்றியதால் தில்லை வாழ் அம்பலவாணனும், ஆசான் அகத்தீசரும், மகான் திருமூலதேவனும் ஒன்று. ஆக எல்லோரும் ஒன்று. ஆசான் சுப்பிரமணியரை தினம் பூஜை செய்தால், நவகோடி சித்தர்களையும் பூஜை செய்ததாக அர்த்தம். தில்லை வாழ் அம்பலவாணன், சிதம்பரம் என்பது புருவமத்தி. சலிப்பில்லாமல், சோர்வுபடாமல், இங்கே வந்து இந்த மண்ணை மிதித்து, தொண்டு செய்து நாங்கள் காட்டுகின்ற பாதையைப் பின்பற்றி வந்தால், இந்த வாய்ப்பு உங்களுக்கும் உண்டு.
     இங்கு உள்ள அன்பர்களுக்கெல்லாம் ஞானிகள் ஆசி உண்டு. அவரவர்கள் முன்னேறலாம். அவசரப்படாமல் மெதுவாக தொண்டு செய்து ஆசி பெற்றால், “நோவாமல் நோன்பு” மேற்கொள்ளலாம். துன்பமில்லாமல் தவத்தை மேற்கொள்ளலாமென்றும் சொல்வார்.
     தோஷமென்ன வென்றாக்கால் சொல்லக்கேளு
            சூதமென்ற சிவனுடைய சுக்கிலந்தான்
      தோஷமென்ன சுட்டாக்கால் ரவிகோடிநரகம்
            சுகமாக யிதைக்கட்ட மதிகோடியோகம்
      தோஷமென்ன கேந்திமுதல் பராபரைக்குநாதம்
            சுட்டாக்கா லென்னாளும் நரகில்மாய்வான்
      தோஷமென்ன உபசரங்கள் காரஞ்சாரம்
            சுட்டவனோ கடத்தேறாத் துரோகியாமே.
                                மகான் கொங்கணவர் நடுக்காண்டம் – 500 – கவி எண் 472
     இப்பொழுது பேசப்பட்ட கருத்துகள் நுட்பமான கருத்து. ஆசானை வீழ்ந்து வணங்கி, ஆசான் அகத்தீசரை பூஜை செய்து இந்த கருத்துகளைக் கேட்க வேண்டுமென்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.
ஓம் அகத்தீசாய நம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175143
Visit Today : 283
Total Visit : 175143

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories