22.03.2001 அன்று போற்றி திருஅகவலுக்கு மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை


அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம்,
     அன்பர்கள் ஒவ்வொரு வாரமும் மகான்கள் மாணிக்கவாசகர், திருமூலர், இராமலிங்கசுவாமிகள், திருஞானசம்பந்தர், ஔவையார் போன்ற  பெரியோர்கள் பாடிய பாடல்களையெல்லாம் பாராயணம் செய்தார்கள். நாமும் கேட்டு வருகின்றோம். நமது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஞானிகளை பூஜை செய்கின்ற சங்கமாகும். எந்த காரியத்தை எடுத்தாலும் ஞானிகளை வணங்கித்தான் செய்வோம்.
     இலவசமாக 108 திருமணங்கள் என்று அறிவித்தோம். 108 திருமணங்கள் தடையின்றி நடக்க வேண்டுமென்று ஆசானைக் கேட்டோம். ஆசான் அருள் செய்தார்.
     பிறகு ஒரு தைரியம் ஞானிகள் ஆசி இருக்கிறது 1008 திருமணம் என்று சொன்னோம். ஆனால் 1183 திருமணங்களை நடத்தி முடித்தோம். இதற்கெல்லாம் ஆசான் அருள் செய்தார்.
     தினமும் அன்னதானம் செய்ய வேண்டுமென்று ஆசானிடம் கேட்டோம். 1.02.1998 அன்று முதல் தொடங்கி இன்று வரை 10,000, 15,000, 20,000 பேர்களுக்கு நித்திய அன்னதானம் செய்து வருகிறோம். ஆக அன்னதானம் செய்வதற்கு நாம் ஞானிகளிடம் கேட்டால்தான் அருள் செய்வார்கள்.
     எந்த காரியமும் செய்வதற்கு முன்னே ஞானிகளிடம் ஆசி கேட்க வேண்டும். இந்த காரியம் செய்கின்றோம். அதை செம்மையாக நடத்தித் தர வேண்டும் என்று நாங்கள் ஞானிகளிடம் கேட்கிறோம். அவர்கள் எதையும் செய்வார்கள். ஞானிகள் பெண்ணை ஆணாக்குவார், ஆணை பெண்ணாக்குவார்.
எழுகடலையும் குடித்து ஏப்பமிடுவோம்
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்.   -என்றார்.
     சூரியனை சந்திரனாக்குவோம், சந்திரனை சூரியனாக்குவோம். ஆக இப்படிப்பட்ட வல்லமை ஞானிகளுக்கு உண்டு. இத்தகைய வல்லமை உண்டு. இப்படிப்பட்ட வல்லமைகள் உள்ள ஆசான்களையும், ஞானிகளையும் கேட்டுத்தான் செய்ய வேண்டும். அதனால்தான் நமது சங்கம் எந்த காரியத்தையும் தொடர்ந்து செய்ய முடிகிறது. துறையூர் நகரத்திற்கு எட்டாண்டுகளாக தண்ணீர் கொடுக்கின்றோம். துறையூர் பெருமாள்மலை அடிவாரத்திலும், இங்கும் சாப்பாடு கொடுக்கின்றோம். தொடர்ந்து நடக்கிறது. ஒருநாள் இரண்டு நாள் அல்ல. தொடர்ந்து நடப்பதற்கு காரணம் தினமும் பூஜையில் கேட்கிறோம். இந்த காரியம் தடையில்லாமல் நடக்கவேண்டும்.
     இன்றைய அன்னதானத்தில் ஏழை எளிய மக்கள் பசியாறவேண்டும். அதே சமயத்தில் ஆன்மீகவாதிகளும் இந்த உணவை சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறவேண்டும் என்று கேட்கிறோம். கேட்டுக்கேட்டுத்தான் பெற்றிருக்கின்றோம். நாங்களாக செய்யவில்லை.
     இந்தக்கட்டிடம் கட்டுவதற்கு முன் எங்கள் கையில் காசு இல்லை. கட்டிடத்தை ஆரம்பித்தோம். அதற்கு முன்பே ஆசானிடத்து விழுந்து வணங்கி இந்தக்கட்டிடத்தை ஆரம்பிக்கிறோம். அந்தக்கட்டிடம் தடையில்லாமல் நடைபெற அசிவேண்டும் என்று கேட்டோம். அதே நேரத்தில் இலவச திருமணமும் ஆரம்பித்திருக்கின்றோம், கட்டிடமும் கட்ட ஆரம்பித்திருக்கின்றோம், அன்னதானமும் செய்ய வேண்டுமென்று கேட்டோம், ஞானிகள் அருள் செய்கின்றார்கள்.
     ஆக இந்த சங்கம் கடவுளை, தலைவனை, ஞானிகளை, குருநாதரை நம்பித்தான் செய்யும். கடவுளின் ஆசிபெற்றுத்தான் எந்த காரியத்தையும் செய்ய வேண்டும் என்கின்ற சிந்தனை, நல்வினையால்தான் வந்தது.
     முன் செய்த நல்வினையின் காரணமாக அந்த வாய்ப்பு வந்தது. ஒருசிலர் முன் செய்த நல்வினை சிறிது இருக்கும், அதன் துணைகொண்டு வீடு கட்ட ஆரம்பிப்பார்கள், பலவகையான திட்டம் போடுவார்கள். அந்த வீடு கட்டமுடியாமல் போகும். ஒரு திருமணத்திற்கு ஆரம்பிப்பார்கள், திருமணம் தடைப்பட்டுபோகும். ஆக எடுத்துக்கொண்ட காரியம் தடைபடும் வரையில் அவர்கள் கற்பனை ஓயாது.
இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். தோல்வி வந்தபின் துவண்டு போவார்கள். சோர்வடைவார்கள், பிறகு அதற்கு பரிகாரம் தேடுவார்கள். தோல்வியே இல்லாது இருக்கவேண்டும். வாழ்க்கையில் எடுத்துக்கொண்ட இலட்சியங்கள் தடையில்லாமல் நடக்கவேண்டும் என்றால் தலைவன் ஆசி இருக்க வேண்டுமென்று நினைக்கமாட்டார்கள். அதனால்தான் சிலபேர் தோல்வி அடைகிறார்கள். 
     சிலபேர் மினிபஸ் வாங்குவார்கள், சிலபேர் கார் வாங்குவார்கள், சிலபேர் லாரி வாங்குவார்கள் . இவையெல்லாம் வைத்து நல்லபடி இருக்கலாம் என்று கற்பனையில் இருப்பார்கள்.
     ஆனால் எதையுமே அவர்களால் நடத்தமுடியவில்லை, தோல்வி. வியாபாரம் செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள், தோல்வி. உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள், தோல்வி. வெளிநாட்டிற்கு போகவேண்டும் என்று நினைப்பார்கள். வெளிநாட்டிற்கு போகவேண்டும் என்று நினைத்து இரண்டு லட்சம், மூன்று லட்சம் கொடுப்பார்கள், தோல்வி.
                ஆனால் எதற்குமே தோல்வி ஏற்படாமல் இருக்கவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? திருவருள் துணை வேண்டும். திருவருள் துணை இல்லாமல் முடியாது. இதுதான் இந்த சங்கத்தின் அடிப்படை கொள்கை.
     திருவருள் துணை வேண்டும். சரி! திருவருள் துணை எப்படி கிடைக்கும்? தினமும் ஞானிகளை பூஜை செய்கின்றோம், அன்னதானம், புண்ணியம் செய்யவேண்டும். ஞானிகளுடைய ஆசி பெறுவதற்கு புண்ணியமும் வேண்டும். மாதம் இருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
     தினமும் ஞானிகளை பூஜை செய்து வந்தால்தான் இது நல்லது, இது கெட்டது என்று தெரியும். இது வேண்டாம், இது நம் தகுதிக்கு மீறிய செயல் என்று தெரியும். இது நம் தகுதிக்கு மீறிய செயல், செய்யக்கூடாது என்ற நினைப்பு வரும்.
     தகுதிக்கு மீறிய செயல் செய்யும்போது, திருவருள் துணை இருந்தால் ஞானிகள் ஆசியிருந்தால் இது வேண்டாமப்பா, நல்லதல்ல என்று உணரமுடியும். இல்லையென்றால் என்ன செய்வான்? மனைவி சொல்வாள், அவங்க வீடு கட்டினார்கள், இவர்கள் வீடு கட்டினார்கள், ஏன் நாம் கட்டக்கூடாது? என்பாள். அந்த பேச்சைக் கேட்டு அவர்கள் வீடு கட்ட ஆரம்பிப்பார்கள். கடன் சுமை வந்து விடும். வட்டி கட்ட முடியாது. கடைசியில் உள்ள மூலதனத்தையும் இழந்து, ஈன கிரையத்திற்கு வீட்டை விற்பார்கள்.
     வீடு பத்து லட்சம் மதிப்பு இருந்தாலும் கடன் சுமை இருப்பதனால் வந்த விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை வரும். இப்படி நடப்பதற்கு என்ன காரணம்? முன் செய்த வினையா? இல்லை. பக்தி நெறி இல்லை. புண்ணியபலம் இல்லை. பக்தி நெறி இருந்தால் உணர்த்துவார்கள். அது இப்படி ஆகும் என்று முன்னமே தெரியும். மேலும் சிந்தனையும் உயரும். தெளிவான அறிவு இருக்கும். நல்ல சிந்தனை வரும். அதே சமயத்தில் தொடர்ந்து ஞானிகளை பூஜை செய்தால் அவர்களுக்கு உயர்ந்த எண்ணங்கள் வரும். தீவினை சேராது.
     காலையில் பத்து நிமிடம் ஞானிகளை பூஜை செய்கிறான். சித்தர்கள் போற்றித்தொகுப்பை படிக்கின்றார்கள், பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி போற்றித்தொகுப்பை படித்து எனக்கு வாழ்க்கையில் நன்மை தீமை தெரியவில்லை எங்களுக்கு உணர்த்தனும், மேலும் நம்மிடம் உள்ள குறையெல்லாம் சொல்லலாம். இப்படி சொல்லும்போது ஞானிகள் என்ன செய்வார்கள்?
     உதாரணமாக பஸ்ஸுக்கு புறப்படும்போது சரி! இந்த பஸ் விபத்துக்கு உள்ளாகும் என்பது இவர்களுக்கு தெரியாது. ஆசான் பார்க்கிறார் காலையில் இவன் நம் திருவடியை பூஜை செய்திருக்கின்றான். இவன் இந்த பஸ்ஸில் போவது நியாயமில்லை என்று எண்ணுவார்கள். அவன் போவதை தடுப்பதற்காக ஏதோ ஒரு தந்தி வரும் அல்லது அவனுடைய பையன் கீழே விழுவான் அல்லது ஏதோ ஒரு வகையில் அந்த பஸ்ஸிற்கு போவதை தடுத்துவிடுவார்கள். அப்படி கொஞ்சநேரம் தடுத்து அந்த பஸ்ஸிற்கு போகாமல் அடுத்த பஸ்ஸிற்கு போக செய்வார்கள். ஆக இப்படிப்பட்ட பாதுகாப்பெல்லாம் ஞானிகளை பூஜை செய்யும்போது கிடைக்கும்.
     “சிவனருளால் வினை சேரகிலாமை” என்று சொல்வார். தீவினையும் சூழாது. விபத்தும் நடக்காது. தொட்டது துலங்கும், மனிதனுக்கு கடைசி வரையிலும் தோல்வி இருக்கக்கூடாது. அந்த தோல்வியை தாங்க முடியாது. குடும்பத்தலைவன் தோல்வியடைந்தால் அந்த குடும்பமே ஆட்டம் கண்டுவிடும். குடும்பத்தலைவி தோல்வியடையலாம், அது ஒன்று குற்றமில்லை. அதுவும் வருவாயுள்ள பெண்ணாக இருந்தால் தோல்வியடையக்கூடாது.
     குடும்பத்தலைவனை நம்பிதான் அந்த குடும்பம் இருக்கிறது. தன்னுடைய தாய் தந்தை மாமன் மாமி பிள்ளைகள் என அந்த குடும்பமே அவனை நம்பித்தான் இருக்கும். எனவே குடும்பத்தலைவன் எந்த காரியத்தையும் நிதானித்துச் செய்யவேண்டும். ஆனால் அவனால் நிதானித்துச் செய்ய முடியாது.
     காரணம் அவனிடம் படிப்பு இருக்கிறதல்லவா? அது என்ன செய்யும் அவனை? அதுதான் நாம் கற்றிருக்கின்றோமே? கற்றிருப்பதனால் எதுவும் செய்துவிடலாம் என்று இருப்பான். அந்த கல்வி என்ற கர்வத்தால் மனதில்பட்டதை எல்லாம் செய்வான். அடே! பின் விளைவுகள் என்னாகும்? நம்மை நம்பி இருக்கும் மனைவி மக்கள் வாழ்க்கை என்னாகும்? அவர்கள் துன்பமடைவார்கள். அப்படிப்பட்ட நிலைமை வரக்கூடாது என்று உணர்த்த வேண்டும்.
     கல்வி கற்பதே ஞானிகளை புரிந்து கொள்வதற்கு, கடவுளைப் புரிந்து கொள்வதற்கும். வாழ்க்கையை செம்மையாக நடத்துவதற்கும்தான் கல்வி. திமிர் கொள்வதற்காக இல்லை.
     “கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும்” என்பார் மகான் மாணிக்கவாசகர். அறிவு தெளிவடைவதற்குத்தான் கல்வி கற்க வேண்டும். உள்ளத்தில் கற்பனைகள், தன்னை வியந்து, மிகுதியாக தன்னை மதிப்பதற்கு அல்ல. அதிலிருந்து பிழைத்து வாழ்க்கையின் தத்துவத்தை நிலை உணர்ந்து வாழ்க்கையை செம்மையாக நடத்துவதற்குத்தான் கல்வி கற்க வேண்டும். திமிர் கொள்வதற்கல்ல.
     இதை “கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும்” என்றார். அடுத்தது ஞானக்கல்வி என்ற ஒன்று உண்டு. அந்த கல்வியை கற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும், வினை சூழக்கூடாது, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்குத்தான் ஞானக்கல்வி. அந்த கல்வி யோகம் செய்வதா? இல்லை. இதை ஆசான் வள்ளுவர் சொல்வார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
    திருக்குறள் – கடவுள்வாழ்த்து – குறள் எண் 2
வாலறிவன் என்றால் தூய அறிவு வடிவானவன். தூய அறிவு வடிவாக உள்ள கடவுள் திருவடிகளை ஞானிகள் திருவடிகளை பூஜை செய்வது என்று சொல்வார். அதுதான் கல்வி என்று சொல்வார்.
ஞானிகளை பற்றி புரிந்து கொண்டவன், ஞானிகளை பூஜை செய்தாலே கல்வி கற்று விட்டான் என்று அர்த்தம். இதுதான் சாகாக் கல்வி.
இன்னொரு கல்வி உண்டு. அது சமுதாயக் கல்வி. படித்து பட்டம் பெறுகின்றான். என்ன படித்திருக்கின்றாய்? எம்.ஏ., படித்திருக்கின்றேன், பி.ஏ., படித்திருகின்றேன். பி.காம்., படித்திருக்கின்றேன் என்று பதில் சொல்வார்கள். தொழில் ரீதியாகவும் படித்திருப்பார்கள்.
     இந்த கல்வி எதற்கு? வாழ்க்கைக்கு கல்வி வேண்டும். ஏதோ ஒரு தொழில் செய்வதற்கு கல்வி வேண்டும். அந்த கல்வியின் துணை கொண்டு நம்மை நம்பி இருக்கின்ற மனைவி மக்கள் நம்மைச் சார்ந்தவர்களுக்கு பாதுகாவலனாக இருப்பதற்கும் இந்த கல்வியைப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்துவிடும்.
கற்றிருந்தால் என்ன? பணம் இருந்தால் என்ன? உடல் ஆரோக்கியம் இருக்கலாம். எல்லாம் இருக்கலாம். முன் செய்த நல்வினை இல்லையென்றால் தோல்வி வந்துவிடும்.
ஆகவே ஞானிகளின் திருவடிகளை பூஜை செய்து பழக வேண்டும். காலையில் ஒரு ஐந்து நிமிடமாவது பூஜை செய்ய வேண்டும். ஐந்து நிமிடமாவது உட்கார்ந்து ஞானிகளின் நாமத்தை சொல்லவேண்டும். ஆனால் இதற்கெல்லாம் நேரம் இல்லையென்பார்கள்.
     மாணிக்கவாசகா! அகத்தீசா! நந்தீசா! என்று ஞானிகளின் நாமங்களை சொல்ல வேண்டும். ஐந்து நிமிடம் உட்கார்ந்து பூஜை செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றமடையலாம். இதை சிந்திக்க வேண்டும். எதுவும் முன்னமே உணர்த்தப்படும். பெரியவங்க இல்லையா? பெரியவங்க உணர்த்துவார்கள்.
     ஆகவே அது போன்ற ஞானிகளை வணங்கி இல்லற வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அது உத்தியோகமாக இருந்தாலும் சரி, ஞானிகள் துணையில்லாமல் வெற்றி காண முடியாது. அடுத்து இந்த துறையைப் பற்றி தெரியுமல்லவா? ஆரம்பத்திலிருந்தே முன்செய்த நல்வினை காரணமாக ஞானிகளை பூஜை செய்து வருவான். மேலும் இந்த துறையில் வருபவர்களுக்கு படிப்பும் இருக்காது. படிக்க படிக்க என்னாகும்? அதைதான் “கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும்” என்றார்.
     ஒருவன் அதிகம் படித்துவிட்டால் அதில் என்ன சொல்லியிருக்கிறது? இதில் என்ன சொல்லியிருக்கின்றது? அதைப்பற்றி என்ன இருக்கும்? இதைப்பற்றி என்ன இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பான். கடைசியில் 45, 50, 60 வயது வரையிலும் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டே இருப்பான்.
     ஆனால் படிப்பறிவு இல்லாதவன் அகத்தீசா! நந்தீசா! திருமூலதேவா! என்று ஞானிகளின் நாமங்கங்களை சொல்லிக் கொண்டே முன்னேறுவான். இவன் ஞானிகளுடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்வான். ஆனால் படித்தவனோ ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பான்.   
     இதைத்தான் கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும் என்றார். இப்படி ஆராய்ச்சி செய்து கொண்டே காலத்தை வீணாக்குவான். ஆனால் படிக்காதவனோ அகத்தீசரை பூஜை செய்வான், கடைத்தேறுவான். அவன் முன்னேறிக் கொண்டே இருப்பான். ஆக ஆசான் இதிலெல்லாம் இருந்து தப்பித்தேன் என்பார். இதை கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும் என்றார்.
     அடுத்த வரியில் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் என்கிறார். செல்வம் வந்தால் என்ன செய்யனும்? அதை பாதுகாக்க வேண்டும். செல்வம் வந்தால் சில பேருக்கு திமிர் வந்துவிடும். அடக்கமில்லாமல் இருப்பான். பெரிய வசதி உள்ளவர்களாக இருப்பார்கள், மற்றவர்களிடம் மனம்விட்டு பேச மாட்டார்கள்.
ஆனால் சிலபேரை பார்த்தால் ஒன்றுமே தெரியாது, மிக சாதரணமாக இருப்பார்கள். அதிக ஆடம்பரம் செய்யமாட்டார்கள். அதுதான் மிக உயர்ந்த பண்பு. செல்வம் இருந்தாலும் வெளியே தெரியாது. ரொம்ப அடக்கமாக இருப்பார்கள்.
     அறியாமை உள்ளவர்களுக்கு செல்வம் சேர்ந்தால் இந்த ஊரில் என்னை விட பெரியவன் யாரு இருக்கா? என்ற திமிர் வந்துவிடும். அதன் விளைவுகள் அந்த செல்வமே அவனை நரகத்திற்குள் தள்ளிவிடும். பகையை உண்டாக்கும். ஒருத்தரும் எதிர்த்து பேசமுடியாது. அப்படி எதிர்த்து பேசினால் யாரடா அவன்? பிடிடா அவனை என்பான். உடனே ஆளை வைப்பான், அடிப்பான். எல்லா செல்வத்தையும் பிடுங்கிக் கொள்வான், இப்படி ஒரு குணக்கேடு இருக்கும்.
அதுதான் சொன்னார் செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும். அல்லல் என்றால் துன்பம். அது செல்வம் சேரும்போது நன்மைக்குத்தான் பயன்படுத்த வேண்டும். அறிவுள்ளவனுக்கு செல்வம் சேர்ந்தால் அறப்பணி செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான்.
      அறிவில்லாதவனுக்கு செல்வம் சேர்ந்தால் வீண் ஆரவாரம் செய்வான். அந்த செல்வமே அவனுக்கு பகையை உண்டாக்கும், நோயை உண்டாக்கும், அடாது செய்து நரகத்திற்குப் போவான். இதை செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும், கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் என்று சொல்வார். இப்படிப்பட்ட துன்பங்களிலிருந்து விடுபட்டேன் என்று சொல்வார் மகான் மாணிக்கவாசகர்.
ஒரு செயல் செய்வதற்கு முன்னே சிந்திக்க வேண்டும்.
கடுமுரண் ஏனமாகி முன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்தும்
    திருவாசகம் – போற்றித்திரு அகவல் – வரி எண்  6, 7
இது ஒரு கதை. பிரம்மாவையும் திருமாலையும் பற்றியது. அதை பிறகு சொல்கிறேன். பிரம்மா என்பது மண், அதிலிருந்துதான் எல்லாம் தோன்றும். திருமால் என்பது தண்ணீர். பிரம்மாவும், திருமாலும் என்பது நம் உடம்பில் இருக்கின்ற சத்துக்கள்.
பிரம்மா படைப்பு கர்த்தா. திருமால் இரட்சிப்பவர்.
திருமால் தண்ணீராக இருக்கின்றார். அவர் நம் உடம்பில் உதிரமாக, மூளை, மஜ்ஜை போன்ற திரவப்பொருளாக இருப்பார். இருவருமே இரட்சிப்பவர்கள். பிரம்மா படைப்பவர், திருமால் இரட்சிப்பவர், ருத்திரன் அழிப்பவர்.
ஆக்கள், காத்தல், அழித்தல். ஆக்கல் தொழில் பிரம்மா. காத்தல் திருமால், அழித்தல் ருத்திரன். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் நாம்தான் எல்லாம் செய்கிறோம் என்ற ஒரு எண்ணம் வந்தது. எல்லாம்வல்ல பரம்பொருள் இதைப் பார்க்கிறது. எல்லாம்வல்ல பரம்பொருள் இதைப் பார்த்து பேசாமல் இருக்கிறது.
உங்கள் இருவருக்கும் இந்த வாய்ப்பு கொடுத்ததே நான்தானே. நீங்கள் இருவரும் என்ன மோதிக்கொள்கிறீர்கள்? சரி முட்டிக் கொள்ளுங்கள் என்றார். இருவரும் நீர் பெரியவனா, நான் பெரியவனா என்கிறீர்கள். இங்கேயே சனியன் பிடிக்குது. தோல்வி அடையப்போகிறீர்கள் என்று அர்த்தம்.
சிவபெருமானிடம் வந்து கேட்கிறார்கள், நான் பிரம்மா நான்கு தலை உடையவன், விஷ்ணு ஒரு தலை உடையவர்தான். ஆகவே நான் பெரியவனா? அவர் பெரியவரா? என்று கேட்டார்கள். தலைவன் பேசாதிருந்தார். இருந்தாலும் உங்களுக்கு ஒரு பரிசோதனை செய்கிறோம், ஒரு கருத்தை சொல்கிறோம். என்னுடைய திருவடியை யார் காண்கிறாரோ என்னுடைய பாதத்தைப் பற்றி அறிய வேண்டும். இதை அடி முடி காணுதல் என்பார்கள். என்னுடைய பாதத்தைப் பற்றி அறிய வேண்டும். இதை அடி முடி காணுதல் என்பார்கள். என்னுடைய உச்சி என் சிரசு அல்லது முடி அறிய வேண்டும். அடியும் முடியும் யார் அறிகிறார்களோ? அவர்தான் உயர்ந்தவர் என்று சொல்லிவிட்டார் சிவபெருமான்.
உடனே விஷ்ணு பகவான் பார்த்தார், சுடுமுரண் ஏனமாகி – கடும் என்றால் வேகம். முரண் – வலிமை, ஏனம் என்றால் பன்றி. வேகமும் வலிமையும் உள்ள பெருமாள்மலை உயரத்திற்கு, பெருமாள் மலை உயரத்திற்கு பெரிய பன்றி உருவம் எடுத்தார். உன்னுடைய அடியை பார்க்க வேண்டும், உன் திருவடி எங்கே இருக்கிறதென்று பார்க்க வேண்டும். அடி முடி அறிய வேண்டும். திருவடியை காண ஊடுருவி சென்றார்.
அடுத்து ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்தும் – எய்த்தும் என்றால் சோர்வடைந்தும் என்று அர்த்தம் பன்றி உருவெடுத்து ஏழு தளத்தையும் ஊடுருவி சென்றார்.
இந்த ஏழு தளத்தைப் பற்றியும் ஆசான் அகத்தீசர் சொல்லியிருக்கின்றார். ஏழு தலம் என்பது மண் அடுக்கு. இந்த பூமியில் மண் அடுக்கு அது இடத்திற்கு இடம் மாறும். மலேசியாவில் 500 அடிக்கு வெறும் மண்தான். இங்கே நூறு அடிக்கும் இருக்கலாம். இருநூறு அடிக்கும் இருக்கலாம். முதலில் மண் அடுக்கு, மண் அடுத்து தண்ணீர், அடுத்து மலைகள், பூமிக்கு அடியில் மலைகள் இருக்கு. அது எப்படி மலை வந்ததென்று பிறகு சொல்கிறோம். அடுத்து தாதுக்கள். தாதுக்கள்  சேர்க்கை அதை சார்ந்த தாதுக்கள் சேர்க்கை மண்ணும் தாதுப்பொருள்தானே? அடுத்தது கற்குழம்பு. உள்ளே தள தளவென்று கொதிக்கும் கல்லெல்லாம் தளபுள தளபுளவென கொதிக்கும்.
மண் அடுக்கு, தண்ணீர் அடுக்கு, மலை அடுக்கு, அடுத்து தாதுக்கள் அடுக்கு, அதற்கடுத்து கற்குழம்பு அடுக்கு உள்ளது. அடுத்தபடியாக உலோகங்கள் அடுக்கு உள்ளது. எல்லா வகையான உலோகங்களும் அதாவது நவ உலோகங்களும் இரும்பு, பித்தளை இது போன்றது. அது ஒரு கலவை. உலோகக் கலவையாலும் அடுத்தது சுமார் 600, 700 கிலோ மீட்டருக்கு வெறும் இரும்பாகவே இறுகி இருக்குது.
எனவே பூமிக்கு கீழே ஏழு தலங்களும் அது 600 கிலோமீட்டர் அல்லது 700 கிலோமீட்டர் இருக்கிறது. முதல் அடுக்கு மண். தண்ணீர், அடுத்தது மலைகள், அடுத்தது தாதுப்பொருட்கள், அடுத்தது கற்குழம்பு, அடுத்தது உலோகக் கலவைகள், அடுத்தது இரும்பு. இவைகளெல்லாம் இந்த பூமியை இழுத்துப் பிடித்துக் கொண்டுள்ளது என்கிறார். இப்படி உள்ளதை ஊடுருவி சென்றார்.
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்தும் – ஏழு தலங்களையும் உருகும் படியாக, உருகக்கூடிய அளவிற்கு வேகத்தைக் காட்டி ஊடுருவி சென்றது. அத்தகைய வலிமை உடையது. இதை சொல்வதற்காகத்தான் சுடுமுரண் ஏனமாகி என்றார். ஏனம் என்றால் பன்றி.
முன் கலந்து என்பது பிரம்மாவும், விஷ்ணுவும் சேர்ந்து என்று அர்த்தம். அப்படி இருந்தும் ஏழு பாதாளத்தையும் ஊடுருவி பிளந்தும், இடந்தும் என்பது பிளந்தும், கடைசியில் பின் எய்த்தும் – தளர்ச்சி வந்தது என்றார்.
அப்போது பிரம்மா மேலே தலைவனுடைய உச்சியைக் காண மேலே போகிறார். தலைவனுடைய உச்சி. சிரசை பார்க்க வேண்டும். முடியை பார்க்க வேண்டுமென்று போனார். ஜடாபாரம் உடைய அந்த முடியை பார்க்க வேண்டுமென்று போனார். வினாடிக்கு நூறுகோடி மைல் போனாராம். அப்படி வினாடிக்கு நூறுகோடி மைல் வேகத்தில் உச்சியைக் காண மேலே போய்க்கொண்டிருக்கிறார் பிரம்மா. ஆனால் உச்சி தெரியவில்லை. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் வெட்டவெளி. அப்போது தாழம்பூ வந்தது. தாழம்பூவே எங்கே போய்விட்டு வருகிறாய்? என்று கேட்டார். நான் சிவன் உச்சியிலிருந்து வருகிறேன் என்று பொய் சொல்லியது. உடனே பிரம்மா உச்சியைப் பார்த்துவிட்டேன் என்றார்.
முடியை எப்படி பார்த்தாய் என்றார். இதுபோன்று சாட்சி இருக்கு. தாழம்பூ சொன்னது. நான் சிவன் உச்சியிலிருந்து வந்தேன் என்றார். அப்போதுதான் சொன்னார். இந்த தாழம்பூ இனி என் பூஜைக்கு வரக்கூடாது. என்ன காரணம்? தாழம்பூ வைத்து பூஜை செய்தால் பாம்பெல்லாம் வீட்டுக்குள்ளே வந்துவிடும். பாம்பு உள்ளே வருவதால் இப்படி ஒரு கதையை கட்டிவிட்டார்கள்.
தாழம்பூ வைத்து பூஜை செய்யும் இடத்தில் பாம்பு வரும். அந்த வாடைக்கு. இப்படி சிவபெருமானுடைய சாபத்திற்கு உள்ளானது தாழம்பூ என்று கதை சொன்னார்கள். ஆக பிரம்மாவும் தோல்வி, விஷ்ணுவும் தோல்வி.
இருவருமே தலைவன் ஒருவன் இருக்கின்றான், அவன் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நினைப்பு இருவருக்குமே இல்லை. ஆக எதற்கு இந்த கதை வந்தது? நாங்கள் இந்த கதையை படித்ததில்லை. இப்படி ஒரு கதை பொதுமக்களிடம் செவிவழியாக வந்துள்ளது.
அப்போது பிரம்மாவும், விஷ்ணுவும் நீ பெரியவனா? நான்  பெரியவனா? என்று நினைக்காமல் எல்லாவற்றிற்கும் பரம்பொருள் ஒன்று உண்டு, நம்மையும் படைத்தான் நம்முடைய செயலுக்கும் அவன்தான் காரணம் என்று நினைக்காமல் இதுபோன்ற குணக்கேடுகளை கொண்டு நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று கர்வம் கொண்டதனால் இருவருமே தோல்வியடைந்தார்கள் என்பதற்குதான் அந்த கதை.
அதுதான் சொன்னார், கடுமுரண் ஏனமாகி முன் கலந்து. இருவருமே வருகின்றார்கள் ஏழ்தலம் உருவ இருவருமே வருகின்றார்கள். சிவபெருமானிடத்தில் வந்து கடைசியில் தோல்வியடைந்தார்கள்.
“ஊழி முதல்வ சயசயவென்று” என்று பிரம்மாவும் விஷ்ணுவும் சொல்கிறார்கள். ஏனையா முன்னேயே சொல்லக்கூடாதா? முன்னோனே ஊழி முதல்வன் என்றால் முதற்காரணமானவனே முதல்வனே நீ வெற்றி பெற்றுவிட்டாய் எங்களால் முடியவில்லை.
ஊழி முதல்வ சயசயவென்று – சயசய என்றால் வெற்றி. முதல்வனே என்றால் எல்லாவற்றிற்கும் காரணமானவனே நீ வெற்றி பெருக. நீ வெற்றி பெருக என்றார்கள். இப்படி வாழ்த்தி இருவருமே புகழ்ந்தார்கள்.
வழுத்தியும் காணா மலரடி இணைகள் – நேற்று வரையிலும் நீ உன்னுடைய திறமையை நம்பி இருந்தாய், நீ தோல்வி அடைந்தபிறகு ஊழி முதல்வ சயசயவென்கிறாய். என்னை இப்ப பாராட்டி என்ன செய்வது, ஆக வழுத்தியும் காணா மலரடி இணைகள் என்றார்.
ஈசனை இப்படி பாராட்டி பேசியும், எல்லாம்வல்ல ஈசனை புகழ்ந்து பேசியும் திருவடியைப் பற்ற முடியவில்லை என்றார். சிவபெருமானைக் கேட்டார். ஏன் உன்னுடைய காட்சியை காண முடியவில்லை?
நான் மென்மையானவன் என்னுடைய திருவடியே வழுத்தியும் காணா மலரடி இணைகள். அப்படி திருப்பிச்சொல்லலாம். இப்ப திருவடி மென்மையானது. த்ரயுவடி மென்மையாவதற்கு என்ன வேண்டும்?  இதயம் மென்மையாக வேண்டும். இதயம் உருக வேண்டும். இதயத்தில் மென்மை இல்லாமல் திருவடியை அறியமுடியாது. அவன் மென்மையானவன். இதயத்தை மென்மையாக்கிக் கொள்ள வேண்டும். இதயத்தில் கனிவு இருக்கவேண்டும். இதயத்தில் பணிவு இருக்கவேண்டும். பக்தி இருக்க வேண்டும்.
ஆக அகந்தைக்கு இடமில்லை. தோல்வியடைந்தபின் என்னை நீ வாழ்க வாழ்க வெற்றி பெருக என்று சொன்னாய்.
உனக்கு அந்த வாய்ப்பு இல்லை என்றான். எங்களுக்கு உபாயமே இல்லையா? உலக மக்கள் அடாது கற்பனை செய்வார்கள். அப்படி செய்ய வேண்டும். இப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். வெளிநாட்டிற்கும் போகணும். பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கணும் என்று நினைத்த வெகுபேர் தோல்வியடைத்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கு உண்மை தெரியாது. இது கற்பனைதான். தோல்வியடைந்த பின் தெய்வத்திடம் போவான். இவன் அறியாமையில் இருக்கின்றானே? இந்த அறியாமையில் இருப்பவனுக்கு என்ன உபாயம்? இவ்வளவு பிரச்சனை இருக்கையா உனக்கு இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் மாதம் இரண்டு பேருக்கு அன்னதானம் செய்து கொண்டு வா, அன்னதானம் என்றால் கிலோ என்ன விலை என்பான்.
அன்னதானத்தைப் பற்றியே தெரியாது. அன்னதானம் செய் என்றால் நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்பான். எப்பொழுது செய்தாய்? உனக்கு அப்படி அன்னதானம் செய்யக்கூடிய மனது வந்திருந்தால், ஏனையா இப்படி தோல்வி வந்தது? உத்தியோக தடை இருக்கும், விவசாயம் செய்ய நிலத்தை வாங்குவான், சீர்திருத்துவான், கேணி வெட்டுவான் தண்ணீர் வராது, போர் போடுவான் தண்ணீரே வராது. இதிலும் தோல்வி.
ஆக உத்தியோகத்தில் தோல்வி, வாழ்க்கையில் தோல்வி, வியாபாரத்தில் தோல்வி. ஆக தோல்வி வந்த பின் அப்படியே தடுமாறுவான். ஒரே ஏக்கம். பிள்ளைகள் இருக்கே? பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறதே? கல்லூரிக்கு போகணுமே? அது செய்யணுமே? இது செய்யணுமே? பிள்ளை வயது 22 ஆகி விட்டதே? திருமணம் செய்யணுமே? என்று அப்படியே கற்பனை செய்து நொந்து நொந்து போவான். சர்க்கரை வியாதி வந்தது, ரத்த அழுத்தம் வந்தது, தடுமாறிக் கொண்டிருப்பான். இவற்றையெல்லாம் முன்னமே அறிந்த நமது சங்கம் மட்டும்தான் திருவருள் துணையில்லாமல் எதுவும் முடியாது. தோல்வி அடைவதற்கு முன்னே, புண்ணியத்தை செய்து கொள்ள வேண்டுமென்று சொல்லும். அதுதான் மகான் திருவள்ளுவர் சொன்னார்,
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
    திருக்குறள் – குற்றம் கடிதல் – குறள் எண் 435
வருமுன்னர்க் காத்துக் கொள்வதற்கு என்ன உபாயம்? சிறப்பறிவு கொண்டு வருமுன்னர் காத்துக் கொள்ளலாமா? பணபலத்தைக் கொண்டு முன்னரே காத்துக் கொள்ளலாமா? ஆட்படை கொண்டு காத்துக் கொள்ளலாமா? தோல்வி வருமுன்னே எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம்? இதை வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை என்பார்.
எப்படிய்யா உன்னை நீ காப்பாற்றிக் கொள்வாய்? திருவடி என்று சொல்லப்பட்ட அரண். ஒரு பாதுகாப்பு. அது பெரும் படை. மாணிக்கவாசகா எத்தனையோ பாவிகள் உன் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிருக்கின்றார்கள். நாயினும் கடையேனாகிய எனக்கு வாய்ப்பு தர வேண்டும். உன்னை பூசிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறுகின்றேன். என்னை ஏற்று அருள் செய் என்று கேட்டால் அஞ்சேல் மகனே! என்பார் மகான் மாணிக்கவாசகர். அதுவல்லவா பெரும் அரண், அதுவல்லவா வேல்படை. இதையெல்லாம் விட்டு விட்டு என்ன மாற்று வழி கண்டு பிடிக்கப் போகிறாய்? வருகின்ற பிரச்சனையை, துன்பத்தை எப்படி நீ வெல்ல முடியும்? எத்தனை துன்பம் வந்தபோதும் கூட இருப்பவன் விடுவானா உன்னை? துன்பம் வந்த பின்னால் ஓடிப்போய் விடுவான்.
செல்வம் இருக்கும்போது உன்னை அப்படியே சார்ந்து கொண்டிருப்பான். செல்வம் இருக்கும்போது பத்துபேர் உன்னுடன் இருப்பான். இவனிடம் செல்வம் போய்விட்டால், இவன் கடன் கேட்பான் போலிருக்கிறது என்று ஒருவன் கூட வர மாட்டான்.
யாரை நீ நம்புகிறாய்? உன் திறமையை நீ நம்புகிறாயா? அல்லது உன் உத்தியோகத்தை நீ நம்புகின்றாயா? உன்னுடைய வேறு வகையான திறமைகள், ஆட்படைகளை நம்புகின்றாயா? வருகின்ற ஊழ்வினையை யாரை நம்பி வெல்வாய்? முன் செய்த பாவம் உன்னை விடுமா? அதற்கு என்ன பரிகாரம்? எந்த புனித நீரில் குளித்தாலும் பயன் இல்லை.
ஆக இதயத்தை புனிதமாக்கிக் கொள்கின்ற பண்பு. இதயத்தை புனிதமாக்கிக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று திருவடி என்கின்ற சுத்த ஜலம். திருவடி என்கின்ற புனித நீர். அதில் மூழ்கி எழ வேண்டும். இல்லையென்றால் கடைசி நேரத்தில், “ஊழி முதல்வ சய சய” என்று சொல்லி என்னாவது?
பிறகு என்ன செய்வது? யாரை வணங்க வேண்டும். என்ன கேட்க வேண்டும்? ஆசான் சுப்ரமணியரிடம் அறியாமையிலிருந்து விடுபட வேண்டுமென்று கேட்கவேண்டும். கேட்க வேண்டியவற்றை என்ன கேட்க வேண்டுமென்று தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அறியாமை தீராது. செல்வம் நிறைய இருக்கும். மேலும் மேலும் செல்வம் வேண்டுமென்று கேட்பான். அவன் சிந்தனை செய்து கொண்டே இருப்பான். கற்பனை செய்து கொண்டிருப்பான். தூங்கும் வரை கற்பனைதான். தூங்கவும் முடியாது. உன்னை தூங்கத்தான் விடுமா? தூங்கவும் விடாது.
ஒரு பக்கம் கடன்சுமையில் தடுமாறிக் கொண்டிருப்பான். ஆக துன்பம் வருவதற்கு முன்னே தடுத்துக் கொள்ள வேண்டுமென்ற என்னத்தை பக்தி ஒன்றுதான் கொடுக்கும். அப்படிப்பட்ட பக்தி மகான் இராமலிங்க சுவாமிகள், மகான் திருஞானசம்பந்தர், மகான் திருநாவுக்கரசர், மகான் தாயுமான சுவாமிகள் போன்ற ஞானிகளை வணங்கி தினமும் ஐந்து நிமிடம் பூஜை செய்தால் போதும். இப்படி செய்ய கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒரு ஐந்து நிமிடம் சித்தர்கள் போற்றித் தொகுப்பை சொல்லலாம். அந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பில் உள்ள மகான்கள் அனைவரும் முற்றுப் பெற்றவர்கள்.
எல்லோரும் முற்றுப்பெற்ற முனிவர்கள். ஞானிகளை பூஜை செய்து அன்றாடப் பிரச்சனைகளை சொல்ல வேண்டும். நோய் வரும், குடும்பத்தில் பிரச்சனைகள் வரும், கஷ்டம் வரும், ஆக நோய் வருவதற்கு முன்னே கஷ்டம் வருவதற்கு முன்னே, பிரச்சனைகள் வருவதற்கு முன்னே தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு வழி என்ன? அறிவுக்கு அங்கே வேலை இல்லை.
இதையெல்லாம் தடுப்பதற்கு ஒன்றே ஒன்று ஞானிகள் திருவடிதான். இதைத்தான் நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறோம். நான் மட்டுமல்ல, எல்லோரும் இதைத்தான் பேசுவார்கள.
ஊழி முதல்வ சய சய என்று
வழுத்தியும் காணா மலரடி இணைகள்
என்று தோல்வி கண்டபின் அவனைப் பாராட்டி என்ன செய்வது?
     ஏன் கடவுள் திருவடிகள் மென்மையானதென்று மலருக்கு ஒப்பிட்டார். நீ அந்த அளவுக்கு மென்மையாக வேண்டும். கரடு முரடான அறிவை வைத்துக் கொண்டு அங்கே போக முடியாது. கடவுளின் உடம்பு என்ன இரும்பா? இல்லை அவர் பாதம் மலர் போன்று இருந்தால் அந்த உடம்பு எவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும்? கடவுள் உடம்பு ரோஜா இதழ் போன்றது. பாதமும் அப்படியே இருக்கு. ஆகவே மென்மையான மனம் உனக்கு இல்லை. ஆகவே
     கடுமுரண் ஏனமாகி முன் கலந்து
      ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்தும்
என்றார். எய்த்து என்றால் தளர்வுற்று. ஆக இந்த கதையை எதற்குச் சொல்கிறார் என்றால், நாம் எதையும் செய்வதற்கு முன்னே, நம்முடைய திறமையைக் கொண்டு செய்கிறோம். உன்னிடம் ஆற்றல் இருக்கென்று மோதினாய். கடைசியில் ஒன்றுமில்லாமல் ஏழு பாதாளங்களையும் துளைத்து உருகும்படியாக பிளந்தாய். கடைசியில் தோல்வி வந்தது.
     உன்னிடம் கர்வம் இருக்கிறது. அதுபோன்று  இல்லறத்தார்கள் ஏதோ கல்வி இருக்கென்றும், உத்தியோகம் இருக்கிறதென்றும் கற்பனை செய்து கடைசியில் தோல்வி அடைவான். ஒருவரிடமும் செல்ல மாட்டான் வறுமை வந்தால் இவனிடம் யாரும் வர மாட்டான்.
     ஆக இப்ப எதற்கு இந்த கதை வந்தது? பிரம்மா விஷ்ணு கதை எதற்கு வந்தது என்றால், மனித வர்க்கமே புரிந்து கொள். உன்னுடைய திறமையை நம்பாதே திருவருள் துணையை நம்பு. புண்ணியம் செய்துகொள். ஏன் புண்ணியம் செய்ய வேண்டும்? அதற்கு என்னய்யா விளக்கம்? ஏன் புண்ணியம் செய்ய வேண்டும்? ஏன் பக்தி செலுத்த வேண்டும்? என்றெல்லாம் இங்கே பேச்சில்லை.
     இப்படி இருந்தால் நல்லது. நீ செய்தால் உனக்கு துணை நிற்கும். பூஜை செய்தால் அருள் நிற்கும். அருளும் புண்ணியமும் இருந்தால் தொட்டது துலங்கும். வாழ்க்கையில் தோல்வி இருக்காது.
     நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் நாளுக்கு நாள் அப்படியே தேய்ந்து கொண்டே போகிறது. எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து இருக்கிறது. அது பொது நீதி. நாம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? எது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமல்லவா? இதற்கிடையில் புண்ணியம் செய்த மக்கள் இன்னும் ஸ்திரமாகதான் இருக்கின்றார்கள். இதை சாமாத்தியமென்று நினைக்க வேண்டாம். புண்ணியத்தினால்தான் இது சாத்தியம். சிலர் மட்டும் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறார்கள். இது பொது நீதி.
     இந்த சங்கம் இதை ஏன் சொல்கிறது? வியாபாரம் செய்வதற்கு முன்னே விவசாயம் செய்வதற்கு முன்னே, கல்வி கற்பதற்கு முன்னே, உத்தியோகத்திற்கு செல்வதற்கு முன்னே, திருமணம் செய்வதற்கு முன்னே, கட்டிடம் கட்டுவதற்கு முன்னே, எல்லாவற்றிற்கும் முன்னே திருவருள் துணை வேண்டும். இதைத்தான் இந்த சங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
     இந்த சங்கம் எடுத்துக் கொண்ட காரியமெல்லாம் வெற்றி. 108 திருமணம் என்றோம் வெற்றி. 1008 திருமணம் என்றோம் வெற்றி. அப்ப என்ன செய்தோம்? தமிழகத்திலேயே பிரச்னைக்கு உரியது திருமணம்தான். திருமணம் எளிதில் கைகூடாது. நாங்கள் 108 திருமணம் என்றோம். எந்த துணிச்சலில் சொன்னோம்? எந்தை ஆசான் அகத்தீசனும், திருமூலதேவனும், நந்தீசனும், போகமகாரிஷியும், கருவூர்தேவனும் ஆசி வழங்கினார்கள். வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று வீழ்ந்து வணங்கி கேட்டோம். இப்படி செய்தியை அறிவித்தோம்.
     இந்த செயல் வெற்றி காண வேண்டும். இதற்கு நீங்கள் அருள் செய்ய வேண்டும். என்னால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது. தோல்வியை ஏற்றுக் கொள்வதற்காக உங்கள் திருவடியை நான் பற்றவில்லை. ஓராண்டா ஈராண்டா? ஒரு நாளா இரு நாளா? ஒரு வாரமா? இரு வாரமா? ஒரு மாதமா? இரு மாதமா? ஆண்டுக்கணக்காக உங்கள் திருவடியை பூஜை செய்திருக்கின்றேன்.
     எத்தனையோ பிரச்சனைகள் வந்தது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உங்கள் திருவடியை நம்பி பூஜை செய்திருக்கின்றேன். மேற்கொள்கின்ற காரியம் தடையில்லாமல் நடக்க வேண்டுமென்று உங்களை கேட்டிருக்கின்றோம். அதுபோன்று எங்கள் அன்பர்களும் கேட்டிருக்கின்றார்கள்.
                நாங்கள் என்ன செய்தோம்? ஞானிகளை வணங்கினோம். பண்புள்ள தொண்டர்கள் அமைந்திருக்கின்றார்கள்.  இங்கிருக்கும் ஆண்களும் பெண்களும் நல்ல பண்புள்ள தொண்டர்கள். இதற்குக் காரணம் தலைவன் கொடுத்த பாக்கியம். இல்லையென்றால் முரண்பட்ட தொண்டர்கள் இருந்தால் நான் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாதல்லவா?
     ஆனால் அங்கே திருமாலும் பிரம்மாவும் என்ன செய்தார்கள்? அன்று முதல் பூஜை செய்தார்கள். எல்லாம்வல்ல பரம்பொருளே உன் திருவடியை பூஜிக்க வாய்ப்பு தர வேண்டும். உன்னுடைய மென்மையான திருவடியை பூஜிக்க வாய்ப்பு தர வேண்டுமென்றும் விஷ்ணுபகவான் கேட்டதற்கு அருள் செய்தார்.
     திருவடியை வழுத்தியும் காணா இணையடி மலர்கள் என்றார், காண முடியவில்லை. என்ன குறைகள் என்னிடம் என்றார். நீ இப்படி கேள். உன்னுடைய அகந்தையெல்லாம் இத்தனை அவதாரம் எடுத்த போதும், பன்றி அவதாரம் எடுத்தும் பூமியை பிளந்து காட்டியும் ஒன்றும் முடியவில்லை. என்னைக் கேள் என்ன வேண்டும்? என்று கேட்டார்.
     உங்களுடைய திருவடியை பூஜிப்பதற்குரிய அறிவும் பரிபக்குவமும் என்னிடம் இல்லை என்பதை நான் ஒப்புக் கொண்டேன். நான் தோல்வி அடைந்து விட்டேன். நீரே வெற்றி பெற்றீர். நான் தோல்வி அடைந்து விட்டேன். நான் மீண்டும் ஒரு நிலையை அடைய வேண்டும். அதேபோன்று பிரம்மாவுக்கும் நான்கு முகம் இருக்கிறது. அவரும் அப்படியே கேட்டார். எல்லாம்வல்ல பரம்பொருளே என்னிடம் இருக்கின்ற சக்தியை, திறமையை, ஆற்றலை நம்பாமல் உன் திருவடியை பூஜிப்பதற்குரிய வாய்ப்பும் அதற்குரிய பரிபக்குவமும் தரவேண்டுமென்று கேட்டார். இப்படி கேட்டால் நீ மேற்கொள்கின்ற காரியம் நடக்கும். நீ மேற்கொள்கின்ற காரியம் நடக்கும் என்றார். அதன்பிறகுதான் இருவரும் வணங்கினார்கள். இதை, “நான்முகன் முதலா வானவர் தொழுதெழ” என்றார். இதற்குபிறகுதான் புத்தி வந்தது.
     நான்முகன் முதலாய் என்று சொல்லலாம் குற்றமில்லை. ஆனால் செய்யுள்ளுக்காக அப்படி சொன்னார். அதற்கப்புறம்தான் புத்தி வந்தது. பிரம்மாவும், தேவர்களும் வணங்கினார்கள்.
     நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
      ஈரடியாலே மூவுலகளந்து
     ஈரடி என்பது இடகலை, பிங்கலை. அது இரண்டு கால் என்பார். இரண்டு அடி. மூவுலகளந்து என்பது ஆற்றல். சாதாரண விசயமல்ல. மாபலி சக்கரவர்த்தியிடம் விஷ்ணு போனார். மாபலி சக்கரவர்த்தி பெரிய தவசி. அவரிடம் போய் எனக்கு மூன்று அடி இடம் வேண்டுமென்று திருமால் கேட்டார். இப்படியொரு அவதாரம். இது கதை.
     அதற்கு மாபலி சக்கரவர்த்தி உனக்கு எத்தனை அடி இடம் வேண்டுமென கேட்டார். நான் வயதானவன், எனக்கு மூன்று அடி இடம் வேண்டுமென்றார் திருமால். அதற்கு மாபலி சக்கரவர்த்தி நீ இருக்கிறதே அரைக்கால் படி இருக்கிறாய். நீ மூன்று அடி கொடுத்தால் போதும் என்கிறாய். உன்னால் நிற்கக்கூட முடியாதே ஐயா என்றார் மாபலி சக்கரவர்த்தி.
     திருமால் எனக்கு மூன்று அடியே போதும் என்றார். சரி என்று சொல்லி மூன்று அடி தருவதாக தாரை வார்த்துக் கொடுத்தார். இப்போது திருமால் ஆகாயத்திற்கும் பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்தார்.
     ஈரடியாலே மூவுலகளந்து
    
     ஈரடியாலே – இடகலை பிங்கலையாலே இந்த உலகத்தை அளந்து பார்க்கலாம் என்பது அர்த்தம். இதைத்தான் மூவுலகளந்து என்றார். திருமால் என்ன செய்தார்? இரண்டு அடியாலே இந்த உலகத்தை அளந்தார். மகான் திருவள்ளுவரும் இந்த உலகத்தை இரண்டு அடியில் அளந்திருக்கிறார். அது எப்படி? இடகலையும் பிங்கலையும் சேர்த்து அளந்துவிட்டார். அளந்து என்பதற்கு முறைப்படுத்தப்பட்டது என்று பொருள். அதை கணக்காக அறிந்து கொண்டார். அதனால்தான் ஈரடியில் உலகத்தை அளக்க முடிகிறது.
     ஈரடியாலே மூவுலகளந்து – எல்லாவற்றையும் அறியலாம். ஈரடி அறிந்தவர்கள், இடகலையையும், பிங்கலையையும் அறிந்தவர்கள் இந்த உலகத்தையே அறியலாம். அவர்கள் இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் பார்க்கலாம்.
      அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்
          அடுக்கடுக்காய் அமைந்துள வறிவோம் ஆங்கே
     உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்
          உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
     எந்தனைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ
          எள்ளளவும் அறிந்திலோம் என்று
     முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற
          முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே.
திருஅருட்பா முதல் திருமறை – மகாதேவாமாலை – கவி எண் 174
               
அந்தரமிங்கறிவோம் என்றார் மகான் இராமலிங்கசுவாமிகள். இங்கே ஈரடியாலே மூவுலகளந்து என்றார். எல்லா ஞானிகளும் இடகலை பிங்கலை இரண்டையும் அறிந்தவர்கள். மூச்சுக்காற்றை இடது பக்கம் வருகின்ற மூச்சுக்காற்றையும் வலது பக்கம் வருகின்ற மூச்சுக்காற்றையும் புருவ மத்தியில் ஒடுங்கிவிட்டால், அதுதான் பிரம்மநிலை. அதுதான் பிரம்மம். அவன் கல்லாத கல்வி இல்லை. அவன் அறியாத ஒன்றே இல்லை, உணராத ஒன்றே இல்லை. தோல்வியே இல்லை. இந்த வாய்ப்பு திருவடி துணையில்லாமல் ஒருவனுக்கு ஈரடியைப் பற்றி தெரியாது. ஈரடியாலே மூவுலகளந்து – எல்லா உலகத்தையும் அளக்கலாம். எல்லா உலகத்தைப் பற்றியும் அவர்களுக்கு தெரியும்.
     நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர
     திருமால் எப்படி இருந்தார்? மிகப்பெரிய பிரம்மாண்டமான விஸ்வரூபம் எடுத்திருந்தார். திருவருள் துணை பெற்றவர். விஷ்ணுபகவான் எல்லாம் வல்லவர். யான் என்ற கர்வம் விட்டு எல்லாம்வல்ல பரம்பொருளே நீரே கதி என்று கையேந்திய பின்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.
     நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர – நான்கு திசையில் உள்ள ஞானிகளும், தேவர்களும். ஐம்புலன் மலர – ஐம்புலன்களும் மகிழும்படியாக காட்சி தந்தாராம் திருமால். இது திருவருள் துணையால் வந்தது. திருவருள் பெறுவதற்கு முன்பு முடியவில்லை.
     நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர
      போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
     திருநெடுமால் – மால் என்று சொல்லவில்லை. அருள் பெற்றதனால் அங்கே அடைமொழிக்குள்ளாகிறார், திருநெடுமாலென்று.
     அடி முடியறியும் ஆதரவதனில்
     இந்த ஐந்தாவது வரிதான் முக்கியமானது. முன்னே பன்றி வடிவெடுத்து ஏழு பாதாளத்தையும் துளைத்து உள்ளே போய் தோல்வியடைந்தார்.
     அடி முடியறியும் ஆதரவதனில்
     இப்போது மகான் மாணிக்கவாசகரைப் புரிந்து கொள்ள வேண்டும். மகான் மாணிக்கவாசகர் சொல்கிறார். திருமால் பெருமாள்மலை உயரத்திற்கு பன்றி வடிவம் எடுத்தும் ஒன்றும் கைகூடவில்லை. கடைசியில், அடி முடியறியும் ஆதரவதனில் – ஆதரவு என்றால் ஆசி. ஆசி இருந்ததனால்தான் ஈரடியாலே மூவுலகு அளக்க முடிந்தது.
     இதை எல்லா முனிவர்களும் கண்கொள்ளா காட்சியாக திருமாலை பார்த்தார்கள். ஆதரவு என்றால் ஆசி. ஆதரவை பெற்றார். ஆசி பெற்றாலன்றி யாருமே சித்தி பெற முடியாது. ஒருவன் ஞானசித்தி பெறுகிறான் என்றால் அவன் தினமும் பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்தால் போதுமா? முன்செய்த நல்வினை இருக்க வேண்டுமல்லவா? நல்வினை இருந்தால்தானே முடியும்? “அன்றைக்கு எழுதினபடி நடக்கும் வாலை ஆத்தாளை போற்றடி வாலைப்பெண்ணே” என்றார். தோல்வியே வராத பூஜை. நாம் பூஜிக்கின்றவர்கள் முற்றுப்பெற்ற முனிவராக இருக்க வேண்டும். மகான் இராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர் போன்றவர்களாக இருக்க வேண்டும். முற்றுப்பெற்ற முனிவர்களாக இருந்தால்தான் தோல்வியே வராது. இல்லையென்றால் தோல்வி வரத்தான் செய்யும்.
     அடி முடியறியும் ஆதரவதனில்
     ஆசி பெறுவதற்கு இவர்கள்தான் காரணம் என்றும், இல்லையென்றால் முடியாது. போற்றித் திருஅகவலில் ஒன்பது வரிக்கு மட்டும் விளக்கம் சொல்லிருக்கிறேன்.
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடியாலே மூவுலகளந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
அடி முடியறியும் ஆதரவதனில்
கடுமுரண் ஏனமாகி  முன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்தும்
ஊழி முதல்வ சயசயவென்று
வழுத்தியுங் காணா மலரடி இணைகள்
     துன்பம் வந்தபின் என்ன செய்வது? தோல்வி வந்தபின் திருவடியை பூஜிப்பதைவிட, முன்னமே பூஜித்திருந்தால் தோல்வியே வராது. ஆகவே ஆண்களும் பெண்களும் யாராக இருந்தாலும் சரி. ஞானிகளின் திருவடிகளை வணங்கி, போற்றித் தொகுப்பை படிக்க வேண்டும். போற்றித் தொகுப்பை படிக்க சொல்லி கேட்க வேண்டும். பெண்களாக இருந்தால் பண்புள்ள கணவனாக அமைய வேண்டுமென்று கேட்க வேண்டும். பண்புள்ள கணவனாகவும் இருக்க வேண்டும். செல்வம் உள்ள கணவனாகவும் இருக்க வேண்டும். பண்புள்ள கணவனும், செல்வம் உள்ள கணவனும் அமைந்திருக்கின்றான். உடல் ஆரோக்கியம் வேண்டுமல்லவா? அது இல்லையென்றால் என்னாவது? பண்புள்ள கணவன்தானய்யா. நன்றாக படித்தவன்தான். வசதி இருக்கிறது. நோய் இருந்தால்? அப்போது என்ன செய்வாய்? உன் வாழ்க்கை எப்படி இருக்கும்? வாழ்க்கையா அது? எனக்கு தெரியும் அந்த இயல்பு எல்லாம். அப்படியே என்ன செய்வோம் என்று நீ ஸ்தம்பித்து நிற்பாய்.
     சிலருடைய தடுமாற்றம் வெளியே தெரியாது. அது உடற்கூறு. ஏதோ பொம்மை போல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பார்கள். கணவன் மனைவியாக ஏதோ திருமணத்திற்குப் போவார்கள். ஒருவர் ஒருவருடன் பேசவே மாட்டார்கள். இதையெல்லாம் நான் கவனித்திருக்கிறேன். இரண்டுபேரும் கொஞ்சம் கூட உணர்ச்சியோடு பேசமாட்டார்கள். ஏன் இப்படி? அங்கே ஒன்றுமில்லை. எல்லாமே காலி. விஷயம் இல்லை. நீ செய்த புண்ணியம் அவ்வளவுதான். உடற்கூறு அமையவில்லையே. பண்புள்ள கணவன்தான். உத்தியோகம் இருக்கிறது. வசதி இருக்கிறது. உடற்கூறு? உடற்கூறில் ஓட்டை.
     சரிய்யா. அவன் திடமாக இருக்கிறானையா. உனக்கு நிலைமை? வெள்ளைப்படுகிறது. உதிரப்போக்கு இருக்கிறது.பலகீனம் இருக்கிறது. உன்னைப் பார்க்க வேண்டுமல்லவா? அவன் பார்ப்பான். அவனுக்கு பொம்மை வாழ்க்கைத்தான். அதுவும் பொம்மை வாழ்க்கைதான். இதையெல்லாம் எதற்கு நாங்கள் இப்போது சொல்கிறோம்? தடுத்துக் கொள். இப்படி வருவதற்கு முன் தடுத்துக்கொள். உன்னை பாதுகாத்துக் கொள். திருவருள் துணையில்லாமல் முடியாது.
    
திருவடியே உனக்கு பாதுகாப்பு
     திருவடியே அறிவு
     திருவடியே ஆயுள் பெருக்கம்
     திருவடியே செல்வம்
     அதைத்தவிர வேறு கதியில்லை
     திருவடியே சிவமாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல்கதி அது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே
    திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 138
ஞானிகள் திருவடியை பெண்கள் வணங்க வேண்டும். அவன் சிவனாகிறானையா ஆராய்ந்து பார்த்தால் திருவடியே சிவமாவது தேரில். தேரில் என்றால் ஆராய்ந்து பார்த்தல்.
     திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
     திருமந்திரத்தில் சொல்வார். ஆராய்ந்து பார்க்கும்போது, ஞானிகளை வணங்கினால்
     திருவடியே சிவமாவது தேரில்
    
     சவமாகக்கூடியவன் சிவமாகப் போவான். அகீர் பகீர் என போகின்றான். என்ன என்னமோ நோய்கள் வருகின்றன. அப்பப்பா புற்று நோயென்ன? சர்க்கரை வியாதி என்ன? எவ்வளவு கொடுமைகள்? எங்கே நீ சிவமாகப் போகிறாய்? அட சாவு குற்றமில்லை? இப்படி நீ அநியாயமாக சாகாதே சிவமாவது தேரில் என்றார்.
     உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
      செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
    திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 330
சிவமாவது இருக்கட்டும், பல உயிரைக் கொன்று உயிர் உடம்பின் நீக்கியார் என்ப. ஒருவன் வந்தான். வயிறு மட்டும் வீங்கியிருந்தது. கை கால் எல்லாம் சூம்பி இருந்தது. யாரையா என்றான். அப்படியே தடுமாறிக் கொண்டு வந்தான். என்ன உடம்புக்கு என்று மகான் திருவள்ளுவர் கேட்டார். அங்கிருந்த தொண்டர்கள் அவனைப் பார்த்து ஐயோ பாவம்! என்றார்கள். இவனுக்கு பத்து வருடமாக வயிறு வீங்கினது வீங்கினதுதான் என்றார்கள். அடப்பாவமே! மகான் திருவள்ளுவர் ஒன்றுமே சொல்லவில்லை. அவனைப் பார்த்து சிரித்தார். உண்மையைச் சொன்னால் வருத்தப்படுவான் என்றார்.
  
தொண்டர்கள் என்ன காரணம்? என்றார்கள். அதற்கு ஆசான் திருவள்ளுவர் இவன் பல உயிர்களைக் கொன்று உண்டவன். கருணையில்லாத வாழ்க்கை வாழ்ந்தவன். புலால் உணவை சுவைத்துச் சாப்பிட்டவன். உயிருடம்பின் நீக்கியார் என்ப – பல உயிர்களைக் கொன்றிருக்கிறான். நன்றாக சுவைத்து புலாலை சாப்பிட்டிருக்கின்றான். இப்படி இருந்தால் வயிறு பின்னே இவ்வளவு பெரிதாகாமலா இருக்கும்? அப்படியே பத்து வருடம் கிடக்கிறான்.
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
    திருக்குறள் – கொல்லாமை – குறள் எண் 330
இப்படிப்பட்ட நோய் சூழ்ந்த உடம்பு. சாகவும் மாட்டான். அவனால் வாழவும் முடியாது. என்ன காரணம்? அறியாமை. பூஜை செய்திருந்தால், புலால் உணவு கேடு தரும். இந்த உடம்புக்கு கேடு வரும். நமக்கு கேடு வரும். எந்த உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது என்று ஆசானைக் கேட்க வேண்டும். நான் எவ்வுயிர்க்கும் கேடு செய்யாதிருக்க வேண்டுமென்று மகான் மாணிக்கவாசகரைக் கேட்க வேண்டும்.
அது மட்டுமா? மேலும் உயிர்க்கொலை செய்யக்கூடாது. ஆனால் அதே சமயத்தில் நான் புலால் உணவு சாப்பிடுகின்றேன். இந்த தேகமே காமதேகம். அதுவே நச்சுத்தேகம், விஷதேகம். ஆண்பால் சுக்கிலமும் பெண்பால் சுரோணிதமும் சேர்ந்து பத்து மாதம் தீட்டு வெளியாகாமல் இருந்து வந்த தேகம். ஒரு ஊற்றைச் சடலம். இந்த தேகத்திற்கு மறுபடியும் புலால் உணவு கொடுத்தால், சுத்தமாக அறிவு மழுங்கிப் போகும்.
சில தாய்மார்கள் பிள்ளைகளுக்கு மாமிசம், கறி சமைத்துக் கொடுப்பார்கள். அதில் மிருதுவான பகுதியை எடுத்து பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். நல்லா சாப்பிட்டுப் பழகணும் என்று அவர்கள் நினைப்பது அந்த பிள்ளையை கெடுப்பது என்று அர்த்தம். பிள்ளைகளுக்கு உற்சாகத்தை ஊட்டுவது என்பார்கள். என்னய்யா பிள்ளைகளுக்கு உற்சாகத்தை உண்டாக்கப் போகிறாய்? நச்சுத்தன்மையான உடம்பு அது. அறிவு எங்கே வேலை செய்யப்போகிறது? கருணையே இருக்காது. இந்த உணவின் காரணமாக கருணையே இருக்காது. நீ சாப்பிடுகின்ற உணவும், நச்சுத்தன்மையான உணவு. உடம்பும் விஷஉடம்பு. உணவும் விஷஉணவு. எப்படி அருள் பெறப்போகிறாய்? இப்படி இருந்தால் எப்படி முன்னேற முடியும்? இதெல்லாம் ஏன் ஞானிகள் சொல்கிறார்கள் என்றார்,
“திருவடியே சிவமாவது தேரில்” என்றார்
ஞானிகளின் திருவடியை பூஜை செய்தால்தான் அந்த உண்மை தெரியும். இது நல்லது. இது கெட்டது என்று. திருவடியே சிவலோகம் சிந்திக்கில் – அது பெரிய இடம். ஏன் திருமந்திரத்தில் இதை சொல்கிறார்? அடே உனக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. சிவலோகம் – மகிழ்ச்சியான உலகம். இந்த உலகம் அவர்களுக்கு சிவலோகம்.
திருவடியே சிவலோகம் சிந்திக்கில் – சிந்தித்துப் பார்த்தால் திருவடியே சிவமாவது தேரில் – ஆராய்ந்து பார்த்தால், நன்றாக சிந்தித்துப் பார்த்தால், திருவடியே சிவலோகம். இன்னும் சிந்தித்தார். திருவடியே செல்கதியது செப்பில் – ஆராய்ந்து பார்த்து, சிந்தித்து, சொன்னால் (செப்பில் என்றால் சொன்னால்) செல்கதி – மேற்கதி அடைவதற்கு என்னய்யா இருக்கிறது என்றால், நாம் மேற்கதி அடைய வேண்டாம். நரகத்திற்குப் போகாமல் இருக்க வேண்டுமல்லவா? நரகம், நரகம் என்றால் என்ன? அதைப்பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீ மருத்துவமனைக்கு போய்ப்பார். அங்கே கை கால் வீங்கிக் கிடப்பான்.
என்ன இவர் உடம்புக்கு?
நீங்கள் யார்? என்று கேட்டால் அவர் என் சொந்தக்காரர் என்று சொல்லி உள்ளே போகணும். பொது ஆஸ்பத்திரிக்குப் போகணும். கை ஒடிந்தவன், கால் ஒடிந்தவன், வயிறு வீங்கினவன். கிட்டே நேரங்க முடியாத அளவிற்கு நாற்றத்துடன் கிடப்பான். அப்படியே கட்டிலில் கிடப்பான். படுக்கைப்புண் வந்திருக்கும். நரகத்தை நீ எங்கே போய் பார்க்கிறாய்? பூதக்கண்ணாடியை வைத்துப் பார்க்கிறாயா நரகத்தை? பார் அவனை. முதுகுப் புண் வந்திருக்கும். கிட்டே நெருங்க முடியாது. மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போவாள் மனைவி.  மூக்கைப் பிடித்துதான் மனைவி மக்கள் போய்க்கொண்டிருப்பார்கள். இதுதான் நரகம். நரகத்தைப் பார்த்துக் கொள்.
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கையவர்.
உயிரைக் கொன்று சாப்பிட்டவன். சரிய்யா . சில பேர் சுத்த சைவமாக இருக்கிறானே ஐயா. ஏனய்யா அவனுக்கு நோய்? சைவத்தை கடைப்பிடித்தால் மட்டும் போதாது. அன்பர்களே சைவத்தை கடைப்பிடிப்பது ஒரு பண்புதான்.
நான் பொய் சொல்லி பொருள் சேர்க்க மாட்டேன் என்பதும் சைவம். இன்று முதல் பூஜை செய்யாமல் சாப்பிட மாட்டேன் என்பதும் சைவம். புலால் உண்ணமாட்டேன், சைவம். எவ்வுயிர்க்கும் இடையூறு செய்ய மாட்டேன், சைவம். பொய் சொல்ல மாட்டேன் என்பது சைவம். பிறர் சொத்தை அபகரிக்க மாட்டேன் என்பது சைவம். அதுதான் சைவம் என்றான்.
ஆக யார் மனதையும் புண்பட பேச மாட்டேன் சைவம். அவனிடம் யாரேனும் உதவி கேட்டால், உதவி செய்வேன் என்பது சைவம். தயை சிந்தையே சைவம் ஆகும். அதை எப்படி பெறுவது? கருணையே வடிவான ஞானிகள் ஆசி இல்லாமல் ஒருவனுக்கு தயைசிந்தை வராது. எங்கே தயை சிந்தை இருக்கிறதோ? அவன் சுத்த சிவன். அவன்தான் சிவம்.
தயை சிந்தை இல்லாதவன் சிவமல்ல. ஏனய்யா வன்மனம் வந்தது? செய்த பாவம். செய்த பாவம் வன்மைனமாக வந்தது, அவன் இதயத்தை உடைக்கவே முடியாது. இரும்புக்கோட்டையை உடைக்கலாம். கடும் பாறையை உடைக்கலாம். கல்லான இதயத்தை உடைக்கவே முடியாது. என்ன காரணம்? பல ஜென்மத்தில் செய்த பாவம். கொஞ்சம்கூட இறக்கம் காட்ட மாட்டான். நல்லா வேலை வாங்குவான். அறுபது ரூபாய், நூறு ரூபாய் மதிப்புள்ள வேலை இரவு ஏழு மணி வரைக்கும் வேலை வாங்குவான். அவர்கள் வீட்டிற்கு போகும்போது விளக்கு வைத்து விட்டது பணம் இல்லை என்பான். வேலை செய்தவனோ அடப்பாவி! இதற்கு மேல்தான் நான் சென்று பிள்ளைகளுக்கு கஞ்சி வைத்துக் கொடுக்க வேண்டுமென்பான். ஆனால் அவனோ யோவ் விளக்கு வைச்சு போச்சுல்ல! தெரியாதா என்பான். ஆனால் ஞானிகள் உனக்கு விளக்கு வைக்கப்போகுது தம்பி! உனக்கு விளக்கு வைக்க போகிறானடா! தேங்காய் உடைத்து விளக்கு வைப்பான் என்பார்கள்.
நாள் முழுதும் வேலை செய்தவன் சம்பளம் கேட்கிறான். விளக்கு வச்சாச்சு என்பான். இதயமுள்ள மனிதனா நீ? அப்படியென்று வேலை செய்பவன் மனதில் நினைத்து வெளியில் சொல்லாமல் இருப்பான். வினை சூழ்கிறது தம்பி. மனிதாபிமானம் இல்லை உனக்கு. உன் இதயத்தை உடைக்கவே முடியாது. இரும்பு கோட்டையை உடைத்தெரியலாம். உன் இதயத்தை உடைக்கவே முடியாது. உன் மனதை உடைக்கவே முடியாது. உன்னிடம் வேலை செய்தவனுக்கு பிள்ளை குட்டி இருக்கிறதல்லவா? அவன் அப்படியே வேலை செய்து மனம் துவண்டிருப்பான். ஏழு மணிக்காவது வேலையை முடித்துவிட்டு கூலி வாங்கி பிள்ளைகளுக்கு கஞ்சி வைத்துக் கொடுக்க நினைப்பான். ஆனால் இவன் விளக்கு வச்சாச்சு போ! என்பான். இப்படி சொல்லும் உனக்கு என்னடா விளக்கு? உனக்கு என்னடா ஆச்சாரம். இதயத்தில் தூய்மை இருக்கா உனக்கு.
                                                                                                                                                                                                       
ஆத்ம சுத்தி லேணிவார்க்கு
ஆசாரம் உல் எந்துக்கடா?
என்றார். இதயத்தில் தூய்மையில்லாவிட்டால் உனக்கு ஆச்சாரம் எதற்கு? உனக்கு என்ன விளக்கு? உனக்கு என்ன வெள்ளிக்கிழமை? உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா? இந்த சாங்கியத்தைக் கடைப்பிடிப்பதற்கு உனக்கு யோக்கியதை இருக்கிறதா? இதை தலைவன்தான் சொல்லவேண்டும்.
இதயத்தில் வன்மனம் உள்ளவர்கள் வன்மனத்தை எப்படி மாற்றவேண்டும். திருவருள் துணையில்லாமல் முடியவே முடியாது. புலால் மறுப்பது மட்டும் முக்கியமல்ல. திருவருள் துணை வேண்டும். தயை சிந்தை வேண்டும். உன் மனம் விடுமா உன்னை? உன்னை மனம்தான் விடுமா? மகன்தான் விடுவானா? மகள்தான் விடுவாளா? நல்லகாரியம் செய்து பாரேன். அதுவும் இளமையில் செய்து கொள்ள வேண்டும். இளமையில் புண்ணியத்தை தேடினாலன்றி இது உனக்கு தெரியாது. பிள்ளைகள் வளர்ந்து விட்ட பிறகு உன்னால் நல்ல காரியம் செய்ய முடியாது. பிறகு பார்த்துக் கொல்லலாம் என்று இருக்காதே.
இளமை இருக்கும்போதே செய்து கொள். ஆக இளமை இருக்கும்போதே செய்து கொள்ளலாம். விடுமா மனம்? லோபித்தனம் உன்னைப்போட்டு கசக்கி எடுத்து விடும். சரி இதற்கு என்ன உபாயம்? பல்லைக் கடித்துக்கொண்டு நீ அன்னதானம் செய் என்றார். என்னால் முடியவில்லையே என்றான்.
     சிலர் என்ன செய்வார்கள். அவன் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவான். அதைப்பார்த்து அள்ளிக் கொட்டிக்கொள்கிறான் பார் என்பான். ஆனால் இவனுக்கு சர்க்கரை வியாதி. கொஞ்சம்தான் சாப்பிடுவான். ஆனால் அவன் நல்ல புண்ணியவான், நன்றாக சாப்பிடுவான். அதைப்பார்த்து இவன் பன்றி போன்று தின்கிறான் என்பான். இவனிடம் வேலை செய்கிறவனுக்கு சோறு தர மாட்டான். எவன் எவனோ வந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பான். அவன் ஊரையே கூட்டி விருந்து வைத்துக் கொண்டிருப்பான். ஆனால் அங்குள்ள சமையல்காரன் இருப்பான், வேலைக்காரன் இருப்பான். இங்கே வா, சாப்பிடு, வீட்டிற்கு எடுத்துக் கொண்டு பொ என்று சொல்ல மாட்டான். பத்து மணி வரை எல்லோரும் அவனவன் வருவான், போவான், சாப்பாடெல்லாம் அப்படியே வீணாய் இருக்கும். சமையர்காரர்களையும், வேலைக்காரர்களையும் சாப்பிடு என்று கூட சொல்ல மாட்டான்.
       என்ன உனக்கு கருணை இருக்கிறதா? ஆக இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனிதாபிமானம் திருவருள் துணையில்லாமல் உணர முடியாது. முதலில் வேலை செய்கின்றவனையும் தொண்டு செய்கின்றவனையும் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அந்த அறிவு இல்லையென்றால் நீ என்ன மனிதன்? உனக்கு என்ன கல்வி? உனக்கு என்ன விளக்கு வச்சு போச்சு? என்ன சாத்திரங்கள்?
     ஆத்ம சுத்தி லேணிவார்க்கு
ஆசாரம் உள் எந்துக்கடா?
என்ன பட்டம்? என்ன ஆசாரங்கள்? எல்லாம் இருந்தும் உணரமுடியவில்லையே? உன்னிடம் வேலை செய்பவனைப் பற்றி உனக்கு தெரியவில்லையே. அவனிடம் நீ நல்லபடி நடந்து கொள்ளவேண்டுமே. இந்த பண்பு ஆசான் ஆசி இருந்தால்தான் வரும். திருவருள் துணையில்லாமல் இந்த பண்பு வராது. கடைசி வரையிலும் கரடு முரடான வாழ்க்கை வாழ்ந்து விட்டு அப்புறம் ஐயோ! ஐயோ! என்று என்ன செய்வாய்? ஆஸ்பத்திரியில் போய் ஊசி போட்டுக் கொள்ளலாமா? மருந்து சாப்பிடலாமா என்றால் ஒன்றும் நடக்காது, எடுபடாது.
எந்த வைத்தியம் செய்து நீ என்ன செய்வாய்? இந்த டாக்டரைப் பார்த்து என்னாச்சு? அந்த டாக்டரிடம் சென்று என்னாச்சு? எதுவும் நடக்காது. எந்த டாக்டர் வந்து என்ன செய்வாய்? உன் இதயத்தை பண்படுத்த வேண்டுமல்லவா? ஊசி மருந்தில் குணப்படுத்திவிடலாம் என்றால் இந்நேரம் உலகமே முன்னேறியிருக்குமே? அதெல்லாம் கிடையாது. ஏதோ முன் செய்த நல்வினை இருந்தால் கொஞ்சம் நல்ல மாற்றம் அடைந்திருக்கலாம். ஆக இந்த தீராத நோயெல்லாம் இருக்கும். இதெல்லாம் எதற்குச் சொல்கிறோமென்றால்,
திருவடியே சிவமாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல்கதி அது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே.
    திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 138
திருவடியை வணங்கினால் சிவமாகலாம். சிவலோக வாழ்க்கையாகிய மேற்கதி அடையலாம். அஞ்சேல் அஞ்சேல் என்று ஞானிகள் அருள்வார்கள். இது திருமந்திரத்தில் இருக்கும்.
     ஆகவே இப்போது நாங்கள் காட்டுகின்ற பாதை மனிதாபிமானத்தை ஊட்டக்கூடியது. நாங்கள் காட்டுகின்ற பாதை பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்று எண்ணத்தை ஊட்டக்கூடியது. நாங்கள் காட்டுகின்ற பாதை “பொருளாதாரம் உங்களை நரகத்திற்குள் தள்ளும்” என்று சொல்லக்கூடியது.
    
     நீ பொருளைப்பற்றி என்ன நினைக்கின்றாய்? எப்படியும் சேர்க்கலாம் என்று நினைக்காதே. நரகத்திற்குப் போவாய் என்று எண்ணு, என்பதுதான் நாங்கள் காட்டுகின்ற பாதை.
     எத்தனை ஜாதிவெறிகள்? எத்தனை மதவெறிகள்? எத்தனை கொடுமைகள்? எத்தனை பேராசைகள்? எத்தனை பொறாமைகள்? எத்தனை வஞ்சனைகள்? கடைசி நேரத்தில் நீ சிந்தித்து என்ன செய்வாய்? அணை போட வேண்டுமல்லவா? கடைசி நேரத்தில் நீ சிந்தித்து என்ன செய்வாய்? நெருங்க முடியாதல்லவா?
     ஆகவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பெரியாஸ்பத்திரிக்குப் போகவேண்டும். அங்கிருப்பவர்களை பார்க்க வேண்டும்.
     நாங்கள் சுடுகாட்டிற்கு அடிக்கடி போவோம், அங்கிருக்கும் எலும்புக்கூட்டை பார்ப்போம், அதில் பெண் எலும்புக்கூடும், ஆண் எலும்புக்கூடும் அருகருகே கிடக்கும். மண்டை ஓடும் கிடக்கும். அதில் சில எலும்புக்கூட்டிற்கு பல் இருக்காது. விகாரமாக முறைத்துப் பார்க்கும். விகாரமாக நம்மைப் பார்க்கும். நற நற என்று பல்லைக் கடிக்கும். ஏனைய்யா என்கிறான்?
     நான் அப்படித்தான் இருந்தேன். இப்போது என் கதியைப் பார். நீயாவது திருந்திக்கொள், அப்படியென்று நற நறவென்று பல்லை கடிப்பது போன்று இருக்கும். மண்டை ஓடு நம்மை ஏளனம் செய்து சிரிப்பது போன்று இருக்கும்.
     நான் அடிக்கடி மாவட்ட பெரியாஸ்பத்திரிக்கு போயிருக்கிறேன். இங்கே ஏன் அடிக்கடி வருகிறீர்கள் என்றார்கள். என் சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள், பார்க்க வந்தென் என்றேன். பார்த்தேன் அந்த கோலத்தை. வீர தீர பராக்கிரமம் உள்ளவனே உன் கதி என்ன என்று பார்த்தாயா? எத்தனை பேருக்கு இவ்வளவு கொடுமை செய்தாயே, நிலைமை என்ன என்று பார்த்தாயா, விபத்துக்குள்ளாகி கிடக்கின்றான், அங்கே சென்றிருக்கின்றேன், பார்த்திருக்கின்றேன்.
     சாலையில் செல்லும் காலத்தில் கோலூன்றி வரும் கிழவியைப் பார்த்திருக்கின்றேன், கோலூன்றி வரும் முதியவனைப் பார்த்திருக்கின்றேன், நோய் சூழ்ந்தவனைப் பார்த்திருக்கின்றேன், மாற்றுடை இல்லாமல் தடுமாருகின்றவனைப் பார்த்திருக்கின்றேன், என்னுடைய பார்வை அப்படி இருந்தது.
     இந்த அறிவு யார் கொடுத்தது? மகான் மாணிக்கவாசகரும், மகான் இராமலிங்கசுவமிகளும், மகான் அருணகிரிநாதரும், மகான் திருமூலதேவரும் கொடுத்த அறிவாகும். பூஜை செய்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது என்று சொல்வேன். ஆகவே இந்த காலகட்டத்தில் சிவபுராணம், கீர்த்தித் திருஅகவல், போற்றி திருஅகவல் ஆகிய நூல்களெல்லாம் தலைவன் பெருமையைப் பற்றிதான் பேசும். ஆனால் இந்த போற்றித்திரு அகவலில் ஒன்பது வரிகளுக்கு மட்டும் விளக்கம் சொல்லியிருக்கின்றோம். இன்னும் நிறைய இருக்கின்றது. நான் ஏதோ கொஞ்சம்தான் சொல்லியிருக்கின்றேன்.
     இங்கே வந்து நீங்கள் அமர்ந்திருக்கும் இடம், அன்னதானம் நடக்கும் இடம், எத்தனையோ ஏழை எளிய மக்கள் இங்கு வருகிறார்கள். வருகின்றவர்களிடம் என்ன ஜாதி என்று கேட்கமாட்டார்கள். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். நீ யார், இந்த சங்கத்தை எதிர்ப்பவனா என்று கேட்கமாட்டார்கள், அதுபோல் இனப்பாகுபாடு இல்லாது எல்லா இன மக்களும் அமர்ந்து பசியாறிய இடத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கின்றீர்கள், அவரிவர் என்ற பாகுபாடு இல்லாது அன்போடு உபசரித்து அன்னமிட்ட கைகள் இங்கேயிருக்கு. ஆண்களும் பெண்களுமாக இருக்கின்றார்கள். அன்னதானம் செய்து செய்து செய்து கரங்கள் எல்லாம் உரமேறி இருக்கு.
     அறம் செய்து கை உரம் ஏறியிருக்கு. அது போல் புண்ணியம் செய்த கைகள் இருக்கின்றன. அவர் கையால் உண்பதே புண்ணியம். அவர்களை பார்ப்பதே புண்ணியம், இது போன்ற ஞானிகள் அருளிய நூல்களை பாராயணம் செய்வதும், அதைக் கேட்பதும் புண்ணியமே, இங்கு வந்து போவது புண்ணியம்.
     மனிதாபிமானம் ஒன்றுதான் உண்மையான ஆன்மிகம் என்று உலகம் முழுவதும் சொல்லக்கூடிய காலம் வந்துவிட்டது. ஆகவே நீங்களெல்லாம் தலைவன், ஞானிகளை வணங்கி தினம் போற்றித்தொகுப்பைச் சொல்லி பூஜை செய்து ஆசி பெற்றுக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175099
Visit Today : 239
Total Visit : 175099

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories