12.11.1998 அன்று நடைமுறை ஆன்மிகம் என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை


நடைமுறை ஆன்மிகம்
12.11.1998 அன்று அருளிய அருளுரை 
ஓம் அகத்திசாய நம
அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
மனிதவர்கத்திற்கு சரியை, கிரியை பற்றித்தான் நாங்கள் சொல்லுவோம். அதுதான் சன்மார்க்கப் பாதை. சன்மார்க்கம் என்றாலே, பிறவிப்பிணிக்கு மருந்தாக உள்ள கருத்துகளை சொல்கின்ற சங்கம்தான் சன்மார்க்க சங்கம். நம் சங்கம் பிறவிப்பிணியைப்பற்றி நன்றாக உணர்ந்த சங்கம். பிறவிக்கு எது காரணம்? எந்தெந்த கொள்கையை கடைபிடித்தால் பிறவி நீங்கும்? எந்தெந்த கொள்கையை கடைப்பிடிக்காவிட்டால் பிறவி நீங்காது? என்று ஆராய்ந்து சொல்கின்ற சங்கம் நமது சங்கம் ஆகும். பொழுது போக்கிற்காக பேசுகின்ற சங்கம் சன்மார்க்க சங்கம் அல்ல.
     பிறவிப்பிணி பற்றி ஆராய்ந்து அதற்கு முடிவு காணத்தான் இப்போது நாம் இங்கு கூடியிருக்கிறோம். பிறவிப்பிணி, பிறவித்துன்பத்தைப் பற்றி பலமுறை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். என்ன காரணத்தினால் பிறவித்துன்பம் வருகிறது? எந்த காரணத்தைக் கொண்டு அதை நீக்கிக்கொள்ள முடியும்? இதற்கெல்லாம் நாம் சுட்டிக்காட்டுகின்ற ஒன்று, எல்லோருக்கும் புலப்படக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த கருத்துகளை அவர்கள் புரிந்துகொள்ள கூடிய அளவுக்கு, எந்தெந்த முறையில் எப்படிச் சொன்னால், புரியும் என்று சொல்கின்ற முறையோடு சொன்னால், அது பசுமரத்தாணிபோல் பதியும்.
     நாங்கள் சிக்கல் நிறைந்த ஒன்றைக் கற்றிருக்கிறோம். அது சிக்கல் நிறைந்தது என்பது எங்களுக்குப் புலப்படுகிறது. உங்களுக்கு அதை புரியும்படி சொல்வதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது. இந்த துறையைப் பற்றி நான் சொல்லும் கருத்துகள் முழுவதும் உங்களுக்குப் பூரணமாக புரிய வேண்டுமென்றால், நீங்கள் முன் ஜென்மத்தில் தவம் செய்திருக்க வேண்டும் அல்லது தர்மம் செய்திருக்க வேண்டும்.
     நீங்கள் முன்ஜென்மத்தில் செய்த தவமும், தர்மமும்தான் நான்  சொல்கின்ற கருத்துகளின் பொருளை உணர்கின்ற பரிபக்குவத்தை உங்களுக்கு தரும். ஒரு சிலர் அறிவார்கள், ஒரு சிலரால் அறிய முடியாது. ஏனெனில் முன் ஜென்மத்தில் அவர்கள் பிறப்பைப் பற்றிய ரகசியத்தை, பிறப்பைப்பற்றிய இழிவை, பிறவித்துன்பத்தைப் பற்றிய உண்மையை தெரிந்த மக்களாக இருக்க வேண்டும்.
     சிலர் பிறவித்துன்பத்தைப் பற்றிய உண்மையை துல்லியமாக அறிந்திருப்பார்கள். ஆனால் முயற்சியில் ஈடுபடமாட்டார்கள். ஆகவே ஒன்றை உணர்ந்தால் மட்டும் போதாது, உணர்ந்த ஒன்றை பின்பற்றக்கூடிய பரிபக்குவம் வேண்டும். அப்படி பின்பற்றக்கூடிய பரிபக்குவம்தான் முயற்சி. உண்மைப்பொருளை பற்றி அறிந்து, உணர்ந்து, தெளிந்து அதை பின்பற்ற முயற்சிக்காவிட்டால், அவர்களும் சாதாரண மக்களும் ஒன்றாவார்கள்.
     நாம் பேசுவது பின்பற்ற வேண்டிய ஒன்றா? சொல்வதைக் கேட்டுக் கொள்வதா? சொல்வதைக் கேட்டு பின்பற்றுவதா? கேள்வி ஞானமா? என்றால், நாங்கள் சொல்வதை கேட்டால் மட்டும் போதாது, சொல்வதை கேட்டு பின்பற்றவும் வேண்டும்.
     பின்பற்ற கூடிய மக்கள், ஆன்மாவைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். ஆன்மாவைப் பற்றி அறிந்தால் அவன் நிச்சயம் உடம்பைப் பற்றி அறிந்திருப்பான். உடம்பைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயம் அவன் ஆன்மாவைப் பற்றி அறிந்திருப்பான். இந்த துறைக்கு வருகிறவர்கள், ஆன்மாவைப் பற்றி பூரணமாக அறிந்திருக்க வேண்டும். அப்படி அறிந்திருந்தால்தான் அவர்கள் உண்மை தெரிந்த மக்களாக இருக்க முடியும்.
     ஆன்மா என்பது என்ன? உடம்பு என்பது என்ன? உடம்பின் இழிவுத்தன்மையை உணர்ந்தால், ஆன்மாவைப் பற்றி அறியலாம். ஆன்மாவுக்கு இழிவு இல்லை, ஆன்மா மாசற்றதுதான். ஆனால் ஆன்மா எங்கே மாசுபடுகிறது? இழிவுத்தன்மையுள்ள, கீழ்த்தரமான மாசுள்ள உடம்பில் ஆன்மா தாங்கும் போது, ஆன்மா மாசுபடுகின்றது. மகான் திருவள்ளுவர், மகான் அகத்தீசர், மகான் திருமூலதேவர் போன்ற ஞானியர்கள் ஆன்மாவை தூய்மைப்படுத்துவதற்காக உடம்பை தூய்மைப்படுத்துகின்றார்கள். உடம்பில் உள்ள மாசினை நீக்க முற்படுகிறார்கள்.
     உடம்பில் இருக்கும் மாசினை நீக்குவது என்பது சின்ன விசயமல்ல! கடினமான முயற்சி. மந்திரத்தால் மாசை நீக்க முயற்சித்தால் ஆன்மாவின் மாசு நீங்குமா? என்று ஆராய்ந்து பார்க்கும்போது, மந்திரத்தால் முடியாது.
     ஓதுகின்ற இந்த வேதத்தைக் கேட்டால், பிறவித்துன்பம் நீங்குமா? கும்பாபிஷேகம் பார்த்தால் பிறவித்துன்பம் நீங்குமா? என்று ஆராய்ந்து பார்த்தால், இது வீண் ஆரவாரம் என்று மகான் திருமூலதேவர் சொல்வார். பிறவித்துன்பத்தை நீக்க விரும்புகின்ற மக்கள் இதுபோன்ற ஆரவாரத்தில் ஈடுபட்டால், பிறவித்துன்பத்தை நீக்க முடியாது என்பது மகன் சிவவாக்கியர் கருத்து.
     சில தினங்களுக்கு முன்னே ஒரு ஊரில், கிட்டத்தட்ட முப்பது அடி அகலமுள்ள யாகத்தை வளர்த்து, வேதங்கள் முழுதும் துல்லியமாக கற்ற பல வேதியர்கள், சுற்றி அமர்ந்து, நான்கு வேதத்தையும் ஓதினார்கள். இப்படி ஓதுகின்ற மக்கள் பிறவித்துன்பத்தை ஒழித்தார்களா என்றால் இல்லை, நிச்சயமாக இருக்க முடியாது. அதே சமயத்தில் அந்த வேதத்தைக் கேட்கின்ற மக்கள்தான் பிறவித்துன்பத்தை ஒழித்தார்களா என்றால், அதுவும் இல்லை! யார்தான் பிறவித்துன்பத்தை ஒழித்தார்கள்?
     இந்த வேதத்திற்கும், ஆரவாரக் கூட்டத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்று உள்ளது. அதுதான் ஆன்மாவைப் பற்றி அறிகின்ற ஆற்றல். ஆன்மாவைப் பற்றி அறிகின்ற மக்கள், இந்த காரியத்தில் ஈடுபடமாட்டார்கள். பொழுதுபோக்கிற்காக அங்கே செல்வார்களே தவிர, அதனால் பெரும் லாபம் கிடைக்குமென்று போக மாட்டர்கள். இதை மகான் சிவவாக்கியர் சொல்வார்,
வேதமோது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரமோடிக் காதல்பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணையுண்ட அவனிருக்க நம்முளே
கோதுபூசை வேதமேது குறித்துப்பாரு மும்முளே.
    மகான் சிவவாக்கியர் – கவி எண் 527
வாக்கியன், சிவ வாக்கியன். சிவனிடமிருந்து வந்தது, அத்தனையும் முத்துக்கள், அவைகள் பிறவித்துன்பத்தை ஒழிக்கக்கூடிய மாமருந்துகள். வேதமோது வேலையோ வீணதாகும் பாரிலே என்பார்.
      இப்படி நான் பேசுவது யாரையும் புண்படுத்துவதாக நினைக்க வேண்டாம். சில தினங்களுக்கு முன்னே செய்தித்தாள்களில், கும்பாபிஷேகத்தைப் பற்றி, குடமுழுக்கைப் பற்றி, பிரம்மாண்டமான செய்திகள், பலவகையான புகைப்படங்களுடன் வந்தது. அதைப்பற்றி அரைப்பக்கம் எழுதி இருக்கிறார்கள். ஆக இவை அத்தனையும் வீண் ஆரவாரம்! ஞானிகள் கருத்துப்படி குற்றம்.
     நான்கு வேதத்தை சொல்லி யாகம் வளர்க்கிறார்கள், குடமுழுக்கு செய்கிறார்கள். இதை மகான் சிவவாக்கியர் வீணதாகும் பாரிலே என்று சொல்லும்போது, இது உலகத்திலேயே வீண் காரியம் என்கிறார். இது போன்ற குழி வெட்டி அதில் நெருப்பைப் போட்டு, சுற்றி உட்கார்ந்து கொண்டு, அதில் நெய் மற்ற உணவு பதார்த்தங்களை போட்டு யாகம் வளர்ப்பதெல்லாம் வீண்! என்று ஆசான் சிவவாக்கியர் சொன்னார். ஆசான் சிவவாக்கியர் சன்மார்க்கவாதியா? அல்லது துன்மார்க்க வாதியா?  ஆசான் சிவவாக்கியர் ஆத்திகவாதியா? நாத்திகவாதியா?
     அவர் நாத்திகவாதியல்ல! சுத்த ஆத்திகவாதி. ஆசான் சிவவாக்கியர் ஆன்மாவை அறிந்த மாமேதை. இந்த உலகத்தில் வீணான காரியம் எது என்றால், இந்த வேதம் ஓதுவதை கேட்பதும், படிப்பதும், வீணதாகும் பாரிலே என்று ஆசான் சிவவாக்கியர் சொன்னார். உலகத்திலே இதுபோன்ற காரியங்கள் எல்லா இடத்திலேயும் நடக்கும். இதெல்லாம் வீண் என்று மகான் சிவவாக்கியர் சொன்னார்.
     ஞானியர்கள் அத்தனைபேரும் நாத்திகவாதியல்ல, ஆத்திகவாதிகள். ஆன்மாவைப் பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள். ஆன்மாவில் உள்ள மாசை நீக்கியவர்கள். ஆன்மா மாசை நீக்குவதற்கு உடல் மாசை நீக்க வேண்டும். உடல் மாசை நீக்குவதற்கு வாசிப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பிராணாயாமம் என்று சொல்லப்பட்ட ரகசியத்தை உணர்ந்தவர்கள் ஞானிகள்.
     பிராணாயாமம் என்ற ரகசியத்தை அறிந்தாலன்றி, நிச்சயமாக ஆன்மா மாசு நீங்காது. பிராணாயாம, வாசிப்பயிற்சி,  மூச்சுக்காற்றின் ரகசியத்தை அறிந்த மக்கள்தான் பிறவித்துன்பத்தை ஒழிக்கமுடியும். பிறவித் துன்பத்தை ஒழித்து, பல கோடி ஆண்டுகளை நொடிப்பொழுதாக வாழக்கூடிய ஆற்றல் பெற்ற ஆசான் சிவவாக்கியர் இது வீணதாகும் பாரிலே என்று சொல்கிறார். இப்படி ஆசான் சிவவாக்கியர் சொன்னதை நாம் சிந்திக்க வேண்டும்.
     அப்போது வீண் எது? இது வீண் என்று சொன்னால், எது உண்மை? எது நல்ல காரியம்? நல்லகாரியம் என்பது அந்தரங்கத்தில் இருந்து பூஜை செய்து, தன்னை அறிந்து, தன்னுள் இயங்கக் கூடிய ஆன்மாவை அறிந்து, அந்த ஆன்மாவை வசப்படுத்த பாடுபடவேண்டும். அப்படி எவன் பாடுபடுகின்றானோ, அவன்தான் உண்மையான காயசித்தி பெற்றவன்.
வேதமோது வேலையோ வீணதாகும் பாரிலே
காதகாத தூரமோடிக் காதல்பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணையுண்ட அவனிருக்க நம்முளே
கோதுபூசை வேதமேது குறித்துப்பாரு மும்முளே.
    மகான் சிவவாக்கியர் – கவி எண் 527
காதகாத தூரமோடிக் காதல்பூசை வேணுமோ – காதல் என்பது தெய்வீகத்தன்மை பொருந்தியது. இறைவன் மீது ஒருவர் அன்பு செலுத்தினால் அதை காதல் என்று சொவார்கள். இறைவன் மீது அன்பு செலுத்துவதற்கு, ஊர் ஊராக சுற்றுவதா? அல்லது ஒரு இடத்தில் ஒடுங்கி தவம் செய்வதா? என்றால், ஊர் ஊராக சுற்றுவது பொழுது போக்கு நிகழ்ச்சியே தவிர, அதனால் எந்த பயனும் இருக்க முடியாது. அவர்கள் செல்வது ஏதோ சுற்றுலா நோக்கமே தவிர, அருளை பெற முடியாது.
காதம் என்பது பத்து மெயில், காதகாத தூரம் என்றால் நூறு மைல். தினமும் நூறு மெயில் சென்று ஊர் ஊராக சென்று பூஜை செய்வதால் எந்த பயனும் அளிக்காது.
காதகாத தூரமோடிக் காதல்பூசை வேணுமோ – காதல் என்பது அன்பு. எனவே, தினமும் நாட்களை வீணாக்காமல், ஒருவன் உருகி பூஜை செய்து இறைவன் மீது அன்பு செலுத்த வேண்டும். அவன் தினமும் விடாது பூஜை செய்ய வேண்டும். எந்த இடத்தில் இருந்தாலும், என்ன வந்தாலும், எத்தனை துன்பம் வந்தாலும், அவன் உள்ளம் உருகிப் பூஜித்தாலன்றி இந்த பிறவித் துன்பத்தை ஒழிக்க முடியாது. அவன் எங்கு சென்றாலென்ன?
காதகாத தூரமோடிக் காதல்பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணையுண்ட அவனிருக்க நம்முளே
கோதுபூசை வேதமேது குறித்துப்பாரு மும்முளே.
ஆதிநாதன் – பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் மற்ற எல்லோரும் உள்ளே இருக்கிறார்களென்று எவர் உணர்ந்தாரோ? அவர் தூரதூரம் போக வேண்டியதில்லை. நீங்கள் தினமும் பூஜை செய்ய வேண்டும். நீங்கள் பூஜை செய்யும் ஞானிகள் உண்மைப்பொருளை அடைந்தவர்கள், ஆற்றல் பெற்ற மக்கள், அத்தனைபேரும் வீண் நாட்கள் கழிக்காது பூஜை செய்தவர்கள், தவம் செய்தவர்கள். இந்த கருத்தை நாம் உங்களுக்கு சொல்லத்தான் வேண்டும்.
தவம் என்பதே ஞானிகளின் பாதத்தைப் பற்றுவதுதான். ஞானிகள் சொல்கின்ற கருத்துகளைதான் மேற்கொள்ள வேண்டுமே தவிர, மற்றதை எல்லாம் தள்ளு என்று சொன்னார். மற்றதெல்லாம் கல்வி கற்றவர்கள் சொல்கின்ற கருத்து அல்ல.
ஆதிநாதன் வெண்ணையுண்ட அவனிருக்க நம்முளே – எல்லா மக்களும், எல்லா தெய்வங்களும் நம்முள்ளே இருக்கிறார்கள். ஆக எங்கே தூய சிந்தை, உண்மைப்பொருளை அறிந்த அறிவு இருக்கிறதோ, அங்கே இறைவன் இருக்கிறான் என்று பொருள். இது ஞானிகள் கருத்து. இந்த கருத்துகளை உணர்ந்த மக்கள் பிறவித்துன்பத்தை ஒழிப்பார்கள்.
பிறவித்துன்பத்தை ஒழிப்பதற்கு தன்னை அறிய வேண்டும். தன்னை அறிந்தாலே தன்னுள் இருக்கும் ஆன்மாவை அறிகிறான். பிறகு வாசிப்பயிற்சி மேற்கொண்டு வாசிப்பயிற்சி செய்கிறான். உறுதிப்பொருளாக கண்ட பொருளை, உணர்ந்த ஒன்றை, தெளிந்த ஒன்றை, உணர்ந்து, தெளிந்து ஆராய்ந்து முடிவெடுத்த ஒன்றை, கைவசப்படுத்துவதற்காக உறுதியோடு நிற்கின்றான், உறுதியாக நின்று செயல்படுகிறான். இது தவிர, எதைச் செய்தாலும் வீண் ஆரவாரம் ஆகும். வீண் நாட்களை கழிப்பதாகும்.
உண்மைப்பொருளை அறிந்த மக்கள், ஆன்மாவைப் பற்றி அறிந்த மக்கள் உடம்பில் உள்ள மாசை நீக்குவதற்காக பாடுபடுவார்கள். இதை ஆசான் சிவவாக்கியர் சொல்வார்,
      எப்பிறப்பி லும்பிறந் திறந்தழிந்த ஏழைகாள்
      இப்பிறப் பிலும்பிறந் தென்னநீறு பூசுறீர்
      அப்புடன் மலமறுத்தே ஆசைநீக்க வல்லிரேல்
      செப்புநாத வோசையிற் றெளிந்துகாண லாகுமே.
    மகான் சிவவாக்கியர் பாடல்கள் – கவி எண் 423
எப்பிறப்பி லும்பிறந் திறந்தழிந்த ஏழைகாள்நம்மையெல்லாம் பார்த்து ஏழைகாள் என்கிறார். தெளிவான அறிவு இல்லையென்றால் அவன் சிறந்த செல்வந்தனாக இருந்தாலும் ஏழைதான். தெளிவான அறிவு என்பது சிறந்த செல்வம். தெளிவான அறிவு இல்லாத மக்களை ஏழை என்று சொன்னார். வசதி உள்ள மக்களை ஏழை என்றார். அவர் ஏகச்சக்கரவர்த்தியையும் ஏழை என்றார். அறிவில்லாத மக்களைப் பார்த்து ஏழைகாள் என்றார். எத்தனை கோடி இருந்தும் என்ன பயன்? கோடிக்கணக்கான பணம் இருந்தாலும் பிறவித்துன்பத்தை ஒழிக்க முடியாது. எமன் வந்தால் யாரால் தடுக்க முடியும்?
எமனை எவன் வெல்லுகின்றானோ அவன்தான் உண்மையான வசதியுள்ளவன். அவன்தான் சிறந்த செல்வம் உடையவன். அந்த அறிவுச் செல்வம் இல்லாவிட்டால் அவன் ஏழை.
     எப்பிறப்பி லும்பிறந் திறந்தழிந்த ஏழைகாள் – நாமெல்லாம் பலகோடி ஜென்மங்கள் எடுத்திருக்கிறோம். அதில் மனித ஜென்மம் மட்டுமல்ல, எத்தனையோ கோடி ஜென்மம் எடுத்துள்ளோம். எப்பிறப்பும் என்று சொன்னாரே! பிறப்பும் என்று சொல்லாமல் எப்பிறப்பி லும்பிறந் திறந்தழிந்த ஏழைகாள் என்று சொன்னார். ஊர்வன, நடப்பன, பறப்பன, நீர்வாழ்வன என்று சொல்லப்பட்ட ஏழு வகையான பிறப்பு தோற்றத்திலும், அவ்வளவு வகையான பிறப்பும்,பிறந்து இறந்து அழிந்த ஏழைகாள் என்று சொன்னார்.
இப்பிறப் பிலும்பிறந் தென்னநீறு பூசுறீர் என்றார். நீ விபூதி வைத்ததற்கு காரணம் என்ன? விபூதிக்குள்ள தாத்பரியம் என்ன? என்று கேட்டார்.
அப்புடன் மலமறுத்தே ஆசைநீக்க வல்லிரேல் – அப்பு என்றால் திரு நீர். மலம் என்பது மல ஜல சுக்கிலம். ஆசைக்கு காரணம் சுக்கிலம். ஒரு மனிதன் இதை அறிந்து விபூதி வைத்தால், அந்த விபூதிக்கு அளவில்லாத பெருமை. இந்த பொருளை அறிந்தவன் திருநீறு கொடுத்தால், அது பிறவிப்பிணிக்கு மருந்தாகும். அன்பர்கள் காலை எழும்போதே மகான் சட்டமுனிவர் சொல்வதுபோல்,
போடுவது திலதமடா மூலர் மைந்தர்
போகர் கருவூராரைத் தியானம் பண்ணு
நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
            நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா
ஏடுதனில் எழுதினதோர் பாடல் என்று
            எண்ணாதே ஒருநாளும் தப்போ இல்லை
தேடினபேர் பொருள்கோடி தனமீந்தாலும்
            செப்பாதே இக்கருவை (ரகசியத்தை) உலகத்தோர்க்கே.
    மகான் சட்டைமுனிதர் – கவி எண் 10
நமது  அன்பர்கள், விபூதி வைக்கும்போது, “திருமூலதேவா, திருமூலதேவா, அகத்தீசா, நந்தீசா, போகமகாரிஷி, காலாங்கிநாதா” என்று சொல்லி விபூதி வைப்பார்கள். ஆக இவர்கள்தான் உண்மையாக நெற்றியில் விபூதி வைக்கிறார்கள். இதனால் மற்றவர்கள் விபூதி பூசுவதை குறை சொல்லவில்லை. விபூதி எடுத்து நெற்றியில் வைக்கும்போதே “நந்தீசா, திருமூலதேவா, போகமகாரிஷி, காலாங்கிநாதா, சிவவாக்கியர் அவர்களே” என்று சொல்ல வேண்டும். இப்படி மகான்களின் நாமத்தை சொல்லி விபூதி வைத்தால் அவர்கள்தான் உண்மையாக விபூதி வைக்கிறார்கள் என்று அர்த்தம். அப்போது
எப்பிறப்பி லும்பிறந் திறந்தழிந்த ஏழைகாள்
இப்பிறப் பிலும்பிறந் தென்னநீறு பூசுநீர்
அப்புடன் மலமறுத்தே ஆசைநீக்க வல்லிரேல்
செப்புநாத வோசையிற் றெளிந்துகாண லாகுமே.
    மகன் சிவவாக்கியர் பாடல்கள் – கவி எண் 123
செப்புநாத வோசையிற் றெளிந்துகாண லாகுமேஇந்த ரகசியத்தை யார் துணை கொண்டு தெரிந்து கொள்ளலாம்? யோகியர்கள் ஞானிகள் துணை கொண்டு அறியலாம்.
ஞானிகளின் துணை கொண்டு மூச்சுக்காற்று, பிராணாயாமம் என்ற வாசியை யோகியர்கள் வசப்படுத்துவார்கள். இடகலை பின்கலை ஒன்றுபடும்போது இந்த காற்று உந்திகமலத்தில் தங்கினால், அந்த வினாடியே தசநாதம் கேட்கும். ஆரம்பத்தில் ஓங்கார ரீங்காரம் கேட்கும். இந்த ஓங்கார ரீங்காரம் நாம் தூங்கினாலும், தூங்காது கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த ஓசையே இவனுக்கு பல பாஷையை உண்டாக்கும், பல பாஷையை தெளிவுபடுத்தும். அந்த ஓசையை கேட்கின்ற மக்கள் உலகத்தில் அத்தனை கல்வியையும் கற்ற மக்கள். அதற்கு மேல் ஒரு கல்வியே கிடையாது. அவர்கள் அனைத்தையும் கற்றுவிட்டார்கள்.
செப்புநாத வோசையிற் றெளிந்துகாண லாகுமே – இந்த தசநாத ஓசையை காதால் கேட்கின்ற மக்கள்தான் ஆசையை ஒழிக்க முடியும். அதற்கு நாம் பாடுபட வேண்டும்.
இவர்கள் வைக்கின்ற விபூதி சிறப்பானது. அவர்கள்தான் யோகம் கைவரப்பெற்றவர்கள். இதை மகான் பட்டினத்தார் சொல்கிறார்,
காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான
ஊற்றைச் சடலத்தை யுண்டென் றிறுமாந்து                 
பார்த்திரங்கி யன்னம் பசித்தோருக் கீயாமல்
      ஆற்றுவெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே.     
                        மகான் பட்டினத்தார் – நெஞ்சோடு புலம்பல் – கவி எண் 16
                காற்றுத்துருத்தி என்ற ஒரு கருவி, காற்றை இழுக்கும்போது உப்பும், காற்றை ஊதும்போது சுருங்கிப்போகும். இந்த உடம்பு அதுபோன்று என்று சுட்டிக்காட்டுகிறார்.
     காற்றுத்துருத்தி என்ற கருவியை இழுத்தால் காற்று அதனுள்ளே நிரம்பி உப்பும், அந்த கருவியை அழுத்தினால் காற்றை ஊதும். முன்பெல்லாம் அதைப் பார்த்திருக்கிறோம். இப்போது அது கிடையாது. இப்ப கையால் சுற்றுவதுதான். இன்னும் சில கிராமங்களில் அதை வைத்திருக்கிறார்கள். அது தோல்பை போன்று இருக்கும். இழுக்கும்போது காற்று உள்ளே நிரம்பும், அழுத்தும்போது காற்றை வெளியே ஊதும்.
     இந்த உடம்பு காற்றுத்துருத்தி போன்றது. இந்த உடம்பாகிய காற்றுத்துருத்தி, கடையவினைக்குள்ளானது என்று சொல்லும்போது எல்லா வினைகளுக்கும் காரணமானது உடம்பு என்றார்.
     ஊற்றைச் சடலத்தை யுண்டென் றிறுமாந்து என்றார். இந்த உடம்பு நீடித்து இருக்கும் என்று இறுமாந்திருந்து மகிழ்ச்சி அடைகிறார்கள், பெருமை கொள்கிறார்கள். உடம்பின் இழிவைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை.
     பார்த்திரங்கி யன்னம் பசித்தோருக் கீயாமல்
            ஆற்றுவெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே.     
     பார்த்து என்பதே ஆராய்ந்து பார்த்து, சிந்தித்துப்பார்த்து, ஒன்றன் திறனைப் பார்த்து, உடையைப் பார்த்து, உலகத்தைப் பார்த்து, உற்றுப் பார்த்து, தெளிவாகப் பார்த்து, இப்படியெல்லாம் ஆராய்ந்து பார்த்து என்பதாகும். பார்த்து என்பதில் பல ரகசியம் உண்டு.
     ஒருவன் வரும்போதே கண்ணெல்லாம் இருண்டு, கண் பஞ்சடைந்து, சோர்வாக இருப்பான். இரண்டு நாளாக சாப்பிட்டிருக்க மாட்டான். அவனுக்கு தனது வீட்டிலாவது உணவு கொடுக்க வேண்டும் அல்லது யார் மூலமாவது ஏற்பாடு செய்ய வேண்டும். இப்படிப்பட்ட உணர்வு உள்ள மக்கள்தான் பிறவித்துன்பத்தை ஒழிக்க முடியும். இந்த உணர்வு உள்ள மக்கள்தான் பிரணவத்தை காதால் கேட்க முடியும்.
     ஓங்காரம் என்கிற பிரணவத்தை காதால் கேட்கின்ற மக்களுக்கு ஒரு கோடி நூல்களை, வேதங்களை ஒரு நொடிப்பொழுதில் கற்கின்ற ஆற்றல் இருக்கும். இப்படிப்பட்ட ஆற்றல் பசியாற்றுகின்ற உணர்வு இருந்தாலன்றி வராது.
     சிலபேர் விருந்தினாராக வரும்போது வெற்றிலைப்பாக்கு போட்டுக் கொண்டு வருவார்கள். அவர்களுடைய முகத்தினை பார்க்கும்போதே நிச்சயமாக அவர்கள் சாப்பிட்டிருப்பார்கள் என்று இவன் தெரிந்து கொள்வான்.
     ஒருவன் பசித்திருக்கிறான் என்பதை அவனுடைய தோற்றத்தை பார்க்கும்போதே தெரியும். இவன் நிச்சயமாக சாப்பிட்டிருக்கமாட்டான் என்பதை அந்த தோற்றத்தை பார்த்தே முடிவெடுத்து உணவு தரும் அந்த உணர்வுதான் ஓங்காரத்தை எழுப்பக்கூடியது. இந்த உணர்வு எங்கே இல்லையோ அங்கே ஓங்காரம் என்று சொல்லப்பட்ட பிரணவத்தை அறிய முடியாது.
      ஊற்றைச் சடலத்தை யுண்டென் றிறுமாந்து
      பார்த்திரங்கி யன்னம் பசித்தோருக் கீயாமல்
     இந்த ஈகை சிந்தை இல்லாத மக்கள் பிறவிப்பிணியை ஒழிக்க முடியாது என்பது நமக்கு தெரியும்.
     ஆற்றுவெள்ளம் போல அளாவினையே நெஞ்சமேஎன்றார். அவர்கள் கடைசி காலம் வரையில் இந்த உடம்பை உறுதி என்று நம்பி, இந்தப்பொருளை உறுதி என்று நம்பி, காலத்தை வீணாக்கி, அந்திம காலத்தில் தடுமாறுவார்கள். பெரும் ஆற்று வெள்ளம், ஒரு இடத்தில் நிலை கொள்ளாது, எங்கு பார்த்தாலும் அலை பாயும். அதுபோல வாழ்க்கையில் அலை மோதுவார்கள்.
     ஓங்கார தொனி கேட்ட, பிரணவத்தை அறிந்த மகான் பட்டினத்தார் இந்த ரகசியத்தை சொல்கிறார். நீங்கள் பின்பற்றுவதற்காக இந்த பாதையை அவர்கள் காட்டுகின்றார்கள். மக்களிடம் கருணை காட்டுங்கள்! கருணை இல்லாவிட்டால் நிச்சயம் பிரணவத்தை அறியமுடியாது. பிரணவத்தை அறியாமல் நீறு பூசி என்ன ஆகும்? என்றார்.
                எந்த நீறு பூசி என்ன பயன்? எந்த கும்பாபிஷேகம் பார்த்து என்ன? வேதம் ஓதுகின்ற தன்மையைப் பார்த்து என்ன? ஒன்றும் பயனில்லை.
     கருணை சிந்தையை பற்றிப் பேசுவதுதான் உண்மையானதாகும். மகான் பட்டினத்தார் இங்கே சொகிறார்,
     நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயமென்றே எண்ணிப்
பாக்கு அளவாம் அன்னம் பசித்தோர்க்கு அளிக்காமல்
போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் போது
ஆர்ப்படுவரென்றே அறிந்தலையே நெஞ்சமே.
    மகான் பட்டினத்தார் – நெஞ்சொடு புலம்பல் – கவி எண் 17
அங்கே உடம்பைப் பார்த்து காற்றுத் துருத்தி என்று சொன்னார். இங்கே நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேயெண்ணி என்கிறார். சில கேணிகளில் அடியில் வெப்பம் இருந்தால், வெப்பம் காரணமாக நீர்க்குமிழி உண்டாகும். காற்று உண்டாகி, நீர்க்குமிழியாக மாறி வெளியே வரும். அந்த நீர்க்குமிழி எந்த காரணத்தைக் கொண்டும் நிற்காது. முன்னே இந்த உடம்பை காற்றுத்துருத்தி என்று சொன்னார். பிறகு இந்த உடம்பை நீர்க்குமிழி என்று சொல்கிறார்.
இந்த நீர்க்குமிழி எந்த அளவிற்கு கீழே இருந்து எந்த வினாடி கிளம்புகிறதோ, மேலே வந்தவுடனேயே அது உடைந்து விடும். வரும்போது ரூபம் தெரியும். மேலே வந்தவுடன் அந்த நீர்க்குமிழி உடைந்துவிட்டால் அந்த ரூபமே தெரியாது. இந்த உடம்பை நீர்க்குமிழி வாழ்வு என்று சொல்கிறார். நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேயெண்ணி என்கிறார்.
இந்த உடம்பு அநித்தியமான உடம்பு. பாக்களவாம் அன்னம் பசித்தோர்க் களியாமல் என்றார். பாக்களவு என்றார், தேக்களவு என்று சொல்லவில்லை! தேக்கு என்றால் உங்களுக்குத் தெரியும். பெரியதாக இருக்கும். பாக்களவு என்று சொன்னார். சிறிதாவது கொடுக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும் என்று சொன்னார்.
இல்லையென்றால்,
போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் போது
ஆர்ப்படுவரென்றே அறிந்தலையே நெஞ்சமே.
      எமனை வெல்லுகின்ற மார்க்கம் எது? பாக்களவாது கொடுத்தால்தான் எமனை வெல்ல முடியும். இதுதான் மார்க்கம். இந்த மார்க்கத்தை பின்பற்றிதான் ஞானிகள் சித்தி பெற்றிருக்கிறார்கள்.
தனக்கு வந்த பொருளில் சிறிதாவது பிறர்க்கு கொடுக்க மனம் உள்ள மக்கள்தான் பிரணவத்தை அறிய முடியும், இல்லையென்றால் பிரணவத்தை அறிய முடியாது. பிரணவத்தை அறிவதென்றால் சின்ன விசயமில்லை. இந்த குணநலம், இது போன்ற கருணை சிந்தை உள்ள மக்கள்தான் பிரணவத்தை அறியமுடியும், பிறவித்துன்பத்தை ஒழிக்க முடியும், இல்லையென்றால் முடியாது.
போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் போது என்றார்.  போர்க்குள் எமதூதன் என்றால், சிலபேர், நோய் வந்து நான்கு வருடம் கட்டிலில் கிடப்பான். வாதம் போன்ற தீர்க்க முடியாத பிற நோய்கள் வந்தால், உடனே மரணம் வராமல், இழுத்துக்கொண்டு இருக்கும். தினம் கட்டிலுடன் அவன் போராடிக்கொண்டு இருப்பான். அப்படி புரண்டு படுப்பான், இப்படி புரண்டு படுப்பான், அம்மா! என்பான். ஆயா! என்பான். “யாரம்மா அங்கே இருக்கா” என்று அரற்றுவான். யார் காதிலும் விழாது! கூப்பிட்டுப் பார்ப்பான்.
ஒவ்வொருவரும்நாளும் பேத்தியைக் கூப்பிடுவான், மனைவியைக் கூப்பிடுவான், கூப்பிட்டு கூப்பிட்டு அவனுக்கும் சலித்துப்போச்சு. அவள் வந்து என்ன? என்ன? என்பாள். இப்படிப்பட்ட உபத்திரவம், துன்பம் தாங்காமல், நான்கு ஆண்டுகள் கட்டிலிலேயே படுத்துக்கொண்டு, வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் துன்பம் தருவான். இதை, போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் போது என்றார்.
உடனே மரணம் வந்தால் அப்போதே தீர்ந்து போகும். நான்கு ஆண்டுகள், கட்டிலிலேயே மலஜலத்தைக் கழித்துக்கொண்டு கிடப்பான்.
போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் போது
ஆர்ப்படுவரென்றே அறிந்தலையே நெஞ்சமே.
ஒருவன் கடைசி காலத்தில் படுத்தால் விடிவதற்குள் இறந்துவிட வேண்டும். நல்ல சாவு என்று சொல்ல வேண்டும். பிறவித்துன்பத்தை பொடியாக்குவதை பிறகு பேசிக்கொள்ளலாம். இப்போதுள்ள நிலையாவது மாறவேண்டும். அதுதான் சிவபதம் அடைந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பைப் பெருவதற்காவது நாம் பூஜை செய்ய வேண்டும். இந்த ரகசியத்தை அறிந்த மக்கள் இதற்கு வழி சொல்வார்கள்.
போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் போது
ஆர்ப்படுவரென்றே அறிந்தலையே நெஞ்சமே.
இதுபோன்று துன்பம் இல்லாமல் இருக்க, பாக்களவாம் அன்னம் பசித்தோர்க் களியாமல் சிறிதளவாவது உணவு கொடுத்தால், அந்த தருமம் இவனுக்கு வருகின்ற நோயைத் தடுக்கும். நான்கு ஆண்டுகள் கட்டிலில் படுத்துகிடக்கிறான். ஆனால் நான்கு ஆண்டுகள் கட்டிலில் படுக்கக் கூடாது. நம் அன்பர்களுக்கு அந்த நிலை வராது என்பதை நிச்சயமாகச் சொல்கிறேன்.
ஏனென்றால், ஞானிகள் அத்தனைபேரும் மரணத்தைப் பொடியாக்கக்கூடிய மாமேதைகள், அவர்களின் திருவடியைப் பற்றி பூஜை செய்தால்தான் உண்மை தெரியும். ஞானிகளெல்லாம் ஊழ்வினையை பொடியாக்கிய மக்கள், பிறவித்துன்பத்தை பொடியாக்கிய மக்கள். தனக்குள்ள இழிவு நிலையை தூள்படுத்திய மக்கள். அவர்கள் பாதத்தைப் பற்றும்போது நாம் பலகோடி ஜென்மத்தில் செய்த பாவத்தை அது நீக்கும்.
ஊழகற்றும் உண்மை உணர்விக்கும் ஞானியரின்
தாள்பற்றும் மக்களுக்குத் தான்.
                    தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிகர் அருளிய ஞானக்குறள் – குறள் எண் 2
                இதுபோன்று உள்ளம் உருக பூசித்த மக்கள், நான்கு ஆண்டுகள் கட்டிலில் படுத்துக்கொண்டு கஷ்டப்பட மாட்டான்.
     கட்டிலுக்கும் இவனுக்கும் போராட்டம், மனைவிக்கும் இவனுக்கும் போராட்டம், பிள்ளைகளுக்கும் இவனுக்கும் போராட்டம், பேத்திக்கும் இவனுக்கும் போராட்டம்.
     இப்படி ஊர் மக்களுக்கும், நண்பர்களுக்கும் போராட்டமாக இருக்கக் கூடாது. வீட்டில் உள்ள அத்தனை பேரும், இதற்கு முன்னே மிகவும் அன்பாக இருந்திருப்பார்கள். இவன் இரவு பகலாக ஐயோ! ஐயோ!  என்று அலறி அத்தனை பேருக்கும் துன்பத்தை கொடுப்பதால், “இவன் எப்போது தொலைவான்” என்று எல்லோரும் ஏங்குவார்கள். ஆனால், இவன் போகமாட்டான், வினையெல்லாம் தீர்ந்தால்தான் அல்லவா போவான்.
     சரி, கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கிறான், பாவம் செய்திருக்கிறான். வீட்டில் இருக்கும் அத்தனை பேர்களும் என்ன பாவம் செய்தார்கள்? என்று கேட்டான். இவனைப் பார்ப்பதே பாவம், இவனை கணவனாக அடைந்த பாவம் மனைவிக்கு, தந்தையாக அடைந்த பாவம் மகனுக்கு, தாத்தாவாக அடைந்த பாவம் பேத்திக்கு, அப்போது இவனைப் பார்ப்பதே எல்லோருக்கும் பாவம். நான்காண்டுகள் இவனாலே எல்லோரும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் அல்லவா!
     இந்த நிலை ஒருவருக்கும் வரக்கூடாது. பல ஜென்மத்தில் செய்த கொடும் பாவம் தீராத நோயாக இருக்கும். அந்த தீராத நோயை நீக்குவதற்குத்தான்.  
ஊழகற்றும் உண்மை உணர்விக்கும் ஞானியரின்
தாள்பற்றும் மக்களுக்குத் தான்.
                    தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிகர் அருளிய ஞானக்குறள் – குறள் எண் 2
முன் ஜென்மத்தில் செய்த கொடும் பாவத்தை நீக்கும், உண்மைப்பொருளை உணர்விக்கும், ஞானியரின் தாள்பற்றும் மக்களுக்குத் தான் என்றோம். முன் செய்த தீவினை நீங்கும், அதுமட்டுமல்ல, உண்மை உணர்விக்கும் என்று சொன்னோம். ஞானிகளின் திருவடிகளைப் பற்றுகின்ற மக்களுக்கு முன்செய்த வினை நீங்கும், அறிய முடியாத, பிறர் உணரமுடியாத, பிறர் சிந்திக்க முடியாத, பிறர் தொட்டுப்பார்க்க முடியாத, பிறர் அணுகமுடியாத ஒன்றை அறியமுடியும். ஞானிகள் திருவடியைப் பற்றினால், ஊழகற்றும் உண்மை உணர்விக்கும்.
அதுமட்டுமா ஒரு சில குடும்பத்திலே, தந்தை பிரபல்யமாக இருப்பான், கோடீஸ்வரனாக இருப்பான் அல்லது பெரிய தியாகியாக இருப்பான். அவருடைய பிள்ளைகள் “எங்கள் தந்தை பெரிய தியாகி” என்று சொல்வார்கள். அதேபோன்று மகான் இராமலிங்கசுவாமிகளுக்கு மகனாக இருந்திருந்தால், என் தந்தை இராமலிங்கசுவாமி என்று சொல்வார். கோட்ஸேவினுடைய மகன் அவ்வாறு பெருமையாக சொல்வானா? சொல்லமுடியாது.
தாழ்வகலும் தர்மம் தழைத்தோங்கும் நமக்கு
வாழ்வளிக்கும் ஞானியரின் வழிபாடே.
தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிகர் அருளிய ஞானக்குறள் – குறள் எண் 4
        சரி, தந்தை பெருமைக்குரியவனாக இருந்தால் சபையில் சொல்லலாம். தந்தை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போனால் சிறையில் இருக்கிறான் என்று எப்படிச் சொல்லமுடியும்? அதுமட்டுமல்ல, தந்தை குடிப்பழக்கம், சூதாடுகின்ற பழக்கம் கொண்டவனாக இருக்கிறான். மேலும் பொதுமகளிரிடம் சென்று பொருளை விரயமாக்கி நிறைய கடன் வாங்கிய தந்தையாக இருந்து, தலை குனியும்படி செய்திருப்பான். தந்தையினுடைய பலகீனமான அறிவு, சிக்கனம் கடைப்பிடிக்காமலோ அல்லது வீண் ஆரவார செலவு செய்துவிட்டு, பெரிய கடன் சுமையை உருவாக்கி வெளியே செல்லமுடியாத அளவிற்கு பலகீனப்படுத்திவிடுவான். அதையும் நீக்கும் என்று சொல்லியிருக்கிறோம்.
      தாழ்வகலும் – தந்தைக்கு உள்ள அவப்பெயர் நீக்கியிருக்கிறது என்று சொல்வார். தந்தை கொலைகாரனாக இருக்கலாம், குற்றவாளியாக இருக்கலாம், சிறைக்கு சென்றிருக்கலாம் அல்லது கடன் சுமைப்பட்டு பலரிடம் கடன் வாங்கி ஏமாற்றி இருக்கலாம். இவன் தந்தை யார்? என்று கேட்டால், ஊரை ஏமாற்றி எல்லோரையும் வஞ்சித்தவன் என்று எல்லோரும் இகழ்ந்து பேசுவார்கள். அவனுடைய மகனாக இருந்தாலும் சரி, ஆசான் அகத்தீசர் பாதத்தைப் பற்றினால் தாழ்வகலும் என்று சொல்லியிருக்கிறோம்.
      தர்மம் தழைத்தோங்கும் என்று ஞானியர்களே இதை எழுத சொன்னார்கள். இதை நாம் எழுதவில்லை. ஆசான் அகத்தீசர் ஆசியில் எழுதுங்கள் என்று அன்பர்கள் கேட்டார்கள், சில வாசகங்கள் அமைக்க வேண்டுமென்று கேட்கும்போது நான் சொல்லியிருந்தேன். தாழ்வகலும் – முன்னோர்களால் ஏற்பட்ட தாழ்வுகள், கெட்ட பெயர் அகலும். சில குடும்பத்திற்கு இவன் ஊரை ஏமாற்றிய குடும்பம், இவன் தந்தை கொலை செய்தவன், இப்படி பல்வேறு குற்றமுள்ள ஒரு பாரம்பரியமாக இருந்தாலும் சரி, ஆனால் ஞானியின் பாதத்தைப் பற்றினால், முன்னோர்கள் செய்த தீவினைகளால் வந்த அத்தனை கெட்ட பெயரும் நீங்கி, பெருமை உண்டாகும்.   
தர்மம் தழைத்தோங்கும் – தர்மம் என்பது இவன் தர்மத்தின் தலைவனாகிய அறக்கடலாக இருக்கக்கூடிய ஞானியின் பாதத்தைப் பற்றினால், இவனுக்கு தர்ம சிந்தனை வரும். தர்ம சிந்தனை வருவதற்குத்தான் தர்மம் தழைத்தோங்கும் என்றோம்.
தாழ்வகலும் தர்மம் தழைத்தோங்கும் நமக்கு
வாழ்வளிக்கும் ஞானியரின் வழிபாடே.
தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிகர் அருளிய ஞானக்குறள் – குறள் எண் 4
        முன்னோர்கள் செய்த தீவினைகள், முன்னோர்களால் ஏற்பட்ட இழிவு முன்னோர்களால் ஏற்பட்ட கெட்ட பெயர், குடும்பத்திற்கு வந்த இழிவு நீங்கி, இவனுக்குப் பெருமையை உண்டாக்கும் இந்தத் துறை. இத்தனையும் ஞானியின் பாதத்தைப் பற்றினால் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறோம். இதற்கு முன்னே ஆன்மாவைப் பற்றி பேசிக்கொண்டு வந்தோம். கடைசியில் ஒரு போது நடையை பேசியிருக்கிறோம்.
                உள்ளே தலைவனை கண்ட மக்கள், இந்த ரகசியத்தை அறிந்த மக்கள் வெளியே இல்லை. இந்த ரகசியத்தை அறிந்த மக்கள் எல்லோரும் உள்ளே தலைவனை அறிந்த மக்களே தவிர, புறத்தே தலைவனை கண்ட மக்கள் அல்ல. புறத்தே தலைவன் இருக்கிறான் என்று ஏமாற மாட்டார்கள். இதை மகான் சிவவாக்கியர் சொல்கிறார்,
     பேய்கள்கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை யேதடா !
தாய்கள்பால் உதிக்குமிச்சை தவிரவேண்டி நாடினால்
நோய்கள்பட்டு உழல்வதேது நோக்கிப்பாரு மும்முளே.
    மகான் சிவவாக்கியர் – கவி எண் 523
வாக்கியம் சிவவாக்கியம்!
     சுடுகாட்டை காக்க வைத்துவிடுவான். சிவபெருமானே சுடுகாட்டை காத்தவன். அந்த சாம்பலை நெற்றியில் பூசிக்கொள் என்று சொல்வான். ஏன், வேறு விபூதியே கிடைக்காதா? சுடுகாட்டில்தான் தில்லை நடராஜப்பெருமான் சுடுகாட்டு சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொல்வான். ஆனால் அப்படி அல்ல!
     ஆசான் சிவவாக்கியருடைய அமைப்பு என்னவென்றால், சொன்ன கருத்தை சற்றும், சற்றுமல்ல முற்றும்மாற்றி சொல்ல ஆசைப்படுபவர் அவர்.
     பேய்கள்கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே – சுடுகாட்டில் பேய்கள், பிணத்தை தின்று கொண்டிருக்குமாம்! அங்கேயே தலைவன் இருப்பான். பேய் இருக்குமிடத்திலா தலைவன் இருப்பான்? அவன் அன்புக்கடலாக இருக்கக்கூடியவன், பிறவித்துன்பத்தை ஒழிக்கக்கூடியவன், கேட்பதெல்லாம் தரக்கொடியவன்.
வேண்டும் வரங்கொடுக்கும் வேட்கை தவிர்க்கும்
யாண்டும் பற்றி நீபார்.
ஆறுமுக அரங்கமகா தேசிகர் அருளிய ஞானக்குறள் – குறள் எண் 1
என்று நாம் சொல்லியிருக்கிறோம்.
வேண்டும் வரங்கொடுக்கும் வேட்கை தவிர்க்கும் – நீ கேட்ட அத்தனையும் என்று சொல்லியிருக்கிறோம். அது மட்டுமல்ல, மனிதனை வஞ்சிக்கக்கூடிய ஆசையை நீக்கும்.
     அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
      வஞ்சிப்பது ஓரும் அவா.
    திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 366
ஆசையை முற்றும் ஒழித்தவனுடைய பேச்சு, செயல் எல்லாம் ஒருவகை துணிச்சலுடன் இருக்கும். ஐயப்பாடு இல்லாத ஒரு பொருளை துல்லியமாக அறிந்ததன் காரணமாக எங்களிடம் ஒரு வகை துணிச்சல் இருக்கும். எப்படி இருக்குமென்றால், இவன் என்ன செய்துவிடுவான்? அவனுக்கு என்ன தெரியுமென்று, அதுபோன்று ஒரு கர்வமல்ல, அகந்தை அல்ல, தெளிவு. பொருளை அடைந்ததனால் வரும் தெளிவு நிலை. 
பொருளறிந்த ஒரு ஆற்றல். உண்மைப்பொருளை உணர்ந்த ஆசான் ஆனதினாலே, அதனால் நாங்கள் பேசும்போது, ஒரு வகையான துணிச்சலான நிலை இருக்கும்.
ஒருவன் முகத்தைப் பார்க்கும்போதே, பேசிக்கொண்டிருக்கும்போதே “இவன் யார்” என்று ஆசானிடம் கேட்போம். யார் என்று கேட்ட அடுத்த வினாடியே ஆசான் எங்களுக்கு சொல்வார். உள்ளே வரும்போதே பேசிக்கொண்டிருக்கும்போதே வீழ்ந்து வணங்குகிறானென்றால் ஆசானிடம் “யாரப்பா” என்போம். “இவன் தகுதியுள்ளவன்” என்று ஆசான் சொன்னால் அதற்கு தகுந்தாற்போல் பேசுவோம். இல்லையென்றால் அன்பு காட்டமாட்டேன், ஆனால் இகழ்ந்து பேசமாட்டேன். அவனைப்பற்றி அப்போதே முடிவு எடுத்துவிடுவோம்.
அந்த வினாடியே நாங்கள் அளந்து வைத்திருப்போம். வினாடிக்குள்ளே! வினாடிக்குள்ளே பலவகையாக பிரித்து அளந்து நாம் இதயத்தில் வைத்திருப்போம். சரி, நீ எதற்கு வந்திருக்கிறாய்? என்பர் கேட்போம்.
கற்றுக்கொள்ள வந்திருக்கிறாயா? அல்லது கற்றுக் கொடுக்க வந்திருக்கிறாயா?
அவன் புகழுக்காக கற்றுக்கொள்ள வந்திருந்தால் அவனை திருப்பி அனுப்பிவிடுவோம். இப்படி ஒரு ஆற்றல் எப்படி வந்தது என்று கேட்டால், எந்த ஐயப்பாடும் இல்லாத ஒன்றை நான் கற்றதனால் ஒரு வகை தெளிவு எனக்கு வந்தது. எனக்கு இது தெரியும், ஆகவே யாருக்கும் பயப்பட மாட்டோம். அது அகந்தை அல்ல, தெளிவு. ஒரு பொருளை பூரணமாக  அறிந்ததனால் வந்தது.
அப்போது அவரிடம் என்ன சொல்வேன் என்றால், நான் அடைந்த பேரின்பத்தை நீ அடைய வேண்டுமென்றால் ஒரே ஒரு வழி. நான் கண்டுகொண்ட உண்மையைச் சொல்கிறேன். இந்த வாய்ப்பை நான் பெறுவதற்கு ஆசான் அகத்தீசர் திருவடியை நான் பற்றினேன். நீயும் ஆசான் அகத்தீசர் திருவடியை பற்றினால்தான் உனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். வேறு வழியே இல்லை என்று அவனிடம் அதைத்தான் சொல்வோம். நான் அதைத்தானே செய்திருக்கிறேன். நான் அப்படி செய்ததனால்தான் கிடைத்தது. நீ செய்தால் முன்னேறலாம். இதுதான் ஞானிகள் கண்ட உண்மை.
இல்லாவிட்டால் வேறு வழியில்லை. வேறு ஏதாவது செய்தால் உடம்பு வீணாகப்போகும். எடுத்த பிறவி வெகு விரைவில் வீழ்ந்து போகும்.
இதை நான் வெளியே சொல்வதற்கு எனக்கு என்ன தயக்கம் இருக்க முடியும். உயிரைப்பற்றிய ரகசியம், உடம்பைப்பற்றிய ரகசியம் தெரிந்து கொள்ள முடியுமா?
திருக்குறளில் மேலோட்டமாக பார்த்தால் சரியையும், கிரியையும் பற்றி தெரிந்துகொள்ளலாம். நீங்கள் அதை ஊடுருவிப் பார்க்க வேண்டும். அதை புரிந்து கொள்வதற்கு ஆசான் துணை வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்லும்போது,
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
    திருக்குறள் – ஊழ் – குறள் எண் குறள் எண் 373
நூல் என்று சொல்லாமல், நுண்ணிய – நுணுக்கமான நூல் பல கற்பினும் என்று சொன்னார். மெய்ப்பொருளை துல்லியமாக உணர்த்தக்கூடிய நூல்கள் கசடற கற்ற போதிலும், அவனவன் ஊழ்வினைக்கு ஏற்றாற்போலத்தான் அவனுக்கு உணர்த்தப்படும் என்று சொன்னார். ஊழ்வினை இல்லாத மக்கள்தான் திருக்குறளை படித்து அறிவார்கள்.
திருக்குறளில் உள்ள சாரத்தை நாங்கள் ஊடுருவி வருவதுபோல் மற்ற எந்த கல்வி அறிவு உள்ளவர்களுக்கும் முடியாது. அப்படி ஊடுருவி வர வேண்டுமென்றால், ஞானிகளின் திருவடியைப் பற்ற வேண்டும்.
நானூறு லாரி நூல்களை ஒரு நொடிப்பொழுதில் கற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல், படித்த உடனேயே அறிந்துகொள்ளக்கூடிய ஆற்றல், பார்க்கும்போதே தெரிந்துகொள்ளக் கூடிய ஆற்றல் ஞானிகளை வணங்கினால் வரும். அப்பேர்ப்பட்ட ஆற்றல் உடைய ஞானிகளை வணங்குவதாலே என்னால் அறிய முடிந்தது. இதுபோன்று ஞானிகளின் திருவடியைப் பற்றுகின்ற மக்களுக்குத்தான் புரிந்துகொள்ள முடியாத, அணுக முடியாத, அறிந்துகொள்ள முடியாத ஒன்றை புரிந்து கொள்ளமுடியும். இதுதான் நான் காட்டுகின்ற துல்லியமான பாதை.
ஞானிகளின் திருவடி பூஜையைப் பற்றி மக்களுக்கு சொல்ல வேண்டும். அப்படி மக்களுக்கு சொல்லி பூஜை செய்ய வைக்க வேண்டும். மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களையும் ஞானிகள் திருவடியைப் பற்றச் செய்து அவர்களும் இந்த ஆற்றலை பெறச் செய்ய வேண்டும். நாம் வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டு, பிறகு திடீரென மக்களுக்கு சொல்லக்கூடாது.
இவ்வளவு பெரிய கல்வியை ஆசான் அகத்தீசரும், மகான்களும்தான் தந்தார்கள். நாங்கள் பேசுகின்ற பேச்சு, கல்வி அறிவு உள்ள மக்கள் பேச முடியுமா? கற்றுக்கொண்டு பேசமுடியுமா? முடியாது அவ்வளவு தூய்மையானது.
     நீங்களும் இந்த வாய்ப்பை பெறக்கூடாதா? வாய்ப்பு இருக்கல்லவா! மனிதவர்க்கம் மேலே போய்க்கொண்டே இருக்கும். ஆனால் வெகு விரைவில் கீழே போய்விடும். காரணம் இவர்கள் முன் செய்த தீவினைதான். நாங்கள் வாராவாரம் பேசி அவனை சரியான இடத்திற்கு வரவழைக்க வேண்டும். இதைச் செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
மனிதவர்க்கத்தைப் பற்றி எங்களுக்கு தெரியும். மனிதனை தூக்கி விட வேண்டும். சரிந்து கீழே விழாமல் இருப்பதற்கு நாங்கள் முட்டுக்கொடுக்க வேண்டும். கீழே போகின்றானல்லவா அப்படி கீழே போகாமல் வாராவாரம் பேசி தூக்கிவிடுவோம். மல்லுக்கட்டி தூக்கி பார்ப்போம். இல்லாவிட்டால் கீழேயாவது விழாமல் இருக்க உதவி செய்வோம். அப்படி விழாமல் இருப்பதற்குத்தான் தூக்கிவிடுகிறோம். வாராவாரம் பேசுவது கைக்கொடுப்பதற்காகத்தான் தவிர, நான் ஏற்றி விடவில்லை. ஏற்றிவிடுவதற்கு ஏணியைப் பிடித்துக் கொள்வோம். ஏணியை கீழே இறக்கி விடமாட்டோம். அப்படியே ஏற்றிவிட்டுப் பார்ப்போம். முடிந்தவரைக்கும் “விடாதே ஏறு! விடாதே ஏறு!” என்று சொல்லிக்கொண்டிருப்போம். 
“நீ முன்னே வர, நாம் இரண்டுபேரும் முன்னேறலாம்! நாமெல்லாம் கூடிப்போகலாம்!” என்றுதான் சொல்வேனே தவிர, “உனக்கெல்லாம் ஏது ஞானம்” என்று சொல்லவே மாட்டேன். “உனக்கெல்லாம் அந்த வாய்ப்பு இல்லை” என்று சொல்லவே மாட்டேன். இவனுடைய ஊழ்வினை என்ன என்று எங்களுக்கு தெரியும்.
பெரிய ஆள் ஒருவன் வருவான். சன்னியாசம் மேற்கொண்டவன் என்பான். ஆளைப் பார்த்தால் அப்படியே சாட்சாத் சிவபெருமான் போன்றே இருப்பான். அப்படி பார்த்தவுடன் நல்ல தோற்றமாக இருக்கும். உடனே ஆசானிடம் “இவன் யாரப்பா? என்று கேட்டேன். அதற்கு ஆசான், “இவன் உண்மைப்பொருளை அறியாதவன்” என்று சொன்னார். வருகின்றவனை யாரென்று அறிகின்ற அந்த வாய்ப்பு எங்களுக்கு இருக்கல்லவா. கேட்ட அடுத்த வினாடியே “இவன் உண்மைப்பொருளை அறியாதவன்” என்றார்.
தன்னிடம் மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாக பேசிக்கொண்டிருந்தான். நான் பார்த்தேன், ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அவன் வந்து ஐயா! நான் இந்த துறையில் முன்னேற ஆசைப்படுகிறேன். நீர் இதற்கு ஏதேனும் உபாயம் கூற வேண்டுமென்று சொன்னால் நான் அவனை காப்பாற்றுவேன்.
நான் வாசியை அரைமணி நேரம் கட்டுவேன் என்று அவன் என்னிடம் சொன்னால், “என்னப்பா இது அதிசயம்! என்னால் நேற்று ஐந்து  நிமிடம் கூட வாசியை கட்ட முடியவில்லை. ஆனால் நீங்கள் அரைமணி நேரம் கட்டுகிறீர்கள், முன்னேறி விட்டீர்கள். இதெல்லாம் முன் சென்மத்தில் செய்த புண்ணியம்” என்று சொல்வோம்.
எனக்கு போதிய அளவு கல்வி அறிவில்லை. நீங்கள் அதிகம் படித்திருக்கிறீர்கள். உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு இந்த துறையில் நம்பிக்கை இல்லையென்று சொல்வேன். இது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டோம்.
அதே நபர் என்னிடம் “ஏதாவது சொல்லுங்க ஐயா” என திரும்பி கேட்டிருந்தால் நான் எவ்வளவு சொல்லியிருப்பேன், பாதையை வகுத்துக் கொடுத்திருப்பேன். ஆனால் அவன் தன்னுடையை ஆற்றலை வெளிப்படுத்தப் பார்க்கிறான். அரைமணி நேரம் வாசியை கட்டுகிறேன் என்கிறான். அப்படி சொல்லும்போது நீங்கள் அவனிடம் என்ன சொல்வீர்கள்? சொல்ல வந்தவனிடம் நாம் பேசுவது அவசியமா? இப்படி ஒரு வைராக்கியம் எங்களுக்கு வரும்.
     எனக்கு போதிய அளவு கல்வி அறிவில்லை. நீங்கள் அதிகம் படித்திருக்கிறீர்கள். உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு இந்த துறையில் நம்பிக்கை இல்லையென்று சொல்வேன். இது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டோம்.
     அதே நபர் என்னிடம் “ஏதாவது சொல்லுங்க ஐயா” என திரும்பி கேட்டிருந்தால் நான் எவ்வளவு சொல்லியிருப்பேன், பாதையை வகுத்துக் கொடுத்திருப்பேன். ஆனால் அவன் தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தப் பார்க்கிறான். அரைமணி நேரம் வாசியை கட்டுகிறேன் என்கிறான். அப்படி சொல்லும்போது நீங்கள் அவனிடம் என்ன சொல்வீர்கள்? சொல்ல வந்தவனிடம் நாம் பேசுவது அவசியமா? இப்படி ஒரு வைராக்கியம் எங்களுக்கு வரும்.
     இப்போது நாதவிந்து என்பது பற்றிய விளக்கம் வேண்டுமென்று அன்பர் கேட்கிறார்.
அகரந்தான் பரவெளியி லொளிவுண்டாச்சு
அதில் நின்றே காற்றுடனே நெருப்புண்டாச்சு
இகரந்தான் தண்ணீர்மண் ரெண்டாச்சு
இதில்நின்றே ஜீவாத்மா தோன்றலாச்சு
உகரந்தான் பூமிபரு வாதமாச்சு
உகந்ததொரு நான்குவித யோனியாச்சு
ஒகரசுழி வட்டமெழு தோற்றமாச்சு
உண்மைபரா பரத்தினுட செயல்தானாதி.
    சுப்பிரமணியர் ஞானசைதன்யம் – கவி எண் 108
     
ஒளியின் காரணமாகத்தான் காற்று, அக்கினி அப்புறம்தான் ஜீவாத்மா தோன்றியது. அதே இயற்கை எங்கும் வியாபித்த ஒரு பரம்பொருளாக இருக்கிறது. இதை மகன் இராமலிங்கசுவாமிகள் சொல்லியிருக்கிறார் அல்லவா! இந்த கவியை சொல்லும்போது நீங்கள் கவனிக்க வேண்டும்,
ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்னமுடியா அவற்றின்
ஒராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
உற்றகோ டாகோடியே
திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
சிவஅண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
சீரண்டம் என்புகலுவேன்
உருவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
உருசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
ஒருபெருங் கருணைஅரசே
மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
வரந்தந்த மெய்த்தந்தையே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.
    திருஅருட்பா – ஆறாம் திருமுறை – கவி எண் 1359
அணு என்பதே சிறியது, சிறு அணுக்கள். சிறு என்று சொல்லும்போது கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறு அணுக்கள். அப்போது எவ்வளவு உலகங்களுக்கும், பல கோடி அண்டங்கள் உலகங்கள் இருந்தாலும், சிறு சிறு அணுக்களாக ஊடசைய அவற்றின் நடுவில்  நடனமிடுகின்ற ஒருபெரும் கருணை அரசே என்றார்.
அப்படி சிற்றணு என்று சொல்வதற்கு காரணம், ஜீவன் என்பது சிற்றணு. அந்த சிற்றணு என்ன செய்யுமென்றால் பல கோடிக்கணக்கான அணுக்களை உருவாக்கி ஒரு இயக்கத்தை உண்டாக்கும். அதுதான் பரிணாம வளர்ச்சி. இந்த பரிணாம வளர்ச்சி எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. குரங்குக்கும் இருக்கிறது, மனிதனுக்கும் இருக்கிறது, எல்லா ஜீவராசிகளுக்கும் இருக்கிறது. சிற்றணு எந்தெந்த உடம்பில் சார்கிறதோ, அந்தந்த உடலுக்கு ஏற்றாற்போன்று, சிற்றனுக்கள் சிந்தனையாக மாறுகிறது.
     நாய், நரியுடன் புணர்ந்தால், அது நாய்க்கு உள்ள சுக்கிலம்தான். நாயின் சுக்கிலத்தை கொண்டுதான் உருவாகும். அப்போது ஒரு பொருளைக்கொண்டுதான் ஒன்றை உருவாக்க முடியும். நரி உடம்பில் இருக்கும் சுக்கிலத்தை நாய் உடம்பில் செலுத்துகிறான். அப்படி சேர்க்கும்போது அது கலப்பினமாக இருக்கல்லவா.
ஆனாலும் ஒன்றைக் கொண்டுதான் செய்ய முடியுமே தவிர, இயற்கையில் உள்ள சிற்றனுவைக் கொண்டுதான் செய்யமுடியுமே தவிர, இவன் செயற்கையாக செய்ய முடியாது. செய்தாலும் அந்த நரிக்குள்ள குணம் நாய்க்குள்ள குணம் இரண்டும் சேர்ந்து வேறு ஒரு குணமாக இருக்கும். சிங்கத்தின் சுக்கிலத்தை எடுத்து புலிக்கு செலுத்துகிறான். ஆக ஆதியாக இருந்தது சுக்கிலம்தானே.
     இயற்கை என்பது ஆதியில் இருந்த ஒரு பொருளாக இருக்குமே தவிர செயற்கை அல்ல. ஒரு சுக்கிலத்தை எடுத்து சேர்க்கிறானே தவிர, குணங்கள் அந்த இரண்டும் சேர்ந்த இரட்டை குணமாக இருக்கும். அந்த உடம்பின் குணம், இந்த உடம்பின் குணம், நாய்க்குள்ள குணம் அல்சேசன் என்று சொல்கிறார்களல்லவா. அது நரிக்கும் நாய்க்கும் பிறந்தது. நாய்க்குள்ள வீரம் நரிக்குள்ள தந்திரம், இரண்டும் சேர்ந்து இருக்கும்.
     ஆனால் அப்படி செய்த போதிலும் இயற்கையாக உள்ளதை மாற்றமுடியாது. நாய்க்குள்ள சுக்கிலம் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. அந்த சுக்கிலம் நாதவிந்து. அந்த விந்தை கூட்டுப்பொருள் ஆக்கினான். கூட்டுப்பொருள் ஆக்கும்போது அதற்குள்ள குணாதிசயம் மாறி இருக்கும்.
    
     அந்த உடம்பினுடைய குணாதிசயம் வேறு, இந்த உடம்பினுடைய குணாதிசயம் வேறு. இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று கலப்படமாக இருக்கல்லவா. கலப்படமாகி தந்திரமும், வீரமும் அங்கே இருக்கிறது. சேர்க்கை என்பது ஆதி என்ற பொருளை வைத்துதான் செய்ய முடியுமே தவிர செயற்கையா அல்ல! அதேபோன்று மற்ற இனங்களும்.   
     ஒரு ஆணும் பெண்ணும் கூடுகிறார்கள். அவளுக்கு சிறப்பறிவு இருக்காது. சிறப்பறிவு உள்ளவன் அவளைக் கூடுகின்றபோது கரு உண்டாகும். அவளிடம் இருந்தது ஐந்து சதவீத அறிவுதான். இவனிடம் நூறு சதவீதம் அறிவு இருக்கிறது. அந்த நூறு சதவீதமும் ஐந்த சதவீதமும் சேர்ந்து நூற்று ஐந்தாச்சு. அந்த குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தாயின் அறிவு சிறிது இருந்தாலும், தந்தையின் அறிவு சிறப்பாக இருந்தது. அப்போது கூட்டுப்பொருள். என்னதான் இப்படி செய்தாலும் இயற்கையைக் கொண்டுதான் மாற்றம் செய்யலாமே தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாது. 
                நரிக்குறவன் கோழி வளர்க்கும்போது, கோழியை கழுகுடன் கூட்ட நினைக்கிறான். ஆகாயத்தில் பறக்கும் கழுகு கோழியுடன் கூட்ட இவன் சிந்தையில் நினைக்கிறான். இவன் நினைக்கிறான், ஆனால் எந்த ஜீவராசியும் தானாக கூடாது. இவனுடைய சிந்தனை என்ன ஆகிறது? அது கூடுகிறது. இயற்கைக்கு மாறுபட்டு அது சேர்கிறது. எந்த ஜீவராசியும் இயற்கைக்கு மாறுபட்டு போகாது. ஆரம்பத்தில் இருந்த மழைநீர்தான் எல்லா உயிரிலும் சுக்கிலமாக இருக்கிறது. அந்த சுக்கிலம் எல்லா உயரிலும் இருந்தாலும், மனிதன் அந்த சுக்கிலத்தில் உள்ள மாசை நீக்க முயற்சிக்கிறான்.
     ஆரம்பத்தில் வந்த மழைநீர்தான் சுக்கிலமாக இருக்கிறது. அந்த உடம்பில் இருக்கும் திரவப்பொருள் முழுவதும் மழைநீர்தான். வெளியே இருக்கும்போது தனித்தனியாக இருக்கும். கூட்டுப்பொருளாக உடம்பில் சாரும்போது என்னாகும்? எல்லா கருவிகளும் சேர்ந்துகொண்டு அதை சுக்கிலமாக மாற்றிவிடும். சுக்கிலம் திரவப்பொருள்தானே. இந்த திரவப்பொருளுக்கும் மனிதனுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. இதுவும் திரவப்பொருள். அதுவும் திரவப்பொருள். ஆனால் மாற்றத்தின் காரணமாக, இது மாற்றுகிறது.
     அந்த உடம்பில் இருக்கும் மற்ற கருவி கரணங்கள் மாற்றும் போது, அது மாசுபடுகிறது. இவன் அந்த மாசை நீக்குவதற்குதான் பிராணாயாமம் செய்கிறான், வாசிப்பயிற்சி செய்கிறான்.
     பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னே ஒரு மனிதன் தோன்றினான். அந்த மனிதனுக்குள்ளே இன்னொரு மனிதனை தோற்றுவிப்பதற்கான ஒரு வித்து இருக்கிறது. இறப்பதற்கு முன்னே, அவன் ஒரு பெண் குழந்தை, ஆண்குழந்தை என நூலு குழந்தையை பெற்றெடுக்கிறான். அப்போது ஒன்று பல ஆகிறது. நான்கு மகன், இரண்டு மகள். இந்த ஆறு பேருக்குமே தந்தையின் விந்து மகனுக்கு இருக்கிறது. அதுதான் ஆதி. நாத விந்துதான் ஆதி. சுக்கில சுரோணிதம் ஆதி.
     யோகிகள், இந்த ஆதி என்று சொல்லப்பட்ட இயற்கையை நாடுகிறான். நாடித்தான் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறான். மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டுமென்றால் இவன் அதை அறிய வேண்டும். ஆதியை அறிய வேண்டும். விந்தைக் கட்டாவிட்டால் ஜீவன் போகும். அடுத்த வித்தை உண்டாக்கினானே தவிர, அவன் விந்தைக்கட்டவில்லை. அது மிகப்பெரிய ரகசியமப்பா! விட வேண்டியதை விட்டுவிட்டு, கட்ட வேண்டியதைக் கட்ட வேண்டும். கழிவான விந்தை விட்டு விட்டு, சுத்தமான விந்தைக் கட்ட வேண்டும்.
     மகான்கள் திருமணம் செய்வார்கள். மகான் அருணகிரிநாதர் ஆரம்பத்தில் உடம்பின் மாசு நீங்குவதற்கு ஒரு முறையை பின்பற்றினார்கள். அனுதினமும் மும்மலத்தை அறுக்க மாட்டார்கள். ஒன்று, தானாகப் போய்விட வேண்டும், இல்லாவிட்டால் கூட்டுறவினால்தான் சரிப்படுத்தமுடியும். இதெல்லாம் பேசக்கூடாத ரகசியம் தான். சரி, பேசுகிறோம். எதிர்ப்பு வந்தால் நிறுத்திக்கொள்வோம்.
     எந்த விந்துவால் தோன்றினானோ, அந்த விந்தை கட்டுகிறான். விந்து என்பது ஆன்மா. இது சிற்றணு. அந்த ஆன்மா விந்தாகவும் இருக்கிறது. ஆன்மா என்றால் உயிர்.
     உயிர் விந்து, விந்துதான் உயிர். அதுதான் ஆதி. அதை நாடி தன்வசப்படுத்துகிறான். இதுதான் பெரிய ஒரு வாய்ப்பு. அதை அதிகமாக பேசக்கூடாது என்று நினைக்கிறேன்.
     இதுபோல் ஆதியை நாடுவதற்கு பரவீதியை நாடுகின்றான் என்று ஒரு பொருள் உண்டு. பரவீதியை நாடுகிறான் என்றால் ஆதியை நாடுகின்றான் என்று அர்த்தம். ஆதி என்கிற வார்த்தையே நான்காம் படி. நான்காம்படியாகிய இதைப்பற்றி, பேசும்போது உங்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். பக்தி நெறியைத்தான் நாங்கள் போதிக்க வேண்டும். இதுதான் அடிப்படை கருத்து. இதை மகான் திருமூலர் சொல்வார்,
சார்ந்தவர்க் கின்பங் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.
    திருமந்திரம் – இதோபதேசம் – கவி எண் 2114
சார்ந்தவர்க்குத்தான் இன்பம் கொடுக்கும் என்று சொன்னார். தழல்வண்ணன் என்று சொன்னால் அவன் நெருப்பு வடிவானவன். அவனைச் சாரும்போது, இன்பத்தைக் கொடுக்கும் என்று சொன்னார். அப்படி சாராவிட்டால் பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி என்றார். இன்னா பிறவி என்றால் துன்பமான பிறவி, துயரமான பிறவி. இதற்குதான் முதலில் சரியை கிரியை மார்க்கத்தை சொல்ல வேண்டும்.
பக்தி என்று சொல்லும்போது சிறுதெய்வத்தை சிலபேர் வணங்குவார்கள். மாரியாயி, காட்டேரி, பிடாரி, ஜடாமுனி, சட்டிகருப்பு என பல சிறு தெய்வங்கள். திருச்சி போகும்போது சட்டிகருப்பை பார்த்திருப்பீர்கள். சட்டி கருப்பாகத்தான் இருக்கும், கருப்பு என்றால் பேய். சில இடங்களில் இந்த சிலைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கண்ணும் பெரிதாக இருக்கும். அதைப் பார்த்தால், மறவாழி மன்னன் என்று சொல்வார், அறவாழி அந்தணன் என்று சொல்லமாட்டார்.
இவன் வணங்கும் தெய்வமே இவ்வளவு கடுமையாக இருந்தால், இவன் மட்டும் எப்படி இருப்பான். இதுபோன்ற தெய்வத்தை வணங்கியா ஞானியாக முடியும்?
     சாமியைப் பார்க்கும்போதே ராட்சதன் மாதிரி தெரியும், பயந்து விடுவான். அதுபோன்ற சிறுதெய்வ வழிபாடு செய்து, மக்கள் தங்களுடைய வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டார்கள்.
     நமது நாடு விவசாய நாடல்லவா. அவன் வீடு இங்கிருக்கும். அவன் நிலம் ஒரு மைல் தொலைவில் இருக்கும். இதுபோன்ற சிறுதெய்வத்தை வணங்கிவிட்டு காட்டுக்குப் போவான். அப்படி போகும்போது அவன் கூட வந்துகொண்டே இருக்கும். சிறுதெய்வம் தானே, அவனுக்கு நடுஜாமத்தில் போகும்போது, அச்சமில்லாமல் சென்று அந்த கடமையைச் செய்வதற்கு அதெல்லாம் வேண்டும் என்றார்கள். சிறுதெய்வம் உண்டு. அதெல்லாம் விடுபட்ட ஆன்மா.
     பூஜை செய்யும் அரைகுறை மக்கள், மூச்சைக் கட்டுவான். அவனுடைய சிந்தை உயர்ந்த சிந்தை. வாசி வசப்பட்டால், பிராணாயாமம் என்று சொல்லப்பட்ட ரகசியத்தை அறிந்தால், நாம் சாக மாட்டோம் என்று, மூச்சைக் கட்டுவான், வாசியை கட்டுவான், கண் வெடித்து, மூக்கு வெடித்து இரத்தம் வரும். காது வழியாக, கண் வழியாக மூக்கு வழியாக இரத்தம் வந்து சாவான்.
     நல்ல சிந்தைதான். நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால் அந்த செயல் முறை சரியில்லாமல் இறந்து போய்விட்டான் என்றால், அதற்கு ஆசான் என்ன செய்வான். அவனவன் இஷ்டத்திற்கு வாசி கட்டுவேன் என்பான், கட்டிவிட்டு இதுபோல் இடைப்பட்ட வாழ்வு. சாதாரண இல்லறத்தான் எண்பது வயது வரை வாழ்ந்து சாவான். நேற்று ஒருவரைப் பார்த்தேன் தொண்ணூறு வயதாகிறது. அவர் இன்னும் நன்றாக என்னிடம் பேசுகிறார். அவரவர்கள் நல்லபடி வாழ்ந்து சாகிறார்கள்.
     வாசிப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறானல்லவா, அவன் கிராணி வந்து, இருமல் வந்து கைகால் வீங்கி சாவான். இதுபோன்று சாகும்போது சிலர் தெய்வமாகலாம். ஆசான் சுப்பிரமணியர், “தேவதைகளெல்லாம் நான் தான் உருவாக்கினேன்” என்று சொல்கிறார். “எல்லா தேவதைகளையும் நான் தான் உருவாக்கினேன்.” என்றார்.
     எல்லா தேவதைகளும், ஜடாமுனிகளும், காட்டேரிகளும், பிடாரிகளும் அவரால் உருவாக்கப்பட்டதுதான். சிறுதெய்வங்களை, ஞானிகளுக்கு இடையூறு வராமல் தடுப்பதற்காக ஆசான் சுப்பிரமணியர் உருவாக்கினார்.
     கஜமுனி கூட இருக்கிறது நான் பார்த்திருக்கிறேன். ஒரு பையனை பிடித்தது. அப்படி பிடித்ததால் இறந்தவர்களும் இருக்கிறார்கள். வீரர்கள் போர்க்களத்தில் இறப்பார்கள் அல்லவா! சிறந்த வீரர்கள், அவர்கள் இறந்தாலும் இப்படி தெய்வமாகி விடுவார்கள். அப்படி தெய்வமாகலாம். ஆனால் அதை வைத்து பூஜை செய்வதால், எந்த ஆற்றலும் இல்லை. ஏதோ பொழுபோக்கு நிகழ்ச்சியே தவிர அதை வைத்து அருளை பெற முடியாது.
     ஞானிகள் சொல்வதெல்லாம் வேறு பாதை. யாரை பூஜை செய்ய வேண்டும்? என்ன செய்து நீ அருளை பெற முடியும்? பூஜை செய்வதற்குரிய நோக்கம் போன்றவற்றை சொல்வார்கள். மகான் திருமூலர் அறவாழி அந்தணன் என்று சொல்வார்.
பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.
    திருமந்திரம் – திருவருள் வைப்பு – கவி எண் 1803
அறக்கடலாக இருப்பவர்கள்தான் ஞானிகள், அன்பே வடிவானவர்கள். இவர்களின் பாதத்தைப் பற்றும்போதுதான், நம்முடைய பிறவித்துன்பம் அற்றுவிடுமே தவிர, சிறு தெய்வத்தை வணங்குவதால் ஏது ஆதாயம்?
நாம் போகும்போது ஜல் ஜல் என்று கூட வரும். இந்த சிறு தெய்வத்தால் என்னாகும் என்றும், “இந்த கருப்பனாரால் என்னடா ஆகும்” என்று சமையற்கட்டில் வேலை செய்யும் இரண்டு பையன்கள் சொன்னார்கள். இரண்டு பேரையும் அடித்தது பாருங்க! அப்படியே கீழே விழுந்துவிட்டார்கள.
அதுபோன்று சில சேட்டையெல்லாம் செய்யும். இந்த கருப்பு நம்மை என்ன செய்யும் என்று சொல்லியதால், அடுத்த நிமிடமே இரண்டுபேரையும் சைக்கிளில் இருந்து தள்ளிவிட்டது. அப்படியே கீழே விழுந்து விட்டார்கள்.
ஆனால் “என்னடா அகத்தியர்” என்று சொன்னாக்கால், ஒன்றும் பேசமாட்டார்கள். என்ன அகத்தியராவது வெங்காயமாவது என்று சொல்லிவிட்டானென்று வைத்துகொள்ளுங்கள். அப்படியே பேசாமல் இருப்பார்கள். ஏனென்றால் அவன் அறியாமல் பேசுகிறான். அதை மன்னிக்கும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு. ஆனால் அந்த துஷ்ட தேவதைகள் உடனே தண்டித்துவிடும். இதையே நாங்கள் பேசினால் ஒன்றும் செய்யாது. சாதாரண மக்கள் பேசினால் பிரச்சனைதான்.
ஆகவே குற்றத்தையெல்லாம் பொருத்துகொள்கின்ற பண்பு ஞானிகளுக்கு உண்டு. எவ்வளவு தாக்கி பேசினாலும், அப்படியே அணைத்துக்கொண்டு போவார்கள். உடனே தெரியாது. குற்றம் செய்வதே சிறிதும் தெரியாது. அதனால்தான் தர்மவானாகவும், அறக்கடலாகவும், அருட்கடலாகவும் இருக்கின்ற காரணம் இந்த பண்பிலிருந்து வருவதனாலே! அவர்களை வணங்கும்போது அது போன்ற நல்ல குணம் நமக்கு வரும்.
கள்ளமகன்று கருத்தில் தெளிவு வருங்காண்
வள்ளலார் வழிபாட்டில் தான்.
தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிகர் அருளிய ஞானக்குறள் – குறள் எண் 10
கள்ளம் இருக்காது, கருத்தில் தெளிவு வரும், வள்ளலாரை வழிபட்டால். வணங்கும்போதே, இதுபோன்ற ஞானிகள் திருவடியைப் பற்றும்போது, பிறவித்துன்பத்தை நீக்கமுடியும். இதுபோன்று ஞானிகளை பூஜை செய்ய வேண்டும். பிறகுதான் ஆதியாகிய ஒன்றை நாடமுடியும். அது சன்ன விசயமில்லை.
ஆதியை நாடுவது என்பது சின்ன விசயமில்லை. தோற்றத்தைக் கண்டே முடிவெடுக்க வேண்டும். ஆதியைக் கண்டுவிட்டால் தோற்றத்தைக் கண்டுவிட்டான் என்று அர்த்தம், மேருவைக் கண்டுவிட்டான் என்று அர்த்தம்.
மேரு என்பது மூலாதாரம், மூலக்கனல். அதுதான் எல்லா உயிர்க்கும் வேராக இருக்கும் ஆணிவேர். எங்கே சுக்கிலம் இருந்ததோ அதுதான் ஆணிவேர். அதுதான் ஆதி. ஆதி என்பது வேர். அண்டம் என்பது உச்சி. இதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
அவ்வளவு பெரிய விசயத்திற்கு நீ ஏன் போகிறாய்? அது தேவையில்லாத ஒன்று. நாங்கள்தான் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள் சிந்திக்க வேண்டாம், தினம் பூஜை செய்தால் போதும்.
அலுத்துக்கொள்ளாமல் இப்போது ஆசான் நாமத்தை பன்னிரண்டு முறை சொன்னேனல்லவா, இப்படி பூஜை செய்தால் அவர்கள் உன்னைப்பற்றி சிந்திப்பார்கள். உன்னுடைய பிறவித்துன்பத்தை தீர்ப்பார்கள் மற்றும் எல்லா செயல்களும் வெற்றிபெறும், மேலும் நிறைய வாய்ப்பிருக்கிறது.
எல்லோரும் இங்கே வர முடியாது. முன் ஜென்மத்தில் தொண்டு செய்யாத மக்கள் யாரும் இங்கே வரமுடியாது. சிலபேர் வந்தாலும் அப்படியே ஒட்டிக்கொண்டிருக்க முடியாது. அப்படியே அவன் ஓட்ட முயற்சித்தாலும் ஏதாவது காரணத்தைக் காட்டி நீக்கிவிடுவார்கள். என்ன செய்வார்கள் என்று கேட்டால், ஆசான் உடைத்து எறிந்துவிடுவார். அப்படி சிலபேர் போகலாம், திரும்பவும் வரலாம், இருப்பவர்களும் இருக்கலாம், போகும்போது அவர்களும் போகலாம். நாம் கதவைத் திறந்தே வைத்திருக்கிறோம். யாரும் போனால் கதவை சாத்துவது கிடையாது. ஒரு குழு போனால் மற்றொரு குழு வரும். நாம் கதவைத் திறந்தே வைத்திருக்கிறோம். பண்புள்ள மக்கள் வந்துகொண்டே இருப்பார்கள். அதே சமயத்தில் இங்கிருந்து போன மக்கள் பண்பில்லாதவர்கள் என்றில்லை. அதனால் நாம் போதித்துக்கொண்டே இருப்போம்.
“ஞானியின் பாதத்தைப் பற்றுங்கள். மகான் திருமூலர், ஆசான் அகத்தியரை வணங்குங்கள்” என்று நாம் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறோம். ஆனாலும் மனம் தளர்ச்சி அடையும்போது முட்டுக்கொண்டுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மனம் தளர்ச்சி அடையும் போது, மறுபடியும் அவர்கள் உலக நடையில் கவனம் செலுத்த நேரிடும். உலக நடையில் கவனம் செலுத்தும்போது மறுபடியும் மனம் தடுமாறும். அதற்குத்தான் ஒரு கவி இருக்கிறது.
பிறந்தவர்க்கு மோட்சகதி தேடவேணும்
பின்கலையும் முன்கலையும் சேரவேணும்
மறந்தவர்க்கு மறலிவந்தால் வலுவாருண்டோ
வருமுன்னே வலுக்கட்டிக் கொள்ளவேணும்
அறந்தழைக்க மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல்
துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே.
                             மகான் அகத்தியர் – துறையறி விளக்கம் – கவி எண் 89      
                                                                                                   
          பிறந்தால் ஒருவன் மோட்ச கதி தேட வேண்டும். தினம் பூஜை செய்து ஞானிகள் அருளைப்பெற நாம் வாழ்கிறோம். நாம் வாழ்வது நம்மால் ஈட்டப்பட்ட பொருளை பஞ்சபராரி ஏழைகளுக்கு, பசி என்று ஏங்குகின்ற ஏழைகளுக்கு கொடுப்பதற்காத்தான். நாம் வாழ்வது நம்மை நோக்கி வருகின்ற மக்கள்மீது அன்பு காட்டுவதற்குத்தான். இதற்காகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
           பிறந்தவர்க்கு மோட்சகதி தேடவேணும்
               பின்கலையும் முன்கலையும் சேரவேணும்
   மறந்தவர்க்கு மறலிவந்தால் வலுவாருண்டோ
மறலி என்பது எமன். வலுவாருண்டோ – அவன் வந்தால் தடுப்பதற்கு என்ன ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
       பின்கலையும் முன்கலையும் சேரவேணும் – இதனை சேர்க்க மறந்தவர்களுக்கு வலு இல்லை.
அறந்தழைக்க மறுமுகவன் பாதம் போற்றி என்றார். நான் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறேன்,
தாழ்வகலும் தர்மம் தழைத்தோங்கும் நமக்கு
வாழ்வளிக்கும் ஞானியரின் வழிபாடே.
ஆறுமுக அரங்கமகா தேசிகர் அருளிய ஞானக்குறள் – குறள் எண் 4
           என்று சொன்னார். இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை ஞானிகளுக்கும் முழுமுதற் தலைவன் ஆசான் சுப்பிரமணியர்தான். அவர் பாதத்தைப் பற்றும்போது அறம் தழைக்கும். அதுமட்டுமல்ல, பலகோடி ஜென்மங்களில் சூதாடுகின்ற பழக்கம் இருக்கும், சொத்தை வீணடித்த மக்கள் இப்படி குடும்பத்தின் முன்னோர்கள் செய்ததனால் தாழ்வு வந்திருக்கும். இவனது தந்தையா, அவன் ஊரையே ஏமாற்றிப்போனவன் என்று சொல்வார்கள். இவனது அப்பா மஞ்சள் கடுதாசி கொடுத்தவன். அவனது தந்தை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப்போனவன். இப்படி குடும்பத்திற்கு ஒரு வகையான கேட்ட பெயர் முன்னோர்களால் இருக்கும். ஒருவன் தினமும் பூஜை செய்யும்போது, அந்த பூஜையின் காரணமாக, நம் முன்னோர்களால் ஏற்பட்ட தாழ்வு இருக்கல்லவா, இது அகலும் என்று சொல்லியிருக்கிறேன்.
     தாழ்வகலும் தர்மம் தழைத்தோங்கும்
     இங்கு ஆசான், அறந்தழைக்க மறுமுகவன் பாதம் போற்றி என்று சொன்னார். இப்படி பூஜை செய்ய செய்ய என்னாகும்? முன்னோர்களால் ஏற்பட்ட இழிவு இருக்கல்லவா, கேட்ட பெயர் அது நீங்கி அவனுக்கு செல்வநிலை பெருகும். இரண்டாவது அன்பு செலுத்துவதால் தர்ம சிந்தனை வரும், தர்மம் தழைத்தோங்கும், ஞானமும் சித்திக்கும் என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.
                                                                 
                                                                                    
                                                                                    
  
                                                                                      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0174932
Visit Today : 72
Total Visit : 174932

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories