கருவூர் முனிவரின் கருணை

14.04.1999 அன்று அருளிய மகான் ஆறுமுக அரங்கர் அருளுரை

  
ஓம் அகத்தீசாய நம

அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
     ஆசான் அகத்தீசர், ஆசான் நந்தீசர் போன்ற ஞானிகளின் வரிசையில் வந்தவர்தான் மகான் கருவூர்முனிவர். நான் மகான் கருவூர்முனிவரை வணங்கியவன். “அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். நீதானப்பா அருள் செய்ய வேண்டும். நான் கல்லாத மூடன், பாவிக்குத் தலைவன். நீங்களெல்லாம் பெரியவர்கள். புண்ணியவான்கள். என்மீது கருணை கொண்டு என்னை ஏற்று அருள் செய்ய வேண்டும்” என்று கேட்கக்கூடிய கல்வியை மகான் கருவூர்முனிவர் எனக்கு தந்தார்.
     “என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, அருள் செய்து நீர் என்னை ரட்சிக்க வேண்டும்” என்று கேட்கின்ற கல்வியைப் பெற்றிருக்கிறேன்.
     இப்படி யாரேனும் கேட்பானா? தலைவனை யாருக்கும் தெரியாது, தலைவனை எப்படி வணங்க வேண்டுமென்றும் தெரியாது. அப்படி தெரிந்தால் அதுவே புண்ணியம்.
     மகான் கருவூர்தேவர், மகான் திருமூலர் போன்ற பெரிய மகான்களை வணங்கி அவர்களின் ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மகான் கருவூர்முனிவர், மகான் காலாங்கிநாதர், மகான் போகர் போன்ற ஞானிகளெல்லாம் வாசி வசப்பட்டவர்கள், மூச்சுக்காற்று வசப்பட்ட மக்கள். இந்த வரிசையில் வந்தர்தான் மகான் திருமூலர்.
     அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று ஞானிகளிடம் கேட்க வேண்டும். ஞானம் என்றால் ஆன்மாவைப் பற்றி அறிவது. ஆன்மா என்பது, மூச்சுக்காற்றின் அசைவு. மூச்சுக்காற்று ஒரு நாளைக்கு 21,600 முறை வந்து போகிறது. இப்படி 21,600 முறை வந்து போகின்ற மூச்சுக்காற்றை பிராணாயாமம் செய்கிறார்கள். நாங்கள் பிராணாயாமம் செய்திருக்கிறோம். இரண்டு ஆண்டு வாசிப்பழக்கம் செய்திருக்கிறோம்.
     வாசிப் பழக்க மரியவே ணுமற்று
      மண்டல வீடுகள் கட்டவேணும்
      நாசி வழிக் கொண்டு யோகமும் வாசியும்
      நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே.
                                                மகான் கொங்கணர் – வாலைக்கும்மி – கவி எண் 27
     
      கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
                வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
                எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய
                மென்றைக்கி ருக்குமோ வாலைப்பெண்ணே
                                                -மகான் கொங்கணர் – வாலைக்கும்மி – கவி எண் 42
       மகான் கருவூர்தேவர், மகான் போகமகாரிஷி, மகான் மாணிக்கவாசகர், மகான் தாயுமானசுவாமிகள் இவர்களுடைய ஆசியுடன் மூச்சுக்காற்றோடு தொடர்பு கொள்ள வேண்டும். இதுபோன்ற ஞானிகளை வணங்கி, வாசிப்பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாமாக வாசிப்பயிற்சி செய்ய முடியாது. ஆசானை வணங்க வேண்டும். மகான் கருவூர்முனிவரையும், ஆசான் சுப்பிரமணியரையும் வணங்கி, “அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும்” என்று கேட்க வேண்டும். இப்படி ஞானம் சித்திக்க வேண்டுமென்று கேட்டு கேட்டுத்தான் வாசி வசப்பட வேண்டும்.
     வாசி வாசப்பட்டால்தான் அந்தக் காற்று புருவமத்தியில் ஒடுங்கி, மூலாதாரத்தில் கலந்துவிடும். புருவமத்தியில் ஒடுங்கி, விணாத்தண்டு வழியாக வந்து, மூலாதாரத்தில் தங்கிக் கொள்ளும். அப்படி தங்குகின்ற காற்று ஊத்தை தேகத்தை நீக்கும். தொன்மையாக, பல லட்சம் கோடி ஜென்மங்களாக, நம்மை நரகத்தில் தள்ளிய இந்த தேகம் நீங்கி, ஞானதேகம் உண்டாகும். வாசி வசப்படவில்லையென்றால் அவன் என்ன கற்றாலும், அது பயனற்றதாகப் போய்விடும்.
     நாங்கள் ஆசானை வணங்கி, பிராணாயாமம் செய்தோம். பத்மாசனம் இட்டு, விணாத்தண்டு நிமிர்ந்திருந்து, மூச்சுக்காற்றை இழுத்தோம். மூச்சுக்காற்றை இழுத்து வெளிக்காற்றை புருவமத்தியில் நிறுத்தி, கண்டஸ்தானத்தில் ஒடுங்குகின்ற காற்றாகிய உகாரத்தையும், புருவமத்தியில் ஒடுங்குகின்ற காற்றாகிய அகாரத்தையும் சேர்ப்போம். இந்த இரண்டு காற்றையும் சேர்ப்போம்.
    
     இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
      துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
      உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
      கிரக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.
                                        திருமந்திரம் – கேசரி யோகம் – கவி எண் 801
                துதிக்கை என்பது புருவமத்தி
        ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
      காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
      காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
      கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
                                                திருமந்திரம் – பிராணாயாமம் – கவி எண் 571
                கூற்று என்பது எமன். நமக்கு கபம்தான் எமன். கபம் மட்டும் எமன் அல்ல. இந்த உடம்பே எமன். எமனை ஞானிகள்தான் வெல்ல முடியும். வாசி வசப்பட்ட மக்களுக்கு கபம் அற்றுப்போகும். வாசி வசப்பட்ட மக்களுக்கு அசுத்த தேகம் நீங்கும். அசுத்த தேகம் நீங்க, ஆசானுடைய தயவு வேண்டும். தினம் பக்தி செலுத்துகிறோம். பக்தி செலுத்த செலுத்த கபம் அற்றுப்போகும்.
      பூசிக்கப் பூசிக்கப் போட்டக் குளிகையாம்
      பூசிக்கப் பூசிக்கப் பொன்மலையாகும்
      பூசிக்கப் பூசிக்கப் புகட்டுவான் ஞானம்
      பூசிக்கப் பூசிக்கப் புருவமையம் காணுமே.
                                          – திருமந்திரம்
      சாய்க்கச் சாய்க்கச் சரித்திடுங் கோழையும்
      வாய்க்க வாய்க்க வழலையு மற்றது
      தேய்க்கத் தேய்க்கத் செனித்திடுஞ் சேத்துமந்
      தோயக்கத் தோய்க்கச் சுழிமுனை காணுமே.
                                மகான் திருவள்ளுவர் – ஞானவெட்டியான் – கவி எண் 1270
                இவ்வாறு அசுத்த தேகம் நீங்கியவர்கள்தான் தெளிவடைய முடியும். இந்த தேகத்தை வைத்துக் கொண்டு தெளிவடைய முடியாது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தலைவன் ஆசியிருந்தால்தான் இந்த அறிவு வரும். தலைவன் ஆசி இல்லாவிடில் முடியாது. அளவில்லா பக்தி செலுத்துவான், கோவிலில் உருக்கமாக அழுது கண்ணீரோடு பக்தி செலுத்துவான், நிறைய மலர்களைத் தூவுவான், பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய்வான். பக்தி செலுத்துகிறான் அவ்வளவுதான். இவனுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மகான் திருமூலர் இதை சொல்வார்,
      கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
                வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
                ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
                தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
                                                                                -திருமந்திரம் – கிரியை – கவி எண் 1452
                கான் என்பது காடு, கானகம், கானகத்தில் உள்ள சந்தனம் போன்ற பல வாசனைத் திரவியங்கள்.
      கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
மிக்க நறுமணம் உள்ள சந்தனங்களும், அகில் கட்டைகளும் இன்னும் அனேக வகை வாசனை திரவியங்களையும்,
      ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
                தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
ஆக வாசி வசப்பட வேண்டும். ஆசான் திருமூலதேவர் இதை சொல்லும்போது,
     ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
      காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
      காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
      கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
                                                திருமந்திரம் – பிராணாயாமம் – கவி எண் 571
     வயிற்றில் உணவு இருக்கக்கூடாது. உணவை முறையோடு சாப்பிட வேண்டும். பாசிப்பயறு, பச்சரிசி, பழங்கள் இவைதான் சேர்க்க வேண்டும். வயிற்றில் உணவில்லாதபோது, பத்மாசனம் இட்டு மூச்சுக்காற்றை இழுத்து நிறுத்தினால், காற்று இரண்டு பக்கமும் வரும்.
      ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
      காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை என்பார்.
     கால் என்றால் சுவாசம், அந்தக் காற்றை புருவமத்தியில் செலுத்த வேண்டும்.
      இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
என்று சொன்னார். கண்டஸ்தானத்தில் விட்டால், இந்தக் காற்று இந்த பக்கமும், அந்த பக்கமும் போகும்.
பெட்டியிலே அடைத்துவைத்த பாம்புதன்னைப்
                பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
                இருபுறமு மாடிவர எதிரேயேறுங்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறுங்
                கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி
சுட்டியின்கீழ் திருவாடு துறையைப் பார்க்கில்
                சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
                                                மகான் அகத்தியர் துறையறி விளக்கம் – கவி எண் 86
இவ்வளவு பெரிய மர்மம் என்றால், ஒன்றும் மர்மம் இல்லை. இரண்டு பக்கம் வருகின்ற காற்றை புருவமத்தியில் செலுத்துவது என்பது சின்ன விசயமல்ல.
     வாசி நடத்தித் தருவாண்டி – ஒரு
                வாசியில் இங்கே வருவாண்டி
                ஆசில் கருணை உருவாண்டி – அவன்
                அறிபுதத் தாள்மலர் ஏத்துங்கடி
                                திருஅருட்பா ஐந்தாம் திருமுறை – சண்முகர் கொம்மி – 2987
     மகான் இராமலிங்கசுவாமிகள் வெறும் பக்தர் என்று நினைக்காதீர்கள். அவர் மிகப்பெரிய ஞானி. உடம்பைப் பற்றி அறிபவர்கள்தான் ஞானியாக முடியும்.
     இந்த தேகம் காமதேகம், பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்ட தேகம், இதுதான் உடம்பின் தன்மை. இப்படிப்பட்ட தன்மையில்தான் இந்த தேகம் இருக்கிறது. இந்த தேகத்தைப் பற்றி புரிந்து கொண்டவர்கள்தான் ஞானிகள். ஆசானுடைய ஆசியைப் பெற்றதால் வாசி வசப்பட்டது.
    
     “நீங்களெல்லாம் பெரியவங்க ஐயா! உங்களால் எதுவும் செய்ய முடியும். என்னுடைய பாவமோ, உன்னுடைய திருவடியைப் பற்ற முடியாமல் என்னைத் தடுக்கிறது, நீங்களெல்லாம் பெரியவங்கதான். மிகப் பெரிய வல்லமையுள்ளவர்கள்தான், கருணையே வடிவான மக்கள்தான், உங்களுடைய திவடியைப் பற்ற என்னால் முடியவில்லை ஐயா! நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று ஆசான் கருவூர் முனிவரையும், மகான் திருமூலதேவரையும் வணங்கி கேட்க வேண்டும்.
     இந்த வேண்டுகோள் உயர்ந்த வேண்டுகோள். ஆகவே யாரை வணங்க வேண்டும்? என்ன கேட்க வேண்டும்? என்பது எங்களுக்குத் தெரியும். இது தலைவன் ஆசி. ஆசான் திருமூலரையும், மகான் கருவூர்முனிவரையும், மகான் போகமகாரிஷியையும், மகான் காலாங்கிநாதரையும் கேட்டோம். ஞானிகள் எங்களுக்கு மனம் இரங்கி, வாசியை நடத்திக் கொடுத்தார்கள். அதனால் எங்களுக்கு வாசி வசப்பட்டது. அதிலிருந்து எங்களுக்கு தெளிவு வந்தது. இல்லையென்றால் என்னதான் பாடுபட்டாலும், எமன் வருவானே என்ன செய்வது?
     சிலபேர் செந்தூரம், பஸ்பம், கடைச்சரக்கு, சம்பைச்சரக்கு போன்ற மருந்துகளை சாப்பிட்டால் நமக்கு சாவு வராது என்று நினைத்துக் கொண்டிருப்பான். எமன் அவனை பிடரியில் அடித்து தூக்கிக் கொண்டு போவன். யாரையாவது கேட்டாயா? உன் விருப்பத்துக்கு மருந்து சாப்பிடுகிறாய். நீ என்ன மருந்து சாப்பிட்டாலும் அது மலமாகப் போய் விடும். இது மார்க்கமல்ல. அப்படி அவன் மேல் குற்றமில்லை. இன்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். யாரையாவது கேட்டானா என்றால் அதுவும் இல்லை.
     இவன் சாப்பிடுகிற மருந்தெல்லாம் எமனை அசைக்க முடியாது, எமன் அடித்துக் கொண்டு போய்விடுவான்.
     உனக்கு என்ன வேண்டும் என்றான். சாவாமல் இருக்க வழி வேண்டும். நீ ஞானிகளை வணங்கி “அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும், அடியேனுக்கு வாசி வசப்பட வேண்டும். உன் திருவடியைப் பற்ற எனக்கு வாய்ப்பு தர வேண்டும், அடியேன் உண்மையை உணர வேண்டும். அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் வேண்டும். என்னை ரட்சிக்க வேண்டும்” என்று கேட்க வேண்டும். இப்படி கேட்டால் அருள் செய்வார்கள். இல்லையென்றால் மருந்து சாப்பிட்டுக் கொண்டு சில மூலிகைகளை சாப்பிட்டுக் கொண்டு “நாம் சாக மாட்டோம். சாக மாட்டோம்” என்று நினைத்துக் கொண்டே இருப்பான். எமன் வந்து அடித்துக் கொண்டுபோய் விடுவான்.  
     இந்த உடம்பு பலகீனமான உடம்பு, காம தேகம். ஞானிகள் ஆசியால் அந்த தேகத்தை நீக்க வேண்டும்.
     ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
      தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
      இந்த உடம்பைப் பற்றி புரிந்து அதனுடைய அசுத்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
      ஊத்தை சடலமென் றெண்ணா தேயிதை
      உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
      பார்த்த பேருகே ஊத்தையில் லையிதைப்
      பார்த்துக் கொள் உன்றனு உடலுக்குள்ளே.
                                                மகான் கொங்கணர் – வாலைக்கும்மி – கவி எண்   23
      என்று பெரியவர்கள் சொல்வார்கள். இந்த உடம்பு ஊத்தை உடம்பு என்று நினைக்காதே. இந்த உடம்பை ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு இந்த தேகம் அற்புத தேகம்.
     பரிணாம வளர்ச்சியில் இருந்து விடுபடுதல். காமத்திலிருந்து விடுபடுதல் ஆகிய இந்த அமைப்பைத் தெரிந்தவர்களுக்கு இது அற்புதமான தேகம். மகான் பட்டினத்தார் சொன்னது போல்,
                அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
      சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
      உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
      சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே.  
                                மகான் பட்டினத்தார் – நெஞ்சொடு புலம்பல் – கவி எண் 12
 அற்புதமாய் இந்த உடல் யாருக்கு? மகான் கருவூர்முனிவரையும் மகான் அகத்தீசரையும், மகான் திருமூலதேவரையும், மகான் மாணிக்கவாசகரையும், மகான் இராமலிங்கசுவாமிகளையும், மகான் அருணகிரிநாதரையும், மகான் பட்டினத்தாரையும் பூஜை செய்கின்ற மக்களுக்கு இது அற்புதமான உடம்பு இல்லையென்று சொன்னால், இந்த தேகம் உன்னை வாட்டி வதைத்து விடும். உன்னை அணு அணுவாக இந்த உடம்பு சாகடித்து விடும்.
     யாரோ நமக்கு எமன் இல்லை. இந்த உடம்புதான் எமன். உன்னுடனே பிறந்து, உன்னை வஞ்சித்து, உன்னை நரகத்திற்கு தள்ளக் கூடியது இந்த உடம்பு. காலன் அல்லது எமன் என்று இந்த உடம்பை சொல்வார்கள்.
     “என் திருவடியைப் பற்றடா மனிதா! நீ மனிதனாக வேண்டுமானால் என் திருவடியைப் பற்றி!” என்பார் ஆசான்.
     “மகான் பட்டினத்தார் அவர்களே! முதுபெரும் ஞானியே! எத்தனையோ பாவிகள் உங்களது திருவடியைப் பற்றி ஆசி பெற்றிருக்கிறார்கள். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னையும் ஏற்று அருள் செய்யுங்கள்” என்று மகான் பட்டினத்தார் திருவடியைப் பற்றினால், அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே என்று அவர் சொல்வார்.
     “நீங்களெல்லாம் பெரியவங்க ஐயா! என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்ன ரட்சிக்க வேண்டும், அடியேன் மனமாயை ஆற்றிட வேண்டும். அடியேன் வஞ்சனை அற்று வாழ வேண்டும், உன் ஆசியை நான் பெற்றுக் கொள்ள வேண்டும், என்னை ரட்சிக்க வேண்டும்” என்று கேட்பவனுக்குத்தான் யிந்தவுட லாவி யடங்குமுன்னே என்று ஆசான் சொல்வார்.
      சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
      உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
      சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே.
                                மகான் பட்டினத்தார் – நெஞ்சொடு புலம்பல் – கவி எண் – 12
               
     அற்புதமாய் இந்த உடல் யாருக்கு? மகான் கருவூர்முனிவரையும், மகான் அகத்தீசரையும், மகான் திருமூலதேவரையும், மகான் மாணிக்கவாசகரையும், மகான் இராமலிங்கசுவாமிகளையும், மகான் அருணகிரிநாதரையும், மகான் பட்டினத்தாரையும் பூஜை செய்கின்ற மக்களுக்கு இது அற்புதமான உடம்பு. இல்லையென்று சொன்னால், இந்த தேகம் உன்னை வாட்டி வதைத்து விடும். உன்னை அணு அணுவாக இந்த உடம்பு சாகடித்து விடும்.
     யாரோ நமக்கு எமன் இல்லை. இந்த உடம்புதான் எமன். உன்னுடனே பிறந்து, உன்னை வஞ்சித்து, உன்னை நரகத்திற்கு தள்ளக் கூடியது இந்த உடம்பு. காலன் அல்லது எமன் என்று இந்த உடம்பை சொல்வார்கள்.
     “என் திருவடியைப் பற்றடா மனிதா! நீ மனிதனாக வேண்டுமானால் என் திருவடியைப் பற்று” என்பார் ஆசான்.
     “மகான் பட்டினத்தார் அவர்களே! முதுபெரும் ஞானியே! எத்தனையோ பாவிகள் உங்களது திருவடியைப் பற்றி ஆசி பெற்றிருக்கிறார்கள். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னையும் ஏற்று அருள் செய்யுங்கள்” என்று மகான் பட்டினத்தார் திருவடியைப் பற்றினால், அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே என்று அவர் சொல்வார்.
     “நீங்களெல்லாம் பெரியவங்க ஐயா! என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னை ரட்சிக்க வேண்டும், அடியேன் மனமாயை ஆற்றிட வேண்டும், அடியேன் வஞ்சனை அற்று வாழ வேண்டும், உன் ஆசியை நான் பெற்றுக் கொள்ள வேண்டும், என்னை ரட்சிக்க வேண்டும்” என்று கேட்பவனுக்குத்தான் அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே என்று ஆசான் சொல்வார்.
      சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
      உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
      சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே.
      இப்படி சொன்னது மகான் பட்டினத்தார். அவர் மிகப்பெரிய ஞானி.
     அற்புதமான உடம்பு, மிகக் கேவலமான உடம்பு, மிகக் கேவலமான உடம்பு, மிகக்கேவலமான உடம்பு. இதற்கு வழியே இல்லையா? பெரியவங்க ஆசி இருக்கிறது.
     நாம் இது நாள் வரை மரத்திற்கு மஞ்சள் போட்டு வைத்து சாமி கும்பிட்டு கொண்டிருக்கிறோம். அப்படிக் கும்பிட்டுக் கொண்டிருந்தால் முடியுமா? அர மரத்தையும், வெப்ப மரத்தையும் சுற்றி சுற்றி வந்தால் முடியுமா?
     அரசு என்பது சூரிய கலை, வேம்பு என்பது சந்திர கலை. இரண்டையும் ஒன்று சேர்க்க வேண்டும். அப்படியாவது மக்கள் புரிந்து கொள்ளட்டும். அப்படியாவது மக்கள் புரிந்து கொண்டு வரட்டும் என்று வைத்திருக்கிறார்கள்.
     அற்புதமான உடம்பே, அற்புதமான உடம்பு. யாருக்கு என்றால், ஞானிகளை வணங்கியவர்களுக்கு. பெரியோர்களை வணங்கியவர்களுக்கு.
     எப்படி வணங்க வேண்டுமென்பதை ஆசான் வள்ளுவப்பெருமான் சொல்வார்,
     வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
      வேண்டாமை வேண்ட வரும்.
                                    திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 362
     ஒரு மனிதன் விரும்பினால் இனி பிறக்கக்கூடாது என்றார். இதற்கு ஒன்றையும் விரும்பாதிருக்க வேண்டும் என்று சொல்வார்.
     அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
    
     ஒரு மனிதன் சாவதற்கு முன்னே ஞானியை வணங்க வேண்டும். ஞானிகளிடம், “என்னிடமுள்ள பலகீனங்களை அறிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்க வேண்டும். பிறரை மதிக்காத பலகீனங்களைப் பற்றி நான் அறிய வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும்.
     பெருந்தனக்காரர்களின் குடும்பத்தில் பிறந்தவர்கள், அம்மை கண்டு இறந்திருப்பார்கள். அப்படி அம்மை கண்டு இறந்தவர்களை, பதிவு செய்வார்கள். அங்கே சின்ன மண்டபம் கட்டி, அதற்கு கும்பாபிஷேகம் செய்வார்கள். முன்னூறு நானூறு வருடத்திற்குப் பிறகு பிரம்மாண்டமான கோவிலாக இருக்கும். இப்படி சிறு தெய்வத்தை வணங்குவார்கள். அது என்னவென்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் சொல்ல மாட்டோம். எங்களுக்கு இதுதான் வேலையா? அவன் கும்பிடுகிறான்,  கும்பிட்டுப் போகிறான். இப்படி இருந்தாலும் மகான் இராமலிங்கசுவாமிகள் சொன்னது போல,
     எவ்வண்ணம் வேண்டுகினு மவ்வண்ண
      மன்றே யிரங்கியீந் தருளும்பதம்
      என்போன்ற வர்க்குமிகு பொன்போன்ற
      கருணைதந் திதயந் திருக்கும்பதம்.
                        – மகான் இராமலிங்க சுவாமிகள் – திருவடிப்புகழ்ச்சி
     என்போன்ற வர்க்குமிகு பொன்போன்ற கருணை – அவர்களுக்கு எவ்வண்ணம் வேண்டினும் அருள் செய்வார்கள். ஆனால் சற்குருவை வணங்க வேண்டும். நாங்கள் யாரை வணங்க வேண்டுமென்று சுட்டிக்காட்டுவோம். நாங்கள்தான் சுட்டிக் காட்ட வேண்டும்.  
     “மகான் இராமலிங்கசுவாமிகள் பெரிய மகான், மிகப்பெரிய யோகி, அவரை வணங்கி ஆசி பெற்றுக் கொள், மகான் திருமூலதேவரை, மகான் அகத்தீசரை, மகான் கருவூர்முனிவரை வணங்கி ஆசிபெற்றுக் கொள் என்று நாங்கள் சொல்கிறோம். இப்படி சொன்னவரெல்லாம் சற்குரு. எவன் ஒருவன் மரணமிலாப்பெருவாழ்வு பெற்றானோ, காமதேகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றானோ, அவன்தான் சற்குரு. அவனை வணங்க வேண்டும். சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழ வேண்டும்.
     நாங்கள் சொல்லித் தருகிறோம், பூஜை செய்கிறோம். நாங்கள் அன்பர்களுக்கு சொல்லுவோம். இப்படி ஆசானை வணங்க வேண்டும். மகான் திருமூலதேவரை வணங்க வேண்டும். மகான் இராமலிங்கசுவாமிகளை வணங்க வேண்டும்.
இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பார்கள். நான் ஆதாரம் சொல்கிறேனென்று மகான் சட்டமுனி சொல்வார். மிகப்பெரிய ஞானி மகான் சட்டமுனிவர். அவர் சொல்வார்,
      போடுவது திலதமடா மூலர் மைந்தர்
                                போகர் கருவூராரைத் தியானம் பண்ணு
                நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
                                நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா     
                ஏடுதனில் எழுதினதோர் பாடல் என்று
                                எண்ணாதே ஒருநாளும் தப்போ இல்லை
                தேடினபேர் பொருள்கோடி தனமீந்தாலும்
                                செப்பாதே இக்கருவை (ரகசியத்தை) உலகத்தோர்க்கே.
                                                                மகான் சாட்டைமுனிநாதர் – கவி எண் 10
போடுவது திலதமடா மூலர் மைந்தர்மூலர் என்றால் மகான் திருமூலதேவர். மைந்தர் என்றால் மகான் காலாங்கிநாதர். மிகப்பெரிய வல்லமை உள்ள ஆசான் சட்டமுனிவர். விபூதி எடுத்து நெற்றியில் வைக்கும்போது, “மகான் திருமூலதேவா, மகான் காலாங்கினாதா, மகான் போகமகாரிஷி, மகான் கருவூர்தேவா என்னை நீங்களெல்லாம் ரட்சிக்க வேண்டும்” என்று கேள் என்பார்.
     திலதம் என்றால் போட்டு. நெற்றியில் விபூதி வைத்துக் கொள்ளும்போது, மகான் திருமூலர், மகான் காலாங்கிநாதர், மகான் போகமகாரிஷி, மகான் கருவூராரை தியானம் பண்ணு என்றார். இந்த நான்கு மகான்களை வணங்கினால் போதும். நான்கு மகான்களும் மலையைப் பொடியாக்குவார்கள். இப்படி இருக்கும்போது, குறுக்கே மலை இடறினால், அதை ஒரு அழுத்து அழுத்துவார்கள். அந்த மலை அப்படியே உள்ளே போய்விடும். அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்கெல்லாம் கணக்கில்லை. எதை வேண்டுமானாலும் செய்வார்கள். கணக்கே கிடையாது.    நான்கு மகான்கள். மகான் திருமூலர், மகான் காலாங்கிநாதர், மகான் போகர், மகான் கருவூர்முனிவர் மிகப்பெரியவர்கள்.
     போடுவது திலதமடா மூலர் மைந்தர்
                                போகர் கருவூராரைத் தியானம் பண்ணு
                நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
                                நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா     
     என்னய்யா, இவ்வளவு பெரிய கல்வி அறிவுள்ளவனாக இருக்கிறான், மூச்சுக்கு முன்னூறு கவி பாடுகிறான், பெரிய பெரிய பட்டம் வாங்கியிருக்கிறான் என்று சொன்னால், அவன் சிரித்தான்.  
      நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
            நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா
      எவ்வளவோ பெரிய கல்வியாளனாக இருக்கலாம். அவனுக்குத் தெரியாது. அவர்களுக்கு எட்டாது. நாதாக்கள் சித்தருக்கும் தோனாதையா. ஏன்? அவன் செய்த பாவம். கல்வி கற்றது மற்றவனை அவன் மதிக்கமாட்டான்.      அவரிடம் ஏதோ இருக்கலாம். உண்மையை தெரிந்து கொள்வோம் என்று நினைக்க மாட்டான். எல்லாம் தெரியுமென்ற திமிர். அது அவன் திமிர் இல்லை. பட்டம் பெற்றவுடன் இந்த திமிர் வந்துவிடும். ஏனய்யா இவ்வளவு திமிர் வந்தது என்று கேட்டான். அவன் பாவி.
     “உலகத்தில் இந்த அளவிற்கு புண்ணியவான் இருப்பானா? யாரேனும் இருந்தால் கேட்டுக் கொள்வோம்” என்று நினைப்பவன் புண்ணியவான். அப்படி நினைப்பவன் கல்வி கற்றவன். ஆகவே,
      நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
            நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா
     நாங்கள் ஆசானைப் புரிந்து கொண்டோம், ஆசான் அகத்தீசரை புரிந்து கொண்டோம், மகான் திருமூலதேவரைப் புரிந்து கொண்டோம்.
     இன்று ஒங்காரக்குடிலில் பத்தாயிரம் பேர் சாப்பிட்டிருக்கிறார்கள். ஐயாயிரம் முதல் ஆறாயிரம் பேருக்கு கம்மங்கூழ் கொடுத்திருக்கிறோம். நேற்று பதிமூன்று மூட்டை எழுபது கிலோ அன்னதானத்திற்கு சமைத்திருக்கிறோம். பத்தாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் பேர் சாப்பிடலாம். நாங்கள் ஆசி பெற்றிருக்கிறோம். ஆசி பெற்றதால் இந்த வாய்ப்பு இருக்கிறது. ஆக ஞானிகளை வணங்குகிறோம்.
     மற்றவர்களுக்கு பெரியவங்களைத் தெரியாது. என்ன காரணம்? சொல்லித் தர ஆளில்லை. அப்படியே சொல்லித் தந்தாலும் கேட்க நாதியில்லை.
     என் தோற்றத்தை வைத்து முடிவெடுக்காதே. நாங்கள் தலைவன் ஆசி பெற்றவன்.
     ஒன்றரை கோடி மக்களுக்கு அன்னதானம் செய்திருக்கிறோம்.
                2714 ஏழை தம்பதிகளுக்கு திருமணம் செய்திருக்கிறோம்
     தினம் 30000 பேருக்கு தண்ணீர் கொடுக்கிறோம்.
     நீ சாதிக்க முடியாததை நாங்கள் சாதித்திருக்கிறோம். நாங்கள் புண்ணியவான்கள். என்ன கரணம்? பெரியவர்களை பூஜை செய்கிறோம்.
     “அடியேனுக்கு செல்வநிலை பெருக வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளவனாக வாழ வேண்டும், பண்புள்ள தொண்டர்கள் சேர வேண்டும். இதற்கு நீர் அருள் செய்ய வேண்டும்” என்று நாங்கள் ஆசானை கேட்டோம்.
     செல்வத்தைக் குவிக்கிறான், பண்புள்ள தொண்டர்களை சேர்க்கிறான், நித்திய அறப்பணி செம்மையாக நடக்கிறது, நீங்கள் கொடுத்த அந்த வரவேற்பு நான் மேற்கொண்ட அறப்பணிக்கு கொடுத்த வரவேற்பாகும். நான் போற்றி பாதுகாக்கும் தர்ம காரியத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆகும். நீங்கள் எனக்கு அணிவித்த மலர்மாலை தர்மகாரியத்திற்கு போட்ட மாலை ஆகும். இப்பேர்ப்பட்ட காரியத்தை நாங்கள் லகுவாக செய்கிறோம்.
     நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
            நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா
     ஏடுதனில் எழுதினதோர் பாடல் என்று
            எண்ணாதே ஒருநாளும் தப்போ இல்லை
      தேடினபேர் பொருள்கோடி தனமீந்தாலும்
            செப்பாதே இக்கருவை (ரகசியத்தை) உலகத்தார்க்கே.
      எப்படியாவது ஞானிகளை பெருமைப்படுத்தி பேசியாவது புரிந்து கொள்ளட்டும் பிள்ளைகள்.
     காலத்தை வீணாக்குகிறான், போலிகளை நம்புகிறான், தோற்றத்தை மட்டும் வைத்து ஒரு முடிவெடுத்து போலிகளை நம்பி சென்று, பொதுமக்கள் வீழ்ந்து போகிறார்கள். இது எதனால் என்று தெரியவில்லை. கயவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும், சொல்லும்போதே தெரிந்து கொள்வோம்.
     முதல் பாடலை எடுப்போம். முதற்பாடலிலேயே பெரியோர்கள் விஷயத்தை சொல்லியிருப்பார்கள். பெரியவங்க யாரென்று எங்களுக்குத் தெரியும்.
     படித்தால் சிவஞானபோதம் படிப்போம், படித்தால் திருக்குறளை படிப்போம், படித்தால் ஆசான் அருணகிரிநாதர் நூலைப் படிப்போம். இது போன்ற ஞானிகள் நூல்களைத்தான் படிப்போம்.
     ஒரு மூட்டை அளவிற்கு பெரிய பெரிய புத்தகம் எழுதியிருப்பான். நாங்கள் சொல்வோம், இவன் விஷயமில்லாதவன் என்போம். அவன் எழுதிய புத்தகம் டீக்கடைக்கு வடை, பஜ்ஜி, முறுக்கு கொடுப்பதற்கு போகும். நாங்கள் அந்த புத்தகத்தை தொடவே மாட்டோம்.
     மற்ற நூல்களை தூக்கி எறிந்து விடுவோம். அந்த நூல்களை எழுதியவனை மதிக்கமாட்டேன். இதை வெளியே சொல்ல மாட்டேன்.
     ஆக ஞானிகள் நூல்களை படிப்பதற்கு ஆசி வேண்டும். ஆசான்  திருவடியைப் பற்றுவதற்கும் ஆசி வேண்டும்.
     ஆகவே நாங்கள் அறிந்து கொண்டோம். முன் செய்த நல்வினை காரணமாக, மகான் திருமூலர், மகான் காலங்கி, மகான் கருவூர்முனிவர், மகான் போகமகாரிஷி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றுள்ளோம்.
     நாங்கள் புண்ணியவான்கள். நாங்கள் தலைவன் ஆசியை பெற்றிருக்கிறோம். ஆகவே ஆடம்பரம் இல்லை.
     யாரும் கற்காத, யாரும் கற்க முடியாத, யாரும் தொட முடியாத, யாரும் சிந்திக்க முடியாத, யாரும் செய்ய முடியாத ஒன்றை செய்திருக்கிறோம். இந்த வல்லமையை எனது ஆசான் கருவூர்முனிவர் தந்திருக்கிறார், மகான் இராமலிங்கசுவாமிகளும் தந்திருக்கிறார்கள்.
     மனிதவர்க்கமே கடவுளை அடைய விரும்புகிறாயா? எனது ஆசான் மகான் பட்டினத்தார் தான் இதற்கு வழியை சொல்வர். ஆசான் அகத்தீசர், மகான் பட்டினத்தார் பாடலில் இதற்கு வழியிருக்கும்.
    
      அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே
      சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல்
      உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச்
      சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே.  
                                மகான் பட்டினத்தார் – நெஞ்சொடு புலம்பல் – கவி எண் 12
        சற்குருவைப் போற்றி வாழ வேண்டுமென்று சொன்னார். சற்குரு இப்போது வழி காட்டுகிறான். ஆசான் பட்டினத்தாரே சற்குரு! என் தலைவன் யார் என்று இன்னொரு இடத்தில் சொல்வார்.
     மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்
      கோனாகியென்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
      போனாலும் பேரிருந் தாலுநற் பேறிது பொய்யன்றுகாண்
      ஆனாலும் இந்தவுடம்போ டிருப்ப திருவருப்பே.
                                                                – மகான் பட்டினத்தார் – பொது – கவி எண் – 59
                இந்த உடம்போடு இருக்கக்கூடாது. அதுதான் ரகசியம். அவன்தான் பெரியோன்.
        ஊத்தை சடலமென் றெண்ணா தேயிதை
      உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
      பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
      பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.
                                                                – மகான் கொங்கணர் – வாலைக்கும்மி – கவி எண்  23     
                என்று மகான் கொங்கனமகரிஷி சொன்னார். இந்த உடம்போடு இருப்பது அருவருப்பு என்றார். இந்த உடம்பை வைத்து கடவுளை அடையவே முடியாது. பிறகு எந்த உடம்பு? அந்த உடம்பு ஞானதேகம்.
     இந்த அசுத்த தேகம் நீங்க நீங்க, உள்ளே ஒழி உடம்பு வரும், ஜோதி தேகம், ஞான தேகம் அற்புதமானது.
     இந்த உடம்பு அசுத்த தேகம். இந்த அசுத்த தேகம் நீங்க நீங்க, உள்ளே ஒழி உடம்பு வரும், இது சூட்சும தேகம். உள்ளே அந்த சூட்சும தேகத்தை எழுப்புவதற்கு இந்த தேகம்தான் அற்புதமான தேகம். இந்த தேகம் நீங்காமல் அந்த தேகம் வரவே வராது. அற்புதமாய் இந்த உடல் என்றார்.
     காயப்பை யொன்று சரக்கு பலவுள
      மாயப்பை யொன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
      காயப்பைக் குண்ணின்ற கள்ளன் புறப்பட்டான்
      மாயப்பை மண்ணாய் மயங்கிய வாறே
                                – திருமந்திரம் – உடலில் பஞ்சபேதம் – கவி எண் – 2122
                காயப்பை யொன்று – இந்த உடம்பு. இந்த உடம்பினை வென்றவர்கள். அனால் தன்னடக்கமாக இருப்பார்கள், வெளியே தெரியாது. அதற்கும் ஆசி வேண்டும், அடக்கமாக இருக்க வேண்டும்.
     அடக்கமில்லார்க் கொன்றுமில்லை ஆத்தாள் சொன்னாள்,
     அப்பனே உங்களுக்கு யாமும் சொன்னோம்,
     படபடக்க வொண்ணாது பதத்தில் நில்லு
    
     என்று சொன்னார் மகான் சட்டமுனிவர். இங்கே திருவள்ளுவப்பெருமான்,
     அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
      ஆரிருள் உய்த்து விடும்.
                                                – திருக்குறள் – அடக்கம் உடைமை – குறள் எண் 121
                காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
      அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
                                                திருக்குறள் – அடக்கம் உடைமை – குறள் எண் – 122
     ஆக இதையெல்லாம் புரிந்து கொண்டவர்கள், தெரிந்து கொண்டவர்கள் ஞானிகளை வணங்கி தெளிவான அறிவை பெறுவார்கள். ஆகவே உங்களுக்கு கவியாக சொல்லிக்கொண்டே வருகிறோம்.
     திருமந்திரம் படிக்கிறோம், முதலில் புரியாது. திருமந்திரம் மொத்தம் எட்டாயிரம் பாடல்கள், அவ்வளவும் ஞானபாடல்கள். அப்புறம் மூவாயிரம் இருக்கிறது. ஆசான் திருமூலதேவரை அழைத்து, “நீங்களெல்லாம் பெரியவங்க ஐயா! என்னையும் ஒரு பார்வை பாரய்ய, நீ கருணையே வடிவான ஆசான். என்னை ரட்சிக்க வேண்டும்” என்று மகான் திருமூலதேவரைக் கேட்டு, பூஜை செய்தோம். அப்படி பூஜை செய்ததனால் அவர் என்ன கற்றாரோ, என்ன பெற்றாரோ அத்தனையும் நாங்கள் அடைந்திருக்கிறோம். இதுதான் ரகசியம்.
     மகான் திருமூலதேவருடைய ஆசி பெற்றதனால்தான், மூச்சுக்காற்று புருவமத்தியில் ஒடுங்கியது. இல்லையென்றால் முடியுமா. ஆசான் புருவமத்தியில் ஒடுங்கியதால் அசுத்ததேகம் நீங்கியது. அசுத்த தேகம்தான் காமத்தை உண்டாக்கும், வஞ்சனையை உண்டாக்கும், நரை திரையை உண்டாக்கும், பரிணாம வளர்ச்சிக்கு உட்படும். அந்த தேகத்தை பொடியாக்கினோம். ஆசான் ஆசியைப் பெற்றோம், வாசி வசப்பட்டது. இதை ஆசை திர்மூலதேவர் சொல்கிறார்,
     புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
      நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
      உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
      புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
                        திருமந்திரம் – பிராணாயாமம் – கவி எண் – 575
    
      புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை – வந்து போகின்ற வாயு என்று அர்த்தம். வந்து போகின்ற காற்றை நாங்கள் புரிந்து கொண்டோம். புக்கு – புகுதல் – தங்குதல். வெளியே போகின்ற காற்றையும் உள்ளே வருகின்ற காற்றையும் அறிதல்.
     புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை – வந்து போகின்ற காற்றை,
     
     நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் – முறையோடு உள்ளே தங்குகின்ற காற்று வெளிய வரக்கூடாது. வெளியே வந்தால் அவன் ஞானியாக முடியாது. அவன் சாகப்போகிறான் என்று அர்த்தம். ஒடுங்கிய காற்று ஒடுங்கி விட வேண்டும்.
      உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
      புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
      இந்த காற்று உள்ளே தங்கியதால், நரை திரை நீங்கி மரணமிலாப்பெருவாழ்வு கிடைக்கும். வந்து போகின்ற காற்றை வெளியே விடாமல் செய் என்றார் மகான் திருமூலதேவர்.
     ஆசான் திருமூலதேவர் இந்த வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாய் என்றார். அவரிடம் ஐயா, நூலை நான் படிக்கிறேன். படிக்கின்ற அறிவு எனக்கு ஏது? நாயினும் கடையேனாகிய சுத்த மடயன் நான். என்னை விட மூர்க்கன் இந்த உலகத்தில் யாரி இருக்கிறார்? என்னைப் போல் பாவி இந்த உலகத்தில் யார் இருக்கிறார்? என்னைப் போல் கல்லாத மடயன் யார் இருக்கிறான். நீர் கற்றோர், பெரியோன், என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்க வேண்டும்.
      புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
      நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
      உள்ளேயே தங்கி விட வேண்டும். முறையோடு நெறிப்பட, காற்று உள்ளே தங்கிவிட்டால், உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும். உடம்பு மீண்டும் இளமையாகும். உறுப்பு என்றால் உடம்பு, தேகம் சிவப்பாக மாறும். அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். 
    
     உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை
      கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரே
      விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
      அருட்டரித்த நாதர்பாத மம்மைபாக முண்மையே.
                                                – மகான் சிவவாக்கியர் பாடல்கள் – கவி எண் 5
                புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
      நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
என்று ஆசான் திருமூலர் சொல்வார்.
     சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
      மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
      சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்
      கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.
                                                                மகான் சிவவாக்கியர் பாடல்கள் – கவி எண் 21
வாக்கியம்! சிவ வாக்கியம்!
     “மகான் சிவவாக்கியர் அவர்களே, நீங்களெல்லாம் பெரியவர்கள் ஐயா! என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அருள் செய்யுங்கள்” என்று மகான் சிவவாக்கியர் கேட்டால், “என்னை நீ நம்புகிறாய், அஞ்சேல் மகனே! நீ சித பாவத்தைப் பொடியாக்குவேன். உனக்கு ஞானத்தை தருவேன்” என்பார் ஆசான் சிவவாக்கியர்.
     மகான் சிவவாக்கியரிடம், ஐயா! நீங்களெல்லாம் பெரியவர்கள், உமது வாக்கியத்திற்கு ஈடே இல்லை ஐயா! என்னையும் ஒரு பார்வை பார்த்து ரட்சிக்க வேண்டுமென்று கேட்க வேண்டும். இது வேண்டுகோள்.
      சங்கிரண்டு தாரையொன்று – சங்கு என்றால் மூச்சுக்காற்று. இரண்டு பக்கமும் காற்று வரும்.
      உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை
      கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரே
      விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
      அருட்டரித்த நாதர்பாத மம்மைபாக முண்மையே.
                                                – மகான் சிவவாக்கியர் பாடல்கள் – கவி எண் 5
      இந்த அறிவே போதும். கல்வி கற்று பெற்ற பட்டத்தை தூக்கி ஏறி. தேவையில்லை பட்டம், படித்தால்தான் இது வரும் என்பதல்ல.
     நீங்களெல்லாம் அறிய முடியாத ஒன்றை அறிந்தவன். மகனே! நீ அறிய முடியாத ஒன்றை அறிந்தவன் நான்!
     கற்றுக் கொண்டோம், பெரியவர்களைத் தவிர நம்மைக் காப்பாற்ற யாருக்கும் யோக்கியதையே இல்லை என்பதை புரிந்து கொண்டோம், கற்றுக்  கொண்டோம். பெரியவங்க ஆசிதான் நம்மை வழி நடத்திச் செல்லும். மகான் கருவூர்தேவர்தான் நம்மை காப்பாற்றுவார்.
      மகான் சிவவாக்கியர் நம்மைக் காப்பாற்றுவார்.
      மகான் திருமூலதேவர் நம்மை ஆதரிப்பார்.
      மகான் அகத்தீசர் நம்மை ஆதரிப்பார்.
      மகான் நந்தீசர் அருள் செய்வார்.
      மகான் காலாங்கிநாதர் கருணை காட்டுவார்.
      மகான் போகமகாரிஷி நம்மை புனிதனாக்குவார்.
     அந்த கருவூர்முனிவர் நம்மைக் காப்பாற்றுவார் என்ற கல்வி வந்ததல்லவா, அந்த கல்வி என்னை உயர்த்தி விட்டது.
     ஆகவே எங்கள் கல்விக்கு ஈடே இல்லை. இது எவ்வளவு பெரிய கல்வி? இதற்கு பெரியவங்க ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும், பாவத்திலிருந்து விடுபட வேண்டும். பாவத்திலிருந்து விடுபடாமல் உனக்கு அறிவே வேலை செய்யாது.
     பாவம் என்றால் என்ன? இந்த தேகமே பாவம். இதிலிருந்து விடுபட வேண்டும். இதிலிருந்து விடுபட வேண்டும். இதிலிருந்து விடுபடுவது தான் கல்வி. ஆகவே நாங்கள் கற்ற கல்வி உயர்ந்த கல்வி. அதனால்தான் நான் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் ஐயா. வாசிவசப்படுவது என்பது சின்ன விசயமல்ல.
     ஐயா, வாங்கும் சம்பளமெல்லாம் கடன் சுமைக்கே போகிறது, வட்டி கட்டவே போதவில்லை. நான் ஏதோ அறியாமை காரணமாகக் கடன் வாங்கி வீடு கட்டி விட்டேன். ஏதோ உணர்ச்சி வசப்பட்டு கடன் வாங்கி வீடு கட்டி விட்டேன். நான்கு லட்சத்திற்கு அவன் இரண்டு வட்டி போட்டு விட்டான். இரண்டு வட்டி என்பது கருணை. இருபது பைசா வட்டி தான் இப்ப உயர்ந்த வட்டியாக இருக்கிறது. கொஞ்சம் நியாயமான வட்டி.
                மூன்று வட்டி, ஐந்து வட்டி நியாயமில்லாத வட்டி. அதில் போய் மாட்டிக் கொண்டேனே.
     எனக்குப் புரியவில்லையப்பா, எனக்கு சம்பளம் நான்காயிரம் தான் வருகிறது. வாங்குகின்ற சம்பளத்தை வைத்து வட்டி கட்டவே முடியவில்லை. மனைவி, பிள்ளைகளோடு இருக்கிறேன். என்னை நீ காப்பாற்ற வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும். இது ரொம்ப லகுவான கேள்வி.
     இதற்கு ஒரு பட்டம் தேவையில்லை. நீங்களெல்லாம் பெரியவங்க ஐயா, என் சம்பளத்தை வாங்கி வட்டி கட்டவே முடியவில்லையப்பா. எனக்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும். என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லையென்று ஆசானிடம் கேட்க வேண்டும்.
     கடன் வாங்கி வீடு கட்டக் கூடாது. சில இடத்திலே, பத்து வருடத்திற்கு முன் போட்ட அஸ்திவாரம் அப்படியே அடிப்பகுதியோடு நிற்கிறது. என்ன காரணம்? அவன் செயத பாவம். நாங்கள் அப்படி செய்வோமா? எங்கள் தொண்டர்கள் அப்படி செய்வார்களா? கையில் பணத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டுவான்.
    
     அவர்கள் வீடு கட்டியிருக்கிறார்கள், வீடு நன்றாக இருக்கிறது. நாமும் வீடு கட்டுவோமென்று மனைவி சொல்வாள். இதற்கு கணவன், நான் வீடு கட்டி தெருவில் நிற்கணுமா? என்னிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை. வீடெல்லாம் கட்ட முடியாது என்று சொல்வான். இவன் எங்க ஆள். அவங்க பேச்சை, இவங்க பேச்சைக் கேட்க மாட்டான்.
     நம் சக்தி இதுதான். வீடு கட்ட ஆரம்பித்தால் இரண்டு சதுரமோ, நான்கு சதுரமோ கச்சிதமாக கட்டுவான். வேறு யாரும் எதை சொன்னாலும் அவர்கள் பேச்சை கேட்பது போன்று நடித்துக் கொண்டிருப்பான்.
     வீடு கட்டுபவனுடைய உறவினர்கள், உன்னுடைய குழந்தைகள் வளர்ந்து விட்டால் இந்த வீடு போதாது, பின்பக்கம் இழுத்து பெரியதாக வீட்டை கட்டு என்பார்கள். ஆக பிரச்னையை துவக்கி விட்டான், சனியன் பிடிக்கப் போகுது என்று அர்த்தம். வீட்டிற்கு கடன் வாங்கி கொடுத்துவிடுவான். கையில் மூன்று லட்சம் இருக்கும். கடைசியில் அதையும் விட்டு விட்டு வீட்டையும் விற்று விட்டு ஒன்றுமில்லாமல் ஆகி விடுவான். என்னய்யா அவன் செய்த பாவம்.
     இப்போது சொல்லித் தருகிறேன் கேள். அருள் வள்ளலே, அகத்தீசா! நான் வீடு கட்ட நினைக்கிறேன். எனக்கு நீங்கள் அருள் செய்ய வேண்டும், நான் சொந்த வீட்டில் இருக்க ஆசைப்படுகிறேன், நீங்கள் அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும். வீடு கட்டுவதற்கு முன்னே, நான் மேற்கொள்ளும் கட்டுமானப்பணிகள் செம்மையாக நடக்க அருள் செய்ய வேண்டும், அதற்குத் தேவையான பொருள் வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கு முன்பு தலைவனைக் கேட்போம். இந்த வீடு கட்டும் பனி தடையில்லாமல் நடக்க வேண்டுமென்று கேட்போம்.
     இல்லறத்தான் கையில் பணம் இருந்தால் வீடு கட்ட வேண்டும். இல்லையென்றால் ஆசானின் கருணை கொண்டு கட்ட வேண்டும். யாருடைய கருணை வேண்டும்? மகான் கருவூர்தேவரை கேள், வீடு கட்டப் போகிறேன், எனக்குத் தெரியவில்லை, இரண்டு லட்சம்தான் கையில் இருக்கிறது. கடன் சுமை இல்லாமல் வீடு கட்ட வேண்டுமென்று கேட்டால் அருள் செய்வார்கள். அவரின் கருணையோடு கட்ட வேண்டும். அவர்கள்தான் எதை வேண்டுமானாலும் செய்வார்களே. இதைத்தான் மகான் மாணிக்கவாசகர் சொன்னார்,
வேண்டத் தக்கது அறிவோய் நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
    யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
    அதுவும் உன் தன் விருப்பு அன்றே.
                                                திருவாசகம் – குழைத்த பத்து – கவி எண் – 6 
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
                                                – திருக்குறள் – தவம் – குறள் எண் 265
     மகான் கருவூர்தேவரிடம், வீடு கட்ட வேண்டும். இதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால் தடையில்லாமல் அருள் செய்து விடுவார்கள். மகான் கருவூர்தேவரை வேண்டினால் அறிவு வேலை செய்யும். மகான் கருவூர்தேவரை வேண்டினால் வீடு கட்டுமானம் நடக்கும். மகான் கருவூர்தேவரை வணங்கினால் திருமணம் தடையில்லாமல் நடக்கும். பெரியவர்களை வணங்க வேண்டுமென்பது நாங்கள் சொல்ல வேண்டும். பெரியோர்களை வணங்கி  கேட்டுக் கொள்ள வேண்டுமென்பதை சொல்லித்தர வேண்டும், இல்லையென்றால் தெரியாது.
     வீட கட்டுவதற்கு முன் ஆசானிடம் கேட்க வேண்டும். ஆசானுடைய சன்னதிக்கு வர வேண்டும். ஆசானிடம், வீடு கட்ட வேண்டும், கையில் இருக்கும் பணமெல்லாம் வீடு கட்டவே செலவாகிவிட்டால், என்னால் தாங்க இயலாது. நான் பிள்ளைக்குட்டிக்காரன், நீங்களெல்லாம் பெரியவங்க. எனக்கு அறியாமை வரக்கூடாது. நான் தவறேதும் செய்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.
     இல்லையென்றால் வீட்டை கட்டமுடியாமல் பத்து வருடத்திற்கு தடைபட்டு அப்படியே கிடக்கும். கஷ்டப்பட்டு சேர்த்து கையில் வைத்திருக்கும் இரண்டு லட்சத்தையும் கடன்காரனிடம் கொடுத்து விட்டு, மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு, வீட்டை கடன்காரனுக்கு எழுதி கொடுத்து விட்டு வெளியே வந்து விடுவான்.
     சில புண்ணியவான் கட்டுகிறான். அவன் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்திருப்பான், வீடு கட்டி முடித்திருப்பான்.
     எத்தனை பேர் வீடு கட்டி விற்றவன்? எத்தனை பேர் வீடு கட்ட முடியாதவன்? எத்தனை பேர் தற்கொலை செய்தவன்? எத்தனை பேர் ஊரை விட்டு ஓடி லாட்ஜில் செத்தவன்? இப்படி ஒரு பலகீனம் ஏன் வர வேண்டும்? நீ என்ன அவ்வளவு பெரிய மனிதனா? வீடு கட்டி முடித்து விடுவாயா? உன்னால் முடியுமா? உன்னால் முடியாதென்றால் ஆசானை கேள். இதையெல்லாம் எதற்கு நாங்கள் சொல்கிறோமேன்றால், ஞானிகளின் ஆசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
     ஆசான் கருவூர்தேவரை, ஆசான் திருமூலதேவர், மகான் இராமலிங்க சுவாமிகள் போன்ற ஞானிகளை வணங்கி ஆசி பெற வேண்டும். இல்லறத்தானுக்கு இது அவசியம். ஏனென்றால் பிள்ளைகளுக்காக, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்காக ஆசானை வணங்கி இல்லறத்தான் ஆசி பெற வேண்டும்.
     கூனியா? கைகேயியா? என்ற தலைப்பில் பட்டிமன்றத்தில் பேசுகிறார். சீதையும் கண்ணகியும் சந்தித்தால் என்ன என்பதை பேசுவார்கள். அவர்கள்தான் இரண்டு பெரும் ஊருக்கு போய்விட்டார்களே. ஐயோ பாவம்! அவசியமா இது? இந்த கருத்துக்கள் தேவையா நாட்டிற்கு? இதையெல்லாம் குறை சொல்வதாக நினைக்காதீர்கள்.இந்த கருத்துக்கள் நாட்டிற்குப் பயன்படாது.
     நீ பட்டிமன்றத்தில் இருந்து மாலை மரியாதை வாங்கி வருகிறாய். ஏதேதோ கதை சொல்லிவிட்டு வருகிறாய். நம்முடைய ஒரு பெண்ணுக்கு வயது இருபத்தேழு ஆகிறது, இன்னொரு பெண்ணுக்கு இருபத்தைந்து வயதாகிறது, அடுத்த பெண்ணிற்கு இருபத்திமூன்று வயதாகிறது, இன்னும் திருமணம் நடைபெறவில்லை. நீ என்னமோ பட்டிமன்றத்திற்கு சென்று கூனியா கைகேயியா என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறாய்? என்று அவனுடைய மனைவி கேட்பாள்.
     நாங்கள் இதை பேசுவோமா? பேசவே மாட்டோம். இதுபோன்ற கதைக்கே நாங்கள் போக மாட்டோம். அதை யாரோ வைத்திருக்கிறான்.
     மனித வர்க்கத்தை உயர்த்துவோம். கருணைக்கடலான மகான் கருவூர்முனிவர் துணை கொண்டு உயர்த்துவோம். ஆசான் அருணகிரிநாதரை வணங்குவோம். மகான் இராமலிங்கசுவாமிகளை வணங்கிக் கேட்போம்.
     மனிதவர்க்கத்தை உயர்த்துவதற்காக இதையெல்லாம் சொல்லிக்கொண்டு வருகிறோம். இப்பொழுது சொல்லித் தருகிறோம்.
     மகளுக்கு திருமண வயது வந்துவிட்டது. அப்பா! பெண்ணுக்கு வயதாகி விட்டதையா! நான் என்ன செய்யட்டும்? இந்த காலம் சரியில்லை. தெருவில் பெண்கள் நடந்து போக முடியவில்லை. இதுபோன்ற கொடுமை நடக்கிறது. என்ன காரணம்? ஞானசித்தர் காலத்தில் இது நடக்காது.
     திருமணம் தடைபடும்போது, ஆசான் அகத்தீசர், மகான் கருவூர்முனிவர், மகான் இராமலிங்கசுவாமிகள் போன்ற ஞானிகளை வணங்கி என்னுடைய மூன்று மகள்களுக்கு திருமணம் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டால் ஞானிகள் அருள் செய்வார்கள்.
     நீ செத்தவனை கும்பிட்டால் முடியுமா? அம்மை கண்டு செத்தவர்களையும், உடன் கட்டை ஏறியவர்களையும், போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தவர்களையும் வணங்கினால் முடியுமா? நம்முடைய பூஜையை ஏற்று அருள் செய்யக்கூடிய வல்லமை அவர்களுக்கு இல்லை. அவர்களுடைய தியாகத்திற்கு தலை வணங்குவோம். கேட்டு அருள் செய்யக்கூடியவர்கள் ஞானிகள்தான். மகான் இராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் அருணகிரிநாதர், மகான் பட்டினத்தார் போன்ற ஞானிகளை வணங்கி கேட்க வேண்டும்.
     ஞானிகளிடம், “வயதிற்கு வந்த பெண் பிள்ளைகள் இருக்கிறது. ஐயா! எங்கே ஐயா போவேன் கஷ்டமாக இருக்கிறது ஐயா! எல்லாம் அராஜகவாதிகள்” என்று சொல்ல வேண்டும், கொடுமை நடக்கிறது. எல்லாம் நம் பிள்ளைகள்தான். யாரோ என்று நினைக்க வேண்டாம். வெளிநாட்டுப் பிள்ளைகள் என்று நினைக்காதீர்கள். அது அறியாமை. அறியாமையில் நடந்து  கொண்டிருக்கிறது. பெரியவங்க ஆசி கொடுத்தால் அராஜகம் நடக்காது. கடவுளைக் கேட்க வேண்டும். என்னப்பா பெண்களுக்கு கொடுமை செய்து கொண்டிருக்கிறான். இந்த உலகத்திற்கு விமோசனமே இல்லையா? நீங்களெல்லாம் பெரியவர்கள் ஐயா! பெண்களுக்கு அராஜகம் நடக்கிறது. பிள்ளைகள் தெருவில் போக முடியவில்லை! என்று சொல்ல வேண்டும்.
     அவன் மோட்டார் சைக்கிளில் தீபாவளிக்கு பிள்ளைகளுக்கு துணிமணி வாங்கிக் கொண்டு போகிறான்.
     அப்பா வந்து விடுவார். பிள்ளைகளே உங்களுக்கு துணிகள் வாங்கிக் கொண்டு வருவாரென்று மனைவி பிள்ளைகளிடத்து சொல்கிறார்.
     இவன் சம்பளத்தை வாங்கி, துணி, காரம், இனிப்பு பலகாரங்களையெல்லாம் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொண்டு போகிறான். அப்படி போகும்போது அவனை ஒருவன் பின்னால் சவுக்குக் கட்டையால் அடித்து கீழே தள்ளி விட்டான். என்ன கொடுமை யாரடா அது? என்ன கொடுமை? அட பாவிகளா! அடித்து கீழே தள்ளி விட்டாயா! அங்கே பிள்ளைகள் ஏங்கிக் கொண்டிருக்கும். அந்த பிள்ளைகள் அப்பா வருவார், வருவார் என்று ஏங்கும் என்ன சொல்வாள், அந்த பிள்ளைகளுக்கு மறுமொழி.
     நீங்களெல்லாம் பெரியவங்க, நீங்களெல்லாம் இருந்து என்னய்யா? இப்படி பிள்ளைகளுக்கு தீபாவளிக்கு துணி, பலகாரங்கள் வாங்கிக் கொண்டு செல்கிறான். அவனை அடித்து போட்டுவிட்டு அவனிடமிருந்த பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போய்விட்டான். அவ்வளவு பெரிய கொடுமை! என்ன கொடுமை! இதெல்லாம் நடக்கக் கூடாது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஞானிகள் காலத்தில் நடக்கவே நடக்காது.
    
இந்த கொடுமை தீர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். உலகத்தில் உள்ள அராஜகங்கள் எல்லாம் நீங்க வேண்டும். உலக மக்கள் சுபிட்சமாக இருக்க அருள் செய்ய வேண்டும். உலகில் பண்பு நிறைந்து இருக்க வேண்டும். அன்பு உணர்ச்சி நிலைத்து இருக்க வேண்டும். அராஜகம் நீங்க அருள் செய்ய வேண்டுமென்று தலைவனைக் கேட்கிறோம். ஞானிகளுக்கு என்ன நட்டமா? நாம்தான் இப்படி கேட்க வேண்டும்.
     இது ஞானசித்தர் காலமென்று அன்பர்க்ள சொல்கிறார்கள். அவர்களுக்கு என்ன அவ்வளவு மகிமை?
     இந்த தேதியில் இந்த இடத்தில் இது நடக்கும். இந்த நேரத்தில் இது நடக்கும். அங்கே அவன் குண்டு வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருப்பான். ரயிலில் குண்டு வைப்பதற்கு காத்துக் கொண்டிருப்பான். இந்த நேரத்தில் இன்னென்ன பெயருள்ளவன் வெடிகுண்டு வைக்கப் போகிறான் என்று ஞானிகள் சொல்வார்கள். போதாதா அப்படியே கோழியை பிடிப்பதுபோல் பிடித்து விடுவார்கள் நம்மவர்கள். ஆக இது போன்ற அராஜகத்தை ஞானிகள்தான் தடுக்க முடியும். முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்.
     நாமெல்லாம் ஞானிகளை வணங்கி முதலில் திருமணம், வீடு கட்டுதல், பிள்ளைகளுக்கு திருமணம் அடுத்து உலக சமுதாயத்தில் உள்ள அராஜகம் நீங்கி, கொடுமை நீங்கி, பண்புள்ள மக்கள் உருவாவதற்கு ஆசானை வேண்டிக்கொள்ள வேண்டும். நிலையான உயர்ந்த பூஜையை நாங்கள் சொல்லியிருக்கிறோம். நீங்களும் அதனை பின்பற்றி, ஆசான் அகத்தீசரையும், மகான் திருமூலதேவரையும் வணங்கி அன்றாட பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், செல்வநிலை பெருகவும் கேட்க வேண்டும்.
     கடன் சுமையினால் தூக்கம் வராது கட்டிலில் புரண்டு கொண்டே இருப்பான். புலம்பல் சத்தம் வெளியே கேட்கும். என்ன உடம்பு சரியில்லையா? என்று அவருடைய மனைவியிடம் கேட்டால், ஏன் வீட்டுக்காரருக்கு உடம்பு நன்றாகத்தான் இருக்கு, மனநிலை சரியில்லை என்றால் மனைவி.
     என்ன காரணம்? ஏகப்பட்ட கடனை வாங்கி விட்டான். அது அவனேமேல் குற்றமில்லை. ஏதோ கற்பனையில் அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டுமென்று கடன் வாங்குவான். கடைசியில் தூக்கம் வராமல் மாத்திரை சாப்பிடுவான். நோய்வாய்ப்பட்டவன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கிறான். ஆனால் இவன் நல்ல உடம்புடன் இருக்கிறான், மாத்திரை சாப்பிடாமல் தூங்க முடியவில்லை என்று புரண்டு கொண்டு கிடப்பான். கடைசியில் மனநிலை சரியில்லாமல் சித்தபிரம்மை வந்து விடும்.
    
     தலைவன் ஒருவன் இருக்கிறான். கடன் சுமை வந்து விட்டது அம்மா, நீங்கள்தான் அருள்செய்ய வேண்டுமென்று கேட்போம். நாங்களெல்லாம் அம்மா என்றுதான் ஞானிகளை சொல்வோம்.
     கடன் சுமையிலிருந்து விடுபட வேண்டுமென்றால், ஆசானை கேட்க வேண்டும். பிள்ளைகளுக்கு திருமணம் நல்லபடி நடக்க வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும். வீடு கட்டும் முன்னே ஆசானை கேட்டுக் கொள்ள வேண்டும்.
     நம் மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கும் முன், நல்ல பெண்ணாக அமைய வேண்டுமென்று கேட்க வேண்டும். நம் பெண்ணுக்கு நல்ல வரனாக அமைய வேண்டுமென்று கேட்க வேண்டும். இதையெல்லாம் நாம் கேட்டுப் பெற வேண்டும்.
     மாணவர்கள் நன்கு படித்து விட்டு வேலைக்குப் போக முடியவில்லை. திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இருபத்தேழு வயதில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். பெண் வீட்டுக்காரனும் என்ன செய்வது வயது இருப்பத்தைந்து ஆகிறது என்று பெண்ணை கொடுத்து விடுகிறான். அவனுக்கு வேலை இல்லை “உன் வீட்டில் இருந்து அதை வாங்கி வா! இதை வாங்கி வா!” என்று மனைவியை கட்டாயப்படுத்துகிறான். கடைசியில் கொடுமைப்படுத்துகிறான். அவன் மேல் குற்றமில்லை. நாடு அப்படி இருக்கிறது. பல கோணங்களில் உலகம் கெட்டு விட்டது. இதை மாற்றும் வல்லமை ஞானிகளுக்குத்தான் உண்டு.
     ஞானிகளை வணங்குவோம். உலக மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டுவோம். நம் குடும்பத்தை உயர்த்துவோம். நமக்கு வருகின்ற வருவாயை எல்லாம் மருத்துவத்திற்கு, மருத்துவ செலவாக ஆகக் கூடாது. எப்பொழுது பார்த்தாலும் ஊசி மருந்தாக இருக்கக் கூடாது.
     அடியேன் உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும், அடியேன் வருவாய் வைத்திய செலவுக்கு பயன்படாமல் இருக்க வேண்டுமென ஆசானிடம் கேட்க வேண்டும்.
     கடவுள்தான் இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும். வரும் வருவாய் தேவையில்லாது ஊசிக்கும் மருந்துக்கும் போய்விடும்.
     சிலர் டீயை பாதி குடித்து பாதியை அப்படியே வைத்துவிட்டு போவான். ஐந்நூறு வகை உணவை தயாரிக்கின்றீர்கள். உட்காருவதற்கு முன்னரே இலையில் எல்லாவற்றையும் பரிமாறுகிறீர்கள். அதி சின்ன பிள்ளை போய் உட்காருகிறது. கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு அப்படியே விட்டு விட்டுப் போகிறான். பாவி! என்று தலையில் அடித்துக் கொண்டேன். அந்த சின்னபிள்ளை ஒரு இட்லி தான் சாப்பிடும். மிச்சத்தை குப்பையில் போடுகிறான் பாவி! இந்த ஏழை நாட்டில் இப்படி நிலைமையா.
     சாப்பிட வந்தவர்கள் உட்கார்ந்த பின், அவர்களிடம் என்ன வேண்டுமென்று கேட்டு கேட்டு பரிமாற வேண்டும். உட்காரும் முன்னே இலையில் பரிமாறி வைத்துவிடுவான். சாப்பிட வருபவன் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை இலையில் வைத்து விட்டுப் போவான். என்ன கொடுமை இது. இப்படி உணவுப் பொருளை வீணாக்குகிறாயே, உனக்கு அறுசுவை சாப்பிட முடியாத நிலை வரும். உனக்கு சர்க்கரை நோய் வரும்.
     கடவுள் கொடுத்த உணவு. உனக்கு வேண்டுமானால் சாப்பிடு இல்லையென்றால் வீணாக்காதே. யாரோ ஏழைகள் உணவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் சோறு போதுமென்று வெளியில் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு கொடு, ஆனால் வீணாக்காதே.
     நீ இந்த ஆடம்பரத்தை வேண்டாமென்று சொல்லலாம். ஆக பாதி டீயை அப்படியே வைத்து விட்டுப் போவதும், பாதி உணவை அப்படியே வைத்து விட்டுப் போவதும், அதுதான் நாகரீகம் என்று எண்ணாதே.
     கடவுள் கடைசியில் உனக்கு சாப்பிட உணவு கிடைக்காமல் செய்து விடுவான். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? கடவுள் உனக்கு உணவு கொடுத்திருக்கிறான், உனக்கு கல்வியை கொடுத்திருக்கிறான், உடை தந்திருக்கிறான்.
     “ஏனப்பா நான் கொடுத்த உணவை இப்படி வீணாக்குகிறாயே மகனே!” என்று கடவுள் நினைத்தால் நீ தாங்குவாயா. நமக்கு இந்த நாகரீகம் தேவையில்லை. நான் பம்பாயில் இருந்தேன். சேட்டு பெரிய கிளாசில் தரமான டீ கொடுத்தான். அதில் சுவைக்காக நிறைய பொருட்களை சேர்த்திருந்தார்கள். கூட வந்தவன் பாதியை குடித்துவிட்டு மீதியை வைத்தான். “ஏனய்யா மீதியை வைத்தாய்” என்று கேட்டேன். முழுவதும் சாப்பிடக் கூடாதென்றான். நன் முழுதும் குடித்து விட்டு “என் மேல் என்ன வழக்கா போடப்போகிறான்” என்றேன்.
          அடிப்படை ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், உன் வீட்டுக் காசு தான். உங்க வீட்டுப்பொருள்தான். ஆனாலும் உணவுப்பொருளை வீணாக்கக் கூடாது. தேவையில்லாமல் நான்கைந்து வகையான உணவுப்பொருளை தயாரித்து விட்டு குப்பையில் போடாதே. செல்வம் உன் கையை விட்டுப் போய் விடும். இப்படி நாங்கள் சொல்ல வேண்டும். என்னய்யா ஆன்மிகம் பேசுவதாக சொன்னீர்கள் என்றால், இதுதானய்யா ஆன்மிகம். மகான் திருவள்ளுவர், கதை வைத்துக் கொள்ளமாட்டார்கள். திருக்குறளில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் கதை இருக்கிறது.
     ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்
      இந்திரனே சாலும் கரி.
                                                – திருக்குறள் – நீத்தார் பெருமை – குறள் எண் – 25  
                இந்த ஒரே இடத்தில் மட்டும் தான் இருக்கும்.
     மற்றதெல்லாம் “இப்படி செய்! இப்படி செய்! இதுதான்!” என்று சொல்லி விட்டுப் போய் விடுவார்.
     மகான் திருவள்ளுவருடைய கருத்தை மாற்றவோ,  மறுபரிசீலனை செய்யவோ, இல்லை என்று சொல்வதற்கோ ஒருவருக்கும் அதிகாரமில்லி! ஒருவரும் சொல்ல முடியாது. ஆசான் திருவள்ளுவர் முற்றுப்பெற்ற முனிவர், காமதேகத்தை வென்றவர். எல்லா வல்லமையும் உள்ளவர்.
     ஆகவே பெரியோர்கள் நூல்களைப் படிப்போம், ஆசி பெறுவோம். ஆடம்பரத்திற்கு அவசியமில்லை. எவன் மதித்தால், மதிக்காவிட்டால் என்ன! நமக்கு வேண்டியது சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், ஒரு கூட்டு, ஒரு பொரியல். இது போதும். இதை விட்டுவிட்டு வரிசையாக வகைவகையாக இலையில் வைத்து வீணாக்காதே, எனக்குப் பிடிக்கவில்லை ஐயா. அந்த கொள்கையை கடவுளே மன்னிக்க மாட்டான். தேவை என்றால் செய்யலாம். ஓங்காரக்குடிலில் தினம் ஏழாயிரம் பேருக்கு சோறு போட்டிருக்கிறோம். இங்குள்ள தொண்டர்களெல்லாம் உயர்ந்த தொண்டர்கள். அவர்கள் திருவடியை நான் வணங்குகிறேன்.
     என் தொண்டர்களை தினமும் வணங்குகிறோம். தொண்டர்கள் நீடு வாழ வேண்டும். அவர்கள் “சாதம் வேண்டுமா” என்று கேட்டுத்தான் பரிமாறுவார்கள். அப்படியே தள்ளி விட்டு போக மாட்டார்கள். ஓங்காரக்குடிலில் தட்டில் சாதத்தை மீதம் வைத்து விட்டு யாரேனும் சென்று, அடுத்த முறை வந்தால், வெளியில் போய் ஹோட்டலில் சாப்பிடு என்று சொல்லி விடுவார்கள். இந்த நாடு ஏழை நாடு. எனவே நாம் இதையெல்லாம் நினைக்கிறோம். நீங்களும் இந்த கொள்கையைக் கடைப்பிடித்தால் நல்லது.
     எல்லோரும் ஞானிகள் ஆசியைப் பெற வேண்டும், பெரியோர்கள் ஆசியைப் பெற வேண்டும். கற்றுணர்ந்த பெரியோர்கள் என்னை வாழ்த்த வேண்டும். என்னை மனமார வாழ்த்த வேண்டும். தொண்டர்கள் திருவடியை தினம் வணங்குபவன். அவர்கள் நீடு வாழ வேண்டும். அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று சொல்லி தொண்டர்கள் திருவடியை மறைமுகமாக வணங்குபவன். அவர்கள் திருவடியில் இருக்கும் தூசியை நெற்றில் பூசிக்கொள்பவன் நான்.
     ஆகவே நீங்களும், துறையூர் ஒங்காரக்குடிலாசான் நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்தினால் அந்த வாழ்த்து எனக்கு துணையாக இருக்கும். நீங்கள் என்னை மனமார வாழ்த்தினால், அது ஆன்மாவிற்கு ஆக்கம் தரும். ஆன்மா ஆக்கம் பெற்றால், அது சிறப்பறிவைத் தரும், உடல் வலிமை தரும். பல உயிர்கள் என்னை மனமார வாழ்த்தினால், என் ஆன்மாவிற்குத் துணையாக இருக்கும். உயிர் ஆக்கம் பெறும். ஆக்கம் பெற்ற உயிர் விளக்கம் பெறும். விளக்கம் பெற்ற உயிர் வீடு பேறு அடையும்.
     நாங்கள் அன்னதானம் செய்கிறோம். நீங்கள் மாதத்தில் இரண்டு பேருக்கு பசியாற்றினால், அவன் நீடு வாழ வேண்டுமென்று வாழ்த்துவான். அதன் மூலமாக உங்கள் ஆன்மா ஆக்கம் பெறும். ஆன்மா ஆக்கம் பெறுவதற்கு பசியாற்ற வேண்டும். ஆன்மா விளக்கம் பெறுவதற்கு ஆசான் தயவு இருக்க வேண்டும்.
     அகத்தீஸ்வரா! நீர்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். எனக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று கேட்டால் ஆன்மா விளக்கம் பெறும். விளக்கம் பெற்றால் சிறந்த அறிவு வரும். அப்போது வீடு பேறு பெறலாம். மோட்சலாபம் பெறலாம்.
     ஆகவே நீங்களெல்லாம் எனக்காக என்னை மனமார வாழ்த்த வேண்டும். நானும் அன்பர்களும் மேற்கொள்ளும் அறப்பணிகள் நல்லபடி நடக்க வேண்டுமென்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175061
Visit Today : 201
Total Visit : 175061

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories