08.09.1997 அன்பே ஆன்மிகம் – April 2015 gnanathiruvadi


அன்பே ஆன்மிகம்
08.09.1997 அன்று அருளிய மகான் ஆறுமுக அரங்கர் அருளுரை  

ஓம் அகத்தீசாய நம

அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்!

உங்கள் அனைவருக்கும் வணக்கம்.நாங்கள் ஆன்மீகத்தை பற்றி ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறோம்.
     ஆன்மிகம் எது? என்பர் பலமுறை சொல்லியிருக்கிறோம். அன்பு உணர்ச்சிதான் ஆன்மிகம். இதை மகான் இராமலிங்கசுவாமிகள் ஜீவகாருண்யமே ஆன்மிகம் என்றார், ஜீவகாருண்யமே ஞான வீட்டின் திறவுகோல் என்றார்.
     ஜீவகாருண்யம் என்றால், மற்ற உயிர்கள்பால் கருணை காட்டுதலாகும். அதற்காக மகான் இராமலிங்கசுவாமிகள் ஆறாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறார். பல கோணங்களில் ஆன்மீகத்தை பற்றி பாடியிருப்பார். அந்த பாடல்களில் ஆன்மீகத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
     ஜீவகாருண்யமே ஞான வீட்டின் திறவுகோல், மற்ற உயிர்கள்பால் கருணை காட்டல் இதுதான் ஆன்மிகம் என்றார். இதற்காக ஆறாயிரம் பாடல்கள் எழுதியுள்ளார்.மனிதவர்கத்திற்கு தன்னுடைய அனுபவத்தை அந்த பாடல்கள் மூலம் சொல்கிறார், கடவுள் அனுபவத்தை சொல்கிறார், கடவுளை அடைய வேண்டும் என்று சொன்னார்.
     கடவுளை அடைவதற்கு ஒரே ஒரு மார்க்கம் ஜீவகாருண்யம். நீ பொருள் சேர்க்கும்போது அதில் அன்புணர்ச்சியும், அருளும் இருக்க வேண்டும், நெறிக்குட்பட்டு பொருள் சேர்க்க வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
      அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
      புல்லார் புரள விடல்.
                                                திருக்குறள் – பொருள் செயல்வகை – குறள் எண் – 755
                அன்போடும் என்னும் வார்த்தை பெரிய வார்த்தை. அன்புணர்ச்சி மிகுதியாக இருந்தால், நிச்சயமாக கோடிக்கணக்காக பொருள் சேர்க்க முடியாது, ஒருவன் பொருள் சேர்க்கும்போது இது நேர்மையுள்ளது அல்லது இல்லை என்று தெரிய வேண்டும்.
      அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் – ஒருவனுக்கு அன்புணர்ச்சி மிகுந்து இருந்தால், மிகுதியாக பொருள் சேர்க்க முடியாது. பொருள் சேர்க்கும்போது அருள் பொருந்தி இருக்க வேண்டுமென்று சொன்னார் அன்புணர்ச்சி உள்ளவர்கள் நெறிக்குட்பட்டு பொருள் சேர்ப்பார்கள். இதைதான் ஆசான் திருவள்ளுவர் சொன்னார்.
     அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
      என்பும் உரியர் பிறர்க்கு.
                                                திருக்குறள் – அன்புடைமை – குறள் எண் 72
                அன்புணர்ச்சி இல்லையென்றால், அடுத்தவன் சொத்தை அபகரிக்க வேண்டும், சுகபோகமாக வாழ வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆசான் திருவள்ளுவர் இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்வார்.
     அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் – மற்றவன் சொத்துக்களை வசப்படுத்திக்கொண்டு நாம் பெருமையாக வாழ வேண்டுமென்று நினைப்பான்.
     எத்தனை காலத்திற்கு இருக்கப் போகிறாய்? நாளைக்கு இருப்பது நிச்சயமில்லை! அதற்குள் இத்தனை கற்பனைகள். எல்லோருடைய சொத்துக்களையும் சேர்த்து, நம் பிள்ளைகளுக்கு கார், பங்களா சேர்க்க வேண்டுமென்று நினைப்பான். “பிள்ளைகளுக்கு கார், பங்களா இருக்கட்டும், வேலை வாய்ப்பு இருக்கட்டும், மனைவி மக்கள் இருக்கட்டும், உனக்கென்ன வாய்ப்பு? இன்னும் எத்தனை நாள் இருக்கப்போகிறாய்?” என்று கேட்டான். அதற்கு தெரியாது என்றான். ஆகையால் கற்பனையைக் குறைத்துக்கொள்! என்றான்.
      ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
      கோடியும் அல்ல பல.
                                                திருக்குறள் நிலையாமை – குறள் எண் – 337
                வாழ்க்கை நிலையைப் பற்றி ஒரு நொடிப்பொழுது கூட உனக்கு தெரியாது. என்ன நடக்கும்? பஸ்ஸில் போய்விட்டு திரும்ப வருவோமா? நிச்சயமில்லா வாழ்வு. இப்படி இருக்கையில் கணக்கில் அடங்காமல் இவ்வளவு கற்பனை!
                                                                      
        ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல – வாழ்க்கை நிலை என்பது ஒரு பொழுது. அது ஒரு நொடிப்பொழுது. ஒரு பொழுதை அறிந்தால்தான் மறுபொழுதை அறிவான் என்பது தெரியும் ஆசான் திருவள்ளுவருக்கு.
        ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல – கருதுதல் என்றால் விரும்புதல் என்று அர்த்தம். கணக்கில் அடங்காத கற்பனையில் உழன்று கிடப்பான். அவனைப் பார்த்து ஆசான் திருவள்ளுவர் சிரிப்பார். ஏன் இப்படி கற்பனையில் உழன்று கிடக்கிறாய்? என்பார். அதற்காக பொருள் சேர்க்க கூடாது என்றோ, மனைவி மக்களோடு இருக்கக்கூடாது என்றோ அல்ல! வாழ்க்கை நிலை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். வாழ்க்கை நிலை அறிந்தவர்கள், பேராசை இல்லாதவர்களாகவும், வஞ்சனை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
     அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் – இவற்றையெல்லாம் ஆசான் திருவள்ளுவர் சொன்னதின் நோக்கம் அன்புணர்ச்சி இருக்க வேண்டும், அருள் பொருந்தியிருக்க வேண்டும். செல்வம் சேர்க்க வேண்டும் என்றான். அந்த செல்வம் நிச்சயம் நன்மைக்குத்தான் பயன்படும். அது ஆன்மாவிற்கு ஆக்கம் தரும் என்றான். 
     பொருள் எப்படி வேண்டுமானாலும் சேர்த்தால் ஜீவகாருண்யம் அங்கே இருக்கவே முடியாது. ஜீவகாருண்யத்தின் இயல்பே மற்ற உயிர்கள் வருத்தப்படக்கூடாது என்பதுதான்.
     ஆடு மாட்டிற்கு தீனி கொடுப்பது மட்டுமல்ல உன்னுடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தந்தால் அது ஜீவகாருண்யம். உன்னைப் பார்த்து ஐயோ! படுபாவி! என்று சொன்னால் உன் வாழ்க்கை ஜீவகாருண்யமாகஇருக்க முடியாது. எப்படியும் பொருள் திரட்டி வாழலாம் அல்லது எப்படியும் பொருள் திரட்டி அன்னதானம் செய்ய நினைத்தால், அது ஜீவகாருண்யம் இல்லை! இப்படி செய்வதை ஞானிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
     நாய் இல்லைத்திருக்கிறது என்று, அந்த நாயின் வாழை வெட்டி சூப்பு வைத்து அந்த நாய்க்கே கொடுத்தது போல என்பான் இதை அறிந்தவன். அப்ப அன்புணர்ச்சி இருந்தால் எப்படி பொருள் சேரும்? என்றான்.
     “தாட்சண்யம் தன நாசம்!” என்றான். தாட்சண்யம் என்பது கருணை. பிறருக்கு நீ கருணை, தயவு காட்டுதல். அப்படியென்றால் பொருள் செலவாகும். இதை தனநாசம் என்று சொல்கிறான். நிச்சயம் நாசம் ஆகாது! தாட்சண்யம் உள்ளவர்களுக்கு தனநாசம் ஆகாது! முறையோடு பொருள் சேர்த்தால் அந்த பொருளுக்கு அழிவில்லை என்றார்.
      அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
      பிற்பயக்கும் நற்பா லவை.
                                                திருக்குறள் – வினைத்தூய்மை – குறள் எண் – 659
                பிறரை வருத்தி சேர்த்த பொருள் நிச்சயம் உன்னை வறுத்து விட்டுத்தான் போகும் என்றான். நல்ல முறையில் சேர்த்த பொருள் கைவிட்டுப் போனாலும் ஒரு இடத்தில் பிறகு நன்மை தரும் என்றார். இப்படியெல்லாம் ஆசான் திருவள்ளுவர் சொல்வார். இதையெல்லாம் விட்டு விட்டு சுற்றி சுற்றி வருவான்.
     எப்படியும் பொருள் சேர்க்கலாம் என்றால் அது முடியவே முடியாது. பொருள் சேர்க்கும்போது அன்புணர்ச்சி இருக்க வேண்டும் என்றார்.இதை ஜீவகாருண்யம் என்றார். ஜீவகாருண்யத்தைப்பற்றி ஆராய்கின்றவன் நிச்சயமாக பொய் சொல்ல மாட்டான். ஒரு மனிதனை பாவியாக்குவது அறியாமையா? ஒரு மனிதனை நரகத்தில் தள்ளுவது அறியாமையா? ஆசையா? மூர்க்கத்தனமா? கொடுமையா? இதை அறியாமை என்பதா?
     ஒருவனை நரகத்தில் தள்ளுவது இயற்கையா? செயற்கையா? அவனுக்கு ஏன் இந்த மூர்க்கத்தனம் வந்தது? இதை முன்பே அவனுக்குள் இயற்கை வைத்துவிட்டது. ஒரு சிலருக்கு மட்டுமா? என்றால் அல்ல!
     பாவம் மிகுந்து இருந்தால் மூர்க்கத்தனம் இருக்கும்.
     பாவம் மிகுந்தால் பொறாமை இருக்கும்.
     பாவம் மிகுந்தால் பேராசை இருக்கும்.
     பாவம் மிகுந்தால் அறியாமை இருக்கும்.
     அறியாமை என்பது ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள முடியாமை பொருளாதாரத்தின் இயல்பை அறியாமை! அது நிலையில்லாதது என்று அறிவதே அறிவு. அதை அறியாதது அறியாமை. பொருளை நிலையானது என்று நினைத்தால் அங்கே அறியாமை இருக்கிறது. நிலையில்லாதது என்று நினைத்தால், அது நல்ல அறிவு. நிலையில்லாத பொருள் என்று அறிகின்றவன்,நிச்சயம் இந்த பொருள் நிலையில்லாதது ஏதோ நல்ல காரியம் செய்து கொள்ள வேண்டுமென்று நினைத்தால் அங்கே அறியாமை தெளிவடைந்தது.இந்த பொருளை நாம் இறுகப்பிடித்துக் கொள்ள வேண்டும். எப்படியும் நிலை உயர வேண்டுமென்று நினைத்தால் அங்கே அறியாமை வந்தது என்பார்கள்.
     ஞானிகளெல்லாம் பொருளாதாரத்தை வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்குத் தெரியும், அது நிலையில்லாத பொருள். அதை வைத்து நல்ல காரியம் செய்து கொள்ள வேண்டும் என்பார்கள். நிலையில்லாத பொருளை நிலை என்று நினைத்து மயங்குதல் அறியாமை. அதைக் கைப்பற்றுதல் முயற்சித்தல் அல்லது ஈடுபடுதல் போன்றவற்றால் பாவம் வந்து சேரும். பாவம் எங்கே செல்லும்? நரகத்திற்குக் கொண்டு செல்லும் என்றான், அந்த பாவம் மூர்க்கத்தனத்தை உண்டாக்கும், யான் என்ற கர்வத்தை உண்டாக்கும், மூர்க்கத்தனத்தால் கொலை செய்வான், மனதில் பட்டதையெல்லாம் செய்வான்.
     மனதில் பட்டதையெல்லாம் செய்வதற்கு காரணம், நல்ல உபதேசம் இல்லை, சான்றோர்கள் தொடர்பு இல்லை, அதனால்தான் இது போன்ற கொடும்பாவம் செய்கிறான். அவன் பிறரை அடிப்பான், துன்பப்படுத்துவான் எதை வேண்டுமானாலும் செய்வான்.
     ஆக இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது, இந்த அளவிற்கு அவனுக்கு மூர்க்கத்தனம் வந்தது உபதேசமில்லாக் குறைதான். அவன் நல்லவர்களுடைய உபதேசத்தை கேட்க மாட்டான், பெரியவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான். சான்றோர்கள் பெரியோர்கள் பேச்சைக் கேட்டுத் தெளிவடைய வேண்டுமென்ற நினைப்பு இருக்காது. அப்படி தெளிவடைய நினைத்தால் அங்கே அறியாமை இருக்காது. இதயத்திலே இருள் சூழாது இதயத்தில் இருள் சூழும் என்பது பொருளாதாரத்தைக் கண்டு மயங்குதலாகும். நிலையான உலகம் என்று நினைத்தாலே அறியாமை. வஞ்சித்தல், ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், அராஜகம் செய்தல் ஆக இதுபோன்ற ஒரு குணக்கேடுகளெல்லாம் நரகத்திற்கு ஏதுவானது. இதெல்லாம் தவறு என்கின்ற அறிவு வந்தால், அங்கே ஜீவகாருண்யம் இருக்கிறது. இல்லையென்றால் மனதில் பட்டதையெல்லாம் செய்வான். இப்போது நாம் போகின்ற பாதை சரியான பாதையா? இல்லையா அது அவனுக்கே தெரியாது. சரியான பாதை என்பதை அறிகின்ற அறிவே பெரிய அறிவு. அந்த அறிவு வந்தால் கடவுள் வந்துவிட்டான் அங்கே! போகின்ற பாதை சரியான பாதை.
     நாம் போகின்ற பாதை சரியான பாதை இல்லை, நரகத்திற்கே கொண்டு போய்க்கொண்டிருக்கும் என்னும் அந்த அறிவு வந்தால், தெளிவு அடைந்து விட்டான், கடவுளை அடைகிறான், இந்த ஜென்மத்தில் இல்லையென்றால் அதுபற்றி அவசியமில்லை.
     ஆக ஆன்மீகத்தை பற்றி ஆராய்ந்து பார்க்கும்போது, ஒருவனுக்கு தெளிவான ஆசான் கிடைக்க வேண்டும். தெளிவான ஆசான் எப்படி இருக்க வேண்டும்? உண்மைப்பொருள் தெரிந்தவனாக இருந்து உபதேசிக்க வேண்டும். “நீ மிக காமாந்தகாரமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறாய். காமம் இருக்கலாம், குற்றமில்லை. ஆனால் இந்த காமம் உன்னை நரகத்திற்கு தள்ளும்,நரகத்திற்கு கொண்டு போகும் என சொல்ல வேண்டும்.
     இயற்கை அன்னைதானே காமத்தைக் கொடுத்தாள் என்றால் “முறையோடு பயன்படுத்த வேண்டும்” என்பார். முன்னோர்கள் இப்படி வகுத்து வைத்திருக்கிறார்கள். “ஒருவனுக்கு ஒருத்தி” என்று வைத்திருக்கிரானல்லவா? அப்படி இருந்தால் நரகத்தில் தள்ளாது. காமத்தை முறை தவறி பயன்படுத்தினால், நரகத்திற்கு போவாய்.
     நீ நியாயபூர்வமாக உழைத்த காசு மட்டும் நிற்கும். இல்லாவிட்டால், பாவச்சுமை வரப்போகிறது என்று அர்த்தம். இப்படி பேசினால் எப்படிய்யா வாழ்வது? என்றான். வாழக்கற்றுக்கொண்டு வாழ்பவனுக்குத்தான் இப்போது நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீ வாழ விரும்பினால், மனிதனாக வாழ விரும்பினால் நாங்கள் சொல்வதைக் கேள். தொழு நோய் இல்லமாலும், தொற்று நோய் வந்து கைகால் வீங்கி, நாலைந்து வருடம் கட்டிலில் கிடக்காமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால் நான் சொன்னதைக் கேள். எப்படியும் பொருள் சேர்த்தால் முடிவு அங்கேதான் போய் நிற்கும். உன்னுடைய வரவு செலவை பார்த்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியாது. ஆக உனக்குப் பேராசை இருக்கிறது. ஆசை இருக்கலாம். அது பேராசையாக மாறக்கூடாது. உன்னுடைய நியாயபூர்வமான ஆசை உன்னுடைய உழைப்பிற்கேற்ற பணம் வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். எப்படியும் பொருள் சேர்க்கலாம் என்று நினைத்தால், அழக்கொண்ட எல்லாம் அழப்போம் – பிறரை வருத்திச் சேர்த்த பொருள் எல்லாம் உன்னை வருத்தாமல் போகாது என்பார் ஆசான் வள்ளுவப்பெருமான். அவரை சாதாரணமாக நினைக்க வேண்டாம்.
     அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
      வஞ்சிப்பது ஓரும் அவா.
                                                திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் –366
                அஞ்சுதல் அறம் என்றான். காமத்திற்கு அஞ்சுதல் அறம் என்றான். இது யோகிகளுக்கு மிகப்பெரிய வார்த்தை. அஞ்சவில்லையென்றால் உன்னை வஞ்சிக்கும். அப்படி வஞ்சிப்பது இயற்கையா? செயற்கையா? நான் அஞ்சாமல் வாழ விரும்பவில்லை. அஞ்சி அறிவோடு வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் என்னுடைய உடம்பு   கீழ்த்தரமான உடம்பு. நரகத்திற்கு என்னை கொண்டு செல்கிறது. உடம்பை மையமாகக் கொண்டதுதான் நரகம், சொர்க்கம். ஒரு மனிதனை உயர்த்தி கடவுளாக்குவது உடம்புதான். அவனை நரகத்திற்கு தள்ளுவதும் உடம்புதான்.
     உடம்பைப்பற்றிய உபதேசத்தை அறியமாட்டான். எல்லாமவல்ல இயற்கை இப்படித்தான் அமைத்திருக்கிறாள். அதுதான் அவளுடைய வேலை. பேராசையை அமைத்ததும் அவள்தான். கர்வத்தைத் தந்ததும் அவள்தான். பிறரை எல்லாம் அடித்து நாசப்படுத்திவிட்டு வெற்றி காண நினைப்பதும் அவள்தான். மூர்க்கத்தனத்தையும் அவள்தான் அமைத்திருக்கிறாள். மூர்க்கத்தனம் செயற்கை அல்ல, இயற்கைதான். இதை புரிந்தவர்கள், உணர்ந்தவர்கள் மாற்றிக் கொள்கிறார்கள். இல்லையென்றால், நரகத்திற்குச் செல்கிறான். ஒருவனுக்கு செய்கையால் நரகம். காமத்தால் நரகம். பேராசையால் நரகம், ஜாதி வெறியால் நரகம், மதவெறியால் நரகம், அறியாமை காரணமாக நரகம் வரும்.
     ஒருவன் எந்த உபதேசத்தின் காரணமாக நல்லபடி இருக்கிறான் என்றால், அவனுக்கு முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் வேறு பிரச்சனையே இருக்காது, நன்றாக பாடுபடுவான், மாணவி மக்களோடு வாழ்வான், அசைவம் சாப்பிடுவான் இப்படியாக வாழ்வான்.
     இதுவா அவனுடைய வாழ்க்கை? அவன் அதற்கென்று வரவில்லையப்பா! ஏதோ மனதில்பட்டதை செய்கிறான். இது சராசரி மனித வாழ்க்கை.
     ஞானம் என்பதோ, ஜீவகாருண்யம் என்பதோ, ஆன்மிகம் என்பதோ என்னவென்றால், கடவுளை அடைய முயற்சித்தல், மரணமில்லாப் பெருவாழ்வு, மோட்சலாபம் பெறுதல் என்பதாகும். மோட்ச லாபம் மரணமில்லாப் பெருவாழ்வு, முக்தி நெறி பெற விரும்புவது. இதைப் பற்றிய கருத்துக்கள். இப்போது நான் பேசுவது ஜீவகாருண்யம்.
    
     சராசரி மனிதனைப்பற்றி கவலை இல்லை. அவன் வந்தான், இல்லறம் நடத்தினான், மனைவி மக்களோடு வாழ்ந்தான், போய்க்கொண்டே இருப்பான்.உன் நிலை உயர வேண்டுமென்று விரும்பினால், இந்த கொள்கையை கடைப்பிடிக்க வேண்டுமென்று சொன்னார். நிலை உயர விரும்புகிறவர்கள் எப்படி இருக்க வேண்டும்? நெறிக்கு உட்பட்டு வாழ வேண்டும் என்று சொல்வார்கள். இதை வகுத்து வைத்திருக்கிறார் ஆசான் திருவள்ளுவர்.
     பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
      வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
                                                திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் – 44
                பழியஞ்சிப் பாத்தூண் பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சியும், சேர்க்கப்பட்ட பொருளை பகுத்துண்டும் வாழ வேண்டும். பண்புள்ள மக்களுக்கு வாழ்வதற்கு தடையே இல்லை! என்று சொல்கிறார். வழியெஞ்சல் – வாழ்க்கையில் தடையே இருக்காது.
     பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் – அவனுக்கு வாழ்க்கையில் தடையே இருக்காது என்றார். தடையில்லாத வாழ்க்கை வாழ கற்றுக் கொண்டவன், இயற்கையை நன்கு புரிந்து கொண்டவன் என்பார். இந்த உலகத்தில் இருந்துதான் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்று பூரணமாக உணர்ந்தவன், காட்டுக்குப் போக முடியாது. இவ்வுலகில் வாழ்ந்து தவத்தை முடிக்க வேண்டும். இல்லறமும் நடத்திக் கொள்ள வேண்டும், உடற்கூறையும் தெரிந்து கொள்ள வேண்டும், உடற்கூறை அறிந்து தன நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும், பூஜை செய்து கொள்ள வேண்டும். ஆசான் திருவள்ளுவர் ஒரு இடத்தில் சொல்வார்.
              பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
                தீப்பிணி தீண்டல் அரிது.
                                                – திருக்குறள் – ஈகை – குறள் எண் – 227
                பாத்தூண் மரீஇ யவனைப்பகுத்துண்டு வாழும் அவனை, அந்த பயிற்சி உள்ளவனை, தீப்பிணி தீண்டாது என்றார். அடிப்படை ஒருவன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான். பொழுது நல்ல பொழுதாக போக வேண்டும்.
     யார் துணை கொண்டு இந்த பொழுதை நடத்துகிறோம். மனித சக்த்தியைக் கொண்டு இந்த பொழுதை நடத்துவதா? அல்லது இயற்கை துணை கொண்டு நடத்துவதா? கல்வி துணையா? அனுபவ துணையா? அல்லது உடல் வலிமை துணையா? ஆள்படை துணையா? மனைவி துணையா? மற்றவர் துணையா? இல்லை பணம் துணையா? உத்தியோகம் துணையா? எதைத் துணை கொண்டு வாழ்க்கையை நடத்துவது?
     அறிந்தவன் சொல்வான், “இன்றைய வாழ்க்கை ஞானிகளின் திருவருள் துணை கொண்டு வாழ வேண்டும்” என்றான். “உங்களுடைய திருவருள் துணை கொண்டு இன்றைய வாழ்க்கையை நடத்த வேண்டும். இதற்கு நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று ஞானிகளிடம் கேட்க வேண்டும்.
     வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள் ஞானிகள், உடற்கூறைப்பற்றி அணு அணுவாக உணர்ந்தவர்கள் ஞானிகள், இப்படி அவன் வகுத்திருக்கிறான். உயிரைப்பற்றி அறிந்தவன், மனைவி மக்களைப்பற்றி அறிந்தவன், உலகத்தைப் பற்றி அறிந்தவன், பொருள் சேர்க்கின்ற முறையை அறிந்தவன்.
     பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
      தீப்பிணி தீண்டல் அரிது.
                                                – திருக்குறள் – ஈகை – குறள் எண் – 227
                பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
                வழியெஞ்சல் எஞ்ஞான்றுன் இல்.
                                                திருக்குறள் – இல்வாழ்க்கை – குறள் எண் – 44
                அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
      பிற்பயக்கும் நற்பா லவை
                                                திருக்குறள் – வினைத்தூய்மை – குறள் எண் – 659
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
                                                –  திருக்குறள் – பொருள் செயல்வகை – குறள் எண் – 755
     இப்படியெல்லாம் ஆசான் திருவள்ளுவர் வகுத்து, தொகுத்திருப்பார். ஆசான் திருவள்ளுவர் சொன்னது உபதேசம். ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்றாயா? இதைக் கடைப்பிடி. எப்படி சொல்கிறார்களோ அப்படியே போய்க்கொண்டிருக்க வேண்டும். அவர்களிடம் பேச்சே இருக்காது, சொன்னதை செய்ய வேண்டும். இப்படி செய் என்று எடுத்தவுடனே சொல்வார்கள்.
                அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
      வஞ்சிப்பது ஓரும் அவா.
                                                திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் –366
                ஆசை இயற்கையா? செயற்கையா? செயற்கை அல்ல, இயற்கைதான்! அதை வெல்லுகின்ற வல்லமையும் இயற்கைதான். காமத்திற்கு காரணமானது உடம்பே, நரகத்திற்கு காரணமானது உடம்பே. தொழுநோயும், புற்றுநோயும், எயிட்ஸ் நோயும், கைகால் ஊனமாக இருக்கின்ற உடம்பே! முன்செய்த வினையின் காரணமாக வந்தது தொழுநோயும், புற்றுநோயும் மற்ற பலகீனங்களும். அதே நரகத்திற்கு காரணமான உடம்பே ஞானத்திற்கு காரணம் என்று அறிகின்ற அறிவு ஆசான் கொடுத்தது. அஞ்சுவததோறும் அறனே என்றான். இதுநாள் வரை நரகத்தில் தள்ளியது இயற்கையா? செயற்கையா? உன்னை நரகத்தில் தள்ளியதும் இயற்கைதான், உன்னை கை தூக்கிவிடுவதும் இயற்கைதான். உன்னை இதுநாள் வரையிலும் தீராத தொழுநோய்க்கு உட்படுத்தி, கிட்டே நெருங்க முடியாதபடி செய்ததும் அதே இயற்கைதான். தொழுநோய் என்பதும், எய்ட்ஸ் நோய் என்பதும், வாத நோய் என்பதும் இயற்கையா செயற்கையா என்றால் எல்லாமே இயற்கைதான். இது யார் கொடுத்தது? தக்க ஆசான் இல்லாததனால் வந்த கேடு. மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களுக்கு அதே தொழு நோய் வந்தால் பார்ப்பதனாலேயே குணப்படுத்த முடியும். எய்ட்ஸ் நோயாக இருந்தாலும், புற்று நோயாக இருந்தாலும், அதுவும் அவன் கொடுத்த இயற்கை. அப்பேர்ப்பட்ட ஒரு சக்தியும் இயற்கை. இப்படி நரகத்தில் தள்ளி நாற்றமடிக்கச் செய்வதும் இயற்கை. இப்படி அமைக்கப் பட்டிருக்கிறது. இதை ஆசான் துணை கொண்டு சரி செய்யலாம். துணை கொண்டு சரிப்படுத்தமுடியும்.
     ஏன் உனக்கு இந்த தொழுநோய் வந்தது?
    
     ஏன் ஏய்ட்ஸ் நோய் வந்தது?
     ஏன் புற்றுநோய் வந்தது?
     ஏன் அங்கஹீனமாக ஆனாய்?
     ஏன் முகம் விகாரமாக இருக்கிறது?
     ஏன் கைகால் ஊனமாக இருக்கிறது?
     ஏன் மகோதரம் வந்தது?
     ஏன் பூதக்கால் வந்தது?
     ஏன் அருவருப்பான தோற்றம் வந்தது?
     இயற்கை படைக்கும்போது நல்லவிதமாகத்தான் படைத்தது. செய்த பாவம் இப்படி விகாரமான தோற்றம். இதற்கு விமோசனமே இல்லையா? ஏன் இல்லை? ஒரேஒரு முறை “ஓம் அகத்தீஸ்வரா” என்று அவனை சொல்ல வைக்கலாம். ஆனால் அவன் கேட்கமாட்டான். மிகுதியாக பாவம் செய்திருந்தால் இந்த கருத்துக்களெல்லாம் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றுவது போல் அவனுக்கு இருக்கும். வரவே மாட்டான்! கிட்ட வரவே மாட்டான். ஓடிப்போய் விடுவான். அப்படி இல்லையென்றால் இவர்கள் ஓடிப்போய் விடுவார்கள் என்பார்கள். அப்ப அவனுக்கெல்லாம் விமோசனம் இல்லையா? “தாயினும் கருணை உள்ளவரையா நீர்! தாயினும் கனிவுள்ள நீங்களெல்லாம் இப்படி பாவிகளை வெறுத்து ஒதுக்கினால், நாங்கள் எங்கே போவது?”
 
     “அஞ்சேல்! என் நாமத்தை சொல்! நான் பார்த்துக் கொள்கிறேன் ஒரு முறை நாமத்தை சொல்ல வை” என்பார்.
     பல ஜென்மத்தில் செய்த பாவம், சாபத்தினால் வந்ததுதான் இந்த தொழு நோய், பல பத்தினி பெண்டிரையும், பல பக்தர்களையும் இகழ்ந்து பேசியதால் வந்த கொடூரமான தோற்றம். என் நாமத்தைச் சொன்னால் அதை உடைத்து எறிவேன்! அந்த கருணையும் இயற்கை அன்னை கொடுத்ததுதான். ஆக ஆசையாலும் ஆட்படையாலும், பணபலத்தாலும், ஜாதி வெறியாலும், மத வெறியாலும் அராஜகம் செய்தவர்களுக்கு வந்த கேடு இது. ஒரே ஒரு பரிகாரம் ஆசான் நாமத்தை சொல்வதுதான். ஆசான் நாமத்தை சொன்னால் போதும்.
     ஓம் அகத்தீசாய நம.
     ஓம் அகத்தீசாய நம
     ஓம் அகத்தீசாய நம.
     ஓம் அகத்தீசாய நம. “நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை! தொழுநோய்க்கு ஆட்பட்டிருக்கிறேன். என்ன பாவம் செய்தேனோ, மிக்க காமந்தகாரம் பிடித்து தடுமாறுகிறேன். என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை. மிக்க வறுமையில் கிடந்து விடுபட முடியாமல் தடுமாறுகிறேன். இதுபோன்ற கொடுமைகளிலிருந்து நான் விடுபட வேண்டும். நீர்தான் அருள் செய்ய வேண்டும்!” என்று ஒரு முறை சொன்னால் போதும். அவனுடைய பாவத்தையெல்லாம் பொடியாக்கும் வல்லமை ஞானிகளுக்கு உண்டு.
     தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
            தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
      ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
            உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
      கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
            கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
      நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
            நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
                            மகான் கொங்கண மகரிஷி கடைக்காண்டம் 491
                பாவம் என்று சொல்லவில்லை, கொடும் பாவம் தீர்க்கும் ஆசான் என்றார். இப்படி அல்லற்பட்டு, தடுமாறுகின்ற மனித வர்க்கத்திற்கு நாம் தான் சொல்ல வேண்டும். நமது நோக்கம், மக்கள் மத்தியில் புண்ணியவான்கள் பெருந்தகையாளர்கள், அருள் படைத்தவர்கள், சூரியனைப்போன்று மிக்க ஒளி படைத்தவர்களான ஞானிகள் பெருமையைப் பற்றி பேச வேண்டும், பிரசாரம் செய்ய வேண்டும். மக்கள் சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு பாவம் எது? புண்ணியம் எது? என்று அவர்களுக்கு தெரியவில்லை. நாம் இப்போது இறங்கியிருக்கிறோம், சமுதாயத்தில் இறங்கியிருக்கிறோம். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் மாதந்தோறும் நடத்தி வருகிறோம். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் பெரிய மனிதர். பெரிய மனிதர் பெயரை சொல்கிறார்கள். செய்தி எங்கு பார்த்தாலும் போய்க்கொண்டிருக்கிறது. பெரிய மனிதர் அகத்தியர் பெயரைச் சொன்னாலே ஜென்மம் கடைத்தேறும். அது சிறந்த தொண்டு. அது நமக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். ஆக ஒவ்வொரு செயலிலும் நாட்டு மக்களுக்கு ஆசான் அகத்தீசர் நாமம் போக வேண்டும்.
     சொல்லுங்கள் ஆசான் அகத்தீசன் நாமத்தை! கொடிய நோயிலிருந்து விடுபடுங்கள்.
     சொல்லுங்கள் ஆசான் அகத்தீசன் நாமத்தை! மதுப்பழக்கம் மற்ற கொடிய பழக்கங்களை வீசி எறியுங்கள். இதெல்லாம் நாட்டு மக்களுக்குப் பரவ வேண்டும். நாம் அதற்குத்தான் வந்திருக்கிறோம்.
     ஏன் பிறந்தோம்? பிறந்ததற்குக்  காரணம், இதெல்லாம் தேவையில்லை நமக்கு. ஆண் முன்னே வந்ததா? பெண் முன்னே வந்ததா? என்பதெல்லாம் அவசியமில்லை. முட்டை வந்ததா? கோழி வந்ததா? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை, அதற்கு நேரமுமில்லை.
     வந்த ஜென்மத்தை பயன்படுத்துவோம். உன்னுடைய வாழ்க்கை நிலை என்ன? எப்படி நீ உன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்? பொல்லாத வறுமையிலிருந்து விடுபட வேண்டும். நோயற்ற வாழ்வு அமைய வேண்டும். ஆழ்ந்து சிந்திக்ககூடிய சிறப்பறிவு வேண்டும். நோயில்லா உடம்பு இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய சிறப்பறிவு வேண்டுமல்லவா? அந்த அறிவை ஆசான் கொடுக்க வேண்டும். ஒருவன் சிறப்பறிவு பெற்றிருக்கிறான். ஜீவகாருண்யம் காட்டுகிறான் என்றால் அது ஆசான் கொடுத்த அறிவு.
     பிற உயிரகள்பால் கருணை காட்டுகின்ற சிறப்பறிவு வந்ததென்றால் ஆசான் கொடுத்த அறிவு அது. நோயில்லாத உடம்பு பெற்றிருக்கிறான். ஆரோக்கியமான உடம்பு அது. ஆசான் கொடுத்த பிச்சை. பண்புள்ள மனைவியும், பண்புள்ள பிள்ளைகளும் அமைந்திருக்கிறது என்றால் அது ஆசான் கொடுத்த பிச்சை. இதையெல்லாம் ஆசான் நாமத்தை, மக்களை சொல்லச் செய்து, நரகத்திலிருந்து விடுபடுவதற்கு நாம் ஆசான் பெருமையைப் பேசி வழிபாடு செய்ய வேண்டும். எங்கு பார்த்தாலும் நோயும், பிணியும், வறுமையும் ஆட்டிப்படைக்கிறது. அமைதியே இல்லாமல் தடுமாறுகிறான். அமைதி இழந்து கிடக்கும் இந்த சமுதாயத்திற்கு ஆசான் நாமத்தைச் சுட்டிக்காட்டுவதே நமது வேலை! அதை நமது சங்கம் சிறந்த முறையில் செய்து வருகிறது. நரகத்திற்குப் போகாமல் நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
     அல்லல், அருள் ஆள்வார்க்கு இல்லை; வளி வழங்கும்
      மல்லல் மா ஞாலம் கரி.
                                                திருக்குறள் – அருளுடைமை – குர்ல எண் – 245
                அல்லல், அருள் ஆள்வார்க்கு இல்லைஅருள் பெற்றவர்க்குத் துன்பம் இல்லை. அருள் எது? அருள் கருப்பா? சிவப்பா? இல்லை! தயவுதான் அருள். அந்த தயவுக்கு எது ஆசி? தயவு என்கின்ற வார்த்தைக்குத் தலைவன் யார்? ஆசான் அகத்தீசன்தான், ஆசான் திருமூலதேவன்தான், ஆசான் இராமலிங்கசுவாமிகள்தான்.
     தயவு என்கின்ற வார்த்தையே ஞானிகள் நாமத்தில்தான் இருக்கிறது. அதுதான் ஆசான் நாமம், நிறைவான வாழ்வு. ஆக இதெல்லாம் மக்கள் மத்தியில் பரவ வேண்டும். ஆசான் நாமத்தைச் சொன்னால் தயவு வந்துவிடும். மக்களை நாமஜெபம் செய்ய வைக்க வேண்டும்.
      காப்பான கருவூரார் போகநாதர்
            கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
      மூப்பன கொங்கணரும் பிரமசித்தர்
            முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
      கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
             கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
      வாப்பன வாதத்திற்கு ஆதியான
            வாசமுனி கமலமுனி காப்புத் தானே.
                                                                                – ரோமரிஷி பூஜாவிதி 7ல் கவி எண் 2
                அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
                மல்லல்மா ஞாலம் கரி.
                                                      – திருக்குறள் – அருள் உடைமை – குறள் எண் 247
                எடுத்துக்காட்டு அது. அருளைப்போற்றுகின்ற மக்களுக்குத் துன்பம் இல்லை. அல்லல் என்பது துன்பம். போற்றுகின்ற மக்களுக்குத் துன்பம் இல்லை. ஒரே அடி! துன்பம் இல்லை என்று சொல்வான். சொல்லென்ப என்று சொல்லவில்லை.
     மல்லல்மா ஞாலம் கரி – வளப்பம் பொருந்திய காற்றால் இயங்கக்கூடிய உலகம். காற்றினால் இயங்கக்கூடிய வளப்பம் பொருந்திய உலகமே சாட்சி. மற்ற பூதாதிகள் சொல்லாமல் ஏன் காற்றை சொன்னார்? காற்று இல்லையென்றால் உலகம் இல்லை. காற்றே தெய்வம். அந்த காற்று வசப்பாட்டால் தெய்வமாகலாம்.
      அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி – அப்ப அருளைப்போற்றுவோம். அருளைப்போற்றுகின்ற மக்களுக்கு அல்லல் இல்லை.
     அருளைப்போற்றுவதற்கு என்ன உபாயம்? ஜீவவதை வேண்டாம் என்றான். உயிர்வதை செய்யாதே. இறையருள் பெறுவதற்கு உயிர்வதை செய்தால் நிச்சயமாக கேடு வரும். இதைதான் ஆசான் திருவள்ளுவர் சொல்வார்.
     
      அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
      இன்னா உலகம் புகல்.
                                                திருக்குறள் – அருளுடைமை – குறள் எண் – 243
                அருள்சேர்ந்த – இங்கே போற்றுதல் அங்கே சேர்தல். அருள் எப்படி சேரும்? எந்த அளவிற்கு ஜீவ தயவு இருக்கிறதோ, அந்த அளவிற்கு அருள் சேரும். எந்த அளவிற்கு உயிரை வதைக்கிறாயோ, அந்த அளவிற்கு பாவம் சேரும். மருள் சேர்கிறது, அறியாமை சேர்கிறது. அருளைப் போற்றுகின்ற மக்களுக்கு அல்லல் இல்லை என்றான். அருளை போற்றுகின்ற மக்களுக்கு காமம் இல்லை. எவ்வளவு பெரிய விசயம்? அப்படி லேசாக சொல்கிறார். அருளை போற்றுதல். அருள் யார் என்று கேட்டான். அருள் வடிவாக இருப்பதே ஞானிகள்தான். ஞானிகள் அருள்வடிவாக இருக்கிறார்கள், அன்பு வடிவாக இருக்கிறார்கள், அர வடிவாக இருக்கிறார்கள். ஆசான் நாமத்தை சொல்வதே, அருளை போற்றுதல். அருளை போற்றுதல் ஆசான் திருவடியை போற்றுதல். திருவடியை போற்றுகின்ற மக்களுக்கு அருள் உண்டு.
     அருளை போற்றுகின்ற மக்களுக்கு அறிவு உண்டு.
     அருளை போற்றுகின்ற மக்கள் ஆன்மாவைப் பற்றி அறிவார்கள்.
     அருளை போற்றுகின்ற மக்களுக்கு தயவு வரும்.
     அருளை போற்றுகின்ற மக்களுக்குத் துன்பம் இல்லை.
     அருளை போற்றுகின்ற மக்களுக்குத் பிறவி இல்லை.
     அருளை போற்றுகின்ற மக்களுக்கு மரணம் இல்லை என்றான்.
     அப்போது அருளை போற்றுங்கள். அந்த அருளை போற்றுதல், புகழ்தல். போற்றுதல் என்றால் புகழ்தல். ஆசான் நாமத்தை சொல்லி புகழ்தல். ஆசான் நாமத்தை சொல்லி வணங்குதல். அருளை சேகரிக்க வேண்டும் என்னும் சிந்தை வரும். ஆசான் நாமத்தை சொல்ல சொல்ல சொல்ல அருள் வரும்.
        அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் – “இல்லை” என்கின்ற வார்த்தையை இங்கேதான் பயன்படுத்துகிறான். என்ப, என்ப என்பதை விட்டு இங்கே “இல்லை” அதுவும் அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை என்பான். இல்லை என்று சொல்வார்கள் என்று சொல்லவில்லை. இங்கே சொல்லும்போது,
     அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
      மல்லல்மா ஞாலம் கரி
                                                திருக்குறள் – அருளுடைமை – குறள் எண் – 245
        ஆரம்பித்திலேயே அவனே சொல்வான். அப்படி கருத்தை சொல்லி அருளைப் போற்றுகின்ற மக்களுக்குத் துன்பம் இல்லை.
     அருள் யார்? ஆசான் தான், ஞானிகள்தான் அருள். சிறுதெய்வமாக இருக்க முடியாது. ஆகையால் நாமத்தை சொல்லுதல் – அருளை போற்றுதல்.
     அருளை போற்றுகின்றவர்களுக்கு அறிவு உண்டாகும்.
     அருளை போற்றுகின்றவர்களுக்கு அறியாமை இருக்காது.
     அருளை போற்றுகின்ற மக்களுக்கு நோய் இருக்காது.
     அருளை போற்றுகின்ற மக்களுக்கு சிறப்பறிவு உண்டாகும்.
     அருளை போற்றுகின்ற மக்களுக்கு செல்வம் உண்டாகும்.
     ஆக நாமத்தை சொன்னால் அருள் பெருகும்.
     நாமத்தை சொல்வோம்! ஆசி பெறுவோம்!
     நாமத்தை சொல்வோம்! சிறப்பறிவு பெறுவோம்!
     நாமத்தை சொல்வோம்! வெற்றி பெறுவோம்!
     ஆக நாமத்தை சொல்வதே இங்கே அருளாகும். இப்படியெல்லாம் கருத்துக்களை ஆசான் திருவள்ளுவர் அள்ளி குவித்துவிட்டுப் போயிருக்கிறார். நாம் சொல்கிறோம், தலைவர் யார் என்று தெரியும். மற்ற யாருக்கும் தெரியாது.
     ஆசானை கேட்கிறோம். “ஓம் அகத்தீசாய நம” ஓம் அகத்திசாய நம” என்று நாமஜெபம் செய்கிறோம். வாழ்க்கையில் எதை  கடைப்பிடிக்க வேண்டுமென்று அடியேனுக்குத் தெரியவில்லை.
     நீர் எனக்கு அருள் செய்து உணர்த்த வேண்டும் வேண்டும் என்றான். ஐந்த நிமிடம் நாமத்தை சொல்லி விட்டு, “நடைமுறையில் எது பாவம்? எது புண்ணியம்” என்று உணர முடியவில்லை.
     பேராசை காரணமாக பொருள்பற்று இருக்கலாம். காமத்தின் காரணமாக நரகத்திற்கு என்னை இட்டுச் சென்றிருக்கலாம். கர்வத்தின் காரணமாக எனக்கு பாவம் சூழலாம். ஆகவே நடைமுறை எனக்குத் தெரியவில்லை. நீரே எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று கேட்க வேண்டும்.
     அதுதான் அந்தரங்க பூஜை. அந்த பூஜை செய்யும் மக்கள் வெளியில் பேசமாட்டார்கள். அது அவர்களை பண்படுத்துகின்ற முறையாகும். ஆசானைக் கேட்க வேண்டும்,  உமது நாமத்தை சொல்லியிருக்கிறேன். உன்னுடைய நாமத்தை சொல்லி பூஜை செய்கிறேன். எனக்கு நல உணர்வும், அறிவும் தர வேண்டும். நல உணர்வு மிகுதியாக வேண்டும். வஞ்சனையற்ற வாழ்க்கை அமைய வேண்டும். பொய் சொல்லாது பொருள் குவிய வேண்டும். இல்லறத்தை நடத்துவதற்கு உடல் ஆரோக்கியம் வேண்டும். மனைவியும் உடல் நல்லபடி இருக்க வேண்டும். எனக்கும் நல்லபடி இருக்க வேண்டும். பண்புள்ள புத்திரபாக்கியம் அமைய வேண்டும். குறையுள்ளதாக பிறக்கக் கூடாது. விகாரமான தோற்றத்தை கொடுத்து என்னைக் கொன்று விடாதே. புத்திரபாக்கியம் வேண்டாமையா! பக்கத்து வீட்டு பிள்ளையைப் பார்த்தால் விகாரமாக இருக்கிறது. அவதாரம் போன்று, உருளைக்கட்டை போல, அது போன்று வேண்டாம். ஆக, பிள்ளைகள் மூலமாகவும் மகிழ்ச்சி இருக்க வேண்டுமென்று தலைவனிடத்தில் கேட்க வேண்டும், அருள்பலத்தால்தான் இது முடியும். 
                அருள் பலம் உள்ள மக்களுக்குத்தான் பண்புள்ள பிள்ளையும், அழகுள்ள பிள்ளையும் பிறக்கும். இல்லையென்றால் தூக்கவே முடியாது, கிட்டவே போக மாட்டான். ஆக அழகுள்ள மனைவி, அதுவும் ஆரோக்கியமான மனைவி, நம்மைப்பற்றி புரிந்து கொள்கின்ற மனைவி, நம்மைப் பற்றி புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்கின்ற மனைவி, பண்புள்ள மனைவி, பண்புள்ள குழந்தை. அதே போன்று நமக்கும் அந்த உணர்வு. இருவரும் சேர்ந்து வாழ்கின்ற வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும். அது அருள் பொருந்திய வாழ்க்கை. ஆசான் நாமத்தை சொல்கின்றான். நேற்று வரையிலும் முரண்பட்ட மனைவி இன்று மாற்றம் அடைவாள். நேற்று வரை நமக்கு உடல் பலகீனம் இருந்தது. இன்று உடல் மாற்றம், இல்லறம் என்பது உடல் ஆற்றலைப் பொருத்தது என்பான். இல்லறம் என்பது வறுமையில்லாத வாழ்க்கை என்றான். வறுமை இல்லாத வாழ்க்கை அதுதான் வாழ்க்கை.
     வறுமை இல்லாத வாழ்க்கை, உடல் ஆரோக்கியம், இருவருக்கும் நல்லபடி உடல் அமைப்பு, பண்புள்ள புத்திர பாக்கியம், குழந்தையை அள்ளினால் மனதிற்கு ஆறுதல் இருக்க வேண்டும். இதுவும் தலைவன் கொடுக்க வேண்டும். அதுதான் அருள் வாழ்க்கை என்றான். அது ஆசான் கொடுக்கக் கூடிய பிச்சை. இதெல்லாம் மக்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டும். இதனுடைய முடிவு எங்கே என்றான். வறுமை இல்லாதிருந்தால்தான் வாழ்க்கை. அதற்கு பொருள் வேண்டும். அதை செலவு செய்யக் கூடிய பக்குவம் வேண்டும்.
     அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
      செல்வச் செவிலியால் உண்டு.
                                                திருக்குறள் – பொருள் செயல்வகை – குறள் எண் – 757
      அருள்என்னும் அன்புஈன் குழவி அன்பு என்று சொல்லப்பட்ட குழந்தை அருள். அதை பொருள் என்று சொல்லப்பட்ட செவில்த்தாய் வளர்ப்பாள். அப்பப்பா! இதை இதற்கு மேல் சொல்லவே முடியாது.
     ஏனய்யா பொருள் வேண்டும்? இந்த பொருள் மரணமில்லாப் பெருவாழ்விற்குரிய மார்க்கத்தைத் தரும் என்றான். யாருக்கு? அறிந்தவனுக்கு, உணர்ந்தவர்களுக்கு புரிந்தவர்களுக்கு இந்த பொருள் மரணமில்லாப் பெருவாழ்வை தரக்கூடிய மார்க்கம்.
      அருள்என்னும் அன்புஈன் குழவி அன்பு என்று சொல்லப்பட்ட தாய், அருள் என்று சொல்லப்பட்ட குழந்தையை பெற்றாள். அது பொருள் என்று சொல்லப்பட்ட வளர்ப்புத்தாயை கொண்டு வளர்க்க வேண்டுமென்றான். அருள் என்று சொல்லப்பட்ட குழந்தையை பொருள் என்று சொல்லப்பட்ட செவில்த்தாய் வளர்ப்பாள். இதன் முடிவு? மரணமில்லாப் பெருவாழ்வு என்றான். மரணமில்லாப் பெருவாழ்வை பெறுகின்ற மார்க்கம் இது. அறிந்தவர்கள், புரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வை அள்ளித்தருகின்ற வாய்ப்பு பொருள் என்று சொல்லப்பட்ட தாய் கொடுப்பாள்.
    
     பொருள் என்று சொல்லப்பட்ட தாயை புரிந்து கொண்டவர்கள், இதை வளர்த்துக் கொள்வார்கள். ஜென்மத்தை வகுத்துக் கொள்வார்கள். இதற்கு ஆசானுடைய ஆசி இருக்க வேண்டும். இதற்கு பொருள் வேண்டும். அந்த பொருளை கொண்டு அருளை வளர்க்க வேண்டும். அருளை வளர்த்தால் அறியாமை தீரும், ஆற்றல் உண்டாகும், நன்மை உண்டாகும், மரணமில்லாப் பெருவாழ்வை உண்டாக்கும் என்றான். இப்படி அள்ளி அள்ளி கொட்டியிருக்கிறார்கள் ஞானிகள். அதை அன்பர்கள் நாட்டு மக்கள் மத்தியிலே ஞானிகளைப் பற்றி பேச வேண்டும், அருளை வளர்க்க வேண்டும். எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் செய்ய வேண்டும். அகத்தீசனை பூஜை செய்யுங்கள்! ஆசி பெறுங்கள்!!
     அவன் தேவையில்லாததை எழுதியிருப்பான். அவன் இஷ்டத்திற்கு எழுதிவிட்டுப் போகிறான். நாம் சுட்டிக்காட்டுவதெல்லாம் எமனை பலகாரமாக்கி வெடுக்கென்று விழுங்கியவனை அறிமுகப்படுத்துகிறோம். எந்த திசையில் பார்த்தாலும் அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெறுங்கள். அகத்தீசனை பூஜை செய்து வறுமையில்லா வாழ்வு பெறுங்கள். அகத்தீசானை பூஜை செய்து மரணமில்லாப் பெருவாழ்வை பெற வேண்டும். எங்கு பார்த்தாலும் வண்ண மயமான போஸ்டர்கள். சின்னதாக போடணும் இரண்டே வரி, ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் வாழ்க! அகத்தீசன் பெரியோன்! பெரியோர்கள் நாமத்தை சொல்ல வேண்டும். எங்கு பார்த்தாலும் விளம்பரம் செய்ய வேண்டும். தேவையில்லாத விளம்பரமா செய்து கொண்டிருக்கிறோம்? காலபோக்கில் அதெல்லாம் மாற்றம் அடையும். அது எங்களுக்குத் தெரியும். அதைப் பற்றி நாங்கள் சொல்லிக்  கூடாது. இது ஒன்றுதான் நிற்கும்! உலகத்தில் இது ஒன்றுதான் நிற்கும்! தலைவன் யார் என்று அறிமுகப்படுத்துகிறோம். மற்றதெல்லாம் அடிபட்டுப்போகும். இது ஒன்றுதான் நிற்கும். இதுதான் ஜீவதயவு. இது எங்களுக்குத் தெரியும். இதைப்பற்றி நாங்கள் இப்போது சொல்லக்கூடாது. மற்றவரெல்லாம்,
     செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
     முத்திதான் இல்லையடி குதம்பாய்
       முத்திதான் இல்லையடி.
     நாங்கள் செத்துப் பிறக்கின்றவனை அறிமுகப்படுத்தவில்லை. எவரொருவர் ஆசான் அகத்தீசன் நாமத்தை சொன்னாலும், எமனே நடுங்குவான். அப்பேர்பட்ட தலைவனை அறிமுகப்படுத்துகிறோம். ஆசான் அகத்தீசனின் ஆசி பெறுங்கள் என்று சொல்கிறோம். செத்துப்போனவனை அறிமுகப்படுத்தவில்லை. இதெல்லாம் வருங்காலத்தில் மக்கள் மத்தியில் பரவும்.
     ஆகவே, ஆன்மிகம் எது? ஜீவகாருண்யமே ஆன்மிகம் என்றான். ஜீவகாருண்யம் எது? ஜீவதயவு. காருண்யம் என்றால் கருணை. ஜீவதயவு அல்லது ஜீவகாருண்யம்.
      ஜீவதயவு என்பது சின்ன விசயமல்ல! அவன் பொருளாதாரத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இயற்கையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இந்த உலகின் நிலையிலாமை. இந்த உலகம் நிலையில்லாதது என்று அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஜீவதயவை போற்றுவான்.
                அன்றுஅறிவாம்  என்னாது அறஞ்செய்க மற்று அது
                பொன்றும்கால் பொன்றாத் துணை.
                                                – திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 36
                அப்படி போடுவான் ஒரு குண்டை! அன்றுஅறிவாம் என்னாது – பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணாதே.
        நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
      பெருமை உடைத்துஇவ் வுலகு.
                                                – திருக்குறள் – நிலையாமை – குறள் எண்  36
                என்று மற்றொரு இடத்தில் சொல்வார் ஆசான் திருவள்ளுவர்.
                அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
                அற்குப ஆங்கே செயல்.
                                                – திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 333
                நிலையில்லாத செல்வத்தைப் பெற்றவர்கள் நிலையான காரியத்தை செய்து கொள்ள வேண்டும். இங்கே பொருளாதாரத்தைப் பற்றி பேசுவார் ஆசான் திருவள்ளுவர்.
        கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
      போக்கும் அதுவிளிந் தற்று.
                                                திருக்குறள் – நிலையாமை – குறள் எண்  332
       
                நாடகம் நடத்துகின்ற இடத்தில், கூத்தாடுகின்ற இடத்தில் கூடுவது போல் கூட்டம். கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே – கூத்தாடுகின்ற இடம். நாடகம் ஆடுகின்ற இடத்தில் மக்கள் சேர்வது போல், பெருஞ்செல்வம் போக்கும் அது விழிந்தற்று என்றார். சிறியது என சொல்லவில்லை. நீ செல்வத்தை மதிக்காதே. அது நாடகம் ஆடுகின்ற இடத்தில் கூட்டம் கூடுவது போலும், பிறகு நாடகம் முடிந்தவுடன் போய்விடுவது போலும், புண்ணியம் இருக்கும் மட்டும் இருக்கும். பிறகு அது போய்க்கொண்டே இருக்கும். அதற்கு என்ன சொல்கிறான், “பொருள், செல்வம் இருக்கிறது என்று நினைக்காதே! அது நாடகம் ஆடுகின்ற இடத்தில் கூட்டம் கூடுவது போல், முடிந்ததும் போய் விடும். அது இருக்காது என்று அர்த்தம். எந்த அளவிற்கு புண்ணியம் இருக்கிறதோ, அந்த அளவிற்குத்தான் அது இருக்கும், போய்க்கொண்டே இருக்கும் என்று அர்த்தம்.
      மறுபடியும் சொல்வான் நல்லமனதோடு,
      அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
      அற்குப ஆங்கே செயல்.
                                                – திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 333
                நிலையில்லாத செல்வம் இது. நீ ஒன்றும் நிலையென்று நினைத்து விடாதே. எத்தனை பேருக்குத் தெரியும்? நீ இப்போது போட்டிருக்கும் மோதிரம் ராஜராஜனின் முடியில் இருந்த தங்கம் தெரியுமா? ராஜராஜனின் முடியில் இருந்த தங்கம் எப்படி வந்தது? அது மாங்கல்யமாக மாறியது. பிறகு வளையலாக மாறி, அட்டியலாக மாறி இப்போது மோதிரமாக இருக்கிறது. இது எங்கே போகும் என்றான். உனக்கே தெரியாது. வடநாட்டில் போய் ஒரு பெண்ணின் கையில் வளையலாக மாறும். அது திரும்பவும் தென்னாட்டுக்கு வந்து சின்ன பிள்ளைக்கு சங்கிலியாக மாறும் என்றான். இந்த சங்கம் மாறிக்கொண்டே இருக்கும். ராஜராஜன் முடியில் இருந்த அந்த தங்கம், நம் கையில் இருக்கும். நாளைக்கு விற்றோமேன்றால், வடநாட்டுக்காரன் வருவான், வாங்குவான், வளையாலாக செய்து கொள்வான். அது மறுபடியும் வெளிநாட்டுக்குப் போகும். அது அழியவே அழியாது.
     ஆக இது நிலையில்லாதது. ஓரிடத்தில் இருக்காது, அப்படி இருந்தால், முடியிலேயே இருக்க வேண்டும். அது வேறு எங்கோ போய்விட்டு திரும்ப வந்திருக்கிறது. இப்போது நாம் விற்கும் மோதிரம் அது மாறி எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. ஆக நிலையில்லாதது என்றான்.
     அற்கா இயல்பிற்றுச் செல்வம் – நிலையில்லாதது. அல்கா என்பது அற்கா என்று உள்ளது. அல்கா இயல்பிற்று என்றால் நிலையற்றது என்று அர்த்தம். செல்வத்தை பெற்றால், அதைக் கொண்டு நல்ல காரியத்தை செய்து கொள் என்று அர்த்தம். நிலையில்லாதது என்று சுட்டிக் காட்டுவார்கள். அதுதான் சொன்னார், 
      அன்றுஅறிவாம்  என்னாது அறஞ்செய்க மற்று அது
                பொன்றும்கால் பொன்றாத் துணை.
                                                – திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 36
     பிறகு பார்க்கலாம் என்று நினைப்பதற்கு வாய்ப்பில்லை. நாலை இருப்போமா, இல்லையா என்று தெரியாது. நல்லதே செய்வோம். அன்றறிவாம் – பிறகு பார்த்துக் கொள்வோம் என்பது தப்பு. இப்போது இளமையாக இருக்கிறோம். மனைவி மக்களுக்கு சொத்தை சேர்த்துக் கொள்வோம். பிள்ளைகளுக்கு கல்விக்கும் திருமணத்திற்கும் சேர்த்துக் கொள்வோம். பிறகு மிச்சமிருந்தால் ஏழைகளுக்குப் போடுவோம் என்றான். நினைக்கவே நினைக்காதே! வாழ்க்கையைப் பற்றி உனக்குத் தெரியாது. நீ நினைக்கிறாய், நாம் இன்னும் முப்பது, நாற்பது வருடத்திற்கு இருப்போம். பிள்ளைகளுக்கு பட்டப்படிப்பு, திருமணம் என்றெல்லாம் சிந்திப்பாய். அதற்கு முன்னே உனக்கு நிலையான காரியத்தைச் செய். அதுவும், இங்கே சொல்லும் போது நிலையில்லாத பொருளைப்பெற்றால், நிலையான காரியத்தை செய்துகொள் என்பார். அங்கே சொல்லும்போது அன்றறிவாம் – பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே என்பார்.
       அன்றுஅறிவாம்  என்னாது அறஞ்செய்க மற்று அது
                பொன்றும்கால் பொன்றாத் துணை.
                                                – திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் 36
செய்! மற்று அது பொன்றும்கால் பொன்றாத் துணை என்றார். ஏன் என்றான். உனக்குத் தெரியாது. உன் யோக்கியதை எங்களுக்குத் தெரியும். உனக்கு முதுமை வரத்தான் போகிறது. முதுமை வருவதைப் பற்றி இங்கே கவலையில்லை. கை, கால் உடையாமல் பரத்துக் கொள்ளடா. வாகனத்தில் போகும்போது கைகால் உடைந்தால் என்ன செய்வாய்? வாகனத்தில் போய்விட்டு திரும்பி நல்லபடி வர வேண்டுமல்லவா? அப்படி இருக்கும்போது நீ நிறைய கற்பனை செய்கிறாய்.
     நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
      மேற்சென்று செய்யப் படும்.
                                                திருக்குறள் – அறன் வலியுறுத்தல் – குறள் எண் – 36
        நல்ல காரியத்தை செய்து கொள். நாவடங்கி, பேச்சு அடங்குவதற்கு முன் செய்து கொள் என்றான். பிறகு என்று நினைக்காதே. ஏன் இப்படி சொல்கிறீர்? என்றால், உனக்கு ஒரு தூண்டுதலுக்காக சொல்கிறேன். உனக்கு நாளடைவில் நலிவு வரத்தான் போகிறது, முதுமை வரத்தான் போகிறது, சாவு வரத்தான் போகிறது, கை கால் உடையத்தான் போகிறது. ஆக எப்படியோ நலிவு வருகிறது உனக்கு. வருவதற்குள் என்ன செய்யணும்?
    
         பொன்றும்கால் பொன்றாத் துணை – நீ செய்த புண்ணியம் உனக்குத் துணையாக இருக்கும் என்றான். பிறகு என்று நினைக்காதே. இருக்கும்போது செய்துகொள் என்றான். எப்ப வரும்? என்றான்.
      நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
      வாள்அது உணர்வார் பெறின்.
                                                திருக்குறள் – நிலையாமை – குறள் எண் – 334
               
               
            நாள்என ஒன்றுபோல் காட்டிவாரம், மாதமாக காட்டாது. ஒவ்வொன்றாக காட்டும். ஒவ்வொரு நாளாக காட்டும். அது உணர்வார்ப் பெறின் – பெருமைக்குரிய அறிவு, சிறப்பறிவு என்று அர்த்தம்.
     நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாள்அது உணர்வார் பெறின் – அவன் நன்கு பயன்படுத்திக் கொள்வான். அறிந்தவர்களுடைய உபதேசம் பெற்றிருந்தால் தெரியும். உபதேசம் பெற்றவர்களுக்கு அந்த ரகசியம் தெரியும். நாள்என ஒன்றுபோல் காட்டி – உயிரை அறுக்கக்கூடிய வாள் என்றான். நாள் அல்ல அது வாள். யாருக்கு? அதை அறிந்தவர்களுக்கு. அப்போது உடம்பு நலிவதற்கு முன்னே, நோய் வருவதற்கு முன்னே, நமக்கு கட்டுப்பாடு வருவதற்கு முன்னே, தடுத்து நிறுத்துவதற்கு வந்து விடுவான். பிள்ளைகள் வருவார்கள், “என்னய்யா பெரிய தர்மபிரபுவா நீ?” என்பான். இவன் அறிந்ததை சொல்வான். அவன் “பிள்ளைகளுக்கு கல்வி, பெற்று பிறகு தர்மம் செய்ய வேண்டும்” என்று சொல்வான். ஆரம்பித்தவுடன் சொல்வான், “என்ன பெரிய தர்ம பிரபுவா? நாங்களெல்லாம் எங்கே இருப்பது?” என்பான். கையை பிடித்துக் கொள்வான், செயல்பட விடாமல் தடுத்து விடுவான். 
     ஆக அதற்குள் சொன்னான், முதுமை வரத்தான் போகிறது, நோய் வரத்தான் போகிறது, பிரச்சனை வரத்தான் போகிறது, நீ முன்னே தப்பித்துக் கொள். அப்படி நலிவு வரும்போது நீ செய்த தர்மம் துணையாக இருக்கும் என்பான், அறிவுரை சொல்வான். இது உபதேசம்! ஆசான் வள்ளுவப்பெருமான் சொன்னது உபதேசம்.
     அன்றுஅறிவாம்  என்னாது அறஞ்செய்க மற்று அது பொன்றும்கால் பொன்றாத் துணை – ஏன் என்றான். பொன்றுதல் – குன்றுதல், நலிதல், மெலிதல்,நோய்வாய்ப்படுதல். ஆக அப்போது நீ நலியலாம். நீ செய்த தர்மம் என்றும் இளமையாக இருக்கும். உனக்கு நோய் வரத்தான் போகிறது, பிரச்சனை வரும், உண்மை அதுதான். முதுமையே நோய்தான். வருவதற்கு முன் கடைசி காலத்தில் இது துணையாக இருக்கும் என்றான். ஆக, வாய்ப்பிருக்கிறபோது பயன்படுத்திக் கொள் என்றான் ஆசான் வள்ளுவப்பெருமான். ஆசான் வள்ளுவப்பெருமான் அகத்தீசருடைய சீடன். ஞானிகள் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் சொன்ன கருத்துக்கள் என்ன? இப்ப பேசுவது உபதேசமா? தேசம் – உபதேசம். மற்றும் நிலை உயர்தலுக்கான மார்க்கம். எப்படி நிலை உயரலாம்? இது எவ்வளவு நேரம் நிற்கும்? இந்த கருத்துக்கள் எத்தனை மணி நேரம் நிற்கும்? ஒரு மணி நேரம் நிற்கும் அல்லது நாம் காண்கின்ற காட்சியின் காரணமாகப் போய்விடும். இப்ப டி.வி. பார்ப்போம். சில காட்சிகள். இந்த கருத்துக்கள் ஒரு அளவிற்கு பசுமரத்தாணி போல இதயத்தில் பதிந்திருக்கும். அந்த கருத்துக்கள் எத்தனை மணி நேரம் நிற்கும்? புண்ணியம் மிகுந்திருந்தால் அது விடியும் வரை இருக்கும் அல்லது மூன்று நாளைக்கு இருக்கும் அல்லது உடனேயே போய்விடும்.
     அப்ப என்ன செய்கிறான்? இது ஞானசித்தர்காலம். ஞானசித்தர்காலம் வருவதற்கு அடிப்படை காரணம் விஞ்ஞானம் என்றான். இப்ப சொல்லப்பட்ட கருத்துக்களைப் பற்றி என்றைக்கும் பேசிக்கொண்டு இருப்போம். விஞ்ஞானிகள்தான் மெய்ஞானிகளுக்குத் துணை செய்யப்போகிறான். இப்போது கருத்துக்கள் பரவுகிறது. இந்த கருத்துக்கள் நாட்டு மக்களுக்கும் போகிறது. ஒரு அளவிற்கு தொகுத்துதான் அனுப்பியிருக்கிறோம்.ஆக விஞ்ஞானிகள் துணையால் மெய்ஞானம் வளரும்.
     அப்ப நாட்டிற்கு மெய்ஞானம், விஞ்ஞானம் இரண்டும் இரண்டு கண்கள். அதிகமாக இந்த கலாத்தில் ஞானியர்கள் உருவாவதற்கு காரணமே விஞ்ஞானம்தான். இந்த டேப் ரெக்கார்டர் பதிவு செய்து விஞ்ஞானத்தைச் சேர்ந்தது. இந்த நுட்பம் இல்லையென்றால் இப்போது பேசிக்கொண்டிருப்பது இத்தோடு போய்விடும். இது நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கூட கேட்க வாய்ப்பிருக்கிறது. அக மெய்ஞானம் பெறுவதற்காக ஞானசித்தர் காலத்திற்குத் துணையாக இருப்பது விஞ்ஞானிகள். எந்த காலத்திற்கும் இது பயன்படக் கூடியது. உலக மக்களுக்கு இந்த விஞ்ஞானம் ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. மெய்ஞானம் பரவுவதற்கு விஞ்ஞானம் பதியவைத்துக்கொள்வதற்கு ஆசான் ஆசி இருக்க வேண்டும். நாமஜெபம் செய்தால்தான் அது மனதில் பதியும். இல்லையென்றால் காலப்போக்கில் போய்விடும். ஆகவே,
     நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
      வாள்அது உணர்வார் பெறின்.
                                                திருக்குறள் – நிலையாமை – குறள் எண் – 334
     உயிர் ஈரும் என்று சொன்னார். அது நிலையாமையை அறிந்து கொள்வதற்கும், இருக்கும்போதே நல்ல காரியம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பொருள் எல்லாம் கூத்தாட்டு அவக குழாத்தற்றே என்றும் சொன்னது போல் எந்த அளவிற்கு நாம் புண்ணியம் செய்திருக்கிறோமோ, அந்த அளவிற்கு அது ஆன்மாவிற்கு துணையாக இருக்கும் என்றார். இதெல்லாம் வள்ளுவப்பெருமான் கூற்று. ஆசான் பட்டினத்தாரும் அப்படித்தான் சொல்வார்,
     மனையாளும் மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயில்மட்டே
      இனமான சுற்றம் மயான மட்டேவழிக் கேதுதுணை
      தினையாம் அளவெள் ளளவா கினுமுன்பு செய்ததவந்
      தனையாள என்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே.
                                    மகான் பட்டினத்தார் பாடல் – பொது – கவி எண் – 12
                வழிக்கேது துணை? என்று கேட்பார்.
    
     தினையாம் அளவெள் ளளவா கினுமுன்பு செய்ததவந் தனையாள என்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே – என்று அந்த இடத்தில் சொல்வார். அவன் செய்த தவம் தான் வரும். அப்படி ஒரு வார்த்தை. இதையெல்லாம் ஞானிகள் தொகுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆக எந்த கருத்தும் மனதில் பதிய வேண்டும் என்று சொன்னால், ஒன்றே ஒன்று காலை ஐந்து நிமிடம், மாலை ஐந்து நிமிடம் நாமஜெபம் செய்து ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆசானைக் கேட்க வேண்டும். பூஜை செய்வது பெரிதல்ல. பூஜை செய்து விட்டு எதையோ கேட்டுக்கொண்டிருப்பான். பூஜை செய்வான். முன்னமே பல லட்சம் இருக்கும். செல்வநிலை பெருக வேண்டுமென்று கேட்பான். ஏனய்யா, இருக்கும் செல்வமே இன்னும் மூன்று தலைமுறைக்கு வருமே! பார்! அப்போதும் செல்வத்தைக் கேட்கிறான். இவனை யாரிடம் அனுப்புவது என்றான். ஏதாவது மூதேவி இருப்பாள். அவனிடம் அனுப்பு என்றான். ஏனய்யா, உன் நாமத்தை சொல்கிறான். ஏன் இப்படி? என்றால், அவனுக்கு வாழ்க்கையே தெரியவில்லை. நாமத்தை சொல்லச் சொன்னாய் அல்லவா? வாழ்க்கை நிலையை அறிந்தானா அவன்? சொன்னால் எங்கே கேட்கிறான் அவன்? இன்னும் அவன் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். எதைக் கேட்கிறான் அவன்? ஆசான் திருவள்ளுவன் சொன்னதுபோல்,
      வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
      வேண்டாமை வேண்ட வரும்.
                                    – திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 362
        நீ விரும்பினால், பூஜை செய்தால் என்ன கேட்க வேண்டும். “அப்பா! இல்லறமும் வேண்டும், வறுமை இல்லா வாழ்வும் வேண்டும். அதே சமயத்தில் நான் மரணமில்லாப் பெருவாழ்வு, மோட்ச லாபத்தை அடைய வேண்டும் என்று கேட்க வேண்டும் இதைத்தான் கேட்கணும். இன்னும் பார்! அவன் இஷ்டத்துக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறான். மூதேவியிடம் சொன்னான், நீ போ என்றான். உன் நாமத்தைச் சொல்லி கேட்கும்போது வறுமை இல்லாத வாழ்வு அமைய வேண்டும், உடல் நலம் வேண்டும். உன் திருவடியைப் பற்ற வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்கணும். நாமத்தை சொல்வது மீண்டும் மீண்டும் நரகத்திற்குப் போவதற்கல்ல. நிலையான உன் திருவடிகளைப் பற்றுகின்ற சிறப்பறிவுதான் வேண்டும். அதை மட்டும் கொடுத்தால் போதும். நான் கரையேறிக்கொள்வேன் என்றான். நான் கரையேறுவதற்குக் காரணம், உன்னை நான் புரிந்து கொள்ள வேண்டும், என்னை நீ புரிந்து கொள்ள வேண்டும். என்னை நீ புரிந்து கொண்டாய். ஆனால் உன்னை நான் புரிந்து கொள்ள வேண்டும். எதைக் கேட்க வேண்டும் என்று தெரியாது. தேவையில்லாததை கேட்டுக் கொண்டிருப்பான். அரிசியைக் கேட்காமல் தவிடு கேட்டுக் கொண்டிருப்பான். அட, தவிடாவது மாட்டிற்குப் பயன்படும். வைக்கோல் என்றால் அதுவும் மாட்டுக்குப் பயன்படும். இவன் இதைவிட தேவையில்லாததை கேட்டுக் கொண்டிருப்பான். 
     ஆக ஞானிகள் நாமத்தை சொல்ல வைத்து, சொல்ல வைத்து மக்களை தெளிவடைய வைக்க வேண்டும். மக்கள் மத்தியில் இந்த வழிபாடு பற்றி சொல்ல வேண்டும். இந்த வழிபாடு மக்கள் மத்தியில் பரவினால் நாடு உய்யும், நல்லவர்கள் தோன்றுவார்கள். ஏனென்றால் இந்த காலத்தை “சீரியதோர் நாகம் போல் மாந்தர்” என்றார். அன்புணர்ச்சியே இருக்காது. விருந்தை உபசரிக்க மாட்டான். அவனுக்கே சோறு இருக்காது.
     காலையில் எழுந்தவுடன் “தண்ணீர் இருக்கா?” என்று மனைவியிடம் கேட்பான். பைப்பில் தண்ணீர் வரவில்லை என்பாள். சரி, அதுதான் போகட்டும். பல் துலக்க வேண்டுமே? தண்ணீர் இருக்கா என்று பார் என்பான். நேற்று இருந்தது, அதில் பாச்சை விழுந்து விட்டது என்பாள். சரி, அதுவும் இல்லையா, அந்த பாச்சையை தூக்கி எரிந்து விட்டு ஒரு ஜக்கு தண்ணீர் எடுத்து வா என்றான்.
     சரி, பற்பசை இருக்கா என்று கேட்டான். நேற்றே பிள்ளைகள் அதை நசுக்கி எல்லாவற்றையும் வெளியே எடுத்து விட்டது என்பார். வெறும் டப்பா மாத்திரம் இருக்கு என்பாள், திறந்து வைத்து விட்டான், நன்றாக நசுக்கி எடுத்து விட்டது. பத்து ரூபாய் போய்விட்டது. சரி பிரஷாவது இருக்கா? வெறுமனேயாவது தேய்க்கிறேன் என்பான். பிரஷை எலி தூக்கிக் கொண்டு போச்சு என்பாள். அதற்கப்புறம் டீ சாப்பிடலாம் என்பான். பால் வரவில்லை என்பாள். சரி, பக்கத்து கடையில் போய் டீ வாங்கி வா என்பான். பாதி தண்ணீர் மீதி பால் ஊற்றி தந்தான். அதை வாங்கி வந்தால், இங்கே சர்க்கரை வேண்டுமே? சரி, எதிர் கடையை பார் என்றான். இன்று பந்த். கடை இல்லை என்றாள். கடை மூடிவிட்டாங்க என்றாள். இப்படித்தான் வாழ்க்கை! இல்லை! இல்லை! இல்லை!
     ஆசான் ஆசி இருந்தால்? தயாராக காத்துக் கொண்டிருக்கும். என்னடா இல்லை? என்ன உனக்கு வேண்டும்? என்றான். என்னப்பா வேண்டும் என்று ஆசான் கவனித்துக் கொண்டே இருப்பான்.
     காலையில் என்ன வேண்டும்? தண்ணீர். முதல் நாளே தண்ணீர் வந்து நிற்கும். குடம் நிறைய தண்ணீர் இருக்கும். காலை உணவு பக்குவமாக சுத்தமாக இருக்கும். அள்ளி வைத்துக் கொண்டே இருப்பாள். ஆசானை வாங்குகினான். எனக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது. எனக்குக் காலையில் தண்ணீர் வேண்டுமய்யா! வாங்கிக் கொள்! சுத்தமான தண்ணீர். வீட்டில் போர் போட்டு ஏற்பாடு செய்கிறேன்.
     காலை ஐந்து மணிக்கே பால் கறந்து உனக்கு வீட்டில் நிற்கச் சொல்கிறேன், தேவையான பசும்பால், தண்ணீர். தேவையான சர்க்கரை இருக்கிறது. காப்பித்தூள் இருக்கிறது. எல்லாமே அமைப்பு. கலையில் எழுந்தவுடன் தண்ணீர் போட்டிருக்கிறேன் என்பாள் மனைவி. ஸ்டவ் இருக்கு எல்லாம் இருக்கு. தேவையனாது எல்லாம் இருக்கிறது. கலையில் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
     இருக்கு! இருக்கு! காலையில் தண்ணீர் இருக்கிறது. டீ இருக்கிறது, பாத்திரத்தில் எல்லாம் இருக்கிறது, பற்பசை இருக்கு! பிரஷ் இருக்கு! இருக்கு! இருக்கு! என்றாள். சரி, வண்டியில்? டீசல் இருக்கு. இல்லையென்ற பேச்சே இல்லை. மனைவியிடம் சொல்லி கொண்டு போகிறான். வேலைக்கு போகிறான், நன்றாக சம்பாதிக்கிறான், வருகிறான். இல்லையென்ற பேச்சுக்கே இடமில்லை என்றான். அவன் தான் சொன்னான்,
      வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
      ஈண்டு முயலப் படும்.
                                        – திருக்குறள் – தவம் – குறள் எண் 265
                குவித்து விடுவான் கொண்டு வந்து. ஆகவே, நம் மக்களுக்காவது இல்லை என்ற பேச்சே வேண்டாமையா! எல்லாம் இருக்கு. இருக்கு என்று பேச வேண்டும்.
     புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
      அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
      எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
      நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே .
                                    – மகான் திருமூலர் – சிவபூசை – கவி எண் – 1828
        புண்ணியம் செய்தால் பொருளாதாரம் தானே வரும். பூஜை செய்தால் எல்லாம் தானே வரும்.
        இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
      சிலர்பலர் நோலா தவர்.
                                    திருக்குறள் – தவம் – குறள் எண் – 270
                வறுமை மிகுதியாக இருப்பதற்கு என்ன காரணம்? யாருமே தலைவனை புரிந்து பூஜை செய்யாததனாலே வறுமைக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்றான். ஒன்றை அறிகின்ற அறிவின்மையை இன்மை என்றான். அறியாமல் இருப்பதே பெரிய வறுமை என்றான். ஆகவே, சிறப்பறிவு, எதையும் ஆழ்ந்து சிந்திக்கின்ற சிறப்பறிவு. பரிபக்குவம், உடல் ஆரோக்கியம், பண்புள்ள மனைவி, பண்புள்ள புத்திர பாக்கியம், நல்ல சுற்றுப்புற சூழ்நிலை, நல்ல சொந்த வீடு, உறங்குவதற்கு நல்ல இடம், நல்ல உணவு, சுவையான உணவு, உறங்குவதற்கு தகுதியான இடம், நல்ல கட்டிடங்கள். எல்லா சுற்றுப்புற சூழ்நிலைகள் அமைய வேண்டும் என்றால் ஆசான் நாமத்தை தினம் சொல்லிக்கொண்டு வந்தால் வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். ஆன்ம லாபத்திற்கும் துணையாக இருக்கும் என்று சொல்லி முடிக்கிறேன். வணக்கம்.

ஓம் அகத்தீசாய நம 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0174865
Visit Today : 5
Total Visit : 174865

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories