12.04.2001 அன்று கோளறு பதிகம் (பகுதி 1) என்ற தலைப்பில் மகான் ஆறுமுக அரங்கர் அருளிய அருளுரை


ஓம் அகத்திசாய நம
அன்புள்ள பெரியோர்களே! தாய்மார்களே! வணக்கம்!
     ஞானிகள் எல்லாம் உண்மைப் பொருள் அறிந்தவர்கள். அவர்கள் உண்மைப்பொருள் அறியா விட்டால் ஞானியாக முடியாது.
     பஞ்சபூதங்கள்தான் உண்மைப்பொருள். பஞ்சபூதங்கள் எந்த காலத்திலும் இருக்கும். நிலம் தோன்றி பல லட்சம் கோடி வருடங்கள் இருக்கும். அதே போல் நீர், அக்கினி(சூரியன்), காற்று, ஆகாயம். இந்த பஞ்ச பூதங்கள்தான் உண்மை. பஞ்சபூதங்களைப் பற்றி அறிய வேண்டும்.
     நம் உடம்பில் சத்தாக இருப்பதெல்லாம் எலும்பு, நரம்பு, தோல், தசையெல்லாம் மண்ணின் கூறு. உள்ளே ஓடுகின்ற திரவங்கள், திரவப்பொருளாக இருப்பவை உதிரம் மற்றும் சுக்கில சுரோணிதம்,  மாதவிடாயாக இருப்பதும் தண்ணீர்தான். மழை பெய்யாவிட்டால் ஏது? அப்ப உடம்பு திடமாக சத்தாக இருப்பதற்கு, எலும்பு, நரம்பு, தோல், தசை எல்லாம் மண்ணின் கூறு.
     உணவுப்பொருளை சாப்பிடுகின்றோம், சாப்பிடும்போது உடலிற்கு சத்து ஏற்படுகின்றது. இந்த உடம்பு மண்ணின் கூறு. ஏனென்றால் மண்ணில் விளைவதைத்தான் சாப்பிடுகின்றோம்.
     தண்ணீர் குடிக்கின்றோம். அந்த தண்ணீர், மழை பெய்யாவிட்டால் கிடைக்காது. மழை பெய்கிறது. அந்த மழை நீர்தான் ஏரியாகவும், குளமாகவும், அருவியாகவும், சுனையாகவும், ஆறாகவும் இப்படி பல ரூபத்தில் இருக்கிறது. கேணியாக இருப்பது, சுனை – மலை அடிவாரத்தில் சுனையாக இருக்கும். அப்படியே குட்டையாக இருக்கும். சுனை, ஆறு, அருவி, கேணி எல்லாமே மழை நீர்தான். மழை பெய்யாவிட்டால் ஒன்றுமேயில்லை.
     மழைநீர் உடம்பில் உதிரமாக இருக்கும், இரத்தமாக இருக்கும், நிறம் மாறி இருக்கும். மாதவிடாயாக இருப்பதும் அதுதான். குடிக்கின்ற தண்ணீர்தான் மாதவிடாயாக உடம்பில் உள்ள அசுத்தங்கள் போகிறது. அதே சமயத்தில் ஆணுக்கு சுக்கிலமாகவும், பெண்ணுக்கு சுரோணிதமாகவும் இருக்கும். அப்ப தண்ணீர். மழைநீர்தான் அப்படி இருக்கும்.
     அடுத்தது நம் உடம்பில் அக்கினி – சூரியன். நம் உடம்பில் 98.4டிகிரி என்று சொல்வார்கள். நமக்குள் வெப்பமாக இருப்பது சூரியன் கூறு. ஓடுகின்ற காற்று வாயுவின் கூறு. இவை நான்கையும் தாங்கி நிற்பது பஞ்சபூதம் – ஆகாயம் – வெட்டவெளி.
     ஆக, இந்த பஞ்சபூதங்கள் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கிறது. பெண்ணாக இருப்பதும், ஆணாக இருப்பதும் பஞ்சபூதம்தான். அது மட்டுமல்ல, எல்லா உயிர்களிலுமே, ஆண்பால், பெண்பால் உண்டு. ஆணும் உண்டு, பெண்ணும் உண்டு.
     ஆனால் மனிதனுக்கு மட்டும் ஒரு சக்தி இருக்கு. நம் உடம்பில் பஞ்சபூதத்தினுடைய சாரம் குளிர்ச்சி, வெப்பம். அப்ப குளிர்ச்சியும் வெப்பமும் இருந்தால் காற்று நிச்சயம் இருக்கும். காற்று இல்லையென்றால் வெப்பம் இல்லை. வெப்பம் இல்லையென்றால் காற்று இல்லை.
     மனிதன் இறந்தவுடன் உடம்பை தொட்டுப் பார்த்தால் சில்லென்று குளிர்ச்சியாக இருந்தது. ஏன் குளிர்ச்சி வந்தது என்றால், மூச்சுக்காற்று போய்விட்டது, ஆன்மா போய்விட்டது. ஆன்மா போனவுடன் அக்கினியும் போய்விட்டது. ஆன்மா போனவுடன் உடம்பில் இருக்கும் சூடு போய்விட்டது. சூடு போனவுடன் அந்த உடம்பு சில்லென்று குளிர்ச்சியாகி விட்டது.
     எஞ்சி இருப்பது தண்ணீரின் கூறுதான், இதுதான். உடம்பில் உள்ளே இருந்த காற்றும் அனலும் போய்விட்டது. அப்ப சிற்றணுவாகிய ஆன்மா உள்ளே இருந்தால் காற்று இருக்கும். இப்ப நம் உடம்பில் குளிச்சி, வெப்பம், காற்று இருக்கிறது.
     குளிர்ச்சியாக இருப்பதெல்லாம் தண்ணீரின் கூறு. வெப்பமாக இருப்பதெல்லாம் சூரியன் கூறு. உள்ளே ஒடிகின்றது காற்று. இந்த பஞ்சபூதங்கள் உயிரினங்களை தோற்றுவித்தது.
     அதே பஞ்சபூதங்கள் என்ன செய்யும்? உயிரினங்களைத் தோற்றுவித்தது மட்டுமல்லாமல், உயிரினங்கள் என்னென்ன விரும்புகிறது, அதையெல்லாம் படைத்துத் தரும். மனிதனுக்கு தானியங்கள், மற்ற காய்கனிகள் எல்லாம் படைத்து தரும். உயிரினங்கள் என்னென்ன விரும்புகிறதோ அதையெல்லாம் படைத்துத் தருவதுதான் இயற்கையின் வேலை.
     படைத்துக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதை சாப்பிடணும். சாப்பிடக்கூடிய உணர்வை தருவது அதே இயற்கைதான். அதே இயற்கைதான் பசிக்கு உணவு தரும். அந்த உணவை சாப்பிட வேண்டுமென்ற ஆர்வத்தையும் இயற்கைதான் உண்டாகும்.
     உணவை சாப்பிட்டவுடன் உள்ளே கருவி கரணங்கள் ஜீரணம் செய்யும். ஜீரணம் செய்வது மட்டுமல்லாது, கழிவுப்பொருட்களை அபான வாயு வெளியே தள்ளும். அபான வாயுவிற்கு அதுதான் வேலை.
     இயற்கை ஜீரணம் செய்யும், உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும். நமக்கு பசியை உண்டாக்கும், அறுசுவையை உண்டாக்கும். உலகத்தில் உள்ள அனைத்து சுவைகளையும் அறுசுவைகளாக வைத்துள்ளனர்.
     எல்லா சுவையையும் அறியக்கூடிய ஆற்றல் நாக்குக்கு உண்டு. இயற்கை நமக்கு தேவையான அளவு உணவுகளை சுவைக்க சுவைக்க சாப்பிடும்படி தந்து பார்த்துக் கொண்டிருக்கும், ஜீரணம் செய்யும், சத்து அசத்தைப் பிரிக்கும். அசத்தை வெளியே தள்ளும், 72000 நாடி நரம்புகளுக்கும் முறுக்கேற்றி விடும்.
     72,000 நாடிகளும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட ஐம்புலனையும் இயக்கச் செய்யும். மெய் – உடம்பு. அடுத்து மனம், புத்தி, சித்தம், அகங்காரமாக இருக்கும். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறி ஐந்து. புலன் ஐந்து, கரணம் நான்காக இருக்கும்.
     இந்த பதினான்கு கருவி கரணங்களும், 72,000 நாடி நரம்புகளின் இயக்கத்தாலும் மற்றும் பஞ்சபூத இயக்கத்தாலும் இயங்கும். வெளியிலே காற்று இல்லையென்றால், நமக்கு மூச்சுக் காற்று இல்லை. காற்று எங்கும் வியாபித்த பரம்பொருள். எங்கும் வியாபித்த பரமான்மா என்று சொல்லப்பட்ட காற்றின் ஒரு பகுதியாக நமது மூச்சுக்காற்று இயங்குகிறது. நமக்கு மட்டுமா மூச்சுக்காற்று இயங்குகிறது. எல்லா ஜீவராசிகளும் மூச்சுக்காற்றின் அடிப்படையில்தான் இயங்குகிறது.
     பஞ்சபூதத்தில் ஒன்றான காற்றுதான், மூச்சுக்காற்று இயக்கமாக இருக்கிறது. பஞ்சபூதம் யானையாகவும் இருக்கும், பூனையாகவும் இருக்கும், எலியாகவும் இருக்கும். பஞ்சபூதம் எல்லா சின்ன சின்ன அணுக்களாகவும் இருக்கும்.
     பஞ்சபூதம் நம் உடம்பில் ஆணாக, பெண்ணாக இருந்தாலும், அதை ஞானிகள் அறிந்து கொண்டார்கள். நாமும் அறியலாம். பஞ்சபூதத்தை அறிந்து கொண்டவர்கள், நாம் பஞ்சபூதத்தால் தோன்றியிருக்கின்றோம், பஞ்ச பூதம் துணை கொண்டு வாழ்கின்றோம் என்பதை அறிவார்கள்.
     பஞ்சபூதம் நமக்கு பசியை உண்டாக்கியும், அதற்குத் தேவையான உணவைக் கொடுத்தும், ஜீரணம் செய்தும், அசத்தை வெளியே தள்ளியும், நம்மைக் காப்பாற்றியும் வரும். ஆனால் பஞ்சபூதம் நம்மைக் காப்பாற்றுவதுபோல் காப்பாற்றும். ஆனால் நரை, திரை, மூப்பை உண்டாக்கும். பரிணாம வளர்ச்சியை உண்டாக்கிவிடும்.
     ஞானிகள் அந்த இயக்கத்தை அறிந்து கொண்டார்கள். இந்த மூச்சுக்காற்று அசைவின் காரணமாகத்தான், நம்முடைய உள் கருவி கரணங்கள் இயங்குகிறது, மூச்சுக்காற்று அசைவே மனம் அசைவு. மனமே ஆன்மாவாக இருக்கும். ஆன்மாவே இறைவன். ஞானிகள் பஞ்சபூதத்தின் இயல்பை அறிகிறார்கள்.
     நாம் வாழ்கின்றோமா அல்லது நம்மை ஒரு சக்தி வாழ வைக்கின்றதா? எல்லா உயிரினங்களையும், எல்லாம்வல்ல பஞ்சபூத இயற்கைதான் வாழவைக்கின்றது. நாம் வாழ்வதாக நினைப்பதெல்லாம் ஒரு கற்பனை.
     பஞ்சபூத இயற்கை நம்மை வாழவைக்கும், அப்படி வாழவைத்து நம்மைக் கொன்றுவிடும். அதுதான் அதற்கு வேலை. நம்மை வாழ்விப்பதுபோல் தோற்றுவித்தும், வாழ்வித்தும் அழித்துவிடும்.
     ஞானிகள் இதை உணர்ந்து  மூச்சுக்காற்று என்று அழைக்கப்படும். காளை, குதிரை, பறவையைப் பற்றி அறிகிறார்கள். நாள் ஒன்றுக்கு 21,600 முறை மூச்சுக்காற்று வந்து போகும். அப்படி இடது பக்கம் வருகின்ற மூச்சுக்காற்றுக்கு சந்திரகலை என்றும், வலது பக்கம் வருகின்ற மூச்சுக்காற்றுக்கு சூரிய கலை என்றும் பெயர்.
     இடது பக்கம் வருகின்ற காற்று சக்தியின் கூறு. வலது பக்கம் வருகின்ற காற்று சிவத்தின் கூறு. இப்படித்தான் இருக்கிறது. நம் உடம்பில் வெப்பம் சிவத்தின் கூறு; அல்லது சூரியன் கூறு. குளிர்ச்சி சக்தியின் கூறு. தனியாக பிரித்து பேச முடியாது. இப்படித்தான் இருக்கும். வேறு வழியில்லை. நம் உடம்பில் குளிர்ச்சி மிகுதியானால் சளி பிடிக்கும், ஜன்னி வரும், பசி மந்தம் ஏற்படும், நோய் ஏற்படும்.
     நமது உடம்பில் வெப்பம் மிகுதியானால், இரத்த அழுத்தம், இரத்த பேதி, வயிற்று கடுப்பு, அடாது தலைவலி போன்ற பல நோய்கள் வரும். இரண்டும் (குளிர்ச்சியும், வெப்பமும்) சமமாக இருக்க வேண்டும். இரண்டும் சமமாக இருந்தால் அங்கே வாய்வு சமமாக இருக்கும். உள்ளே ஓடுகின்ற காற்று சமமாக இருக்கும். உஷ்ணம் அதிகமானால் என்ன செய்யும்? காற்று உள்ளே இருந்து உஷ்ணமாக ஸ்தம்பித்து, உடம்புக்குள் பிரச்சனைகளை உண்டாக்கும். வயிறு கடமுடா என்று சத்தமிடும். இப்படி பல நோய்கள் உண்டாகும். தத்துவம் இது.
     குளிர்ச்சி அதிகமாக இருந்தாலும் குற்றம், உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் குற்றம். இதைப் பற்றி முன்பே சொல்லியிருக்கின்றோம். குளிர்ச்சியும் வெப்பமும் சமமாக இருக்கும் இடத்தில் காற்று இருக்கத்தான் செய்யும். இந்த இயக்கம் பஞ்ச பூதத்தின் இயக்கம்தான். இது பரிணாம வளர்ச்சியை உண்டாக்கும்.
     பரிணாம வளர்ச்சியை உண்டாக்கி, ஆளை கொன்று விடும், எல்லா உயிர்களையும் கொன்றுவிடும். இதை இரண்டு வகையாக பிரித்துப் பார்க்கின்றார்கள் ஞானிகள்.
     சக்தியின் கூறாகவும், சிவத்தின் கூறாகவும் ஞானிகள் பார்க்கிறார்கள். நாம் தோன்றுவதற்குக் காரணம் பெண்தான், ஆண்தான். ஆண், பெண் இரண்டும் சேர்ந்ததுதான், தனித்து பிரித்து பேசக்கூடாது.
     உடம்பு என்றால் அது ஆண் தன்மையும், பெண் தன்மையும் உண்டு. அதே சமயத்தில் ஒரு பெண் பிறக்கின்றான் என்றால், ஆண் தன்மையும் பெண் தன்மையும் சேர்ந்துதான் இருக்கும். இப்படியில்லாமல் தனித்து ஒரு பெண் இருக்க முடியாது. தனித்து ஒரு பெண்ணும் பிறக்க முடியாது, ஆணும் பிறக்க முடியாது.
     ஆண் சுக்கிலம் இல்லையென்றால் பெண், ஆண் தோன்ற முடியாது. பெண் மகள் ஏன் ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும், பெண் குழந்தை பெற்றெடுக்கின்றாள். ஆக இரண்டும் இரண்டும் சேர்ந்தே இருக்கும். இதைத்தான் ஞானிகள் அறிகிறார்கள். இதற்கு இயக்கமான அந்த செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது. மூச்சுக்காற்று இயக்கமாக இருக்கும்.
     மூச்சுக்காற்றை ஞானிகள் வசப்படுத்துகிறார்கள். மூச்சுக்காற்றோடு பழகுகின்றார்கள். வாசிப்பழக்கம் அறிகின்றார்கள். மூச்சுக்காற்றின் இயக்கத்தை அறிந்து அதனுடன் சார்ந்திருந்து உள்ளே நுழைகின்றார்கள். அதுதான் சொல்வார்,
கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
                  வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
      எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய
           மென்றைக்கி ருக்குமோ வாலைப்பெண்ணே
                     -மகான் கொங்கணர் வாலைக்கும்மி கவி எண் 42
     அது எட்டாத கொம்பு – சுழிமுனைக் கதவு. இந்த மூச்சுக்காற்றை காளையை அறிய வேண்டும்.
வாசிப் பழக்க மரியவே ணுமற்று
             மண்டல வீடுகள் கட்டவேணும்
      நாசி வழிக் கொண்டு யோகமும் வாசியும்
                   நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே.
             – மகான் கொங்கணர் வாலைக்கும்மி கவி எண் 27
     மூச்சுக்காற்றுக்கு குதிரை என்றும், காளை என்றும், பறவை என்றும் பெயர் இருக்கிறது. மூச்சுக்காற்றோடு பழகுகின்றார்கள்.
கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
                வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
      எட்டாத கொம்பை வளைக்க வேணும் என்று சொல்லிவிட்டார்.
     ஞானிகள் மூச்சுக்காற்றை காளை வாகனம் என்று சொல்வார்கள். காளையில் தான் ஈஸ்வரன் போகிறார். வாலைப் பிடித்துக் கொண்டே போகணும் என்றார். வேறு வழியே இல்லை. எந்த பஞ்சபூதம் நம்மை தோற்றுவித்ததோ, அதே பஞ்சபூதத்தின் இயக்கம்தான் மூச்சுக்காற்றின் இயக்கமாக இருக்கும்.
     மூச்சுக்காற்றைப் பற்றி அறிகின்ற வாய்ப்பு மனிதனுக்குத்தான் உண்டு. ஞானிகள் ஓடுகின்ற மூச்சுக்காற்றை அறிந்து, ஸ்தம்பித்து நிறுத்தி புருவமத்தியில் செலுத்துகின்றான். அந்த காளை (மூச்சுக்காற்று) புருவமத்தியில் ஒடுங்கிவிட்டது. ஈசன் வாகனமாக இருக்கக் கூடிய காளை மூச்சுக்காற்றுதான்.
     மகான் திருஞானசம்பந்தர், அந்த இரகசியத்தை அறிந்தவர். ஞானிகள் அத்தனை பேரும் அதை அறிந்தவர்கள். மகான் திருஞானசம்பந்தர் சொல்கிறார், இந்த உலகம் எப்படி இருக்கிறது என்றால், வெப்பமும், குளிர்ச்சியுமாக இருக்கிறது என்றார். குளிர்ச்சி சக்தியின் கூறு; வெப்பம் சிவத்தின் கூறு. இதற்கு மகான் திருஞானசம்பந்தர் சொல்கிறார்.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து
உளமே புகுந்த  அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!  
    மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் – கவி எண் 1
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி – ரொம்ப பசுமையாக இருக்கும் மூங்கில் இல்லை. உமாதேவி மூங்கில் போன்ற தோள்களை உடையவள். அதுவும் மென்மையானது. பார்ப்பதற்கு மினுமினு என்று இருக்கும். அது உடம்பில் சக்தியின் கூறாக இருக்கும். குளிர்ச்சியின் கூறாக இருப்பது வேயுறு தோளி, அந்த உடம்பு அப்படித்தான் இருக்கும்.
இரண்டாகப் பிரிக்கின்றார்கள். இப்ப நான் சொல்வது தத்துவம். ஆசான் திருஞானசம்பந்தர் சொன்னது தத்துவம். வேயுறு தோளி பங்கன். உமாதேவியை இடது பாகமாக, மூங்கில் போன்ற தோள்களை உடைய உமாதேவியை இடது பாகமாக வைத்து என்றார். ஏன் வலது பக்கமாக வைக்கக் கூடாதா? உரையில் இருக்கும். உரை எழுதியவன் ஞானி. ஏனென்றால் சிலருக்கு குழப்பம் வந்து விடுமல்லவா.
இங்கே இடது பக்கம் வருகின்ற காற்றுக்கு சந்திரகலை என்று பெயர். அதுவே சக்தியின் கூறு. அப்ப உமாதேவியை இடது பக்கம் வைத்திருக்கின்றான். இந்த மூச்சுக்காற்றின் இயக்கமே குளிர்ச்சியும் வெப்பமும் சமமாக இருப்பதற்குத்தான். அது இரவு பகலாக இருக்கும். இந்த உலகத்தில் இரவு பகலாக இருப்பதும், இரவு என்பது சக்தியின் கூறு. பகல் என்பது சிவத்தின் கூறு. வேயுறு தோளி பங்கன் – உரையில் என்ன செய்திருக்கிறார். மூங்கில் போன்ற தோள்களை உடைய உமாதேவியை இடது பக்கமாக வைத்து, வைத்ததனால் என்ன ஆச்சு, இந்த உடம்பு காமத்தால் வந்த உடம்பு, காம தேகம் நீங்கியது. முறைப்படுத்தப்பட்ட யோகா நெறி அது.
ஆசானால் சுட்டிக்காட்டப் படுகின்ற யோகா நெறியை இடகலையும் பிங்கலையும் சேர்த்து, அதுதான் சொன்னார். வேயுறு தோளி பண்கள் விடமுண்ட கண்டன் என்றார். மூங்கில் போன்ற தோள்களை உடைய உமாதேவியை இடது பக்கம் வைத்து, வலது பக்கம் வைக்காமல் இடது பக்கம் வைக்க முடியாது. வலது பக்கம் இருப்பது சூரிய கலை, இடது பக்கம் இருப்பது சந்திர கலை. இரண்டையும் சேர்த்து புருவமத்தியில் செலுத்தி விட்டான். செலுத்தினால் உடம்பில் இருக்கின்ற அசுத்தங்கள் நீங்கி விடும்.
 மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து – திங்களாக இருப்பது, சந்திரனாக இருப்பது, இங்கே சந்திரன் கூறாக இருப்பது உடம்பு. சூரியன் கூறாக இருப்பது உயிர். சந்திரன் கூறாக இருப்பது சக்தி; உயிராக இருப்பது சூரியன் கூறு. ஆக சிவம் என்பது வெப்பம், சக்தி என்பது குளிர்ச்சி.
இந்த இரண்டையும் ஒன்றுபடுத்தும்போது, இந்த உடம்பில் இருக்கின்ற அசுத்தங்கள் நீங்கும். இடகலையையும், பிங்கலையையும் சுழிமுனையில் செலுத்தி விட்டால் அங்கே அசுத்தம் இருக்க முடியாது. உடம்பில் காம விகாரம் இருக்காது. நச்சுத்தன்மை விஷம் நீங்கிவிடும்.
விஷம் நீங்கினால் என்ன ஏற்படும். உடலிலே மூலாதாரத்திலே கனல் ஏற்படும். மூலாதாரத்தில் கனல் ஏற ஏற, வினாத்தண்டில் மயிரிழை போன்று இருக்கக் கூடிய நரம்பு வழியாக கீழ் நோக்கி பாயக்கூடிய திரவப்பொருள் சுக்கிலமானது மேல் நோக்க ஆரம்பித்து விடும். அது கண்டஸ்தானம் வரையில்தான் அந்த விஷம் இருக்கும். கண்டஸ்தானத்திற்கு மேலேபோனால் அது அமிர்தமாக மாறும்.
இவ்வளவு பெரிய இரகசியம் மனிதனுக்குள் இருந்தாலும், பக்தி இல்லை. இந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் ஞானிகள் இருக்கின்றார்கள். ஞானிகள் ஒன்பது கோடி பேர் இருக்கின்றார்கள். ஐயனே! பெரியோர்களே! மகான் திருஞானசம்பந்தர் ஐயா! நீங்கள் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றீர்கள்! உடம்பை அறிந்து கொண்டாய், உயிரை அறிந்து கொண்டாய், குளிர்ச்சியையும் வெப்பத்தைப் பற்றியும் புரிந்து கொண்டாய்.
ஆகவே அந்த மாசு நீங்கினால், மாசறு திங்கள் கங்கை – திங்கள் என்பது சந்திரன்; இளம் பிறை சந்திரன் என்று சொல்வார்கள். அது தத்துவம் உலக நடைக்கு சொல்வது. பிற்கால சந்ததிகளே புரிந்து கொள்ளுங்கள். குற்றமற்ற சந்திரன். காமம், விஷம் நீங்கிய உடம்பு. மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து. கீழ் நோக்கினால் விஷம், அது மேல் நோக்கினால் அமிர்தம். எல்லா மனிதனுக்கும் இருக்கு, யாரும் சொல்லவில்லை, சொன்னாலும் கேட்பாரில்லை, கேட்டாலும் வைராக்கியமில்லை, யாரேனும் சொல்லவேண்டும். எனவே நாங்கள் சொல்கிறோம். வைராக்கியமில்லை, வைராக்கியம் பெறுவதற்கு என்னய்யா உபாயம்? பிடித்துக்கொள் அவருடைய திருவடியை. மகான் திருஞானசம்பந்தர் திருவடியைப் பிடி! அவர்தான் சொன்னார்.
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து – கீழ்நோக்கி போகக் கூடிய நச்சுத்தன்மையுள்ள விஷமாகிய திரவப்பொருளை, பக்தி செலுத்தி, உடலில் கனலை ஏற்றி, காயசுத்தி செய்து, தேகத்தை மாசற்ற தேகமாக்கி, அந்த மாசற்ற தேகத்தில் கனல் ஏற ஏற குற்றமற்ற தேகத்தில் கனல் ஏறும்போது, கீழ் நோக்கி பாயக்கூடிய சுக்கிலம் அல்லது சுரோணிதம் மேல்நோக்கும். பெண்கள்பால் உள்ளது சுரோணிதம். ஆண்கள்பால் உள்ளது சுக்கிலம்.
இது பஞ்சபூத இயற்கையால் ஏற்பட்ட பெரும் பாக்கியம், வரப்பிரசாதம். ஆனால் மனித வர்க்கம் அடைவதற்கு முயற்சிக்கவில்லை, அடைவதற்கு என்னய்யா முயற்சி? காட்டுக்கு போகணுமா? பட்டினி கிடக்கணுமா? தேவையில்லை. உருகி தியானம் செய்தாலே போதும். புண்ணியம் செய்ய வேண்டும். புண்ணியம் செய்ய மனது வராதே. அதுதான் பாவம்.
செல்வத்தைக் கொடுக்கும்போதே, ஆசான் மாணிக்கவாசகரை நினைத்து வரும்போது, “அடியேன் புண்ணியவானாக ஆவதற்கு நீர் அருள் செய்ய வேண்டுமய்யா! புண்ணியவான்களுக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைக்கின்றது. எல்லாம்வல்ல இயற்கை படைக்கும்போது, சாக வேண்டுமென்று படைக்கவில்லை. நான் அநியாயமாக பிறந்து இறந்து, பிறந்து இறந்து, சாகிறேன். ஏனோ இந்த கொடுமை! என்னைக் காப்பாற்ற வேண்டுமென ஆசான் திருஞானசம்பந்தரைக் கேட்டால் அருள் செய்வார்.
ஆசான் திருஞானசம்பந்தர் வேறில்லை, சிவபெருமான் வேறில்லை. சிவன் வெப்பம், சக்தி குளிர்ச்சியாக இருக்கிறது. ஆகவே இங்கு வித்தியாசமில்லை. ஞானிகளுக்குள் வித்தியாசமில்லை. உருகி தியானிப்பது ஒன்றுதான் முக்கியம், உருகி தியானிக்க வேண்டும்.
நான் என்ன பாவம் செய்தேனோ! ஆசான் திருஞானசம்பந்தரைக் கேட்கணும். ஆசான் திருஞானசம்பந்தரை, மகான் மாணிக்கவாசகரை, மகான் திருநாவுக்கரசரை கேட்கணும். ஆசான் பட்டினத்தாரைக் கேட்கணும். பெரியவங்களை கேட்டு கேட்டு ஆசி பெற வேண்டும்.
குற்றமற்ற தேகத்தில், குற்றம் அற்றாலே, அவன் மனிதன் அல்ல. அவன்தான் கடவுள். யாராலும் வெல்ல முடியாத காமத்தை வென்றவன். யாராலும் கொல்ல முடியாத காமத்தைக் கொன்றவன். இப்பேர்ப்பட்ட அந்த வாய்ப்பை,மாசாறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து – குற்றமற்ற, அந்த கங்கை மேல் நோக்கிவிட்டது, சிரசுக்கு போய்விட்டது.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் – விஷம் எங்கே இருந்தது. கீழ்நோக்கி போய்க்கொண்டே இருந்தது. அது பெண்ணிடத்தில் போய்க் கொண்டே இருந்தது. அது கரு உற்பத்தி செய்துகொண்டே இருந்தது. கரு உற்பத்தி செய்து கொண்டே இருந்த அந்த நச்சுத்தன்மையை பக்தி விசுவாசத்தாலும், உருகி தியானிப்பதாலும், புண்ணியத்தாலும், மேல் நோக்க ஆரம்பித்துவிட்டது.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் – கண்டஸ்தானம் வரைதான் விஷம். விஷத்தை உண்டதால் இருண்ட நீல நிறமாக இருக்கும். அது உரையில் இருக்கும்.
விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி – வீணை என்பது மேலே நான்கு கம்பி இருக்கும். கீழே மூன்று கம்பி இருக்கும். அதற்கு விளக்கம் தேவையில்லை. மேலே உள்ள நான்கு கம்பிகளை சாரணி, அனுசாரணி, பஞ்சமம், மந்தரம் என்று சொல்வான். சட்ஜம், பஞ்சமம், கீழ்சட்ஜம் கீழே உள்ள நரம்புகள். மிக நல்ல வீணை என்றார்.
சாரணி, அனுசாரணி, பஞ்சமம், மந்தரம் இவை மேலே உள்ள நான்கு தந்தி. கீழே மூன்று மேல் சட்ஜம், பஞ்சமம், கீழ் சட்ஜம். அது வடசொல். சட்ஜம் என்றான். பஞ்சமம், கீழ் சட்ஜம் என்றான். இது தானம். கீழே இருப்பது தாளம். மேலே இருப்பது ராகம். அது ஒரு வீணை தத்துவம்.
மிக நல்ல வீணை தடவி – வீணைக்கு தலைவி யார் சரஸ்வதி. இடகலையையும், பிங்கலையையும் அறிந்து சுழிமுனையில் செலுத்திவிட்டால் காம தேகம் தூள் தூள் தூளாகி விட்டது, பொடி பட்டுவிட்டது. காமதேகம் பொடி பட்டுவிட்டது. அங்கே என்ன ஏற்படும் என்றான். அமிழ்தபானம் சாப்பிட்டால் சரஸ்வதி வந்துவிடுவாள். எந்த மொழி வேண்டுமானாலும் பேசுவாள் அவள். அவளுக்கு ஈடே இல்லை.
ஒருமொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் என்றார் தாயுமானசுவாமிகள். ஒருமொழி என்பது இடகலையையும், பிங்கலையையும் சேர்த்து சுழிமுனையில் செலுத்துவது ஒரேமொழி.
ஒருமொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும், அந்த ஒரு மொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த குரு மொழியே மலை இலக்கு என்றார். அதுதான் எல்லை. அதுதான் அந்த ஒரு மொழி. அந்த ஒரு மொழியை அறிந்தவர்கள், இடகலையும், பிங்கலையும் சேர்த்து சுழிமுனையில் செலுத்திவிட்டால் அங்கே ஓங்காரம் ரீங்காரம் கேட்கும். அதுதான் ஒரு மொழி. ஒரு மொழியே மலமொழிக்கும் என்றார். அதுவே மலத்தை ஒழிக்கும்.
ஒருமொழியே மலமொழிக்கும். ஒருமொழியே பல மொழிகளுக்கு இடம் கொடுக்கும். எந்த பாஷை பேசுவது என்று கேட்டான். நீ என்ன பாஷை வேண்டுமானாலும் பேசிக் கொள். ஆங்கிலம் பேசுவோம், இலத்தீன் பேசுவோம், சீன மொழி பேசுவோம். உலகத்தில் இருக்கும் எல்லா பாஷையில் பேசினாலும் பதில் தருவோம் என்றான், ஆனாலும் அடக்கமாக இருப்போம்.
பல மொழியும் பேசுவார்கள், எழுதுவார்கள், கவி பாடுவார்கள். இங்கே மிக நல்ல வீணை தடவி என்றார். தடவுதல் என்பது வாசித்தல். வீணைக்கு தலைவி சரஸ்வதி, சரஸ்வதி வந்துவிடுவாள். என்ன மொழி வேண்டும் மகனே, என்பாள். எல்லா மொழியும் நீயே பேசடா கண்ணே! என்பாள். எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போகலாம். எந்த மொழி வேண்டுமானாலும் பேசலாம்.
எல்லா இலக்கணமும் இவர்களுக்கு உட்பட்டதே! இவர்களுக்கு தெரியாத இலக்கணமில்லை. இவர்களுக்குத் தெரியாத கல்வி இல்லை. இவர்களுக்கு தெரியாத கலை இல்லை. வாசி வசப்பட்டால் எல்லா வாய்ப்பும் கிடைக்கும். என்ன செய்தால் நல்லது? அப்படி செய்ய விடுமா உன்னை?
வாசி வசப்பட என்ன செய்ய வேண்டும்? புண்ணியத்தை செய்து கொள்ள வேண்டும்.
அப்படி புண்ணியம் செய்ய வேண்டுமென்று நினைக்க விடுமா உன்னை? பிற்காலம் பிற்காலம் என்று நினைக்கின்றாயே, நாளைக்கு இறந்து போனால்? என்ன செய்வாய் யார் சொல்வது? விசயம் தெரிந்தவன் சொல்ல வேண்டும். உன் மேல் கருணை இருந்தால் சொல்வான். இல்லையென்றால் போடா! என்று போய்விடுவான். கருணை கொண்டு சொல்கிறேன், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப்பா!
பிறந்தவர்க்கு மோட்ச கதி தேட வேண்டும் – இந்த பிறவியில் பிறந்திருக்கின்றாய் நீ. உன்னுள்ளேயே ஒரு அற்புதம் புதையுண்டு கிடக்கிறது. அந்த அற்புதத்தை தட்டி எழுப்ப வேறு ஒன்றும் உபாயமில்லை.
அன்பனே! நண்பனே! தோழனே! சகோதரனே! உபாயமே இல்லை. இதற்கு ஒன்றே ஒன்று, புண்ணியம்தான்.
பொருள் பற்று உன்னை விடுமோ?
என்ன பாவம் செய்தாயோ?
யார் மேல் பற்று கொண்டிருக்கின்றாய்?
புண்ணியவான்கள் திருவடியை பூஜை செய்திருக்கின்றாய்?
நல்ல மனம் வருவதற்கு மகான் இராமலிங்கசுவாமிகள் திருவடியை பூஜை செய்தாயா?
தயை சிந்தை வருவதற்கு மகான் மாணிக்கவாசகர் திருவடியை பூஜை செய்தாயா?
நல்ல மனம் வருவதற்கு இல்லையே!
அப்படி நல்ல மனம் வருவதற்கு இலகுவான வழி இருக்கிறது. ரொம்ப இலகுவாக இருக்கும். மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்குரிய வாய்ப்பு இருந்தும், பல மொழி பேசுகின்ற வாய்ப்பு இருந்தும், எல்லா வாய்ப்பும் கிடைப்பதற்குரிய வாய்ப்பு இருந்தும், ஏ மனித வர்க்கமே! ஏன் உன்னால் முடியவில்லை, சொல்லித்தர ஆள் இல்லையா? கடைப்பிடிப்பதற்குரிய அறிவு இல்லையா? அதற்கு வைராக்கியம் இல்லையா? அப்ப எங்களுக்கு வழியே இல்லையா என்றால், ஏன் இல்லை ஒரு பத்து நிமிடம் ஞானிகளை வணங்கி, போற்றித் தொகுப்பை படித்து, பத்து நிமிடம் உருகி தியானித்து, “நீங்கள் பெற்ற அந்த பெரும் பேற்றை நான் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்க வேண்டும். அப்படி கேட்டால் ஞானிகள் சொல்லித்தருவார்கள்.
அப்போது, வேயுறு தோளியாக இருப்பது சக்தியின் கூறு. அது இடது கலை. அது இரண்டும் ஒன்று பட்டாலே விடமுண்ட கண்டன். விஷம் ஏது? விஷம் மேலே வந்துவிட்டதல்லவா, கண்டத்தோடு நின்று போகும்.
விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி – சரஸ்வதி வந்து விடுவாளே, கேட்ட மொழியெல்லாம் தந்து விடுவாளே, எந்த மொழி வேண்டுமானாலும் பேசு  மகனே! என்று சொல்வாளே! அவனுக்கு நிகரே இல்லையே!
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து – குற்றமற்ற சந்திரன் முடியின்  மேல். தேகம் அல்லது திங்கள் என்பது சந்திரனின் கூறு, உடம்பின் கூறு. உடம்பில் மாசு நீங்கியது. அமிழ்தபானம் மேலே ஏறியது. சரஸ்வதி வீணை கைக்கு வந்துவிட்டது. வீணை வாசித்து வருகிறாள். எல்லா மொழியும் பேசுவாள். இந்த நவக்கிரகங்கள் வாசி வசப்பட்டவனை, ஒன்றும் அசைக்க முடியாது.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து
உளமே புகுந்த  அதனால்
     உருகி தியானிப்பதனால் அடியேன் உள்ளத்தில் தலைவன் எழுந்தருளினான். என் சிந்தையில் குடி கொண்டுவிட்டான் தலைவன். அதனால் உருகி தியானம் செய்தேன். எல்லாம்வல்ல பரம்பொருளை எல்லாம்வல்ல பராபரத்தை உருகி தியானம் செய்தேன். மனிதவர்க்கம் பெற முடியாத பெரும்பேற்றை பெற்றுவிட்டேன். எல்லா மனிதனும் இறந்து பிறந்து போகின்றவன். நான்மட்டும் இறக்காது இருக்கின்றேன். இறப்பதும் பிறப்பதும் வேலை. அதையெல்லாம் நீக்கி விட்டேன் என்றார்.
இறப்பும் பிறப்பும் இருமையும் நீக்கித்
துறக்கும் தவம் கண்ட சோதிப் பிரானை
மறப்பிலராய் நித்தம் வாய்மொழிவார்கட்கு
அறப்பதி காட்டும் அமரர் பிரானே.
·         திருமந்திரம் – துறவு – கவி எண் 1614
இறப்பும் பிறப்பும் இருமையும் நீக்கித்  வருகின்ற காற்றையும் போகின்ற காற்றையும் நீக்கி,
துறக்கும் தவம் கண்ட சோதிப் பிரானை – அவனுக்குத்தான்; சோதிபிரானை – யாரால் அந்த வாய்ப்பு கிடைத்தது என்றான். இடகலையும், பிங்கலையும் சேர்த்துவிட்டான். இடது பாவம், வலது புண்ணியம். இடது தூலம், வலது சூட்சுமம். இது சீடன், அது குரு என்றான். ஆக, இரண்டும் சேரும் இப்போது.
இறப்பும் பிறப்பும் இருமையும் நீக்கித் துறக்கும் தவம் கண்ட – அந்த இரகசியத்தை அறிந்தவன் தான் துறவி. தவமும் தவமுடையார்க்கு ஆகும். இந்த இரகசியத்தை அறிந்தவன்தான் தவசி.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
·         திருக்குறள் – தவம் – குறள் எண் 262    
தவம் எது என்றான். உடம்பையும், உயிரையும் அறிய வேண்டும், குளிர்ச்சியையும், வெப்பத்தையும் அறிய வேண்டும், சக்தியையும், சிவத்தையும் அறிய வேண்டும், இடகலையையும், பிங்கலையையும் அறிய வேண்டும், தூலத்தையும், சூட்சுமத்தையும் அறிய வேண்டும், காமத்தையும், காமம் அற்றதையும் அறிய வேண்டும், அறியாமையையும், அறிவையும் அறிய வேண்டும். பிறப்பும் இருமையும் நீக்கி, இதை அறிந்து கொள்ள வேண்டும்.
தவமும் தவமுடையார்க்கு ஆகும். அப்போது தவத்தை அறிந்தவன், இதை அறிந்து கொள்ள வேண்டும், ஆன்மாவைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், உடம்பைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், காமத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், பசியைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், பஞ்சபூதத்தை அறிந்திருக்க வேண்டும், நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
இதை அறிந்து கொண்டவன், புரிந்து கொண்டவன், தெரிந்து கொண்டவன்தான் தவத்தை மேற்கொள்ள வேண்டும், தவமும் தவமுடையார்க்கு ஆகும் – இது புரியாமல் என்ன செய்வான், காவி கட்டியிருப்பான். அவனை காமம் விடாது. காமத்தை வெல்ல முடியுமா? காவி காட்டினாயே, உன்னால் காமத்தை வெல்ல முடியுமா? அதை வெல்ல முடியாது, வெல்லுதற்கு உபாயம் இடகலையும் பிங்கலையும் சேர்க்க வேண்டும். வெல்லுதற்கு உபாயம் திருவடியைத் தவிர வேறு கதியில்லை.
`
தவம் என்பதே முற்றுப்பெற்ற முனிவனாகிய மகான் இராமலிங்க சுவாமிகளையும், மகான் அருணகிரிநாதரையும், மகான் திருவள்ளுவரையும், மகான் திருஞானசம்பந்தரையும், மகான் பட்டினத்தாரையும் பூஜை செய்வதுதான் தவம்.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் –  தவம் சித்தி பெற்றது. தவம் சித்தி பெற்றால் அங்கே பசி ஏது? காமம் ஏது? நரை திரை மூப்பு ஏது? இல்லை, எல்லாம் அற்றுவிட்டது. தவம் முடிந்து விட்டது. அப்படி ஒரு வாய்ப்பு பெற்றவனை நவக்கிரகம் ஒன்றும் செய்யாது.
மாசறு திங்கள் கங்கை – மாசறு என்றால் குற்றமற்ற தேகம். திங்கள் என்றால் சந்திரன்; திங்கள் என்றால் உடம்பு. சூரியன் என்றால் சூரியகலை. அது சிவம்.
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து – நான் பேசுவது பக்தி போன்று இருக்குமே தவிர, அது பக்தியில்லை. ஆனால் பக்திதான், அது சிவபெருமானாக காட்டியதால், வெப்பத்தை சிவபெருமானாக காட்டியதால் சக்தியை பார்வதி தேவியாக, உமாதேவியாக பேசுகிறார். ஆக பொருள் அறிந்து பூஜை செய்கின்ற மக்களுக்கு நவக்கிரகத்தால் இடையூறு வராது.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து
உளமே புகுந்த  அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!  
    மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் – கவி எண் 1
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
     கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
     தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
     தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
    மகான் அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் – கவி எண் 38
ஆக இந்த நவக்கிரகங்கள், மகான் திருஞானசம்பந்தரை பூஜை செய்கின்றவனை, பக்தி விசுவாசம் உள்ளவனை இடர முடியாது, நவக்கிரகம் ஒன்றும் செய்ய முடியாது. உனக்கு இப்போது சனி திசை, அட்டமா சனி இருக்கிறது. இந்த சனி என்னை என்ன செய்யும்? என்று கேட்டான். யாரய்யா உனக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது என்றான். சனீஸ்வரன்தானே எனக்கு அவன் ஈசனாக இருப்பான். உனக்கு சனீஸ்வரனாக இருக்கிறான்.
ஏனய்யா எனக்கு மட்டும் ஈசுவரனே சனீஸ்வரனாக இருக்கிறான் என்றான். குணக்கேடு! என்றைக்கு உனக்கு நல்ல புத்தி வந்தது? என்றைக்கு உனக்கு பக்தி வந்தது? என்றைக்கு தயை சிந்தை வந்தது? என்றைக்கு வஞ்சனை அற்று நீ வாழ்ந்திருக்கிறாய் மகனே? உனக்கு ஈஸ்வரனே சனீஸ்வரனாக இருக்கின்றான்.
எனக்கு எப்படி சனீஸ்வரன் ஈசனாக இருக்கிறான். ஒன்றுமில்லையா! நான் என்ன காட்டுமேட்டுக்கா போனேன். “மாணிக்கவாசகா! நீங்களெல்லாம் பெரியோனய்யா!” என்று கேட்டோம். ஆசான் மாணிக்கவாசகர் எனக்கு அருள் செய்தார்.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
     கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
     தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
     தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
    மகான் அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் – கவி எண் 38
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே – ஒன்பது நவக்கிரகங்கள் அதில், ஞாயிறு என்பது சூரியன், திங்கள் என்பது சந்திரன், அங்காரகன் என்றால் செவ்வாய், புதன் என்றால் புதன் கிரகம், குரு என்றால் வியாழன் கிரகம், சுக்கிரன் என்றால் வெள்ளி கிரகம், சனி, பாம்பிரண்டுமுடனே – சனி, ராகு, கேது.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆக ஒன்பது நவக்கிரகங்கள்.
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – ஆசு என்றால் குற்றம். ஆசறு என்றால் குற்றமில்லை!
தேகத்தில் குற்றமில்லை! அங்கே நவக்கிரகத்திற்கு வேலை இல்லை.
தேகத்தில் குற்றமில்லை. சிந்தனையில் குற்றமில்லை.
தேகத்தின் குற்றமே, தேகத்தில் இருக்கும் மாசுதான் சிந்தனையை மாசுபடுத்தும். தேகத்தின் குற்றமே சிந்தனையின் குற்றம். ஏனய்யா வஞ்சனை வந்தது என்றான். அது தேகத்தின் கூறு.
எப்போது பார்த்தாலும் குற்றமான சிந்தனையே இருக்கும். ஆணுக்கு பெண்ணைப் பற்றிய சிந்தனை, பெண்ணுக்கு ஆணைப் பற்றிய சிந்தனை இருக்கும். இதற்கெல்லாம் உபாயமில்லையா? இருக்கு. இந்த குணக்கேடுகளையெல்லாம் வென்றவர்கள் ஞானிகள். அவர்கள் திருவடியைப் பற்றி கரையேறிக் கொள். இதற்கு பணமா கேட்கிறான். பக்திதான் கேட்கிறான்.
தினமும் ஒரு ஐந்து நிமிடம் ஞானிகளிடத்து பக்தி செலுத்தி ஆசி பெறுங்கள். முடியுமா உன்னால்? ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பூஜை செய்து பாரேன். விடுமா உன்னை, உனது வினை உன்னை விடாது. நீ டி.வி பார்க்க, புத்தகம் படிக்க வேண்டுமென்கிறாய். இதிலேயே கவனம் செலுத்திக் கொண்டு பக்தி செலுத்த நேரமில்லை என்கிறாய். ஐந்து நிமிடம் அமர்ந்து பக்தி செலுத்து என்றால் நேரமில்லை என்பாய். உனக்கு எப்போது நேரம் வரப்போகிறது, நேரம் உன்னைத்தேடி வந்து கொண்டே இருக்கிறது.
நேரம் உன்னைத் தேடி வறுமையாகவும், நோயாகவும், விபத்தாகவும் இதுபோன்ற பல பிரச்சனைகளாகவும் வரும். இப்படி பல பிரச்சனைகள் உன்னைத் தேடி வரும்.
நல்ல மனம் வேண்டும். ஞானிகள் ஆசியிருந்தால் நல்ல மனம் இருக்கும். ஞானிகள் ஆசியில்லையென்றால் லோபித்தனம் வரும்.
நாள் முழுவதும் நல்லா வேலை வாங்குவான், சம்பளம் தரமாட்டான். வேலையெல்லாம் முடித்து விட்டு சம்பளம் கேட்டால், மாலைப்பொழுதாகிவிட்டதே, விளக்கு வைத்தாயிற்று, நாளைக்கு சம்பளம் வாங்கிக் கொள் என்பான்.
நாள் முழுவதும் காட்டில் வேலை செய்வான். “ஐயா, பிள்ளை குட்டிகளுக்கு கொண்டுபோய் ஏதாவது நெல் குத்தி கஞ்சி காய்ச்சி தரணும். தயவு காட்டுங்கள்” என்பான், வீழ்ந்து வணங்குவான்.
அதற்கு “அறிவிருக்கிறதா உனக்கு, சாயந்தரம் ஆகிவிட்டது, விளக்கு வைத்தாகிவிட்டது, இப்ப வந்து கேட்கிற” என்பான், ஐயோ பாவம்! என்ன வன்மனமோ உனக்கு, ஏ சாகப்பிறந்தவனே! குறிப்பறிய உன்னால் முடியுதா? ஐயோ. காலையிலிருந்து பசியோடு வேலை செய்கின்றானே, நாமெல்லாம் சாப்பிட்டோமே! அவன் காலையிலிருந்து உணவே சாப்பிடாமல் அப்படியே “தவ தவ” என்று நிற்கின்றானே, ஏ பாவி மனமே! கூலி கொடுக்க உன் மனம் ஒத்து வருகிறதா.
எமன் விடுவானா உன்னை? எப்படி விடுவான்? அப்படியே வயிறு எரிந்து போவான். அடப்பாவி என்பான். அநியாய வட்டி வாங்குவது, சொத்து மேல் வெறி, பணத்தின் மேல் ஆசை, பொறாமை, வஞ்சனை.
எப்படியாவது பொருளை சேர்க்க வேண்டுமென்பான். உன்னை எமன் பார்த்துக் கொண்டே இருப்பான். வாடா கண்ணா, இங்கே! என்பான். எமன் யார்? எமனை எங்கேயோ தேடாதீர்கள். உனக்கு நோய் வந்ததல்லவா, வயிற்று வலி வந்ததல்லவா, பசி எடுக்கவில்லையா? இப்படியெல்லாம் எமன் வருவான்.
வயிறு சம்பந்தப்பட்ட நோய் வந்தாலே நான் புரிந்து கொள்வேன். சரி, இவன் பலபேர் வயிற்றெரிச்சலை கொட்டியவன் என்று. இதற்கு என்ன உபாயம்? உபாயம்தான் இருக்கிறதே. ஆசானைக் கேள்.
கோடி கோடியாக செல்வம் குவிந்திருந்தாலும் இன்னும் செல்வம் வேண்டுமென்றுதானே கேட்டாய், நல்ல மனது வேண்டுமெனக் கேட்டாயா. அவன் ஏமாற வேண்டும். அவனிடத்திலே பணம் கொடுத்திருக்கிறேன், அவன் நிலம் எனக்கு வேணும் என்றுதானே கேட்டாய்.
இந்த பூமி தோன்றி பல இலட்சம் கோடி வருஷமாச்சு. அதை எத்தனை பேர் ஆட்சி செய்துவிட்டு போயிருக்கிறான். எத்தனை பேர் கைக்கு பட்டாவாக மாறியிருக்கிறது. இப்போ உன்னிடம் உன் கைக்கு பட்டா வந்திருக்கிறது. இன்னும் எவ்வளவு நாளைக்கு இருக்கும் அந்த பட்டா? எவ்வளவு நாள் நீ வாழப்போகிறாய்? ஒரே வெறி!
அவன் சொத்தை அபகரிக்க வேண்டும், இவன் சொத்தை அபகரிக்க வேண்டும். என்னய்யா பலகீனம்?
இந்த பலகீனத்தை வெல்வதற்கு வழி இல்லையோ?
உண்டு.
அது மகான் இராமலிங்கசுவாமிகள் திருவடி! மகான் வள்ளுவப்பெருமான் திருவடி! மகான் திருமூலதேவர் திருவடி! மகான் அகத்தீசர் திருவடி! மகான் மாணிக்கவாசகர் திருவடி! மகான் திருஞானசம்பந்தர் திருவடி!
இவர்கள் ஆசியில்லாமல் உனக்கு இந்த குணக்கேடு நீங்குமோ? குணக்கேடு நீங்காமல் உனக்கு விமோசனம் உண்டோ? வன்மனம் உள்ளவன் ஞானியாக முடியுமோ? வன்மனம் உள்ளவன் இந்த துறைக்கு வரமுடியுமோ? வரமுடியாது. ஞானிகள் ஆசிருந்தால்தான் இவைகளிலிருந்து விடுபட முடியும்.
இந்த குடிலுக்கு வருவதென்றால் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் வாராவாரம் வந்திருந்து இது போன்ற கருத்துகளை கேட்பதற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இங்கே அழகு மொழிக்கு வேலை இல்லை. அலங்காரமான சொற்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இதுதான் உண்மை! கசக்க கசக்க பேசுவோம் நாங்கள்.
ஏன் இப்படி பேசுகின்றோம்? பாராட்டிப் பேசுவது எங்களுக்கு பெரிய விஷயமில்லை. பாராட்டிப் பேசி விடுவோம். ஐயோ! மனித வர்க்கமே! ஆண்களே! பெண்களே! என் தாய்மார்களே! வாழ்க்கையில் அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஞானிகள் திருவடியைப் பிடித்துக் கரையேறிக் கொள்ளுங்கள். கிடைத்தற்கரிய மானுடப்பிறவி கிடைத்துள்ளது. பெறுதற்கரிய மானுடப்பிறவியைப் பெற்றிருக்கின்றோம். இதை தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.
    திருமந்திரம் – கேடு கண்டிரங்கல் – கவி எண் 2090
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார்போற்றுதல் வேண்டும் என்றார் மகான் திருமூலர். உருகி தியானிக்க வேண்டுமல்லவா. நவக்கிரகங்களில் இருந்து நாம் விடுபட வேண்டும். காமத்திலிருந்து விடுபட வேண்டும். வஞ்சனையிலிருந்து விடுபட வேண்டும். பொய் புரட்டிலிருந்து விடுபட வேண்டும். பேசுவதெல்லாம் பொய்! செய்வதெல்லாம் அக்கிரமம்! இதில் பக்தி ஒன்றும்  குறை இருக்காது! பக்தி என்பதே நல்ல மனம்தான். அந்த நல்ல மனமும் நல்லவனுடைய திருவடியைப் பற்றாமல் வராது. அதுதான் பக்தி.
ஏன் இந்த பலகீனங்கள்? பல ஜென்மங்களில் செய்த பாவமே குணக்கேடுகளாக இருக்கும். யாரேனும் பெரியவர்கள் வந்து சொல்ல வேண்டும். சொன்னாலன்றி ஒருவருக்கும் தெரியாது.
இப்ப நாம் அன்னதானம் பல இடத்தில் செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஊரிலும் தர்மத்தை வளர்க்கின்றோம். தர்மத்தைப் பற்றி மக்கள் மத்தியில் தெரிகிறது. ஏனென்றால் மனிதவர்க்கம் நாளுக்கு நாள் லோபித்தனமும், பொருள் கொடாத தன்மையும் இருப்பதால், அப்படியே நலிந்து கொண்டு வருகின்றது.
எங்கு பார்த்தாலும் கொடுமைகள். நல்ல சிந்தனையே இல்லை. இரக்க சிந்தனை இல்லை. அந்த இரக்க சிந்தனைக்கு அன்னதானம் செய்யச் சொல்லியிருக்கின்றோம். அதனால் நாலா திசையும் அன்னதானம் செய்து கொண்டிருக்கின்றோம். இப்படி அன்னதானம் செய்வதை பார்க்கின்றான். ஏன், நாம் செய்தால் என்ன? என்று எண்ணுவான். சேலத்தில் ஒரு இடத்தில் அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்தார்கள் மற்றவர்கள். நாமும் செய்ய வேண்டுமென்று வீட்டில் சமைத்து அன்னதானம் கொடுத்தார்கள்.
இப்ப நாலா திசையும் அன்னதானம் நடந்து கொண்டிருக்கு. நாலா திசையும் தர்மம் வளர வேண்டும், தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்கிறோம்.
பக்தி என்றால் என்ன நினைக்கிறார்கள்? பக்தி என்றால் ஆடு கோழி வெட்டுவதா? ஐயோ! வினை சூழ்ந்து கொள்ளும். வேறு என்ன சடங்கு செய்து பாவத்தைத் தீர்ப்போம். ஆடு கோழி வெட்டினால் போகுமா, வினை சூழ்ந்துகொள்ளும். காசி ராமேஸ்வரம் போனால் பாவம் விடுமோ, விடாது. எங்கே போனாலும் எடுபடாது. அப்ப வினை தீர வேண்டும். பக்தியாலும் தியானத்தாலும்தான் முடியும். தானத்தாலும், தியானத்தாலும்தான் முடியும்.
காசிக்கோடில் வினை போமோ – அந்தக்
கங்கையாடில் கதி தானுமுண் டாமோ
பேசுமுன் கன்மங்கள் சாமோ – பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.   
§  மகான் கடுவெளிச்சித்தர் பாடல் – கவி எண் 15
ஆக நவக்கிரகங்கள் குற்றமற்றுப் போக வேண்டும். நவக்கிரகங்களிலிருந்து விடுபட வேண்டும். மாசற்ற திங்கள் கங்கை – உடம்பின் மாசு நீங்கினால் குணமாசு நீங்கும். குணமாசு நீங்கினால் நல்ல பண்பு வரும். நவக்கிரகத்திற்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. அங்கே எமனுக்கு வேலை இல்லை. அங்கே எமன் இல்லை.
எமன் யாரென்று கேட்டான். அறிய முடியாத அறியாமையே எமன். நமது உடம்பே நமக்கு எமனாக இருக்கும். நமது சிந்தனையே நமக்கு எமன். இப்படி சொல்கிறீர்களே இல்லறத்தானுக்கு கிரகக்கோளாறு இல்லை என்கிறீர்கள். உனக்கும் இல்லையப்பா! அன்னதானம் செய்து பாரேன். புண்ணியத்தை செய்தால் கிரகம் என்ன செய்யும்? தர்ம தேவதை உரம் பெற்று விட்டாள்.
தர்மதேவதை இருந்தால் எந்த கிரகம் அருகில் போகும் ஏ! அங்கே போக முடியாது! அங்கே தர்ம தேவதை இருக்கிறாள். தர்ம தேவதை என்ன விசயம் என்று கேட்பாள். என்ன சனியா, செவ்வாயா? என்ன விசயம் எல்லாம் ஓடிப்போங்கள்! ஒருவரும் இங்கே வரக்கூடாது!
யார் அங்கே இருக்கின்றாள், தர்மதேவதை அங்கே இருக்கின்றாள். வீர பராக்கிரமமாக அங்கே நிற்கின்றாள். போனால் வெடுக்கென்று விழுங்கியே விடுவாள்! தர்ம தேவதை இருக்கிறாள் கூடவே, புண்ணியம் இருக்கு கையிலே!
பக்தி இருக்கு, பூஜை இருக்கு, திருவருள் துணை இருக்கு, புண்ணியம் இருக்கு. திருவருள் துணை இருப்பதனாலே, அங்கே நவக்கிரகங்களுக்கு வேலை இல்லை என்றான்.
 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்கள்.
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – அடியவர்களாக இருந்தால், இந்த கோளறு பதிகம் கோள்+அறு – நவக்கிரகங்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
     கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
     தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
     தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
    மகான் அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் – கவி எண் 38
நவக்கிரகங்கள் குற்றமற்று விடும். ஆசறு – ஆசு என்றால் குற்றம்.
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – ஆசான் திருஞானசம்பந்தரை பூஜை செய்கின்றவனுக்கும் நவக்கிரகங்களுக்கும் சம்பந்தமில்லை. குற்றமற்ற அவனுக்கு தோஷமில்லை. ஆக ஞானிகள் பக்தியை மையமாக கொண்டிருக்கின்றார்கள். இது தத்துவம்.
என்பொடு கொம்பொ டாமை இவைமார் பிலங்க – சிவன் திருமார்பில் எலும்பு, பன்றிக்கோடு மாலையாக இருக்கு. பன்றிக்கோடு என்றால் அதனுடைய மூக்கு அப்படி (வளைந்து) இருக்கும். காட்டுப்பன்றிக்கு அப்படி இருக்கும். பன்றிக்கோடு, ஆமை ஓடு இவையெல்லாம் சிவனின் திருமார்பில் இருக்கும்.
என்ன அலங்காரப்பொருளா இது? என்ன முத்தாரமா இது? இல்லை. அவன் சுடுகாட்டில் சுற்றுகின்றவன். அவன் மட்டுமல்ல. ஞானிகளே, ஆசான் திருஞானசம்பந்தரே அடிக்கடி சுட்காட்டுக்குப் போவார். அங்கே இருக்கும் எலும்புக்கூட்டை பார்ப்பார். எலும்புக்கூட்டை எதற்கு பார்ப்பது என்றால், இந்த நிலைமை வரும், மரணம் வரும். ஒரு அச்சத்தை உண்டாக்குவதற்கு. மனதில் ஒரு பயத்தை உண்டாக்குவதற்கு, சாவு வரும், சாவு வரும் என்ற என்னத்தை உண்டாக்குவதற்கு.
என்பொடு கொம்பொ டாமை இவைமார் பிலங்க – பன்றி கொம்பை சிவபெருமான் மார்பில் தரித்திருப்பார். எலும்பு மாலையாகப் போட்டிருக்கின்றார். சிற்றெலும்பு, பெரிய எலும்பாக இருக்கும். அதில் சின்ன பிள்ளைகளின் எலும்பும் இருக்கு. பெரியவர்களின் எலும்பும் இருக்கும். இதற்கு வயதில் சிறியவர்களும், பெரியவர்களும் இறக்கிறார்கள் என்று அர்த்தம்.
என்பொடு கொம்பொடு ஆமை – ஆமை ஓடு, ஏனய்யா ஆமை ஓடு வைத்திருக்கின்றான் என்றான். பன்றிக்கோடு என்பது பன்றிக் கொம்பு. மும்மலத்தின் வேகத்தைக் கொன்றுவிட்டேன் என்று பொருள். மும்மலம் என்பது பன்றி. அதைக் கொன்று அதன் கொம்பை எடுத்துவிட்டேன் என்றான். ஏன் எலும்பு போட்டிருக்கின்றாய் என்றான். சக்தி எல்லாம் போச்சு காற்றோடு என்றான்.
என்னை வஞ்சித்த அந்த சக்தி – சத்து. சத்துதானே என்னைக் கொன்றது, சத்துதான் விஷமாக இருந்தது. அதைக் கொன்று விட்டேன். அதற்குத்தான் இந்த எலும்பு.
அங்கே சத்து இல்லை, காம தேகம் நீங்கிவிட்டது. என்பொடு கொம்பொடாமை – மும்மலத்தை வென்றுவிட்டேன், சக்தி போய்விட்டது. உடம்பில் இருக்கும் பெண்மையால், ஆணும் பெண்ணும் சேர்த்து எடுத்த இந்த உடம்பின் நச்சுத்தன்மை நீங்கிவிட்டது. சக்தி போய்விட்டது, உடம்பில் உள்ள சத்து போய்விட்டது. நான் தினம் சத்து ஏற்றிக்கொண்டே வந்தேன். நான் சாப்பிட்டுக் கொண்டே வந்தேன். சைவ உணவு சாப்பிட்டேன், சத்து இருந்தது.
கனல் ஏற ஏற ஏற உடம்பில் உள்ள சக்தியெல்லாம் போய் இப்போது சிவத்தின் கூறாக நிற்கின்றேன் நான். அதற்கு என்ன எடுத்துக்காட்டு என்றால், நான் சக்தி இழந்து, சிவமாக இருக்கின்றேன். அதுதான் எலும்பு, எலும்பு மாலை. பன்றிக்கோடு – மும்மலத்தை வென்றுவிட்டேன். ஆமை ஓடு எதற்கய்யா என்றான். பொறி புலன்களை வென்றுவிட்டேன்.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
    திருக்குறள் – அடக்கம் உடைமை – குறள் எண் 126
என்று சொல்வார் ஆசான் திருவள்ளுவர். ஒரு ஜென்மத்தில், தவத்தை மேற்கொண்ட ஜென்மத்தில், காம தேகம் வஞ்சிக்கும். அதை வெல்ல வேண்டும், ஆமை என்ன செய்யும் போய்க்கொண்டே இருக்கும். துன்பம் வந்தால் அந்த ஐந்து உறுப்பையும் உள்ளே இழுத்துக்கொள்ளும்.
துன்பம் வந்தவுடன் அப்படியே பார்க்கும். நரி என்ன செய்யும், அப்படியே போகும். ஆமைக்கு மேல் கடினமான ஓடு இருக்கும். நரி  பார்க்கும், புரட்டி புரட்டி பார்க்கும். ஆமை அப்படியே அசையாமல் இருக்கும். அது ஆமையின் இயல்பு. சரி, யாரோ நம்முடைய எதிரி வந்துவிட்டான். இப்ப நாம் கை, கால் நீட்டிவிட்டால் பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று அப்படியே இழுத்து கொள்ளும். அப்படியே கிடக்கும்.
அப்ப என்ன சொல்கிறார் இங்கே, பொறி புலன்கள் அதன் வழி செல்லாமல் தடுத்து விட்டேன். ஆமை ஓடு. ஆமை ஓட்டிற்கு என்ன அர்த்தம் என்றால் தன்னுடைய மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறிவழி செல்லாது, என் வழிபடுத்தி விட்டேன். அதற்குத்தான் இந்த ஆமை ஓடு போட்டிருக்கின்றேன். என்ன முத்தாரமா இது புரிந்து கொள்ளுங்கள்! தத்துவம் இது!
என்பொடு கொம்பொ டாமை இவைமார் பிலங்க – அடிக்கடி குறித்துக் கொள்ள வேண்டும். அப்போது, எலும்பு காமதேகம் நீங்கியதற்கு எடுத்துக்காட்டு. பன்றிக் கொம்பு மும்மலத்தை வென்றதற்கு எடுத்துக்காட்டு. ஆமை ஓடு பொறி புலன் அதன் அதன் வழியே செல்லாமல் அடக்கிவிட்டேன் என்பதற்கு எடுத்துக்காட்டு.
என்பொடு கொம்பொ டாமை இவைமார் பிலங்க
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்துஎன்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதான்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
    மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் – கவி எண் 2
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை – ஏழை என்பது பெரிய இரகசியம்.
என்னிடம் ஒன்றுமில்லை. எல்லாம் ஓடிவிட்டது. சத்தே இல்லை. சத்துதனே மூலதனம். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சத்துதானே மூலதனம் எல்லாம் போய்விட்டது.
எருதேறி ஏழை யுடனே – எருது காளை வாகனம். விடை ஏறும் – விடை என்றாலும் காளை வாகனம். அப்ப மூச்சுக்காற்றுக்கு காளை வாகனம் என்று பொருள். மூச்சுக்காற்று வசப்பட்டதனால் தேக மாசு நீங்கியது. சக்தி நீங்கியது. அப்ப என்ன சொல்கிறார் காளை வாகனத்தில் வருகின்றார். காளை வாகனத்தில் போக வேண்டும். மேலே போக வேண்டும்.
இவைமார் பிலங்க எருதேறி ஏழை யுடனே – சத்து இல்லை. சத்து இல்லை. ஒன்றும் இல்லை. ஏனென்றால் மூலதனமே இல்லை. ஏனய்யா, தொண்ணூறு வயது கிழவன் பெண்களைப் பார்த்தால் என்ன செய்வான்? அங்கே டப்பா காலி! ஒன்றுமில்லை. இப்ப எழுபது, என்பது வயது கிழவனெல்லாம் பார்க்கின்றான். கண்ணாடி மூலம் பார்க்கிறான். அது யாரு போஸ்டரில் அது யாரது அது ஓகோ, அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பான். உனக்கென்ன நட்டம் என்றான். திருமணம் ஆனது, ஆகவில்லை, உனக்கென்ன நட்டம். அவள் யாரை திருமணம் செய்து கொண்டாள் என்ன?
இன்னும் நினைப்பு போகுதாடா உனக்கு, நினைப்பு போகுதான்னேன்! உன்னை விடுமா அது. ஆனால் சத்து இல்லை. இதயத்தில் அந்த நச்சுத்தன்மை இருக்கும். கடைசி வரையிலும் உன்னை விடாது. தொண்ணூறு வயதானாலும் விடாது. நூற்றிபத்து வயதானாலும் விடாது. காமத்தை வெல்லும் வரையில் உன்னை கொள்ளாமல் விடாது.
ஆக, அதை அவன் என்ன செய்கின்றான்? அந்த சத்து போய்விட்டது. என்னை வஞ்சித்த காமத்தை நான் கொன்றுவிட்டேன். என்னை வஞ்சித்த காமத்தை நான் வென்றுவிட்டேன். அதனால் இப்போது நான் ஏழையாக இருக்கின்றேன். தலைவன் என்னை நாடி வந்துவிட்டான்.
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்துஎன் உளமே புகுந்த அதனால் – அவன் என்ன செய்தான், கீழ் நோக்கி பாயக்கூடிய திரவத்தை, திரவப்பொருளை அமிர்தமாக மேல் நோக்கினவன். நானும் அதை விரும்பினேன். என்னுள் புகுந்தான்.
ஞானிகளை பூஜை செய்திருக்கின்றேன். பூஜை செய்ததினால்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் ஏழையாகி விட்டேன். காளை வாகனத்தில் வந்தான். அங்கே உமாதேவியும், சிவபெருமானும் வந்தார்கள். நான் முன்னமே சொன்னேன். உமாதேவி என்பது சக்தியின் கூறு. உடம்பில் உள்ள சத்து. சிவம் என்பது உடம்பில் உள்ள வெப்பம். சத்து சித்து ஆனந்தம் என்பார்கள். அது முறைப்படுத்தப்பட்டது.
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்துஎன் உளமே புகுந்த அதனால் – நான் உருகி தியானித்தேன். அவன் என் உள்ளத்தில் எழுந்தருளினான். அடியேனது உள்ளத்தில் எழுந்தருளினான். உள்ளத்தில் புகுந்தான். உள்ளத்தில் புகுந்துவிட்டான். உருகி தியானம் செய்ய செய்ய செய்ய என் உள்ளத்தில் புகுந்துவிட்டான். அடியேன் உள்ளத்தில் புகுந்துவிட்டான்.
முதல் கவியில் விளக்கம் சொல்லும்போது என் உள்ளத்தில் எழுந்தருளினான் என்றார். இரண்டாவது கவியில் என் உள்ளத்தில் புகுந்துவிட்டான் என்கிறார். உள்ளே நுழைந்து விட்டான். உருகி தியானம் செய்தால்தான் வருவான். இல்லையென்றால் பாவிகளோடு அலைவானா, பாவிகள் உள்ளத்தில் நுழைவானா, என்ன நுழையவே மாட்டான். புண்ணியவானாக இருந்து யாரேனும் சொல்லித் தர வேண்டும். பெரியோர்கள் திருவடியை பூஜை செய் என்று சொன்னால்தான் வருவான்.
 பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்துஎன்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதான்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, திருவாதிரை, பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி இந்த பன்னிரண்டு நட்சத்திரங்களும் ஆகாத நட்சத்திரங்கள் என்று சொல்வார். அது ஆகாது. அந்த நட்சத்திரம் உள்ள சமயத்தில் போனால், அந்த நட்சத்திரம் உள்ள சமயத்தில் பணம் கொடுத்தால் வராது. மாதனம் கொடுத்தால் திரும்பி வராது.
நட்சத்திரங்களின் இயல்பு அந்த நட்சத்திரங்கள் ரொம்ப குற்றமான நட்சத்திரங்கள். தோஷம்! கெட்ட நட்சத்திரம்! அப்புறம் வெளியூர் போனால் திரும்பமாட்டான். ஐயோ! வெளியூர் போனால் திரும்பமாட்டானா! அப்புறம் என்னாகும் என்றான்? பாயில் படுத்தால் செத்துப்போய் விடுவான் என்றான்.
“ஓகோ! யாருக்கு இதெல்லாம், புண்ணியவான்கிட்டே செல்லுபடியாகுமா” புண்ணியம் செய்தால் ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, திருவாதிரை, பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி பன்னிரண்டு நட்சத்திரங்கள் இவை நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதான்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
அடியார்களுக்கு அது ஒன்றும் பாதிக்காது. அப்ப அந்த நட்சத்திரங்கள் தினத்தன்று பெரும் பொருள் கொடுத்தால் வராது என்றும், நோய்வாய்ப்பட்டால் இறந்து போவான் என்றும், வெளியூர் போனவன் போனான் என்றும், அவனுக்கு மட்டுமா, வெளிநாட்டில் இருப்பவன் என்னாவது?
இந்த நட்சத்திரங்களும், இந்த நவக்கிரகங்கள் என்னை என்ன செய்யும் அது குற்றமற்றது என்றார்.
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!  
ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதான்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
எந்த நட்சத்திரமாக இருந்தாலென்ன? எந்த நாளாக இருந்தாலென்ன? நாளென்ன செய்யும்? கோளென்ன செய்யும்? புண்ணியவான்களுக்கு வாய்ப்பிருக்கு. இரண்டு பாடல்தான் சொல்லியிருக்கின்றேன்.
ஆக மனிதவர்க்கம் நவக்கிரகத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், அதற்கு சாங்கியமே இல்லை. அதற்கு பரிகாரமே இல்லை. வாழ்வதற்கு ஒரே வழி என்ன என்று கேட்டான். பசியாற்றுங்கள்! பசியாற்றுங்கள்! என்ன பரிகாரம்? என்ன பரிகாரம்? என்ன பரிகாரத்தால் வெல்ல முடியும் உன்னால். ஒரு கடுகளவு கூட மாற்றமுடியாது.
என்ன பரிகாரம்? என்ன தோஷம்? என்ன ஏழரை சனி? என்ன ராகுகாலம்? என்ன குளிசம்? என்றும் ஒன்றுமில்லை. அங்கே தெளிவான அறிவு வந்துவிட்டது. வெற்றி! வெற்றி! வெற்றி! என்றான். என்னய்யா வெற்றி என்றான்.
திருவடியைப் பிடித்துவிட்டேன். ஆசான் நந்தீசர் திருவடியைப் பிடித்துவிட்டேன். மகான் மாணிக்கவாசகர் திருவடியைப் பிடித்துவிட்டேன். மகான் திருஞானசம்பந்தர் திருவடியைப் பிடித்துவிட்டேன். மகான் திருநாவுக்கரசரை பூஜை செய்தேன். ஆசான் அகத்தீசன் ஆசி பெற்றேன். மகான் திருமூலதேவர் ஆசி பெற்றேன். மகான் புஜண்டமகரிஷி, ஆசான் அகத்தீசர் திருவடியை பிடித்தேன். வெற்றி! வெற்றி! வெற்றி! என்றான்.
நவக்கிரகங்கள் என்ன செய்யும்? நட்சத்திரங்களும் என்ன செய்யும்? என்னை ஒன்றும் செய்ய முடியாது. நாள் என்ன கோள் என்ன எங்களை ஒன்றும் நெருங்கமுடியாது. எங்கே நாளும் கோளும் வேலை செய்யும்? எங்கே தயைசிந்தை இல்லையோ, எங்கே தன்னை அறியவில்லையோ, எங்கே பக்தி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லையோ, அங்கேயல்லவா தோஷம் அங்கேயல்லவா சனிக்கிரகம் இருக்கும்.
சனீஸ்வரன் என்ன செய்வான்? நவக்கிரகங்கள் என்ன செய்யும்? இவனல்லவா வந்து மாட்டிக் கொண்டான். எண்ணம் சரியில்லை, இவனுக்கு பிரச்சனை வந்தது. இப்போது நான் பேசுவது யாரையும் இடறிப்பேசுவதாக நினைக்க வேண்டாம். தப்பித்துக் கொள்ளுங்கள் அதற்காக சொல்கிறேன்.
நவக்கிரகங்கள் நம்மை என்ன செய்யும்? நாளென்ன செய்யும்? கோளென்ன செய்யும்? நட்சத்திரங்கள் என்ன செய்யும்? ஒன்றும் நம்மை இடற முடியாது. நம்மை இடறுவது நம்முடைய பலகீனங்கள்! நம்முடைய பலகீனத்தை நாம் வெல்ல வேண்டும். இதுதான் இந்த கவியின் சாரம்.
மனித வர்க்கம் நவக்கிரகங்களிலிருந்து விடுபட வேண்டும். இருபத்தேழு நட்சத்திரங்கள் நமக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். பன்னிரண்டு நட்சத்திரங்கள் கெட்ட நட்சத்திரம், பயனற்றது. அதனால் தோஷம் என்று சொல்வான். அதுவும் அவசியமில்லை. எல்லா நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே! எல்லா நாட்களும் நல்ல நாட்களே! எல்லா கிரகங்களும் நல்ல கிரகங்களே!
தினம் தியானம் செய்தால் நல்ல நட்பு உண்டாகும். திருவருள் துணை இருக்கும். திருவருள் துணை கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம். அதனால்தான் ஆசான் திருஞானசம்பந்தர், “தொண்டர்களே! பிழைத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்வதாகும் இந்த பாடல். கோள் அறு பதிகம். உனக்கும் நவகோளுக்கும் சம்பந்தமே இல்லாமல் அறுக்க வேண்டும் என்றார்.
    
கோள்’ அறு பதிகம்! மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பாடலுடைய தன்மை என்ன என்றால்,
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து
உளமே புகுந்த  அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!  
    மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் – கவி எண் 1
என்பொடு கொம்பொ டாமை இவைமார் பிலங்க
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்துஎன்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதான்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
    மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் – கவி எண் 2
மகான் திருஞானசம்பந்தர் பாடியது உலக மக்கள் உய்வதற்காக. இந்த நூலை தொட்டாலே போதும். நீ இலேசாக நினைத்து விடாதே! இந்த நூலைப் படித்து மனப்பாடம் செய்தாலே, நான் அங்கே இருப்பேன். நான் உன் இல்லத்தில் குடி இருந்தால் உன் உள்ளத்தில் இருதால், நவக்கிரகங்கள் உன்னை என்ன செய்யும்? அப்படியே வந்தாலும் பொடியாக்கி விடுவேன், நட்சத்திரங்கள் வந்தாலும் தூள் தூளாக்கி விடுவேன். அத்தனையையும் புறமுதுகு காட்டச் செய்வேன், ஓட ஓட துரத்தி விடுவேன்.
நட்சத்திரத்தையும், நவக்கிரகங்களையும், என் நாமத்தை அழைத்துப்பார்! என்று சொல்வதற்கு ஒப்பாகும். ஆகவே இந்த உலகம் உய்ய வேண்டுமென்றால், ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்றால், துன்பம் இல்லாது இருக்க வேண்டுமென்றால், நோய் இல்லாது இருக்க வேண்டுமென்றால், தெளிந்த மனம் வேண்டுமென்றால், நல்ல சிந்தனை வேண்டுமென்றால், மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டுமென்றால், இது போன்ற ஞானிகளின் நூல்களை, கோளறு பதிகத்தை, திருவாசகத்தை, ஆசான் திருஞானசம்பந்தர் மனமுவந்து அருளிய கோளறு பதிகத்தை தொடும்போதே, தலைவன் வந்துவிடுவான். கேட்டதெல்லாம் தருவான், வெற்றி பெறுங்கள்.
இங்கே இந்த ஸ்தாபனத்தில் நான் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்றார்கள். ஆண்களும் பெண்களுமாக இருக்கின்றார்கள். பல ஜென்மத்தில் புண்ணியம் செய்து வந்திருக்கின்றார்கள். அவர்கள் அறம் செய்து அறம் செய்து கைகள் உரம் ஏறி உள்ளது. அவர் கையால் சாப்பிடுவதே புண்ணியம். இங்குள்ள ஆண்களையும் பெண்களையும் பார்ப்பதே புண்ணியம். அவர்களுக்கு உணவு கொடுக்க வாய்ப்பு கிடைத்தால், அது சக்கரவர்த்திக்கே, உலகத்தைப் படைத்த சக்கரவர்த்திக்கே எல்லாம்வல்ல சிவபெருமானுக்கே கொடுத்ததாகும்.
குடில் தொண்டர் ஆணோ, பெண்ணோ ஒரு வீட்டில் சாப்பிட்டால் எல்லாம்வல்ல சிவபெருமான் சாப்பிட்டதற்கு ஒப்பாகும். எல்லாம்வல்ல சக்தி, உமாதேவி சாப்பிட்டதற்கு ஒப்பாகும். ஆகவே அன்பர்கள் ஒவ்வொரு வாரமும் ஞானிகள் பாடல்களை பாராயணம் செய்கிறார்கள். அவர்களை மனமார வாழ்த்துகின்றேன். அவர்கள் மேற்கொள்கின்ற காரியங்கள் தடையில்லாமல் நடக்க வேண்டும். அவர்கள் எல்லா நலமும், வளமும் பெறவேண்டுமென்று சொல்லி, உங்களையும் வாழ்த்துகின்றேன். வாரந்தோறும் வந்து இந்த பாராயணத்தை கேட்கின்றீர்கள். இதுதான் உண்மையான பாதை. நீங்கள் நீடு வாழ வேண்டும். உங்களுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என்று ஆசான் அகத்தீசரை வேண்டிக்கொள்கிறேன் வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175000
Visit Today : 140
Total Visit : 175000

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories